நல்லியம் பாளையம் கதை பேசுவோம்
கொங்கு நாட்டுக் கிராமங்களில் எழுதிங்கள் சீர் முக்கியமானதாகப் போற்றப்பட்டு வருகின்றது. அதிலும் கொங்கு நாட்டில் ஈரோடு மாவட்டத்தில்தான் எழுதிங்கள் சீர் சிறப்பானதாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வகையில் எங்கள் ஊரான நல்லியம் பாளையம் கிராமத்திலும் எழுதிங்கள் சீர் சிறப்பாகக் நடந்துள்ளது. நான் சிறுவனாக இருந்த போது ஊரில் நல்ல முகூர்த்த நாட்களில் , நாளை எழுதிங்கள் சீருக்குப் போறேனுங்க என்று எங்கள் கடை அருகில் ஊர்க் கவுண்டர்கள் பேசுவார்கள். எந்த ஊருல சீரு என்று இன்னோரு கவுண்டர் கேட்க அது கதையாக நீளும்.
தோட்டத்தில் இருந்து பால் கறந்து வரும் ஐயனும் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச செல்லும் ஐயனும் நேரமாச்சு என்று சொல்லிக் கொண்டே முக்கால்மணிநேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்தக் கதைகளின் ஊடாகத் தோட்டத்தில் இருந்து காய்களையும் சுமந்து வரும் ஆத்தாக்களும் கதைகளில் கலந்து நின்று கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள்.
கவுண்டிச்சி பாளையம் குடி நாவிதன் வந்து பத்திரிக்கை கொடுத்தமாதிரி இருந்திச்சே யாரு வூட்டுல விசேசம் என்று மீண்டும் ஒரு கதை தொடங்கும். கவுண்டிச்சி பாளையம் வாய்க்கால ஒட்டி மேக்கால தோட்டத்து என்று சொல்லி அவர்களின் ஒறவு முறை கூறிட , அட ஆமா ஆமா தெரியும் சொல்லுங்க என்று கதை நீளும்.
நாங்கள் ஓடியாடி விளையாடிக்கொண்டு இருக்கும் போது மாலை அந்தி சாயத் தொடங்கும் கதை, லேசாக இருட்டு விளும் நேரத்தில் , அட நேரமாயு போச்சு போகனும்ங்க காட்டுல தண்ணிக் காட்டணும் என்று ஒரு கவுண்டர் ஆரம்பிக்க , அட ஒங்க கூட பேசிட்டே நானும் பால் ஊத்தப் போகனுங்கறத மறந்துப்புட்டேன். சரி பாப்போங்க நாளைக்கு எழுதிங்கள் சீர் க்கு போகனுங்க வாரேங்க என்று கிளம்புவார்கள்.
நல்லியம்பாளையம் மண்ணின் மைந்தர்கள் பலரின் கதைகள் செவி வழியாகவே கடத்தப்பட்டு வாழ்வியலாகக் கடந்துள்ளது. அவ்வகையில் நல்லியம் பாளையம் கிராமத்தில் எழுதிங்கள் சீர் என்பது கொங்கு வேளாள மக்களின் முக்கிய சீராக நடத்தப்பட்டு வருகின்றது.
கொங்கு கிராமங்களின் கொத்துக்காரர் பட்டம் எவ்வாறு முக்கியமானதோ அதுபோல அருமைக்காரர் பட்டமும் முக்கியமானதாகக் கருதப்படும். என் ஊரிலும் அருமைக்காரர் திரு. தங்கமுத்துக் கவுண்டரின் தந்தை சென்னிமலைக் கவுண்டர் ஊரின் முக்கியமானவராக , ஊரின் சடங்குகளை முன் நின்று நடத்துபவராகத் திகழ்ந்துள்ளார்.
நல்லியம்பாளையம் கிராமத்தில் எழுதிங்கள் சீரினை நடத்தும் முக்கியமானவராக வெள்ளோடு மேட்டுப்பாளையம் அருமைக் காரர் இருந்துள்ளார்.
எழுதிங்கள் சீர் என்பது கொங்கு வழக்கப்படி வீட்டில் உள்ள பெண்ணின் மகள் பூப்பெய்தும் போதோ அல்லது அவரின் மகன் திருமண வயதின்போதோ நடத்தப்படுவது. அதற்கான செலவுகளை பெண்ணின் தாய்வீடே பெருமையாக ஏற்றுக் கொள்ளும். அவ்வகையில் எழுதிங்கள் சீர் நடத்த நாள் குறித்தல் என்பது முதல் நிகழ்வாகும்.
எழுதிங்கள் சீருக்கு நாள் குறித்தவுடன் ஊரின் அருமைகார ஐயனுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பர். அந்த அழைப்பை அருமைக்காரர் ஏற்றுக்கொண்டு நிகழ்வை நடத்தித் தர ஒப்பதல் வழங்குவார். அதன் பிறகு பின் முறைமையில் அருமைக்காரர் வந்து முகூர்த்தகால் நட ,விநாயகர் பூஜை செய்துசீர் தண்ணீர் கொண்டு வருதல் நிகழ்வு நடத்தப்படும். அடுத்து எழுதிங்கள் செய்யும் பெண் , குலவிக்காரி, புடைச்சட்டிகாரர், கட்டுகண்ணிகளுக்கு முறையே வெற்றிலைப் பாக்கு கொடுத்தல் முறைமையில் நிகழ்வு நடத்தப்படும்.
அடுத்ததாக கங்கணம் கட்டும் முறைமை நடத்தப்படும்.
புடைச்சட்டி,வானைசட்டி, கோதைமாவு, அச்சு வெல்லம் ஆகியவை வைத்து பூஜை செய்து கங்கணம் கட்டப்படும்.
.பின்னர் சில சீர் முறைகள் செய்து எழுதிங்கள் செய்து கொள்ளும் பெண்ணுக்கு சிகப்பு இட்டு நீர் வார்த்தல் நடைபெறும்.
எழுதிங்கள் பெண் நீராட்டு முடிந்தவுடன் , கோதை மாவை நிலவு மேல் வைத்து கோடாரியில் எழுதிங்கள் செய்து கொள்வார். பின்னர் அருமைக்காரர் முன் நிற்க எழுதிங்கள் பெண் வெல்லம் எடுத்துக் உறவுகளுக்கு காட்டி, கோதை மாவை அனைவருக்கும் கொடுப்பார்.பின்னர் அருமைக்காரர் உத்தரவு படி ஊரில் உள்ள வேப்ப மரம் அரச மரம் விநாயகர் கோயில் சென்று வணங்கி வருதல் நிகழ்வு நடக்கும். இது முடிந்தபின்னர் எழுதிங்கள் பெண் அருமைக்காரர் மற்றும் இல்லத்துப் பெரியவர்களை வணங்கி ஆசி பெறுவார். பின்னர் அந்தப் பெண் தன் உடன் பிறந்தவர் இல்லம் சென்று வெல்லம் சாப்பிடுவார். இதோடு எழுதிங்கள் சீர் நிறைவுறும் .
எங்கள் நல்லியம் பாளையத்தில் நான் சிறுவனாக இருந்தபோது கிட்டத்தட்ட ஒரு திருமணம் நடப்பது போலவே பெரிய ஏற்பாடுகளுடன் எழுதிங்கள் சீர் நடைபெறும்.
நல்லியம் பாளையம் கிராமத்தில் ஆரம்ப நாட்களில் திருமணம் , எழுதிங்கள் சீர் போன்ற மரபுகள் இல்ல மரபாகவே நடந்துள்ளது. அருமைக்காரர் நடத்தி வைக்கும் திருமண முறைகள் தற்காலங்களில் மாற்றம் பெற்று திருமணக் கூடங்களில் நடக்கின்றது.
இது போல எண்ணற்ற சீர் முறைகளும் , உறவுக் கதைகளும் கொண்டதாகக் கொங்குக் கிராமமான நல்லியம் பாளையம் திகழ்கின்றது. .