Sunday, 8 February 2026

"ஈரோடு நல்லியம் பாளையம் கதை பேசுவோம்"


நோம்பி வேற வருது.. 
வூடு வாசல் எல்லாம் சுத்தம் பண்ணி பூசி வலிக்கோனும்ங்க என்ற சொற்கள் எங்கள் ஊரில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் கேட்கத் தொடங்கிவிடும். நல்லியம்பாளையம் கிராமத்தில் மையப் பகுதியில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் காக்கும் கடவுளாக விளங்கி வருகின்றது. ஈரோடு நகரின் அருகில் இருக்கும் சூரம்பட்டி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுத் தொடங்கியவுடன் அதனைத் தொடர்ந்து பழைய பாளையம் நல்லியம்பாளையம் ரங்கம்பாளையம் ரெட்டபாலி வலசு கவுண்டிச்சி பாளையம் என அனைத்துக் கிராமங்களிலும் நோம்பி தொடங்கிவிடும். நோம்பி என்னும் சொல் திருவிழாவைக் குறிக்கும். எங்கள் ஊர் மக்கள் பெரும்பாலும் இந்த நோம்பியை பொங்கல் என்றே குறிப்பிடுவர். 
நகரத்திற்கு குடிபோன ஊரின் மக்கள் வழிபாட்டுக்காக நல்லியம்பாளையம் வரும்போது , ஏனுங்க நங்கையா கொளுந்தியா எல்லாம் நல்லாருக்கலாங்லா' என்ற சொல்லாட்சி மாறி மாறி கேட்கும். 
'வாங்கொ வாங்கொ இப்பத்த வர்ரீங்களா' 

'வூட்ல எல்லாரும் நல்லாருக்கலாங்கலா'

'ஐயன் ஆத்தா அப்பன் அம்மா எல்லாம் நல்லாருக்கலாங்லா' என்று ஊரில் குடியிருக்கும் மக்கள் வாஞ்சையோடு நலம் விசாரிப்பார்கள். 
பையன் என்ன பன்றானுங்க..என்று நகர்ப்புறத்து மாந்தர் விசாரிக்க கிராமப்புற மாந்தர், 
காலேஜி சேந்துருக்கானுங்க நாலு வருஷமுங்க என்று பேசி மகிழ்வார்கள். குறிப்பிட்ட நாளில் மார்கழி மாதத்தில் பூச்சாட்டுத் தொடங்கும். நாங்கள் கிராமம் முழுவதும் திரிந்து வேப்பிலை , ஆவாரம் பூ ஆகியவற்றை பை நிறைய பறிக்க கிளம்பி விடுவோம். இன்றைய நவீன உபகரணங்கள் அன்று எதுவுமில்லை. வேப்பிலையும் ஆவாரம் பூவும் பறிக்கச் செல்லும் போது தோட்டங்களில் பப்பாளியைப் பறித்து கூட்டமாக அமர்ந்து கூறு போட்டு சாப்பிடுவோம். கொய்யா மரத்தில் ஏறி கொய்த கனிகளை மென்றிடுவோம். தோட்டத்தில் உள்ள ஐயன் டேய் யார்ரா அது என்று குரல் கொடுப்பார். ஐயா நாங்க தானுங்க என்று நாங்கள் குரல் கொடுக்க சரி சரி மரத்தை முறிக்காதீங்க.. என்று கூறுவார். பை நிறைய வேப்பிலையும் ஆவாரம் பூ பறித்து மாலை தயாராக இருப்போம். நல்லியம்பாளையத்தில் பூச்சாட்டுத் தொடங்கும் நாளில் கோயிலுக்கு கீழ்ப்புறம் உள்ள ஊர்க் கிணற்றில் காஞ்சிபுரம் அத்தி வரதர் சிலை நீருக்குள் இருப்பது போல ஒரு வருடம் முழுமையும் கோயில் பூச்சாட்டு மரம் ஊர்க் கிணற்றில் நீருக்குள் தவம் இருக்கும். ஊர்க் கோயில் பூசாரி பயபக்தியுடன் வழிபாடு செய்து கிணற்றுக்குள் இறங்கி பூச்சாட்டு மரத்தை மேலே தூக்கி வருவார். சலசலவென்று ஓடும் வாய்க்காலின் கரையில் அரச மரத்தின் கீழ் பூச்சாட்டு மரத்தை தனது தோளில் சுமந்து ஊர்க் கோயில் பூசாரி நர்த்தன நடனம் ஆடுவார். நாங்கள் பறித்து வந்த வேப்பிலையை மரத்தின் மீது தூவ வேண்டும் என்னும் மரபு நம்பிக்கையின் அடிப்படையில் தூவுவோம். இல்லை இல்லை நாங்கள் மிக வேகமாக அந்த வேப்பிலையை வீசும் போது பூசாரியின் முதுகில் சுளிர் சுளிர் என்று வேப்பிலைகள் பட்டுத் தெறிக்கும். ஊர் மனிதர் வானவேடிக்கை நிகழ்த்துவார். நாங்கள் அண்ணாந்து பார்த்து வான வேடிக்கையை நட்சத்திர மின்மினிகளுக்கு இடையில் கண்டு ரசிப்போம். அரச மர விநாயகர் சிலையில் இருந்து மேடேறி கோயில் முன்பாக பூசாரியின் ஆட்டம் தொடங்கும். பிறகு கோயிலுக்குள் உள்ளே வந்து கோயிலின் மையப் பகுதியில் சுமந்து வந்த மரத்தின் மூன்று கவைகளுக்கு மத்தியில் எரியும் பூச்சட்டியை வைப்பார். அதில் எப்போதும் அணையாத சுடர் இருந்து கொண்டே இருக்கும். ஒரு வாரம் முழுமையும். மறுநாள் ஊரில் உள்ள அனைத்து மக்களும் இல்லங்களில் இருந்து சிறு குடம் எடுத்து வந்து பூச்சாட்டு கம்பத்திற்கு நீரூற்றி வழிபாடு நிகழ்த்துவார்கள். இரவு மக்கள் இல்லங்களில் உணவை முடித்துக் கொண்டு கோயிலுக்கு வருகை புரிந்து விடுவர். கோயில் திண்ணைகளில் அமர்ந்து ஆத்தாக்களும் ஐயன்களும் பேசிக் கொண்டிருப்பர். இளவட்டங்களாகிய நாங்கள் பறை இசைக்க நடு சாமம் வரை பறை இசைக்கேற்ப ஆடிக்கொண்டே இருப்போம். பறை இசைக் கலைஞர்கள் கை வலிக்க இசை இசைக்க நாங்கள் கால் வலிக்க ஆடிக்கொண்டே இருப்போம். எப்போதும் பூச்சாட்டுத் தொடங்கி அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை ஊர் மக்கள் பொதுவாக காவேரி ஆறு சென்று நீர் சுமந்து வருவோம். மக்கள் எல்லோரும் செல்வதற்கு வசதியாக இரண்டு லாரிகள் தயாராக இருக்கும். ஆண்களுக்கு ஒரு லாரி பெண்களுக்கு ஒரு லாரி. மாலை 4 மணிக்கு லாரி காவிரிக்கரை நோக்கிச் செல்லும். அங்கு காவிரியில் குளித்து நீராடி மகிழ்ந்து நீர் சுமந்து காவிரியின் கரையில் ஒரு பொது இடத்தில் எல்லா குடங்களையும் பூ சுற்றி மாவிலை வைத்து வைத்து விடுவோம். ஊர்க்காரர்களுக்கு தெரியாமல் நானும் நண்பர்களும் கரையை விட்டு வெளியே வந்து சிற்றுண்டிகள் சாப்பிட்டு ஓடி வந்து விடுவோம். கரகம் வேல் கம்பு முதலியனவற்றை ஒவ்வொருவரும் எடுத்து சுமந்து வருவர். காவிரிக் கரையில் இருந்து நடந்து ஈரோடு நகருக்குள் புகுந்து பெரிய மாரியம்மன் கோவிலில் வழிபாடு நிகழ்த்தி பெரியார் நகர் சூரம்பட்டி நால்ரோடு வழியாக சூரம்பட்டி கோயிலுக்குள்ளும் சென்று திருநீறு அணிந்து கொண்டு மீண்டும் நடந்து பழைய பாளையம் வழியாக நல்லியம்பாளையம் வந்தடைய இரவு ஒரு மணி ஆகிவிடும். காவிரியில் இருந்து சுமந்து வந்த நீரினை அம்மனுக்கு ஊற்றி வழிபாடு நிகழ்த்தி உறங்கிப் போவோம். புதன் அன்று விடியற்காலையில் இல்லத்து பெண்கள் கோயில் முற்றத்தில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடாற்றுவார்கள். கோயிலில் சிறு சிறு பொம்மைக் கடைகள் இருக்கும். அன்று முழுவதும் நாங்கள் மகிழ்ச்சியோடு ஆடிப் பாடி விளையாடி மகிழ்வோம். அன்றுதான் நோம்பி. மறுநாள் கோயிலுக்குள் இருக்கும் அம்மனை உற்சவர் ஆக மாற்றி தேரில் அமர்த்தி ஊர் முழுவதும் வலம் வந்து மஞ்சள் நீராட்டு விழா வெகு விமர்சியாக நடைபெறும். மதியம் கிளம்பிய அம்மன் உற்சவம் இரவு வரை ஊரின் அனைத்து வீதிகள் வழியாகவும் சென்று இல்லங்கள் தோறும் காட்சி கொடுத்து மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக இருக்கும். அம்மன் உற்சவம் மீண்டும் கோயிலுக்கு வரும்போது இரவு நெடுநேரம் ஆகியிருக்கும். நோம்பி முடிந்து விட்டதே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். 

(மீண்டும் கதை பேசுவோம்)

Saturday, 7 February 2026

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -20 ஊரும் உறவும்


நல்லியம் பாளையம் கிராமம் பல மனிதர்களின் உழைப்பால் உணர்வால் உயிரோட்டமான கிராமமாக இருந்து வருகின்றது. தென்னை மரங்களும் வயலும் சூழ்ந்த வளமான கிராமம் எங்கள் நல்லியம் பாளையம். ஊரின் அடையாளங்கள் பல இருந்தாலும் இப்போதும் எப்போதும் ஊரின் அடையாளமாக இருப்பது உறவாகத் திகழும் மக்கள் தான். 

நல்லியம்பாளையம் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.. அந்தக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் கவுண்டர்கள். அவர்களில் சாத்தந்தை கூட்டம் , கண்ணன் கூட்டம் , காடை கூட்டம், முத்தங் கூட்டம் , தூரன் கூட்டம் , மணியங் கூட்டம், செல்லன் கூட்டம், ஆந்தை கூட்டம், அந்துவன் கூட்டம் , ஓதாளன் கூட்டம்  இன்னும் பிற கூட்டங்கள் கூட்டமாய் நின்று ஊரின் பெருமை காத்து வந்தனர். 

நல்லியம்பாளையம் கிராமத்தின் காவல் தெய்வம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பணிகளில் எப்போதும் முன் நிற்பர். ஊரின் பெருமைக்குச் சிறப்பு சேர்க்க ஊர்க் கவுண்டர்கள் தங்களை எப்போதும் முன் நிறுத்தி பெருமை கொள்வர். 

கொங்கு வேளாள கவுண்டர்களின் கூட்டம் என்பது சோழர் காகாலத்திலிருந்தே நிலம் மற்றும் உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவான குலப்பிரிவுகள் ஆகும். திருமண உறவு முறையை முறைப்படுத்தவும், ரத்த உறவு அடையாளத்தை நிலைநிறுத்தவும், நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் (குலக்குழுக்கள்) பங்காளி முறைப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

எங்கள் ஊர் நல்லியம்பாளையத்தார்கள் சொல் ஒன்று வெட்டு ஒன்று என்றே இருப்பார்கள்’. ‘தங்கள் குடும்பத்திற்கோ, ஊருக்கோ, குலத்திற்கோ வரும் இழிவைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தங்களின் முன்னோர்கள் வழியில் ஊரைக் காப்பதில் முன்நிற்பர். 

நல்லியம்பாளையத்தின் முன்னோர்கள் காடு திருத்தி நாடு நலம் பெற பெரும் வேளாண்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். கொங்கு நாடு 24 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஊருக்கு ஒரு கொத்துக்காரர் மூலம் ஊர் வழிநடத்தப்படும் மரபு வழிவழியாக இருந்து வருகின்றது. எம் ஊரிலும் அந்த மரபு இருந்து வருகின்றது. 


நல்லியம்பாளையம் கிராமத்தில் கவுண்டர்கள் ஆரம்ப காலங்களில் வேளாண் தொழிலில் சிறந்து விளங்கினர். அடுத்தடுத்த தலைமுறைகளில் வந்தவர்கள் நகரம் நோக்கிச் சென்று பல்வேறு தொழில் முனைவோராக உருவாகி நல்லியம்பாளையத்திற்குப் பெருமை சேர்த்தனர்.நல்லியம்பாளையம் கவுண்டர்கள்  மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர்கள்’. 

    ஊர்க்கவுண்டர்களில் ஒருவரான சூரம்பட்டியார் ஐயனின் மகன் குழந்தைசாமி அண்ணன் அவர்கள் நகரம் சென்று தொழில்துறையில் சிறந்து விளங்கினார். பல்வேறு முயற்சிகளில் அடுத்தடுத்த நிலைக்குச் சென்ற திரு. குழந்தைசாமி அண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது. அவரைச் சிறப்பிக்கும் வகையில் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஊரின் தெற்குப் புறத்தில் அரச மரத்தின் அருகில் மேடை அமைத்து ஊர் மக்கள் அனைவரின் சார்பாக அவருக்குப் பாராட்டு விழா எடுத்தனர். அப்போதெல்லாம் நாங்கள் சிறுவயது பாலகனாய் விளையாடிக்கொண்டு இருப்போம். 

திரு.குழந்தைசாமி அண்ணன் அவர்கள் தனது உரையில் , இந்த விருது எனது நல்லியம்பாளையம் கிராமத்திற்குச் சேர்ந்தது என்று பெருமைபட கூறினார்கள். 

ஊரின் பெரும்பாலான காணியாளர்கள் விவசாயம் போக மாற்றுத் தொழிலாக நகரம் சார்ந்து பல்வேறு தொழில் முனைவோர்களாகத் திகழ்ந்தனர். எங்கள் நல்லியம்பாளையம் கிராமத்திற்கு ‘நகைக்கடைக்காரர் ஊர்’ என்ற பெயர் இன்றும் உண்டு. ஊரில் பெரும்பாலானவர்கள் நகைக்கடைத் தொழிலில் சிறந்து விளங்கினர். 

ஊர் நகரமயமாகத் தொடங்கியதால் ஊரின் பெரும்பாலான வேளாண் நிலங்கள் வீடுகளாக மாறத்தொடங்கினாலும் ஊரின் பெருமை என்றும் மாறாமல் இருப்பதற்கு ஊர்க்கவுண்டர்களின் அயராத உழைப்பும் ஊர்க்கட்டுப்பாடும் காரணமாய் இருந்து வருகின்றது. 

               பதினெட்டு வகையான சமூகங்களை  ஆதரித்து சமய விழா, சமுதாய விழா, குடும்ப விழாக்களில் அனைவரையும் பங்கு கொள்ளச் செய்து தாராளமாக அவர்கட்குத் தானியம் வழங்கி ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ பொதுவுடைமைச் சமுதாய வாழ்வை நடைமுறைப் படுத்தியது கொங்குச் சமுதாயம். பொதுவாக அவர்களைப் ‘பணி மக்கள்’ என்று மக்கள் உரிமையோடு அழைத்தது கொங்குச் சமுதாயம்.

நல்லியம்பாளையம் கிராமத்தில் ஊர்க்கவுண்டர்கள் போக ஆசாரியார்கள் சமூகம் ,திருக்கோயில் பணி புரியும் பண்டார சமூகம் , செட்டியார் சமூகமாக எங்கள் குடும்பம் ஆகியோர்  வசித்து வந்தனர். 

       ஊர்க்கவுண்டர்களின் இல்லத்தின் நிகழ்வுகளில் பண்டார சமூகத்தினர் முன்நின்று பல பணிகளைச் செய்வர். ஊரில் காவல் தெய்வமாக இருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூஜை பணிகளில் அவர்கள் முன்நிற்பர். ஊரில் பூச்சாட்டு தொடங்குவதில் இருந்து கம்பம் எடுத்து வந்து கம்பத்தை ஊரின் பொதுக்கிணற்றில் விடுவதுவரை ஒவ்வொரு கொங்கு கிராமத்திலும் பண்டார சமூகத்தினரின் பணி முக்கியமானது. 

ஊரில் ஊர்க் கவிண்டர் சமூகத்தில் அவர்களின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபெறும் முக்கிய சமூகமாக குடிநாவிதர் சமூகம் இருக்கும். கொங்கு கிராமங்களில் பண்டாரத்தினர் மற்றும் குடிநாவிதர் இன்றி கிராமங்கள் கிடையாது என்ற அமைப்பு முறையை கொங்கு வேளாள முன்னோர்கள் உருவாக்கித் தந்தனர்.


நான் சிறுவனாக இருந்தபோது ஊர்க்கவுண்டர் வீட்டுத் திருமணங்களில் அழைப்பிதழை கவுண்டர் வீட்டுச் சமூகம் வந்து கொடுப்பதற்கு முன்பாக , குடிநாவிதர் சமூகம் ஒவ்வொரு இல்லம் சென்றும் வழங்கும் முறையை உருவாக்கி வைத்திருந்தனர். 

கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இல்ல நிகழ்வுகளில் , ஆண் , பெண் ஆகியோரின் உறவு முறைகளை விசாரித்து , சொத்து பத்து எவ்வளவு ? வெளியூர் மாப்பிள்ளையின் நடத்தை ஆகியவற்றை விசாரித்து வந்து சொல்வதில் நாவிதர் சமூகத்திற்கு அந்த உரிமையை வேளாளக் கவுண்டர்கள் அளித்திருந்தனர். 

கவுண்டர்களின் திருமண மேடையில் மங்கல வாழ்த்துப் பாடி குலதெய்வ வழிபாடு வரை நாவிதர் சமூகம் முன்நிற்பர். கொங்கு நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் நாவிதர் சமூகம் இன்ப , துன்ப நிகழ்வுகளில் முன்நிற்பர். ஏதேனும் இல்லங்களில் துக்க காரியம் நடந்தால் அதனைக் கொங்கு கிராமங்களில் பெரிய காரியம் என்று சொல்வர். அப்படி நடந்தால் முதன்மையாக நாவிதர் சமூகத்திற்குத்தான் முதன்மையாகச் சொல்லி அனுப்புவர். பெரிய காரியம் நடந்தவுடன் இறந்தவரின் உடலை ஆடைபோற்றி , தலைமாட்டில் சூடம் ஊதுபத்தி ஏத்தி பன்னீர் தெளித்த பிறகே அழும் வழக்கம் கொங்குக் காணியாளர்கள் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.  

      இன்று மின்மயானங்கள்  வந்தாலும் அந்த முறைகளிலேயே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பணிகளில் நாவிதர் சமூகத்தின் பணி முக்கியமானதாக இருந்துவருகின்றது. 

நல்லியம்பாளையம் போன்ற கொங்குக் கிராமங்கள் இன்றும் உயிர்ப்போடு இருப்பதற்கு முன்னோர்கள் உருவாக்கித் தந்த நடைமுறைகளே சாட்சியாய் இருந்து வருகின்றது.  

ஊருக்குக் ‘கொத்துக்காரர்’ நாட்டுக்கு ‘பட்டக்காரர், சடங்குக்கு ‘அருமைக்காரர்’ என்று நியமித்து, நீதிநெறிக்கு கட்டுப்பட்டு வாழும் சமுதாயம் கொங்குச் சமுதாயம்.  எங்கள் ஊர் நல்லியம்பாளையத்திலும் ஊர்க் கொத்துக்காரர் ஊரின் முக்கியமானவராக முதன்மையானவராகக் கருதப்படும் மரபு இன்று பேணப்பட்டு வருகின்றது. ஊர்க் கோயில் திருவிழா தொடங்கி ஊரின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று வழிநடத்தும் மரபாக , கொத்துக்காரர் மரபு கொங்கு கிராமங்களில் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. 

நல்லியம்பாளையம் கதை கொங்கு கிராமங்களின் கதை. நல்லியம்பாளையம் முன்னோர்கள் ஊர் எப்படி இருக்க வேண்டும் என்ற மரபை உருவாக்கி அதை அடுத்த தலைமுறையிடம்  ஒப்படைத்துள்ளனர். 

ஊரின் பெருமை என்பது மக்களால் உருவாக்கப்படுவது. எங்கள் ஊர் பெருமைமிகு ஊர் என்பதில் கர்வம் கொள்வோம். 





Thursday, 29 January 2026

காந்தியம் தந்த சுதேசியம்

      

   வலியவர்களால் உருவாக்கப்படாமல் எளியவர்களால் உருவாக்கப்பட்ட வரலாறே திருப்புமுனையாகவும் திருப்பத்தை ஏற்படுத்திய மாற்றமாகவும் திகழ்கின்றது. அவ்வகையில் சுதந்திரப் போரில் ஒவ்வொருவரும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தங்கள் போராட்டங்களை வடிவமைத்தனர். காந்தியடிகள் அவ்வாறு தேர்ந்தெடுத்த அடையாளம் ஆடை .

          அணிகின்ற  ஆடையையே  தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் நம் வரலாறு நெடுகிலும்  வாழ்ந்திருக்கிறார்கள்.   இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக , இந்திய பொருளாதாரத்தின் எழுச்சிகளுள்  ஒன்றாக  இருந்தது  “கதர் ஆடை இயக்கப் போராட்டம் ” . ஒத்துழையாமை இயக்கத்தின் நீட்சியாக ,  அன்னிய நாட்டின் உற்பத்தியில் வராத, கையால் நெய்து உடுத்திக் கொள்ளும் ஆடைகளே  கதர் ஆடை. கதராடை இந்தியாவின் எழுச்சியாகவும் அடையாளமாகவும் மாற்றியவர் காந்தியடிகள். காந்தியடிகள் தேர்ந்தெடுத்த கதராடை மிகப்பெரிய ஆயுதமாகவும் அடையாளமாகவும் மாறி மக்களைப் போராடத் தூண்டியது. பிற நாட்டுத் துணிகளை தீயிலிட்டு எரித்து கைகளால் நூற்பு செய்து சுதந்திரப் போரில் ஒவ்வொரு இந்தியரும் போராடினர். 

     இந்திய   நாட்டுக்குக்   கதராடையை  அறிமுகப்படுத்திய காந்திக்கு, கதர் என்கிற ஆடையை  முதலில் அறிமுகம் செய்தவர், இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கிய மெளலானா முகமது அலி மற்றும் சௌகத் அலி  ஆகிய அலி  சகோதரர்களின்´ அம்மாதான் என்பது நாம் அறிய வேண்டிய செய்திகளில் முதன்மையானது. 

        சுதந்திர போராட்ட வரலாற்றில் காந்திக்கு உறுதுணையாக இருந்த அலி சகோதரர்களின்  இல்லத்திற்கு காந்தியை அழைத்து வருமாறு  , அலி சகோதர்களின் தாயார்  ஆலாஜிபானு என்கிற பலீமா கேட்டுக்கொள்ள, அதனை ஏற்று மகாத்மா காந்தியடிகள் அலி சகோதரர்களின் இல்லத்திற்குச் செல்கிறார்.  ஆலாஜிபானு என்கிற பலீமா  தனது கை ராட்டையில் நெய்த ஒரு ஆடையை காந்திக்குப்  பரிசாக வழங்கினார். அந்த ஆடையைப்பற்றி அம்மையாரிடம் காந்தியடிகள் கேட்ட போது, பருத்தி நூலில் இருந்து கையால் நூற்பு செய்து  எடுத்த ஆடையானது உருது மொழியில்  “ஃகதர்”  என்றும் ஃகதர் என்றால் கவுரவம் என்று பொருள்படும் என்றும்  அதனால் காந்தியடிகளை கவுரவப்படுத்தும் பொருட்டு   இந்த ஆடையை வழங்குவதாகவும் தெரிவித்தார்  பலீமா. 

     கதர் என்றால் தனது கரங்களால் தானே நெய்து  உடுத்தும் ஆடை என்றும் அன்னிய கலப்பில்லாத ஆடை என்றும் நாட்டின் மக்களுக்கு கவுரவத்தையும் சுய மரியாதையையும் வழங்கும் தன்மை உடையது என்ற கோட்பாடு காந்தியால் இந்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.   சுதந்திர இந்தியாவின்  அடையாளமாக கதர்  மாறியதற்கும் ,  கதர் அணிவது கவுரவம் மட்டுமல்ல உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சி என்பதை எடுத்துச் சொல்லும் களமாக அமைந்தது  மதுரை . 

                       

செப்டம்பர் 22,1921 காந்தியடிகள் தமிழகத்தின் மதுரை வந்திருந்தபோது உடம்பில் அரையாடை மட்டுமே அணிந்திருந்த ஏழை எளியோரைக் கண்டு மனம் வருந்தி தானும் அரையாடைக்கு மாறினார்.  இந்திய  ஏழைகள் வாழ்வாதாரமின்றித் தவித்துக்கொண்டிருக்க தான் சொகுசான ஆடை அணிய மாட்டேன் என்று தனது தோற்றத்தை மாற்றினார்.  ஏழைகளின் வாழ்விலும் இந்திய சுதந்திரப் போரிலும்  ‘காந்தியின் கதராடை’ புரட்சிப் போராட்டம் மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கியது.  உலக வரலாற்றில் ஆடை ஒரு ஆயுதமாக , சுதந்திரப் போரில் பெரும்பங்கு வகித்தது என்றால் அது கதராடை மட்டுமே. 


“கங்காபென் மஜூம்தார்“ என்ற பெண் , விஜய்பூர் சமஸ்தானத்தில், நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் பரண் மேல் கிடந்த கைராட்டையைக் கண்டுபிடித்து காந்தியிடம் கொடுத்தார். மனம்மகிழ்ந்து பெற்றுக்கொண்டார் காந்தி.   சபர்மதி ஆசிரமத்தில் காந்தியினால்  கதர் உற்பத்திக்கு  புதிய எழுச்சி கிட்டியது. 

 எல்லோரும் போராளிகளாக , எல்லோரும் உற்பத்தியாளர்களாக மாறிட முடியும் என்ற எண்ணத்தில் ஆலைத் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக எளிமையான தொழில்நுட்பத்தைக் கொண்ட கைராட்டை, கைநெசவு என்ற கதர் உற்பத்தியை ஏழை மக்களிடமே கொடுத்துக் கதரை உற்பத்தி செய்யக் கேட்டுக்கொண்டார் காந்தி.

   எளிய மக்களால் தேசத் தலைவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட கதர் ஆடை  தேவைக்குப் போதுமானதாக இருக்கவில்லை .  ஒத்துழையாமை இயக்கம் வேகமாகப் பரவப் பரவ, மக்கள் ஆர்வத்தோடும் தேசபக்தியோடும் கதர் உடுத்த ஆரம்பித்தார்கள். கதர், சுதந்திரப் போராட்டத்தின் சின்னமாக மாற ஆரம்பித்தது. மக்களின் கதர்த் தேவை பலமடங்கு அதிகரித்துத் தட்டுப்பாடு ஏற்பட்டது. 

    கதருக்குத்  தட்டுப்பாடு இருக்கக்கூடிய ஒரு நிலையில், தனக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் மக்கள் ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும் எனக்கேட்டுக் கொண்டு தானே அதற்கான முன்மாதிரியாகவும் மாறினார்.  அவ்வகையில் தனது உடலில் இடுப்புப் பகுதியில் மட்டும் கதரை உடுத்துவது என்று காந்தி முடிவெடுத்தார்.  அவரது அந்த முடிவே மேலாடையின்றி இறுதிவரை அவரை இருக்கச் செய்தது.      

    

     ‘அண்ட்டு திஸ் லாஸ்ட்’ என்ற கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூலே மோகன்தாஸ் என்ற மனிதரை மகாத்மாவாக மாற்றியது. எளிய வாழ்வை வாழ வைத்தது. கதர் நெய்வதும், விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய செயல்களாக பிரிட்டிஷாரால் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், “அந்நிய பொருட்களைப் புறக்கணிப்போம்” என்ற கொள்கையால் கதரும் சுதந்திர எழுச்சியும் வீறு கொண்டது. 

     இந்த “கதர் இயக்கப் போராட்டமானது”  இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் மாபெரும் சுதேசியப் பொருளாதாரத்தையும் அடையாளம் காட்டியது.

சுதந்திர நாட்டில் சுதேசி பொருட்களை வாங்குவதற்காகவே பெறப்பட்ட சுதந்திரம் அன்னியப் பொருட்களால் நிரம்பி இருப்பது அழகல்ல. சுதேசியம் தந்த காந்தியத்தை வணங்குவோம். 


Wednesday, 26 November 2025

பொ.சங்கரின் நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -19-

 


   கட்சிக் கம்பங்கள் இல்லா ஊர் 


தமிழக அரசியல் களம் தேர்தல் வந்தால் பரபரப்பாய் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் , சட்டமன்றத் தேர்தல் , ஊராட்சி மன்றத் தேர்தல் என மூன்று வகையான தேர்தல்கள் நடக்கும் போது ஊரில் சிறிது பரபரப்பு இருக்கும். 

அன்றைய நாட்களில் கோயில் பொது மேடையில் ஒரு தினத்தந்தி நாளிதழ் பொதுவாய் வரும். எல்லோரும் படிப்பார்கள். தேர்தல் நேரத்தில் சில அரசியல்வாதிகள் , தமிழகத்தில் என் காலடி படாத கிராமமே இல்லை என்று முழங்கியிருப்பது செய்தியாக வந்திருக்கும். என் நினைவில் அந்த முக்கிய அரசியல்வாதிகள் யாரும் எங்கள் நல்லியம்பாளையம் மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வந்ததாய் நினைவில்லை. 

வேட்பாளர் சார்பாய் ரேடியோ கட்டிய வண்டில நோட்டிஸ் போட்டுக்கொண்டு வாகனம் வரும். யாரேனும் ஒரு பேச்சாளர் வண்டிக்குள்ள உட்கார்ந்து கொண்டு ,உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ________ சின்னத்தில் மறக்காமல் பதிவு செய்யுங்க. தேர்தல் நாள் _____ என்று பதிவு செய்து போவார்கள். 

ஏதேனும் ஒரு சில சுவர்களில் மட்டும் மாநிலக் கட்சிகளின் சின்னங்கள் வரையப்பட்டு இருக்கும். மற்றபடி என் நினைவில் தெரிந்து நல்லியம்பாளையம் கிராமத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் எங்கும் இருந்தது இல்லை. 

நல்லியம்பாளையம் கிராமத்தில் பல கட்சியினரும் இருந்தாலும் பொது இடங்களில் , கோவில்களில் யாரும் அரசியல் பேசாமல் ஊரின் தன்மானம் காக்க ஒற்றுமையாய் இருந்தனர். 

என் பதினோரு வயதில் உள்ளாட்சித் தேர்தலில் சம்புக் கவுண்டர் வெற்றி பெற்று ஊரில் வெற்றி ஊர்வலம் வந்தது நினைவில் உள்ளது. அவரது முயற்சியால் ஊரின் தென்புறம் இரட்டபாளி வலசு செல்லும் பாதையில் வசிக்கும் மக்களுக்காக வாய்க்காலைக் கடந்து செல்ல பாலம் கட்டித் தர முயற்சி எடுக்கப்பட்டது. 

நல்லியம்பாளையம் கிராமம் கிட்டத்தட்ட 1998 வரை கிராமமாகவே இருந்தது. அதன்பிறகு ஊருக்கு அருகில் ஹவுசிங் போர்டு வர நூற்றுக்கணக்கான வீடுகள் ஊரைச் சுற்றி உருவாகத் தொடங்கின.

நல்லியம்பாளையம் ஊரில் வசித்த உள்ளூர் மக்கள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக நகரங்களில் குடியேறத் தொடங்கினர். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரிலும் தோட்டத்திலும் வசித்த நிலையில் இன்று ஊரில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே உள்ளூர் மக்கள் வசிக்கும் நிலை உருவானது. ஆனாலும் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நாட்களிலும் , மாதந்தோறும் பெளர்ணமி நாட்களிலும் ஊர்க்கோயில்களில் ஒன்றுகூடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

நல்லியம்பாளையம் கிராமம் காலப்போக்கில் ஊராட்சி மன்ற அமைப்பில் இருந்து , மாநகராட்சியின் எல்லைக்குள் வந்தது.  

மண்மணம் மாறினாலும் ஊரின் நிலையை என்றும் எடுத்துரைப்பது ஊர்க்கோயிலும் , பெருமாள் கோயிலும்  அரச மர அடையாளமும் தான். ஊர் மாநகராட்சி எல்லைக்குள் வந்தாலும் ஊரின் கட்டுப்பாடுகள் என்றும் மாறாமல் இன்றும் இருப்பதே அதன் பெருமைக்குக் காரணமாய் இருக்கின்றன. 

இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு நின்று நிதானமாய் கதை பேசி நகர்ந்து சென்ற ஆத்தாக்களும் , தாத்தாக்களும் இன்று எண்ணிக்கை குறைந்து விட்டார்கள். 

ஆனாலும் நல்லியம்பாளையம் கதை இன்னும் பல பேசப்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு ஊரின் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும். 


Saturday, 22 November 2025

பொ. சங்கரின் நல்லியம்பாளையம் கதை பேசுவோம் 18

 

                                     சின்னப்புள்ள அக்கா

                    




    மண் மணம் மாறாத எங்கள் நல்லியம்பாளையத்தில்  வாழ்ந்த ஒரு அக்காவின் பெயர் சின்னப் புள்ள. அவங்க பேரு ‘சின்னபுள்ள ‘ தானா என்று இதுவரை தெரியவில்லை. 

நல்லியம் பாளையம் கிராமத்தில் இரவு பகல் பாராமல் எப்போது உறங்குவார் என்றே தெரியாத நிலைக்கு எப்போதும் நடந்து கொண்டே இருப்பார். 

நாங்கள் பால்ய வயதில் ஊரின் மேற்குப் புறம் கிழக்கு, வடக்கு என எல்லாத் திசைகளிலும் ஓடி ஓடி கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு இருப்போம். கோவில் திண்ணையில் விளையாட்டுத் தொடங்கும். யாரோ ஒருவர் தேடும் பொறுப்புக்கு ஆட்படுவார். ஊரெல்லாம் சுற்றி சுற்றி தேடினாலும் காணக்கிடைக்காத சில இடங்களில் , சில மரங்களில் ஒளிந்து கொள்வோம். 

       எங்கள் விளையாட்டுத் தொடங்கும் நேரத்தில் கோவில் திண்ணை அருகே நிற்கும் சின்னப்புள்ள அக்கா அடுத்தடுத்த நிமிடங்களில் கொத்துக்காரர் வீடு அருகே நடந்து வந்துவிடுவார். மனநிலை சற்று மாறி இருக்கும் சின்னப்புள்ள அக்காவ யாரும் ஊரில் எதுவும் சொல்ல மாட்டார்கள். 

யாரையும் பார்த்து சிரிக்க மாட்டார். யாருடனும் பேச மாட்டார். ஆனால் எதையோ பேசிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் விபரம் புரியாத வயதில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்க , திடிரென்று சத்தம் போட்டு அடிக்க வருவார். ஆனால் அடிக்க மாட்டார். நடந்து சென்று விடுவார்.

எனது சிறுவயதில் வள்ளியம்மாள் ஆத்தாவிடம் , சின்னப்புள்ள அக்காவுக்கு என்னாச்சு என்று கேட்ட போது ஒரு கதை கூறினார் வள்ளியம்மாள் ஆத்தா. 

எங்கள் கண்ணாமூச்சி ஆட்டம் இரவு ஒன்பதைக் கடந்தும் நீடித்துக் கொண்டிருக்க யாரேனும் ஒருவர் ஆட்டத்தில் இருந்து இல்லம் செல்ல தொடங்கினால் கண்ணாமூச்சி ஆட்டம் நின்று விடும்.வூடு வந்ததும் அம்மா திட்டுவாங்க. காதில் வாங்கிக் கொள்ளாமல் விளையாட்டு பற்றி சிந்தித்து , அடுத்த நாள் கிரிக்கெட், கிணறு னு யோசிச்சு தூங்கப் போவோம். ஆனால் இரவில் எந்தத் தெருவிலும் எங்கேயும் உறங்காமல் சின்னப்புள்ள அக்கா எதையோ பேசி நடந்து கொண்டிருப்பார். 

சின்னப்புள்ள அக்கா பேசுவது யாருக்கும் புரியாது. சில நேரங்களிலும் பாடல் கூட பாடி கேட்டதுண்டு. சிறு வயதில் மிக அழகாக இருப்பார் என்று ஊர்ப் பெரியவங்க சொல்லிக் கேட்டதுண்டு. 

சின்னப்புள்ள அக்கா மனதளவில் பாதிப்பு அடைந்திருந்தாலும் ஒருநாளும் யாரையும் காயப்படுத்தி கேள்விப்பட்டதில்லை. 

ஈரோட்டில் இருந்து பழையபாளையம் வழியில் இரவு எட்டு மணிக்கு வேலை முடிந்து பலரும் வருவார்கள். ஊருக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் சின்னப்புள்ள அக்காவ யாராச்சும் பார்த்து , ஊருக்குள்ள போ என்று சொல்லிச் செல்வார்கள். மீண்டும் நடந்து ஊரின் தென்புறம் அரசமரம் அருகே வந்து நின்றிருப்பார். மீண்டும் யாராச்சும் ஊர்க்கவுண்டர்கள் சொல்ல , சின்னப்புள்ள அக்கா மாரியம்மன் கோயில் அருகே வந்து நின்றிருப்பார். 

மனநிலை மாறினாலும் ஒருநாளும் சின்னப்புள்ள அக்கா ஊரை விட்டு எங்கேயும் சென்றது இல்லை. ஊரின் மத்தியில் சின்னப்புள்ள அக்காவுக்கு ஒரு வீடு இருக்கும். ஆனால் வீட்டில் இல்லாமல் பல இடங்களிலும் நடந்து கொண்டே இருப்பார். 

ஒருமுறை ஊரில் சின்னப்புள்ள அக்காவிடம் வெளிப்புறத்தான் கைவரிசை காட்டி தவறாக நடக்க  முயல ,  சின்னப்புள்ள சத்தமிட்டுக் கத்து ஷாப்கார கவுண்டர் அந்த வெளிப்புறத்தானைப் பிடித்து அடி துவைத்து அழ வைத்து சின்னப்புள்ள அக்கா காலில் விழவைத்தார். நாங்கள் பால்ய வயதில் அந்த நிகழ்வுகளைக் கண்டு அந்த அக்கா மீது பரிதாபம் கொண்டே நடந்து கொண்டோம். 

ஊரில் எங்கள் பெரியவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட போலிசு மாதிரியே இருந்தமையால் தப்பித்தவறி கூட , அறிந்தும் அறியாமல் கூட நாங்கள் தவறே செய்து விட முடியாது. 

குடும்ப நிலை, ஊரின் கெளரவம் , ஊர்க் கவுண்டர்களின் மீது இருந்த மரியாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டே நாங்கள் வளர்ந்தோம். 

இப்படியாக நீண்ட நல்லியம்பாளையத்தில் பல மணிநேரங்களாக சின்னப்புள்ள அக்கா காணாமல் இருக்க பலரும் பல இடங்களில் தேட , அவர் நடக்காமல் , அவர் பேசாமல் , பாடாமல் தம் மூச்சை நிறுத்திக் கொண்டார். அந்த அக்கா எதையோ சொல்ல பல ஆண்டுகளாக முயன்றும் , பலருக்கும் புரியாமலேயே அவரின் இறுதி வாழ்வு நிறைவடைந்தது. 

இன்னமும் நினைவில் உள்ளது அவரின் குரல். ஆனால் என்ன சொன்னார் என்பது மட்டும் இன்னமும் புரியவில்லை. நல்லியம் பாளையம் கதையில் ஊரின் வடக்கு, கிழக்கு, மேற்கு , தெற்கு என அனைத்து வீதிகளிலும் , அரச மரம் , வேப்பமரம், ஆழமரம் என அனைத்து இடங்களிலும் அவர் நின்று கொண்டிருப்பார். என்ன சொல்லியிருப்பார்...அந்த மரங்களே சாட்சி….



    


Tuesday, 4 November 2025

பொ.சங்கரின் நல்லியம் பாளையம் கதை பேசுவோம் 17

நம்ம நல்லியம்பாளையத்துக்கு 
ஐப்பசி மாதம் வந்து சேர்ந்தாச்சுன்னா,  ஒரு விதமான மகிழ்ச்சி! 

காலை எழுந்தவுடனே வானம் முழுக்க கரிய மேகம் சூழ்ந்திருக்கும். கிழக்கில காற்று வீசும் – அது ஒரு மணம்! “அடடா, மழை வாசனை தானே இது!”ன்னு யாரோ ஒரு அப்பத்தா சொல்லி புன்னகை வருட விடுவாங்க. 

மழை வரப்போகுது என்ற உணர்ச்சிதான் ஊர்ல ஒரு திருவிழா மாதிரி இருக்கும்.  வாய்க்கால்ல நீர் ஓடும். நீர்த்தாரை வந்து சேரப் போறது போல நீலக் குன்றுகள் தூரத்தில மங்கலாய் தெரியும். நெல் வயலுக்குள்ள மண்ணு நனைந்து, பசுமையோட மிளிரும்.

பிள்ளைகள் எல்லாம் களத்தில ஓடி விளையாடும் “ஏய்! தண்ணி பொழியுது டா, நனைந்தா சளி பிடிச்சிரும்!”ன்னு அம்மாக்கள் கத்துவாங்க. ஆனா யாரு கேப்பா! நீரில் கால்கள விட்டு துள்ளுறது தான் அவர்களோட சந்தோஷம்.
மழை விழும் ஒலியும், பிள்ளைகளோட சிரிப்பும் சேர்ந்தா ஒரு இனிமையான இசை மாதிரி இருக்கும்.
மாடுகளும் மழைத் துளியில நிம்மதியா நிக்குது. மாடு தலையில விழும் துளியைக் கண்டு வால் ஆட்டுது. அதைக் கண்டு ஒரு தாத்தா சொல்லுவார் ,

“மாடு மகிழ்ந்தா மழை நல்லா பெய்யும் டா! இதுதான் நம்ம ஊர்ல பழமொழி!”
அந்த வார்த்தை கேட்டு நெஞ்சுக்குள்ளே ஒரு நம்பிக்கை எழும்.
மழை கொட்டிக் கொட்டிப் பெய்யும் போது, யார் வீட்டுக்குள்ளோ  அடுப்பில  வெந்தயக் குழம்பு வாசனை வரும்.
 
  திண்ணையில ஆத்தா ஒரு தாளம் போட்டுட்டு மழை ஒலி கேட்டு மகிழ்வாங்க.
“மழை நன்றா பெய்யணும் டா, அப்போ தான் வயல் பசுமையா இருக்கும்!”ன்னு அப்பத்தா பேசிச்  செல்வார்.
அந்த நேரத்துல நெல் நாற்று மழையில மிதந்த மாதிரி ஆடும். பசுமையான வயல் காணும் போதே விவசாயிகளின் மனசு நிறைவு ஆகிடும்.
இரவில மழை நின்னதும் வெளியே போனா , மண் வாசனை எப்படியோ ஒரு சுகம் தரும். 
நிலா மேகத்துக்குள்ள நுழைந்து ஒளி தரும் காட்சி. மரத்தில மழைத்துளி வழிந்துசெல்லும் சத்தம் காதுக்குச் சங்கீதம் மாதிரி இருக்கும்.
அடுத்த நாள் காலை, மண் மிதமிஞ்சிக் குளிர்ந்திருக்கும். பெண்கள் கோலமிட முடியாது. 

  சின்னப்பிள்ளைகள் மண்ணுல சின்ன மண் கோட்டைய கட்டுறது.
ஐப்பசி மழை நம்ம ஊர்க்கு வெறும் தண்ணி இல்லப்பா – அது நம்ம உயிர் தண்ணி!
அது வந்தா தான் வயல் பசுமையா இருக்கும், களங்கள் வளம் தரும், மனசு மகிழும்.
மழை வரணும், மண் குடிக்கணும், நம்ம ஊரு உயிரோட புன்னகைக்கணும் – அதுதான் எல்லாரோட ஆசை!
“மழை பெய்யட்டும் தாய்மண்ணே குடிக்கட்டும்,
நம்ம நல்லியம் பாளையம் நெல் தளிர் எழுந்து புன்னகைக்கட்டும்!”