கிராமம் மண் மணம் மாறிய கதை
நல்லியம் பாளையம்- இந்த மண்ணின் வரலாற்றை முழுமையாக பதிவு செய்ய பல கதைகள் பகிரப்பட வேண்டும்.
மரங்களும் மரபுகளும் மருத நிலமும் சூழ்ந்த வளமான ஊராக என் நல்லியம்பாளையம் திகழ்ந்திருந்தது. பழைய பாளையம் ஊரிலிருந்து நல்லியம்பாளையம் ஊருக்குள் நுழையும் போதே குளிர்ச்சி தென்படத் தொடங்கும்.
ஓடைமேடு பள்ளத்தைத் தாண்டியவுடன் தென்னந்தோப்புகள் சூழ்ந்த வயல்வெளிகள் கண்களுக்குப் படத் துவங்கும். சற்று பயணித்து வந்தால் ஒரு வளைவான திருப்பத்தில் குட்டி கிணத்து மேடு என்று சொல்லக்கூடிய ஓரிடம் வரும்.
நாங்கள் சைக்கிளில் வரும் போது அந்த மேட்டை சைக்கிளில் எழாமல் இருக்கையில் அமர்ந்தபடியே அழுத்திக்கொண்டு மேலேறுவதை ஒரு விளையாட்டுப் போல செய்வோம். அந்த இடத்தில் செந்தில் புக் பேலஸ் உரிமையாளர் வீடு. அவரின் மகன் சிறந்த புகைப்படக் கலைஞர் என்று பின்னர் ஒரு நிகழ்வில் நான் அறிந்து மகிழ்ந்தேன்..
கோயமுத்தூரில் புரந்தரதாசர் நிகழ்வரங்கில் நான் பேரூர் அடிகளார் உடன் ஒரு நிகழ்வுக்கு சென்று இருந்த போது, ஒரு நூலில் ஓர் கொங்கு கிராமத்தின் அப்பத்தா ஒருவர் கொங்கு மண்ணின் மரபு சார்ந்து நிற்கக்கூடிய அழகிய புகைப்படத்தை எடுத்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு விருது வழங்கினார்கள்.
செந்தில் புக் பேலஸ் காரர் வீட்டைத் தாண்டினால் சம்பு கவுண்டர் வீடும் இருக்கும். அடுத்து வேப்ப மரங்கள் அடர்ந்த வளைவில் செல்வி அக்கா வீடு இருக்கும் . அங்கிருந்து சற்றுப் பயணப்பட்டால் வேட்டுவங்காட்டுக்காரர் தோட்டம் அடர்ந்த தோப்பாக இருக்கும். அதனை ஒட்டியே மெட்ராஸ் கார ஆத்தா காடும் இருக்கும். அடுத்த வளைவில் ருக்மணி அக்கா வீடு இருக்கும். அவர்கள் இல்லத்தில் தான் நாங்கள் நீண்ட காலம் குடி இருந்தோம்… அவர்கள் அந்த வீட்டைக் கட்டும் போது நான் ஆறாம் வகுப்பு படித்து அந்த வீட்டில் மணலில் விளையாண்ட நினைவு. அவர்கள் வீட்டைக் தாண்டி ஒன்று போலவே இருக்கும் இரண்டு வீடுகள். சாக்குக் கடைக்காரர் வீடு. அவர்கள் வீட்டை ஒட்டியே
மறுபடியும் ஒரு S வடிவ வளைவில் வேட்டுவங்காட்டுக்காரர் தோட்டத்து சாலை. அடுத்து நல்லியம்பாளையம் ஊரை நோக்கிச் செல்லும் போது கிழக்கு மேற்கு என இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அழகான வயல்வெளிகள் காட்சி தரும். ஆனால் இன்று கண்ணுக்கட்டிய தூரம் வரை காட்சி தந்த அந்த வயல்வெளிகள் வீடுகளாக மாறிவிட்டன. வாய்க்காலின் நீர் எங்கள் நல்லியம் பாளையம்தான் கடைமடை என்று சொல்வார்கள்.
மரங்களும் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்த ஊராகத் திகழ்ந்த நல்லியம்பாளையம் ஊரைச் சுற்றிலும் அதாவது ஊருக்கு தெற்கு பக்கமும் கிழக்கு பக்கமும் 1997 களில் தமிழ்நாடு அரசு சார்பில் வீட்டு வசதி வாரியம் அமைக்கத் தொடங்கினார்கள் . இதன் மூலம் ஊரிலிருந்து வயல்களையும் காடுகளையும் தோட்டங்களையும் வீட்டு வசதி வாரியத்திற்கு நில எடுப்புச் செய்தார்கள்.
மடமடவென ஹவுசிங் போர்டு வீடுகள் கட்டத் தொடங்கி விட்டார்கள். மிகக் குறுகிய காலத்தில் நல்லியம்பாளையம் ஊரைச் சுற்றி ஹவுசிங் போர்டு உருவாகிவிட்டது. சிறுசிறு கடைகளும் பற்பல வீடுகளும் உருவாகி ஊரின் தென்கிழக்கு கிராமியத்தை இழந்திருந்தது.
திண்டல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதாக இருந்த நல்லியம்பாளையம் கிராமம் காலமாற்றத்தில் ஈரோடு மாநகராட்சியின் எல்லையாக விரிவுபடுத்தப்பட்டது. அதனால் கிராமம் மீண்டும் அதன் கிராமியத்தை இழந்து ஊரைச் சுற்றிலும் பற்பல வீடுகள் உருவாகிவிட்டன. . நல்லியம்பாளையம் ஊரிலிருந்து திண்டல் செல்லும் பகுதியில் சக்தி நகரின் விரிவாக்கம் நல்லியம்பாளையம் வரை பரவி இருந்தது. ஆங்காங்கே நிலப்பிரிப்புகள் செய்து நல்லியம்பாளையம் கிராமம் அதன் மண் மணத்தை மாற்றும் சூழலுக்கு உள்ளானது.
குளித்து மகிழ்ந்த கிணறும் பெரிய குச்சி வைத்து பப்பாளி பழம் பறித்த மரம் இருந்த இடமும் நெல்லிக்காய் பறித்த மரம் உள்ள இடமும் கண்களில் இன்னும் நிழலாடுகின்றன.
No comments:
Post a Comment