Sunday, 28 December 2025
Wednesday, 26 November 2025
பொ.சங்கரின் நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -19-
கட்சிக் கம்பங்கள் இல்லா ஊர்
தமிழக அரசியல் களம் தேர்தல் வந்தால் பரபரப்பாய் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் , சட்டமன்றத் தேர்தல் , ஊராட்சி மன்றத் தேர்தல் என மூன்று வகையான தேர்தல்கள் நடக்கும் போது ஊரில் சிறிது பரபரப்பு இருக்கும்.
அன்றைய நாட்களில் கோயில் பொது மேடையில் ஒரு தினத்தந்தி நாளிதழ் பொதுவாய் வரும். எல்லோரும் படிப்பார்கள். தேர்தல் நேரத்தில் சில அரசியல்வாதிகள் , தமிழகத்தில் என் காலடி படாத கிராமமே இல்லை என்று முழங்கியிருப்பது செய்தியாக வந்திருக்கும். என் நினைவில் அந்த முக்கிய அரசியல்வாதிகள் யாரும் எங்கள் நல்லியம்பாளையம் மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வந்ததாய் நினைவில்லை.
வேட்பாளர் சார்பாய் ரேடியோ கட்டிய வண்டில நோட்டிஸ் போட்டுக்கொண்டு வாகனம் வரும். யாரேனும் ஒரு பேச்சாளர் வண்டிக்குள்ள உட்கார்ந்து கொண்டு ,உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ________ சின்னத்தில் மறக்காமல் பதிவு செய்யுங்க. தேர்தல் நாள் _____ என்று பதிவு செய்து போவார்கள்.
ஏதேனும் ஒரு சில சுவர்களில் மட்டும் மாநிலக் கட்சிகளின் சின்னங்கள் வரையப்பட்டு இருக்கும். மற்றபடி என் நினைவில் தெரிந்து நல்லியம்பாளையம் கிராமத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் எங்கும் இருந்தது இல்லை.
நல்லியம்பாளையம் கிராமத்தில் பல கட்சியினரும் இருந்தாலும் பொது இடங்களில் , கோவில்களில் யாரும் அரசியல் பேசாமல் ஊரின் தன்மானம் காக்க ஒற்றுமையாய் இருந்தனர்.
என் பதினோரு வயதில் உள்ளாட்சித் தேர்தலில் சம்புக் கவுண்டர் வெற்றி பெற்று ஊரில் வெற்றி ஊர்வலம் வந்தது நினைவில் உள்ளது. அவரது முயற்சியால் ஊரின் தென்புறம் இரட்டபாளி வலசு செல்லும் பாதையில் வசிக்கும் மக்களுக்காக வாய்க்காலைக் கடந்து செல்ல பாலம் கட்டித் தர முயற்சி எடுக்கப்பட்டது.
நல்லியம்பாளையம் கிராமம் கிட்டத்தட்ட 1998 வரை கிராமமாகவே இருந்தது. அதன்பிறகு ஊருக்கு அருகில் ஹவுசிங் போர்டு வர நூற்றுக்கணக்கான வீடுகள் ஊரைச் சுற்றி உருவாகத் தொடங்கின.
நல்லியம்பாளையம் ஊரில் வசித்த உள்ளூர் மக்கள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக நகரங்களில் குடியேறத் தொடங்கினர். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரிலும் தோட்டத்திலும் வசித்த நிலையில் இன்று ஊரில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே உள்ளூர் மக்கள் வசிக்கும் நிலை உருவானது. ஆனாலும் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நாட்களிலும் , மாதந்தோறும் பெளர்ணமி நாட்களிலும் ஊர்க்கோயில்களில் ஒன்றுகூடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
நல்லியம்பாளையம் கிராமம் காலப்போக்கில் ஊராட்சி மன்ற அமைப்பில் இருந்து , மாநகராட்சியின் எல்லைக்குள் வந்தது.
மண்மணம் மாறினாலும் ஊரின் நிலையை என்றும் எடுத்துரைப்பது ஊர்க்கோயிலும் , பெருமாள் கோயிலும் அரச மர அடையாளமும் தான். ஊர் மாநகராட்சி எல்லைக்குள் வந்தாலும் ஊரின் கட்டுப்பாடுகள் என்றும் மாறாமல் இன்றும் இருப்பதே அதன் பெருமைக்குக் காரணமாய் இருக்கின்றன.
இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு நின்று நிதானமாய் கதை பேசி நகர்ந்து சென்ற ஆத்தாக்களும் , தாத்தாக்களும் இன்று எண்ணிக்கை குறைந்து விட்டார்கள்.
ஆனாலும் நல்லியம்பாளையம் கதை இன்னும் பல பேசப்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு ஊரின் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும்.
Saturday, 22 November 2025
பொ. சங்கரின் நல்லியம்பாளையம் கதை பேசுவோம் 18
சின்னப்புள்ள அக்கா
மண் மணம் மாறாத எங்கள் நல்லியம்பாளையத்தில் வாழ்ந்த ஒரு அக்காவின் பெயர் சின்னப் புள்ள. அவங்க பேரு ‘சின்னபுள்ள ‘ தானா என்று இதுவரை தெரியவில்லை.
நல்லியம் பாளையம் கிராமத்தில் இரவு பகல் பாராமல் எப்போது உறங்குவார் என்றே தெரியாத நிலைக்கு எப்போதும் நடந்து கொண்டே இருப்பார்.
நாங்கள் பால்ய வயதில் ஊரின் மேற்குப் புறம் கிழக்கு, வடக்கு என எல்லாத் திசைகளிலும் ஓடி ஓடி கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு இருப்போம். கோவில் திண்ணையில் விளையாட்டுத் தொடங்கும். யாரோ ஒருவர் தேடும் பொறுப்புக்கு ஆட்படுவார். ஊரெல்லாம் சுற்றி சுற்றி தேடினாலும் காணக்கிடைக்காத சில இடங்களில் , சில மரங்களில் ஒளிந்து கொள்வோம்.
எங்கள் விளையாட்டுத் தொடங்கும் நேரத்தில் கோவில் திண்ணை அருகே நிற்கும் சின்னப்புள்ள அக்கா அடுத்தடுத்த நிமிடங்களில் கொத்துக்காரர் வீடு அருகே நடந்து வந்துவிடுவார். மனநிலை சற்று மாறி இருக்கும் சின்னப்புள்ள அக்காவ யாரும் ஊரில் எதுவும் சொல்ல மாட்டார்கள்.
யாரையும் பார்த்து சிரிக்க மாட்டார். யாருடனும் பேச மாட்டார். ஆனால் எதையோ பேசிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் விபரம் புரியாத வயதில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்க , திடிரென்று சத்தம் போட்டு அடிக்க வருவார். ஆனால் அடிக்க மாட்டார். நடந்து சென்று விடுவார்.
எனது சிறுவயதில் வள்ளியம்மாள் ஆத்தாவிடம் , சின்னப்புள்ள அக்காவுக்கு என்னாச்சு என்று கேட்ட போது ஒரு கதை கூறினார் வள்ளியம்மாள் ஆத்தா.
எங்கள் கண்ணாமூச்சி ஆட்டம் இரவு ஒன்பதைக் கடந்தும் நீடித்துக் கொண்டிருக்க யாரேனும் ஒருவர் ஆட்டத்தில் இருந்து இல்லம் செல்ல தொடங்கினால் கண்ணாமூச்சி ஆட்டம் நின்று விடும்.வூடு வந்ததும் அம்மா திட்டுவாங்க. காதில் வாங்கிக் கொள்ளாமல் விளையாட்டு பற்றி சிந்தித்து , அடுத்த நாள் கிரிக்கெட், கிணறு னு யோசிச்சு தூங்கப் போவோம். ஆனால் இரவில் எந்தத் தெருவிலும் எங்கேயும் உறங்காமல் சின்னப்புள்ள அக்கா எதையோ பேசி நடந்து கொண்டிருப்பார்.
சின்னப்புள்ள அக்கா பேசுவது யாருக்கும் புரியாது. சில நேரங்களிலும் பாடல் கூட பாடி கேட்டதுண்டு. சிறு வயதில் மிக அழகாக இருப்பார் என்று ஊர்ப் பெரியவங்க சொல்லிக் கேட்டதுண்டு.
சின்னப்புள்ள அக்கா மனதளவில் பாதிப்பு அடைந்திருந்தாலும் ஒருநாளும் யாரையும் காயப்படுத்தி கேள்விப்பட்டதில்லை.
ஈரோட்டில் இருந்து பழையபாளையம் வழியில் இரவு எட்டு மணிக்கு வேலை முடிந்து பலரும் வருவார்கள். ஊருக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் சின்னப்புள்ள அக்காவ யாராச்சும் பார்த்து , ஊருக்குள்ள போ என்று சொல்லிச் செல்வார்கள். மீண்டும் நடந்து ஊரின் தென்புறம் அரசமரம் அருகே வந்து நின்றிருப்பார். மீண்டும் யாராச்சும் ஊர்க்கவுண்டர்கள் சொல்ல , சின்னப்புள்ள அக்கா மாரியம்மன் கோயில் அருகே வந்து நின்றிருப்பார்.
மனநிலை மாறினாலும் ஒருநாளும் சின்னப்புள்ள அக்கா ஊரை விட்டு எங்கேயும் சென்றது இல்லை. ஊரின் மத்தியில் சின்னப்புள்ள அக்காவுக்கு ஒரு வீடு இருக்கும். ஆனால் வீட்டில் இல்லாமல் பல இடங்களிலும் நடந்து கொண்டே இருப்பார்.
ஒருமுறை ஊரில் சின்னப்புள்ள அக்காவிடம் வெளிப்புறத்தான் கைவரிசை காட்டி தவறாக நடக்க முயல , சின்னப்புள்ள சத்தமிட்டுக் கத்து ஷாப்கார கவுண்டர் அந்த வெளிப்புறத்தானைப் பிடித்து அடி துவைத்து அழ வைத்து சின்னப்புள்ள அக்கா காலில் விழவைத்தார். நாங்கள் பால்ய வயதில் அந்த நிகழ்வுகளைக் கண்டு அந்த அக்கா மீது பரிதாபம் கொண்டே நடந்து கொண்டோம்.
ஊரில் எங்கள் பெரியவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட போலிசு மாதிரியே இருந்தமையால் தப்பித்தவறி கூட , அறிந்தும் அறியாமல் கூட நாங்கள் தவறே செய்து விட முடியாது.
குடும்ப நிலை, ஊரின் கெளரவம் , ஊர்க் கவுண்டர்களின் மீது இருந்த மரியாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டே நாங்கள் வளர்ந்தோம்.
இப்படியாக நீண்ட நல்லியம்பாளையத்தில் பல மணிநேரங்களாக சின்னப்புள்ள அக்கா காணாமல் இருக்க பலரும் பல இடங்களில் தேட , அவர் நடக்காமல் , அவர் பேசாமல் , பாடாமல் தம் மூச்சை நிறுத்திக் கொண்டார். அந்த அக்கா எதையோ சொல்ல பல ஆண்டுகளாக முயன்றும் , பலருக்கும் புரியாமலேயே அவரின் இறுதி வாழ்வு நிறைவடைந்தது.
இன்னமும் நினைவில் உள்ளது அவரின் குரல். ஆனால் என்ன சொன்னார் என்பது மட்டும் இன்னமும் புரியவில்லை. நல்லியம் பாளையம் கதையில் ஊரின் வடக்கு, கிழக்கு, மேற்கு , தெற்கு என அனைத்து வீதிகளிலும் , அரச மரம் , வேப்பமரம், ஆழமரம் என அனைத்து இடங்களிலும் அவர் நின்று கொண்டிருப்பார். என்ன சொல்லியிருப்பார்...அந்த மரங்களே சாட்சி….
Tuesday, 4 November 2025
பொ.சங்கரின் நல்லியம் பாளையம் கதை பேசுவோம் 17
Saturday, 25 October 2025
பொ.சங்கரின்-அகில இந்திய வானொலி உரை
அகில இந்திய வானொலி நிலைய நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்.
‘எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்னும் தொல்காப்பிய தொடருக்கு நன்றி சொல்லி எமது இனிய உரையைத் தொடங்குகிறேன்.
வேகமாக நகரும் இந்த உலகில் ஒரு பூவின் மலர்ச்சியை, ஒரு காட்டின் அழகை, மழையின் உணர்வை ஓர் எழுத்தாளன் நூல்கள் வழி நம்மிடையே கடத்திக் கொண்டு வருகிறான். ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி, பொருளாதார தேவைகளுடன் நின்று விடாமல் கற்றல் நிலையிலும் மேம்பட்டால்தான் சமூகம் வளரும். ஆக ஒரு வளர்ந்த சமூகத்தை உருவாக்குவதில் வாசிப்பு இன்றியமையாத பணியை ஆற்றுகின்றது. நெல்சன் மண்டேலா அவர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட போது, “எனக்கு ஒரு சலுகை மட்டும் கொடுங்கள். சிறைச்சாலையில் நான் வாசிக்க மட்டும் அனுமதிக்க வேண்டும்” என்றார். வாசிக்காத நாட்கள் சுவாசிக்காத நாள்களுக்குச் சமம் என்று புதுமொழி கூறுகிறது.
பண்பாட்டு மாற்றம், காலமாற்றம், தலைமுறை மாற்றம் என்று இவை மிக வேகமாக ஏற்படுகின்றன. சமூகத்தில் ஏற்படும் பண்பாட்டு மாற்றங்களையும் மாறிவரும் மனோபாவங்களையும் பாடப்புத்தகங்கள் காட்டுவதில்லை. பாடப் புத்தகங்கள் மாறுகையில் ஆசிரியர்களும் தம்மை மேம்படுத்திக்கொண்டால்தான் மாணவர்கள் பயன்பெற முடியும். இது இயல்பாக நடந்து விடுவது இல்லை. ஆகவே பாடப்புத்தகக் கல்வியிலிருந்து உருவாகும் சமகாலம் பற்றிய விழிப்புணர்வு, போதாமைகளுடன்தான் இருக்க முடியும்.
சமகாலத்துடன் உயிரோட்டமான உறவை ஏற்படுத்திக்கொள்ள சீரிய இதழ்களையும் இலக்கியத்தையும் ஆய்வுகளையும் படிப்பது இன்றியமையாதது. அவ்வகையில் அகில இந்திய வானொலி நிலையம் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றது. சாகித்திய அகாடமியின் வரலாற்றை வாசிப்பவர்களோடு உறவாடும் நிகழ்வாக, நிழலாடும் நினைவுகளாக நம் அகில இந்திய வானொலி நடத்துகின்றது. வாருங்கள் சாகித்திய அகாடமி குறித்தும் எழுத்துலகம் குறித்தும் அறிந்து வருவோம். உங்கள் கைகளில் ஓர் எழுதுகோலும் உங்கள் நாட்குறிப்பையும் ஆயத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
வாசிப்பையும், வாசிப்பவர்களையும், வாசிக்க வைத்தவர்களையும் ஒன்று சேர்க்க; எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்னும் முதுமொழியைப் போற்றும் வகையில் நமது இந்திய அரசு எழுத்தையும் எழுத்தாளர்களையும் உரிய முறையில் உயர்வான முறையில் சிறப்பிக்க வேண்டி 1954 ஆண்டு மார்ச் 12 ஆம் நாளில் சாகித்திய அகாடமி என்னும் நிறுவனத்தைத் தோற்றுவித்தது.
அவ்வகையில் இந்தியாவில் பல மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு விருது அளித்து ஊக்கப்படுத்துவது சாகித்திய அகாடமியின் முதன்மைப் பணியாகும். கடந்த அறுபது ஆண்டுகளாக சாகித்திய அகாடமி சிறந்த படைப்புகளுக்கு விருதும் இந்திய அளவிலான வாசக வெளிச்சத்தையும் ஏற்படுத்தித் தருகிறது. இந்தியாவின் 24 மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை உள்ளிட்ட எழுத்தாக்கங்களுக்கு இந்தியாவின் பெருமைமிகு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றது. சிறந்த எழுத்தாளருக்கு 1 இலட்ச ரூபாயும், மதிப்புமிகு பட்டயமும் வழங்கப்பட்டு சிறப்புச் செய்யப்படுகிறது.
சாகித்திய அகாடமி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டு, தேசிய அளவில் வாசிப்பு மேம்பாட்டையும் வழங்கி வருவது இந்நிறுவனத்தின் முதன்மைப் பணியாகவும் முக்கியப் பணியாகவும் இருக்கின்றது.
தரணி புகழ் தமிழ்மொழியும் சாகித்திய அகாடமியின் 24 மொழிகளில் முதன்மை மொழியாகத் திகழ்கின்றது. அவ்வகையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட சாகித்திய அகாடமி நிறுவனத்தால், தமிழ் மொழி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நூல் எது என்பதை அறியும் ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஆம். தமிழ்மொழியில் பெருமைமிகு சாகித்திய அகாடமியின் முதல் விருதைப் பெற்ற முதல் நூல், நம் மொழியின் பெயராலேயே அமைந்திருக்கும். தமிழ் என்று சொன்னாலே இன்பம் தருவிக்கும். அதுவே நூலின் பெயரும். ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய தமிழின்பம் என்னும் நூலே தமிழ் மொழிக்கு தமிழில் 1955இல் சாகித்திய அகாடமி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நூல்.
அறியப்படாத இலக்கியங்களை அறிய வைத்ததும், அறியப்படாத ஆளுமைகளைக் கொண்டாட வைத்ததும் சாகித்திய அகாடமியின் முதன்மைச் சாதனைகள். அவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாடமி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் தமிழக அளவில் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் நூல்களாகவே இருந்து வருகின்றன.
தமிழகத்தின் புகழ்பெற்ற ஆளுமைகளின் படைப்புகளும், வட்டார மொழியில் உருவெடுத்த படைப்புகளும் கவிதைகளும் நாவல்களும் தமிழ்மொழிக்கு மணிமகுடமாக இருப்பதை தரணிக்குச் எடுத்துச் சொல்லும் பணியை சாகித்திய அகாடமி செவ்வனே செய்து வருகின்றது.
தமிழ் மொழியின் தவமாக, இளையோர் முதல் பெரியோர் வரை விரும்பி வாசிக்கப்படும் நூல் என்னவெனில் அது பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் நூலாசிரியரின் சுதந்திர இந்தியா பற்றிய படைப்பு அலையோசை. அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாகத் திகழும் அலையோசை நூல்தான் தமிழ் மொழியின் இரண்டாவது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்.
இராமாயணம் நூலை வாசிக்க வேண்டுமெனில் எந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற வினா அனைவருக்கும் எழும். அந்த வினாவின் விடையாக பல ஆண்டுகளாக பலராலும் வாசிக்கப்படும் நூலாக ராஜாஜி அவர்களின் சக்ரவர்த்தி திருமகன் நூல் சாகித்திய அகாடமியின் மூன்றாவது விருது பெற்ற தமிழ் நூல்.
இந்திய அளவில் இலக்கியத்திற்குச் சிறப்புத்தரும் வகையில் தொடங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருது போலவே, ஞானபீட விருதும் எழுத்தாளர்களைக் கொண்டாடும் நோக்கோடு தொடங்கப்பெற்றது. அவ்வகையில் தமிழில் ஞானபீட விருதும் சாகித்திய அகாடமி விருதும் பெற்ற இரு எழுத்தாளர்கள் திரு. அகிலன் மற்றும் திரு. ஜெயகாந்தன். அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் நூலுக்கு 1963ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும் 1975ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டது. திரு. ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் நூலுக்கு 1972ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும் 2002ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சாகித்திய அகாடமி விருது தொடங்கப்பட்டு நாம் அறுபது வருடக் கொண்டாட்டத்தில் இருக்கின்றோம். இச்சமயம் தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பெண்மணி யார் என்பது பற்றியும், தமிழில் எத்தனை பெண்கள் சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளனர் என்பது பற்றியும் நாம் அறிவது அவசியம்.
1973ஆம் ஆண்டு வேருக்கு நீர் என்னும் நூலுக்காக எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. தமிழில் சாகித்திய விருதாளர்களில் முதல் பெண் இவர்தான். இதுவரை இராஜம் கிருஷ்னண், லட்சுமி திரிபுரசுந்தரி, திலகவதி, அம்பை, ஜெயஶ்ரீ ஆகிய ஐந்து பெண்கள் மட்டுமே தமிழில் சாகித்திய விருதுப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்த செய்தியாகும்.
சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 2000ஆம் ஆண்டு அக்கினிச்சாட்சி எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காவும், ஒரு கிராமத்தை எழுத்து வழி அறிமுகம் செய்து எல்லோரையும் ஆத்துப்பொள்ளாச்சி என்னும் கிராமம் நோக்கி நகர வைத்த, ஒரு கிராமத்து நதி (2003) என்னும் கவிதை நூலுக்காகவும் இரண்டு முறை சாகித்திய விருது பெற்றார்.
சாகித்திய விருதாளர்களில் இரண்டு முறை விருது பெற்று மொழிக்கும் , எழுத்துக்கும் பெருமை சேர்த்த எழுத்தாளர்களையும் நாம் அறிய வேண்டும். கவிஞர் புவியரசு அவர்களுக்கு 2007ஆம் ஆண்டு புரட்சிக்காரன் என்னும் மொழிபெயர்ப்பு நூலுக்காகவும், கையொப்பம் எனும் கவிதை நூலுக்காகவும் (2009) இரண்டு முறை சாகித்திய விருது பெற்றுள்ளார். தமிழில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த இந்த எழுத்தாளர்களின் சாதனைகள் பொன்னெழுத்துகளால் எழுதப்பட வேண்டும் , கொண்டாடப்பட வேண்டும்.
சாகித்திய அகாடமியின் வரலாற்றில் நிர்வாகக் காரணங்களால் கடந்த அறுபது வருடங்களில் சில ஆண்டுகள் சாகித்திய விருது அளிக்கப்படவில்லை என்பது நாம் அறிய வேண்டும்.
வா.செ.குழந்தைசாமி. இந்தப் பெயர் அறியாத பொறியியல் படிக்கும் மாணவர்கள் , ஐஐடி படிக்கும் மாணவர்கள் இருக்க முடியாது. பொறியியல் மற்றும் நீர்வளத்துறையில் அவசியம் கற்க வேண்டிய பாடமாக குழந்தைசாமி மாதிரியம் என்னும் பாடத்தைக் கற்பர். நீர்வளத் துறையில் குழந்தைசாமி மாதிரியம் உலக அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக இருப்பதை அறிந்து நாம் பெருமைபடுவதைப்போல, வா.செ. குழந்தைசாமி அவர்கள் எழுதிய வாளும் வள்ளுவ என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி விருது 1988ஆம் ஆண்டு வழங்கப்பட்டது குறித்தும் நாம் பெருமைப்படுவோம்.
ஒருவரின் நாட்குறிப்பு வரலாறு ஆகுமா? எனில் ஆம் என்பது பதிலாக ஆனந்தரங்கன் நாட்குறிப்பு விடையாக இருந்து வருகின்றது. அந்த நூலே புதுச்சேரியின் வரலாற்றையும், பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறை பற்றியும் நமக்குப் பல செய்திகளைத் தருகின்றது. அது போல பிரபஞ்சன் அவர்கள் புதுச்சேரியை களமாகக் கொண்டு படைத்த வானம் வசப்படும் என்னும் நூலுக்காக தேசிய அங்கீகார விருதான சாகித்திய அகாடமி விருது 1995 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
திரையிசைக் கவிஞர்களாக இருந்தவர்களும் நல்ல படைப்புகளை வழங்கி சாகித்திய விருது பெற்றுள்ளனர். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சேரமான் காதலி நூலுக்காக 1980ஆம் ஆண்டு சாகித்திய விருது வழங்கப்பட்டது. எழுத்துலகம் நோக்கி அமர வைத்து அற்புதமான காவியத்தைப் படைத்த கவிஞர் வைரமுத்து அவர்கள், கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார்.
பெரும் வாசகர் பரப்பினையும், எழுதும் போதே வாசகர்களின் கவனிப்பையும் பெற்ற நாஞ்சில் நாடனின் எழுத்தில் கருவான சூடிய பூ சூடற்க எனும் நூல் 2010ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது. பலரின் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இந்த நூல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்வது எழுத்தாளர்களின் முதன்மைப்பணி என்பதை நிறைவேற்றி பெரும் வாசகச் சொந்தங்களை வைத்திருக்கும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய சஞ்சாரம், நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வியலை வலியோடு சொல்லக்கூடியது. நாதஸ்வரக்கலையை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்குப்பிறகு பரவலான அறிமுகத்தை ஏற்படுத்திய நூலாக இவரின் சஞ்சாரம் திகழ்கின்றது. இந்த நூலுக்காக இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
நாடு கடத்தப்பட்ட ஒரு அரசனின் வாழ்வியலை, தமிழ்ச்சூழலின் வாழ்வியலை அழகு நடையில் கடத்திச்சென்று வாசிப்பு இன்பம் நல்கிய இந்திய ஆட்சிப் பணியாளர் திரு. இராஜேந்திரன் அவர்களின் காலாபாணி நூலுக்கு 2022ஆம் ஆண்டு சாகித்திய விருது வழங்கப்பட்டது.
கிராமிய மணம் மாறாற ஊராகத் திகழும் ஈரோடு மற்றும் அதனைச் சுற்றி உள்ள சிறுகுடி மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம் ஆகியவற்றை அழகியல் நடையில் ஆழமான நீரோட்டம் போல வழங்கிய நீர்வழிப்படூஉம் என்னும் புதினத்திற்காக 2023ஆம் ஆண்டு தேவிபாரதி அவர்களுக்கு சாகித்திய விருது வழங்கப்பட்டது.
உலகின் தலை சிறந்த மேதைகள், வெற்றியாளர்கள், நாம் வியந்து பார்க்கும் பல மனிதர்களுடன் நம்மால் நேரில் சென்று நட்பு கொள்ள இயலாது, ஆனால் அவர்களின் சிந்தனைகள், அனுபவங்கள் அவர்களின் வெற்றி தோல்வி என அனைத்து நேரங்களிலும் நாம் அவர்களுடன் பயணிக்க முடியும். அது புத்தகங்களின் வாயிலாக மட்டுமே மனதோடு மனமாக இருக்க இயலும்.
பண்பாட்டுத்தளத்தில் பெரும் பகுதியைத் திரைப்படங்கள் கையகப்படுத்தியிருப்பது ஆரோக்கியமானதன்று. ஊடகங்கள் திரைப்படத் துறைக்குத் தரும் கவனத்தில் நூற்றிலொரு பங்குதான் புத்தகப் பண்பாட்டுக்குத் தருகின்றன. பண்பாட்டில் பெரும் கவனம் கொண்டிருக்கக்கூடிய வளர்ச்சியடைந்த பிரெஞ்சுச் சூழலின் புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், மொத்த பண்பாட்டுப் பொருளாதாரத்தில் புத்தகத் தொழிலின் பங்கு திரைப்படங்களின் பங்கைவிட மிக அதிகமாக இருந்தது. தமிழகத்தின் மொத்த புத்தகப் பொருளாதாரம் ஒரு நட்சத்திர நடிகர் ஒரு திரைப்படத்துக்குப் பெறும் ஊதியத்துக்கு நிகராகுமா என்பது சந்தேகம். திரை, புத்தகம், நுண்கலை மூன்றுக்கும் உரிய கவனமளிக்கும் பண்பாடே மேன்மையடைய முடியும்.
நமது அகில இந்திய வானொலி நிலையம் வாசிப்பவர்களின் நலம் காக்கும் ஊடகமாக, வாசிப்பவரை வரவேற்கும் வாசலாக, எழுத்தாளர்களைக் கொண்டாடும் ஏணியாக, சமுதாய மாற்றத்தின் சாட்சியாக பல்லாண்டுகளாக பவனி வருகின்றது. அகில இந்திய வானொலி நிலையத்தின் பணி மேலும் சிறக்கவும், சாகித்திய அகாடமி நாளை மற்றுமொரு மாபெரும் வாசிப்பு நாளாகவும் முன்னெடுக்கவும் நாம் துணை நிற்போம்.
Friday, 10 October 2025
பிரெஞ்சுப் புரட்சி -The French Revolution- பொ.சங்கர்
Thursday, 9 October 2025
அந்தமான் தீவுகள் — சுதந்திரப் போராட்டத்தின் பலிபீடம்
இந்தியாவின் தென்கிழக்கில், வங்காள விரிகுடாவை ஒட்டி பரந்துள்ள அழகிய தீவுகளின் தொகுப்பே அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும்.
இயற்கையின் பசுமையும் கடலின் ஆழத்தையும் சேர்ந்து அமைந்த இத்தீவுகள், இந்திய வரலாற்றில் அழியாத பெருமை பெற்றுள்ளன. ஏனெனில், இங்கு தான் இந்திய சுதந்திர வீரர்களின் தியாகமும் வேதனையும் பதியப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமை
1857 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமானது, அவர்களை தாய்நாட்டிலிருந்து கடலால் சூழப்பட்ட ஒரு தீவிற்கு அனுப்புவது. இதற்காகவே அந்தமான் தீவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அங்கு அனுப்பப்பட்ட கைதிகள் வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனிமையில் துன்பப்பட்டனர். இதனாலே அந்த இடம் “காலா பானி” என்று அழைக்கப்பட்டது — அதாவது “கருப்பு நீர் தண்டனை”.
🏛️ செல்லுலார் சிறை — தியாகத்தின் அடையாளம்
1896 முதல் 1906 வரை கட்டப்பட்ட செல்லுலார் சிறை இந்திய சுதந்திர வரலாற்றின் முக்கிய நினைவுச் சின்னமாகும்.
693 சிறைக் கூடங்கள் கொண்ட இந்த சிறையில் ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டனர். கைதிகள் இடையே எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்பதே அதன் நோக்கம்.
சிறைச்சாலையின் உட்பகுதியில் கைதிகள் எண்ணெய் ஆலைகளிலும், தோட்டங்களிலும், கயிறு பின்னும் தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு உணவு போதிய அளவில் வழங்கப்படவில்லை; நோயாலும், துன்பத்தாலும், மனிதத்தன்மையற்ற தண்டனைகளாலும் பலர் உயிரிழந்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஆசாத் ஹிந்த் அரசு
இரண்டாம் உலகப் போரின்போது (1942), ஜப்பான் அந்தமான் தீவுகளை கைப்பற்றியது.
அப்போது நெடாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜப்பானின் ஆதரவுடன் “ஆசாத் ஹிந்த் அரசு” எனப்படும் சுதந்திர அரசை அமைத்தார்.
அந்தமான் தீவுகள், இந்திய சுதந்திரத்தின் முதல் விடுதலை நிலமாக அறிவிக்கப்பட்டன. இதனால் இத்தீவுகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் சிறப்பிடத்தைப் பெற்றன.
சுதந்திரத்தின் கோர சின்னமாக மாறிய செல்லுலார் ஜெயில்
1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின், அந்தமான் தீவுகள் தேசிய நினைவிடமாக அறிவிக்கப்பட்டது.
இன்று செல்லுலார் சிறை தேசிய நினைவகம் என அழைக்கப்படும் இத்தலம், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களால் பார்வையிடப்படுகிறது.
அங்கு ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு அறையும் அந்த வீரர்களின் தியாகக் கதைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
அந்தமான் தீவுகள் இயற்கையின் அழகையும், மனித தியாகத்தின் பெருமையையும் ஒருங்கே தாங்கிய நிலம்.
இங்கு சிந்திய ஒவ்வொரு இரத்தத் துளியும் நம் சுதந்திரத்தின் வேராக மாறியுள்ளது.
அந்தமான் தீவுகள் நமக்குச் சொல்லும் செய்தி என்னவெனில்
“சுதந்திரம் என்பது வெறும் அரசியல் உரிமை அல்ல, அது தியாகத்தால் உருவான உயிர்ப்புள்ள உணர்வு!”
Saturday, 13 September 2025
அறிய வேண்டிய வரலாறு- சோழச் சக்ரவர்த்தி இராசேந்திர சோழனின் கடற்பயணங்கள்
Tuesday, 26 August 2025
பாளையம் என்ற பெயரும் நல்லியம் பாளையமும் - நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -15
கொங்கு நாடு சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் என வழங்கப்பட்டது . பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். 13 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. இதனை பாளையக்காரர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகத் திகழ்ந்தது. அதனால் கொங்கு நாட்டின் பெரும்பாலான ஊர்கள் பாளையம் என்னும் பெயரில் திகழ்ந்தன.
இதில் பூந்துறை நாட்டில் நல்லியம்பாளையம் உள்ளடக்கிய ஊராகத் திகழ்ந்தது. நல்லியம் பாளையம் ஊரைச் சுற்றி பாளையம் என்னும் பெயரில் பல ஊர்கள் காணப்படுகின்றன.
பூந்துறை நாட்டின் அரச பகுதி பழையகோட்டை பட்டக்கார மரபில் வருவது என்று செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
1.பூந்துறை நாடு
2.தென்கரை நாடு
3.காங்கேய நாடு
4.பொங்கலூர் நாடு
5.ஆறை நாடு
6.வாரக்க நாடு
7.திருஆவினன்குடி நாடு
8.மண நாடு
9.தலைய நாடு
10.தட்டய நாடு
11.பூவாணிய நாடு
12.அரைய நாடு
13.ஓடுவங்க நாடு
14.வடகரை நாடு
15.கிழங்கு நாடு
16.நல்லுருக்கா நாடு
17.வாழவந்தி நாடு
18.அண்ட நாடு
19.வெங்கால நாடு
20.காவடிக்கா நாடு
21.ஆனைமலை நாடு
22.இராசிபுர நாடு
23.காஞ்சிக்கோயில் நாடு
24.குறுப்பு நாடு
ஆகிய நாடுகள் கொங்கு மண்டல நாடுகளாகத் திகழ்ந்தன.
நல்லியம் பாளையம் ஊரைச் சுற்றி பாளையம் என்னும் பெயரில் பல ஊர்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சில பெயர்களை இங்குக் காணலாம்.
சென்னிமலை சாலையில் உள்ள பாளையங்கள்
1. ரங்கம்பாளையம்
2. சேனாதிபதிபாளையம்
3. முத்தம்பாளையம்
4. காசிபாளையம்
5. குப்பகவுண்டன்பாளையம்
6. தொட்டிபாளையம்
7. கவுண்டச்சிபாளையம்
8. வெ. மேட்டுப்பாளையம்
9. முகாசி புலவபாளையம்
10. நாமக்கல் பாளையம்
11. அர்த்தனாரி பாளையம்
12. நல்லியம் பாளையம்
13. கொண்டவன்நாயக்கன் பாளையம்
14. தாசநாயக்கன் பாளையம்
15. பனிமடா பாளையம்
பெருந்துறை சாலையில் உள்ள பாளையங்கள்
1. பழைய பாளையம்
2. வீரப்பம்பாளையம்
3. செங்கோடன் பாளையம்
4. வேப்பம் பாளையம்
5. சானார் பாளையம்
6. கூறபாளையம்
7. வள்ளிபுரத்தான்பாளையம்
8. ராசம்பாளையம்
9.தோப்பு பாளையம்
10. வேட்டுவ பாளையம்
11. திருவேங்கடம் பாளையம்
12. ஓலப்பாளையம்
13. மடத்துப்பாளையம்
கரூர் மற்றும் முத்தூர் சாலையில் உள்ள பாளையங்கள்
1. கொல்லம் பாளையம்
2. முத்துகவுண்டன் பாளையம்
3. சின்னியம் பாளையம்
4. ஆயகவுண்டன் பாளையம்
5. செல்லத்தா பாளையம்
6. பாண்டி பாளையம்
7. ஆனந்தம் பாளையம்
8. பாரப்பாளையம்
9. மேற்கு பாளையம்
10. தாண்டாம் பாளையம்
11. மோலபாளையம்.
12. கந்தசாமி பாளையம்
13. மின்னப்பாளையம்
14. காங்கேயம் பாளையம்
15. சாவடிப்பாளையம்
16. கணபதி பாளையம்
17. கருமாண்டம் பாளையம்
18. மலையப்பாளையம்
19. காரணம் பாளையம்
20. நாகமநாயக்கன் பாளையம்
21. இச்சிபாளையம்
22. தாமரைப் பாளையம்
23. ஆரம்பாளையம்
24. மின்னப்பாளையம்
25. எல்லப்பாளையம்
பூந்துறை சாலை
1. மூலப் பாளையம்
2. ரகுபதிநாயக்கன் பாளையம்
3. ஆனைக்கள் பாளையம்
4. வெள்ளியம் பாளையம்
5. கவுண்டன்பாளையம்
6. கொங்கடையம் பாளையம்
7. குடுமியாம் பாளையம்
8. அஞ்சுராம்பாளையம்
9. ஊஞ்சப்பாளையம்
ஈரோட்டில் இது போல 1800 க்கும் மேற்பட்ட ஊர்கள் பாளையம் என்ற பெயரில் இருப்பதை அறிந்தோம்.
நல்லியம் பாளையம் சோழாராட்சியில் , காலிங்கராயர் ஆட்சியில் எந்த நிலையில் இருந்தன என்ற வரலாறுகளைத் தேடி வருகிறோம்.
பூந்துறை நாட்டில் நல்லியம் பாளையத்தின் பங்கு போன்ற இன்னும் பிற விபரங்களையும் சான்றுகளையும் தேடித் தொகுக்கும் பணியில் இருந்த போது 1667 மற்றும் 1799 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் பூந்துறை நாடு கடுமையான பாதிப்புகளைக் கண்டதாக வரலாறு குறிப்பிடுகின்றது.
பூந்துறை நாட்டின் ஓர் ஊராகத் திகழ்ந்த நல்லியம் பாளையமும் கடுமையான சேதங்களைக் கண்டதாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு வரலாற்று ஆய்வாளர் புலவர் இராசு ஐயாவைச் சந்தித்து உரையாடிய போது எம்மிடம் தெரிவித்துள்ளார்.
படையணிகள் வாய்க்கால் கரைகளில் தான் முகாமிடுவார்கள். அவ்வகையில் நல்லியம்பாளையம் பள்ளம் வாய்க்காலில் திப்பு சுல்தான் , ஆங்கிலேயப் படைகள் முகாம் அமைத்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பதை அறிந்தோம்.
நல்லியம் பாளையம் கதை பேசுவோம்- இன்னும் வரலாறு தொகுக்கப்பட வேண்டும். மண்ணின் , மரத்தின், மக்களின் கதைகளைப் பேசுவோம்.
Sunday, 24 August 2025
நல்லியம் பாளையம் கதை பேசுவோம் - 14 கிராமம் மண் மணம் மாறிய கதை
Monday, 18 August 2025
நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -12
Sunday, 10 August 2025
நதியின் பிழையன்று - நூல் மதிப்புரை
Saturday, 19 July 2025
Barefoot college - பங்கர் ராய்
ஆதியிலே நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை வாழ்க்கையோடு இருந்தது. நமக்கு எவையெல்லாம் தேவை என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். பெரு முதலாளிகள் தீர்மானிக்கக் கூடாது என்பதையே காந்தியம் பேசுகிறது. காந்தியத்தின் அடியொற்றி சமூகத்தை மரபு வழியிலேயே மேம்படுத்த இயலும் என்னும் நம்பிக்கை கொண்டு செயல்பட்டவர் பங்கர் ராய்.
பங்கர் என்னும் பெயர் இராஜஸ்தானின் திலோனா பகுதிக்கு வெறும் பெயர் மட்டுமல்ல. நம்பிக்கையின் உச்சம். படிக்காதவர்கள் , கல்விச்சாலைக்குச் செல்லாதவர்கள் பொறியாளராக ஆக முடியாது என்பது நம் இந்திய மனங்களில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால் இந்த சிந்தனையை மாற்ற வேண்டும் என்று உறுதியுடன் போராடி , ஓர் அமைப்பை உருவாக்கினார் பங்கர் ராய் .
ஒரு கிராமத்திற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை அவர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் 1972 ல் இராஜஸ்தான் மாநிலத்தில் திலோனா கிராமத்தில் பங்கர் ராய் என்னும் நம்பிக்கை நபரால் வெறுங்கால் கல்லூரி (Barefoot college) தொடங்கப்பட்டது. காந்தியம் வலியுறுத்திய கிராமப் பொருளாதாரம் இக்கிராமத்தில் பங்கர் ராயால் நனவானது.
திலோனா கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் வேண்டி ஆண்டுகள் பல போராடியும் அவர்களுக்குத் தேவையான குடிநீர் , கல்வி , மருத்துவம் , மின்சாரம் போன்று அடிப்படை வசதிகள் கிடைக்காமலே இருந்தது. 1972 ஆம் ஆண்டு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத திலோனா கிராமத்தில் நம்பிக்கையை மட்டும் ஆயுதமாக , பணயமாக வைத்து வெறுங்கால் கல்லூரி (Barefoot college) தொடங்கப்பட , அம்மக்களின் மரபு சார்ந்த அறிவு ஆகியவற்றை துணையாகக் கொண்டு காந்தியம் என்னும் சொல் வெற்றி பெறும் என்று தொடங்கப்பட்ட வெறுங்கால் கல்லூரி (Barefoot college) இன்றும் வெற்றி நடை போடுகிறது.
1967 ல் பங்கர் ராய் மிக வசதியான குடும்ப அமைப்பில் கல்வியை நிறைவு செய்த தருணத்தில் , ஜெயப்பிரகாஷ் நாராயணன் வறுமையாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பிகார் மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். பல கிராமங்களில் மருத்துவம் கிடைக்காத மரணத்தை, அடிப்படை வசதி இல்லாத மறுபக்கத்தைக் கண்டு கலங்கிப் போனார் பங்கர் ராய். தன் தாயின் அனுமதியுடன் வசதியான வாழ்வை விட்டு கிராமம் நோக்கி அவரின் பாதங்கள் பயணமானது. பல கிராமங்களில் வெறுங்கால் மனிதர்களைக் கண்ணுற்றார் .
இராஜஸ்தானில் திலோனா கிராமத்தைத் தன்னிறை கிராமமாக மாற்ற வேண்டும் என்னும் நோக்கில் செயல்படத்தொடங்கினார். அந்த மக்கள் அவரை, வீட்டை விட்டு ஓடி வந்து விட்டவர் , மனநலம் பாதித்தவர், தீவிரவாதி என்று பல கோணங்களில் ஆரம்பத்தில் எண்ணினர். இந்தக் கிராமத்திற்கு ஏதேனும் செய்ய வந்துள்ளேன் என்று கூறி அதற்கான பணிகளில் ஈடுபட்ட பிறகே மக்கள் இவரை மாற்றத்திற்கான மனிதராகப் பார்த்தார்கள். இந்தப் பகுதியில் ஒரு கல்லூரி தொடங்குகிறேன் என்று அவர் முனைந்த போது , அந்த ஊரின் மருத்துவச்சி, உழவர், நெசவாளி ஆகியோர் கற்றுத்தரும் ஆசிரியர்களாகப் பணி அமர்த்தப்பட்டனர். இந்த மக்களின் ஒத்துழைப்புடன் கிராமப் பொருளாதாரம் என்னும் நம்பிக்கை மலரத் தொடங்கியது. கண்ணால் கண்ட வெறுங்கால் மனிதர்களின் வாழ்க்கையை வெற்றி வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்னும் நோக்கில் 1972 ல் வெறுங்கால் கல்லூரி உதயமானது. வறுமையால் கல்வி கிடைக்காத அல்லது தடைபட்ட மக்களுக்கு , இரவுப்பள்ளி, தொழிற்கல்வி , உயர்கல்வி என்னும் முக்கல்வி முறை திலோனா பகுதியில் தொடங்கப்பட்டது. திலோனா மக்களின் பங்களிப்புடன் வெறுங்கால் கல்லூரி (Barefoot college) அம்மக்களாலேயே கட்டப்பட்டது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக சிறிதும் நீர்க்கசிவு இல்லாத மாடிக்கட்டிடத்தை இந்தக் கிராம மக்கள் உருவாக்கி உள்ளனர்.
வறட்சிக்குத் தானம் கொடுக்கப்பட்ட பல இராஜஸ்தான் கிராமங்களில் திலோனாவும் ஒன்று. அப்படிப்பட்ட இடத்தில் அம்மக்களின் மரபு ரீதியான அறிவும் பங்கர் ராயின் நம்பிக்கையும் நாளடைவில் வெற்றி பெறத் தொடங்கிய போது , அது சமூக மாற்றத்திற்கு வழி வகுத்தது.
மழை என்னும் சொல் , நீர் என்னும் சொல் இம்மக்களின் கனவு வார்த்தைகள். இதனை மாற்றி வெறுங்கால் கல்லூரி மக்கள் 20 இலட்சம் மக்களுக்கு நீர் தரும் அமைப்பில் 5 அணைகளைக் கட்டி அதனை முறையாகப் பராமரிக்கும் வகையில் இந்தக் கல்லூரியில் பயிற்சி பெற்ற பல படிப்பறிவில்லாத பொறியாளர்களே திறம்பட நிர்வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜஸ்தானில் சில வருடங்கள் வருடம் முழுமைக்குமே மழை இருந்ததில்லை. அந்த நிலையை எதிர்கொள்ள கிராமங்கள் தோறும் மழைநீர் தேக்கங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாகப் பராமரிக்க வெறுங்கால் கல்லூரி சிறந்த நிலையை உருவாக்கியுள்ளது.
இராஜஸ்தானில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவுப்பள்ளிகள் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டன. 1975 களில் இந்தப் பள்ளிகள் அம்மக்களின் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்ந்தன. வெறுங்கால் கல்லூரி மூலம் இரவுப்பள்ளிகள் மூலம் கிட்டத்தட்ட 1 இலட்சம் மாணவர்கள் கல்விப் பயின்று பின்னர் முறையாக கல்விப் பின்புலத்தில் பட்டம் பெற்றவர்களைப் பங்கர் ராய் உருவாக்கியுள்ளார்.
பங்கர் ராய் உருவாக்கிய அமைப்பு மூலம் பல கிராமங்கள் தன்னிறைவு பெறத் தொடங்கின. மருத்துவ அமைப்பை நிர்வாக ரீதியாகப் பிரித்து ஒவ்வொரு கிராமத்திலும் , அந்தக் கிராமத்தில் இருக்கும் மருத்துவம் பார்க்கும் பெண்களை வைத்து மாதவிடாய் , கருவுற்ற பெண்களின் சிக்கல்கள் , இரத்த சோகை நோய்கள் ஆகியவற்றுக்குச் சிகிச்சைகள் வழங்கத் தொடங்கினார்கள். இதனால் பல இராஜஸ்தான் கிராமங்களில் குழந்தை இறப்பு சதவீதம் குறையத் தொடங்கியது. அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளைப் பல கிராமங்களில் வெறுங்கால் கல்லூரி பங்கர் ராய் வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.
ராஜஸ்தான் கிராமங்களில் பல கிராமங்களில் பெண்கள் கவலைப்படுவது நீர் மற்றும் மின்சாரத்திற்காக மட்டுமே. அதனை நிறைவேற்றும் பொருட்டு நீர் வசதியைப் பெருக்கி சுத்தமான நீர் கிடைக்க வழிவகை செய்தது. அதன்பின்னர் மின்சாரத்தைக் கனவாக எண்ணிய பகுதிகளை வெறுங்கால் கல்லூரி பங்கர் ராய் தேர்ந்தெடுத்தார். மின்சாரமே இல்லாத கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து சூரிய ஒளி விளக்குகள் தயாரிக்கும் பயிற்சியை வெறுங்கால் கல்லூரி பங்கர் ராய் அளித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் சிறந்த முறையில் செயல்வழிக் கற்றல் பயிற்சி பெற்று தமது கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கினார்.
படிப்பறிவில்லாத மக்களுக்கு புத்தகங்கள் இல்லாமல் செயல்வழிக் கற்றல் மூலம் சூரிய ஒளி விளக்குகள் தயாரிக்கும் பயிற்சிகள் பெரும் மாறுதலையும் மாற்றத்தையும் ஏற்படுத்தின. வயலில் உழவு வேலை பார்ப்பவரும் , வீட்டில் உணவுத் தயாரிக்கும் பெண்களும் மிக எளிதாக இந்தப் பயிற்சியை மேற்கொண்டனர்.
வெறும்கால் கல்லூரி பங்கர் ராய் செயல்வழிக் கற்றலை அறிந்த இந்திய அரசு திட்டக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்தது. இதன் பின்னர் வெறுங்கால் கல்லூரியின் பல திட்டங்கள் நாடு முழுமையும் கொண்டு செல்லப்பட்டது. நாடுகளைக் கடந்து ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மின்சாரம் இல்லாத , மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லாத பகுதிகளில் சூரிய ஒளி மின்சாரப் பயிற்சி வழங்கப்பட்டது.
பங்கர் ராயின் பணியை சிறப்பிக்கும் வகையில் உலகின் சிறந்த டைம் இதழ் , உலகின் சக்தி வாய்ந்த நூறு நபர்களில் பங்கர் ராயும் ஒருவர் என்று அடையாளப்படுத்தியது. சிறிய ஒளி பெரிய வறுமையையும் மாற்றத் தொடங்கும் என்னும் வார்த்தை உண்மையானது. அதனால் பல கிராமங்கள் வெளிச்சமாகின. வார்த்தைகளில் நம்பிக்கை இருக்கின்றது. பங்கர் ராய் செயல்களில் நம்பிக்கை மிளிர்கின்றது. பங்கர் ராய் உருவாக்கிய செயல்வழிக் கல்வி கிராமங்களை மேம்படுத்துகிறது. மக்களை மேம்படுத்துகிறது. நம்பிக்கையை மட்டுமே அறுவடையும் செய்கின்றது.
Sunday, 22 June 2025
பொ.சங்கரின் - இந்தியாவில் மவுண்ட் பேட்டன்
சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியமான பிரிட்டீஷ் அரசு , தனது ஆட்சிப்பரப்பில் பல நாடுகளிலும் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தது. பிரிட்டீஷ் அரசாங்கம் தமது நிலப்பரப்பையும் செல்வங்களையும் தக்க வைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இந்தியாவில் ஆட்சி அமைப்பைத் தக்க வைக்க பலமுனை ஏற்பாடுகளைப் பிரிட்டீஸ் அரசு செய்தாலும் நாளுக்கு நாள் புதிய போராட்டங்களை இந்தியா முன்னெடுத்தது. இந்த நிலையில் இங்கிலாந்து தேர்ந்தெடுத்த நபர் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன். இந்திய சுதந்திரத்திற்கான பாதையை வகுத்தவர்களில் மவுண்ட் பேட்டன் முக முக்கிய மனிதராக அறியப்பட வேண்டியவராகத் திகழ்ந்த பாதையில் நாமும் கொஞ்சம் பயணிப்போம்.
ஜார்ஜ் மவுண்ட் பேட்டன் இந்தியாவிற்கு எப்படி வந்தார்? இந்தியாவின் அதிகார மாற்றத்தில் இவரின் பங்களிப்பு என்ன? இந்தியாவின் வைசிராயாக இருந்த வேவல் ஏன் மாற்றப்பட்டார்? இங்கிலாந்து பிரதமர் அட்லி மவுண்ட் பேட்டனை ஏன் தேர்வு செய்தார்? மவுண்ட் பேட்டன் திட்டம் என்றால் என்ன? என்ற பல கேள்விகளுக்குப் பதிலை வரலாற்றின் பக்கங்களில் , மவுண்ட் பேட்டன் வரலாற்றில், இந்திய வரலாற்றில் இருந்து காண்போம்.
பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900-ம் ஆண்டு ஜூன் 25-ல் இங்கிலாந்தில் வின்ஸ்டர் எனும் இடத்தில் பிறந்தார்.
இங்கிலாந்து இராணி எலிசபெத்தின் உறவினரான இவரின் முழுப்பெயர் லூயிஸ் பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் மவுண்ட்பேட்டன்.
மவுண்ட்பேட்டன் என்பது குடும்பப் பெயர். இவரின் தந்தை லூயி இளவரசர் ஆஸ்திரியாவில் பிறந்தமையால் முதல் உலகப்போருக்குப்பின் இவரது குடும்பம் பாட்டன்பர்க் என்பதற்குப் பதிலாக மவுண்ட்பேட்டன் என மாற்றிக் கொண்டது. முதல் பத்து வருடங்கள் வீட்டில் கல்வி பயின்றார்.
மவுண்ட்பேட்டன்ஆஸ்போர்ன் மற்றும் டார்ட்மவுத் ராயல் கடற்படைக் கல்லூரியில் பயின்றார். 1916 ஆம் ஆண்டு தமது விருப்பத்தின் படி பிரிட்டிஷ் கப்பற்படையில் அதிகாரியாக முதல் உலகப்போரில் பங்கேற்றார்.
செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மவுண்ட்பேட்டன் நேரிடையாக முதல் உலகப்போரில் பங்கேற்றார். போரும் கடலும் படிப்பும் என மூன்று முனைகளிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். கேம்பிரிட்ஜ் கிரைஸ்ட் கல்லூரியில் பொறியியல் படிப்பையும் உரிய நாளில் பயின்று நிறைவு செய்தார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் நெருங்கிய உறவு முறையாக இருந்தமையால் மவுண்ட் பேட்டனைத் தேடி பல பதவிக்களும் வாய்ப்புகளும் வரிசை கட்டி நின்றன.
Wednesday, 4 June 2025
The rise and fall of Soviet Union -சோவியத் இரஷ்யா உருவாகி உடைக்கப்பட்ட வரலாறு 1917 -1991
ரஷ்யாவின் ஜார் ஆட்சி 1917 ல் கவிழ்க்கப்பட்டது. ஜார் மன்னராட்சி என்பது ரஷ்யாவில் 16 ஆம் நூற்றாண்டு முதல் 1917 வரை நடந்த முடியாட்சி அரசாட்சி ஆகும். 1917 க்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உருவான நான்கு சோசலிச குடியரசுகள் டிசம்பர் 30, 1922 அன்று சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஒரு தீவிர இடதுசாரி குழுவான போல்ஷிவிக்குகள், ரஷ்யாவின் இரண்டாம் ஜார் நிக்கோலஸைத் தூக்கியெறிந்து, பல நூற்றாண்டுகளாக முடியாட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். முன்னாள் ரஷ்யப் பேரரசின் பிரதேசங்களைக் கைப்பற்றிய போல்ஷிவிக்குகள் ஒரு சமூக அரசை நிறுவினர்.
அதைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில், போல்ஷிவிக்குகள் போராடி, பழைய ஜாரிச ஆட்சியில் எஞ்சியிருந்த அனைத்தையும் முற்றிலுமாக ஒழித்தனர். 1922 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ஜார்ஜியா, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே கையெழுத்தான ஒரு ஒப்பந்தம் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கியது. சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைவர் விளாடிமிர் லெனின் ஆவார்.
சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைமையாக, தலைவராகத் திகழ்ந்த லெனின் 1924 இல் இறந்த பிறகு, ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியனின் தலைவரானார். இலட்சக்கணக்கான தனது நாட்டு மக்களை தொழில் துறை மேம்பாட்டில் ஈடுபடுத்தினார். லெனின் உருவாக்க விரும்பிய கொள்கைகளை கைவிட்டு , கூட்டுப் பொருளாதாரமயமாக்கல் மூலம் விவசாய உற்பத்தியைத் தொழில்மயமாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான கொள்கைகளை உருவாக்க ஸ்டாலின் முயன்றார்.
சோவியத் பகுதியில் விவசாயத் துறையின் கூட்டுப் பண்ணைமயமாக்கலை அமல்படுத்திட ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கினார். விவசாயிகள் தங்கள் தனிப்பட்ட நிலங்களையும் கால்நடைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் கூட்டுப் பண்ணைகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடுமையான பொருளாதாரச் செழிப்பை இழந்திருந்தாலும் சோவியத் உலகின் மிக முக்கியமான நாடாகத் திகழ்ந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பனிப்போர்களால் இரஷ்யா பாதிப்பை அடைந்தது. இதனால் ஸ்டாலின் செல்வாக்கையும் சொல்வாக்கையும் குறைக்க பல்வேறு மறைமுக நடவடிக்கைகளை அந்நாடுகள் எடுத்து வந்தன. பல நடவடிக்கைளை எடுத்தாலும் சோவியத் வளர்ச்சி பிரமாண்டமாகவே இருந்தது.
உலகம் வியந்த ஒரு செயலை சோவியத் 1957ஆம் ஆண்டு முதன்முதலாக நிகழ்த்தியது. 1957 அக்டோபர் 4 ஆம் தேதி ஸ்புட்னிக் 1 ஐ சோவியத் ஏவியபோது உலக நாடுகள் மிரண்டு போயின.
சோவியத்தின் விண்வெளி முயற்சிக்குப் பதிலடி தர அமெரிக்கா அடுத்தடுத்த விண்வெளி முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டது. விண்வெளி , தொழில் போன்ற பல நடவடிக்கைகள் காரணமாக சோவியத் பொருளாதார ரீதியாக கடுமையான பல சவால்களை எதிர்கொண்டது.
1980களில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் விலைகளைக் மிகக் குறைந்த அளவிற்குக் கொண்டு வந்து சோவியத் பொருளாதாரத்தை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தியபோது சோவியத் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
சோவியத் ஒன்றியத்தைக் கலைக்க அமெரிக்கா பல நேரடி மறைமுகத் தாக்குதல்களைத் தொடர்ந்து செய்து வந்தது.
கோர்பச்சேவ், டிசம்பர் 25, 1991 அன்று சோவியத் ஒன்றியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி சோவியத் ரஷ்யா 15 நாடுகளாகப் பிரிந்தது. அதன்படி ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ஜார்ஜியா, ஆர்மேனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், லாட்வியா, லித்துவேனியா, மால்டோவா, எஸ்டோனியா என பதினைந்து நாடுகளாகப் பிரிவதாக ஒவ்வொரு நாடுகளும் விடுதலை அறிவிப்பை வெளியிட்டன.
உலகத்தை ஒரு குடைக்குள் கொண்டு வர போராடிய சோவியத் இரஷ்யா, சிதறி பொருளாதாரக் காற்றால் பிய்த்து வீசப்பட்டன. அமெரிக்காவின் கனவு நிறைவேறியது. 1924 முதல் 1991 வரை உலகம் சோவியத் என்ற கட்டமைப்பைக் கண்டு சற்று மிரண்டது என்பது அறிய வேண்டிய வரலாறு .
அறிய வேண்டிய பார்க்க வேண்டிய சில படங்கள்
சோவியத் யூனியன், உலகின் ஆறில் ஒரு பங்கு பரப்பளவைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நாடாகும். இது சுமார் 22,402,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு விளங்கியது என்பது நாம் அறிய வேண்டிய வரலாறு.