பொன். சங்கர்
Tuesday, 30 June 2026
கவிஞர் புவியரசு
கவிஞர் புவியரசு
Monday, 29 June 2026
நோம்பி சாட்டுதல் - நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -24
மார்கழி மாசம் இரண்டாம் வாரத்தில் ஊரில் நோம்பி சாட்டிடுவாங்க… செவ்வாய்க்கிழமை கோயில் கிணத்துல இருந்து கம்பம் எடுத்து இரவு கோயில் நடுவில் நட்டவுடன் நோம்பி சாட்டிய அறிகுறி ஊருக்குள் தென்படத்தொடங்கும்.
மறுநாள் காலை ஊர்ப் பெண்கள் வரிசையாய் வந்து கைகளில் குடத்துடன் , வேண்டுதலுடன் கம்பத்திற்கு நீரூற்றி கோயில் நெற்றி நிறைய திருநீறு அணிந்து அவரவர் இல்லம் செல்வர்.
ஊரில் வெள்ளையடிக்க வெளியூர் பெண்கள் வேலை கேட்டு ஊருக்குள் வர ஆரம்பிப்பார்கள். நாங்க சென்னிமலை ரோட்டுல இருக்கற சுண்ணாம்பு சூலையில் போய் சாக்குல சுண்ணாம்பு வாங்கிட்டு வருவோம். வெளியூர் பெண்கள் ஏணி வச்சு ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளையடிக்க கூலி பேசி வேலை ஆரம்பிப்பார்கள்.
கூலிக்குக் கணக்குப் பார்த்தாலும் வேலை செய்யும் பெண்களுக்கு வயிறு நிறைய உணவிட்டு , கையில , பையில காய்கறி , தேங்காய் எல்லாம் கூலிக்கு மேல கொடுத்து விடும் வழக்கம் நல்லியம்பாளையம் கிராமத்தில் உண்டு.
ஆடு குட்டு போட்ட கதை தொடங்கி , வூடு சுத்தம் செய்யும் போது கண்ணில் அகப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை வச்சி அந்தக் கதையை வெள்ளையடிக்கும் பெண்களிடமும் பக்கத்து வீட்டு ஆத்தாக்களிடமும் பேசி மகிழ்வார்கள்.
நல்லியம் பாளையம் கிராமத்தில் வீடுகள் எல்லாம் கிராமத்து வீடுகள். வீட்டின் வாசலில் செக்கு, அம்மிக்கல் கட்டாயம் இருக்கும். வருசம்பூரா இருக்கும் அம்மிக்கல்ல வெள்ளையடிக்க நகத்தும் போது பூரான் போன்ற பூச்சியினங்கள் கலைந்து ஓடும்.
நோம்பி சாட்டி பூச்சாட்டு தொடங்கி நான்கு ஐந்து நாட்களில் ஊரில் எல்லா வீடுகளும் வெள்ளையாய் அழகாய் தென்படத் தொடங்கிவிடும்.
அன்றாடம் பொழுது சாயும்போது ஆடு மாடுகளைத் தொண்டுபட்டி பார்த்து ஊர்க் கவுண்டர்கள் ஓட்டிட்டு போயி , தீவனம் போட்டு ,காய வச்ச வெந்தண்ணிய மேலுக்கு ஊத்திட்டு இருக்கும் போது நல்லியம்பாளையம் மாரியம்மன் கோயிலில் ‘தப் தப்’ எனச் சத்தம் கேட்கத் தொடங்கும்.
பறை சத்தம் கேட்கத் தொடங்கியதும் நல்லியம்பாளையம் கிராமத்தில் எல்லோரும் ஊர்க் கோயில் நோக்கி வரத் தொடங்கிவிடுவார்கள்.
பறை அடிப்பவர்கள் கோயிலின் வெளியே சருகுகள் போட்டு , சிறு குச்சிகள் வச்சி பறை கருவியைக் காய்ச்சுவர் . கிராமத்து பெண்கள் எல்லாம் கோயில் வந்து கோயில் திண்ணைல உட்காந்து காத்திருக்க , நாங்க எல்லாம் தப் தப் இசைக் கருவிக்குக் காத்திட்டு இருப்போம். பறை இசைக்க கோயில் பூசாரி கையில் வேப்பிலையோடு பூச்சட்டி(தீச்சட்டி) எடுத்து கம்பத்தைச் சுற்றி , சுற்றி ஆடி வருவார். கிட்டத்தட்ட மூன்றுமுறை இவ்வாறு ஆட, ஆண்கள் உட்கார இயலாமல் அதன் தாளகதிக்கு ஏற்ப நயத்துடன் ஆடத்தொடங்கி விடுவோம். கிட்டதட்ட 8 மணி வாக்கில் தொடங்கும் ஆட்டம் இரவு பத்தைத் தாண்டி ஆடிக்கொண்டே இருப்போம்.
ஒண்ணாம் அடி தொடங்கி பறை இசையின் அனைத்து அடிகளையும் பறை இசைக் கலைஞர்கள் வாசிக்க , வாசிக்க ஊர்க் கவுண்டர்களும் சிறுவர்களாகிய நாங்களும் ஆடிக்கொண்டே இருப்போம்.
யாராச்சும் ஓரிரு ஊர்க்கவுண்டர்கள் பறை இசைக்கலைஞர்களின் தாளகதியைப் பாராட்டி பணம் கொடுப்பார்கள். புதன்கிழமை தொடங்கி கிட்டத்தட்ட நோம்பி சாட்டு முடியும் அடுத்த வாரம் திங்கள் வரை இந்த தாளகதி ஆட்டம் தொடர்ச்சியாய் நடைபெறும். செல்போன் இல்லாத காலம். தொலைபேசி மட்டுமே இருந்த காலம். தூர்தர்சன் மட்டுமே இருந்த காலமும் கூட. ஆதலால் இந்த ஆட்டகதியில் ஆண்கள் மெய்யாக நடை நடந்து ஒய்யாரமாக ஆட, பெண்கள் கோயில் திண்ணையில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே கதைகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் இதே போல காட்டு வேலை ஊட்டு வேலை முடிஞ்சு ஊரார் அனைவரும் கோயில் திண்ணையில கூடி இருக்க , வருசாந்திர கதைகள் பல நல்லியம் பாளையம் மண்ணின் மைந்தர்களால் பேசப்படும். அதில் ஒரு கதை.
நல்லியம் பாளையம் ஊருக்கு வெளியே குடியிருந்த மின்சாரத்துறை ஊழியர் ஒருவர் குடித்து விட்டு கோயிலுக்குச் சென்று ஆடிட , ஊரார் தட்டிக்கேட்க , அந்த மின்துறை ஊழியர் ஊரின் டிரான்ஸ்பார்மரை அணைத்து விட்டு செல்ல , அதனைக் கண்டுபிடித்து , அவரை அழைத்து உரிய முறையில் சில பதிலடிகள் கொடுத்து ஊர்க்கவுண்டர்கள் கண்டித்த கதை இன்றும் நினைவில் உள்ளது.
நல்லியம் பாளையம் மாரியம்மன் கோயில் உள்ளே ஆட்டம் தாளகதிக்கு ஏற்ப நடந்தாலும் ஊர்க்காரங்க யாரும் ஊரின் மரியாதைக்கு ஏற்பவே நடந்து கொள்வார்கள்.
ஊர் மரியாதை , கோயில் மரியாதை ஆகியவற்றை நல்லியம்பாளையத்தினர் தங்களின் கண்கள் போலவே காத்து அதன்படியே வாழ்வியலை வாழ்ந்தனர்.
நோம்பி சாட்டி ஒரு வாரம் நடக்கும் இந்த வைபவம் திங்கள் இரவு வரை நடக்கும். அடுத்த நாள் பறை இசைப்பவர்கள் ஊரில் அனைத்துத் தெருவிலும் சென்று அடுத்த செவ்வாய்க்கிழமை சாயங்காலம் காவிரிக்கு தீர்த்தம் எடுக்க போறோம், எல்லோரும் 3 மணிக்கு வந்துடுங்க என்று பறை இசைத்துச் சொல்லி செல்வர்.
நாங்கலாம் திங்கட்கிழமைல இருந்தே பள்ளிக்கூடம் விடுப்பு எடுத்துவிடுவோம். செவ்வாய் மாலை காவிரி சென்று தீர்த்தம் சுமந்து , நடைநடையாய் நடந்து எங்கள் ஊரின் காக்கும் தெய்வம் மாரியம்மனுக்கு நீர் ஊற்றுவோம்.
பூச்சாட்டு தொட்கி , தீர்த்தம் கொண்டு வந்து ஊர்க் காக்கும் கோயிலுக்கு நேந்துகடன் தீர்க்க பல வேண்டுதல்களைக் கொண்டு அடுத்தநாள் பொங்கல் தொடங்கும்.
கொங்கு மண்ணில் ஊர் காக்கும் காவல் தெய்வங்கள் வடக்கு நோக்கியே எல்லா ஊர்களிலும் இருக்கும். அதன்படி நல்லியம்பாளையம் கிராமத்திலும் எங்கள் மாரியம்மன் வடக்கு நோக்கியே அருள்புரிந்து அருளாட்சி செய்து வருகிறார்.
வாழ்வியலை வகுத்து அதற்கேற்ப வாழ்ந்த நல்லியம்பாளையம் ஊரின் கதை கொங்கு மண்ணின் கதையும் கூட. பூச்சாட்டு என்பது மக்களையும் ஊரையும் வருடந்தோறும் ஒன்று சேர்க்கும் கொங்குத் திருவிழா.
Tuesday, 31 March 2026
நல்லியம் பாளையம் கதை பேசுவோம் - நண்பர்கள் நற்பணி மன்ற ஆண்டு விழா
நல்லியம் பாளையம் கிராமத்தில் இரண்டு திருவிழாக்கள் வகைப்படுத்தப்பட்டு அதன்படி நடந்து வந்தது. முதலில் ஊர் முன்னோர்களால் வகைப்படுத்தப்பட்ட மாரியம்மன் கோயில் திருவிழா. இந்தத் திருவிழாவை பொங்கல் , நோம்பி என்று வட்டார வழக்குச் சொற்களால் அழைப்போம்.
இரண்டாவது நண்பர்கள் நற்பணி மன்ற ஆண்டு விழா . நண்பர்கள் நற்பணி மன்ற ஆண்டுவிழாவும் கிட்டத்தட்ட திருவிழா போலவே ஊரில் நடக்கும்.
ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்வில் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள்.
ஊரின் தெற்குப் பக்கம் நீரோடும் பாலத்திலிருந்து சைக்கிள் போட்டி தொடங்கும். பலரும் சைக்கிள்களை வரிசையாக வைத்துக் கொண்டு தயாராக நிற்பர்.
நல்லியம் பாளையத்தில் தொடங்கும் சைக்கிள் போட்டி இரயில் நகர் வழியாக , ஜீவா நகர் வழியாக , இரட்டப்பாளி வலசு வழியாக பல தோட்டங் காடுகளைத் தாண்டி மீண்டும் நல்லியம்பாளையம் பாலத்தின் அருகேயே வரும். நான் பார்த்த சைக்கிள் போட்டிகளில் ஷாப்கார கவுண்டர் மகன் ஜெகதீஸ் அண்ணா அவர்களே முதலாவதாக வந்துள்ளார்.
நீரோடும் வாய்க்கால் ஓரத்தில் நாங்கள் நின்று கொள்ள, விசில் ஊதியதும் தொடங்கும் போட்டியில் ஊரின் இளவட்டங்கள் பலரும் பாய்ந்து செல்ல , மேடுகளையும் காடுகளையும் கடக்க கடக்க யார் முதலில் வருவாங்க என்று அறிய ஆவலாக நின்று கொண்டிருப்போம்.
பெரும் பாய்ச்சலென வீர் சத்தத்துடன் சைக்கிள்கள் சர் சர் என வர அதில் ஜெகதீஸ் அண்ணா அவர்களே முதலில் வருவார்.
அதன்பிறகு கோயில் முன்பு பானை உடைத்தல் போட்டி நடக்கத் தொடங்கும். கண்களைக் கட்டிக் கொண்டு பானையை உடைக்க ஊரின் இளைஞர்கள் தயாராக இருக்க போட்டி தொடங்கும். மணி நேரங்கள் கடந்தாலும் நேரம் போவதே தெரியாமல் நடக்கும் போட்டியை எல்லோரும் இரசித்துக் கொண்டே இருப்பாங்க.
காலை தொடங்கி மாலை வரை நடக்கும் போட்டிகள் முடிந்து எல்லோரும் திருவிழா உற்சாகத்தில் இருப்போம்.
அன்று இரவு 8 மணிக்கு மேல் கோயில் முன்பு பெரிய திரை கட்டி அதில் திரைப்படம் திரையிடுவார்கள். அன்றைய காலத்தில் நாங்கள் திரையரங்கு செல்வதற்கெல்லாம் பெரிய வாய்ப்புகள் அமையாது. அந்தக் குறையைப் போக்க பெரிய திரை கட்டி தியேட்டர் அனுபவத்தை நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் செய்திருப்பார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஒரு படம். நாட்டாமை, எஜமான். சூர்யவம்சம் போன்ற படங்கள் திரையிடுவார்கள். சில வருடங்கள் மிகப் பழைய திரைப்படங்களைத் திரையிட நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்திருப்போம்.
நல்லியம் பாளையம் மாரியம்மன் கோயில் பல ஆண்டுகளாக ஓட்டுக் கட்டிடமாக இருக்க , பின்னர் ஊர்ப் பெரியவங்க ஒன்று சேர்ந்து கோயிலை அழகான வடிவில் மாற்றி பெரிய கோபுரங்கள் கட்டி குடமுழுக்கு நடத்தி பின்னர் ஊரின் அழகே எங்கள் கோயில் தான் என்பது போல மாற்றி அமைத்தார்கள். அவ்வாறு கோயில் பணிகளில் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் தங்களைப் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
ஆண்டு விழா முடிந்து அடுத்த நாள் விடுமுறை எனில் வெயிலோடு ஓடி , அடி பைப்பில் நீர் குடித்து , தோட்டத்திலோ , யாராச்சும் வீட்டிலோ அவங்ககிட்ட கேட்டு பெரிய குச்சி வைத்து பப்பாளி பறித்து அமராவதி அண்ணன் மகன் கார்த்திக் ,கோபால் , நான் இன்னும் பிற நண்பர்கள் கூட்டாக அமர்ந்து சாப்பிட்டு கிணற்றில் நீராடி நாட்கள் விளையாடிவோம்.
என் நினைவில் எங்கள் ஊருக்கு ஒருமுறை கூட காவலர்கள் வந்ததாக நினைவில் இல்லை. ஊர்ப் பெரியவங்க எங்களின் ஒழுக்கத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். தப்பித் தவறி கூட தவறுகள் செய்யாத ஊர்க் கட்டுப்பாட்டில் நாங்கள் வளர்ந்தோம்.
எங்கள் ஊர் நல்லியம் பாளையம் என்பது எங்களின் பெருமைகளில் ஒன்று.
Tuesday, 17 March 2026
கதை சொல்லிகளின் காலம் - நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -22
வேச காலத்தில அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர முடில. ஒரே வேக்காடா இருக்கு…சீக்கடி வேற … இந்தச் சொற்தொடர்கள் எங்கள் நல்லியம் பாளையம் கிராமத்தில் பங்குனியில் கேட்கத் தொடங்கி விடும்.
எட்டித் தொடும் அளவில் கிணறுகளில் நீர் இருந்த காலம் மாறி எட்டிப் பார்க்கும் ஆழம் வரை நீரின் உயரம் பங்குனியில் கீழே சென்று விடும்.
பங்குனில ஒரு ஒலவு மழை கூட இருக்காது. இட்டேறில நடக்கறப்ப வேச காத்து மூஞ்சிலயே வீசும். பண்டம் பாடிலா மேயாம மர நிழலில் படுத்துக்கொள்ளும்.
25 வருசங்களுக்கு முன்பு நல்லியம்பாளையம் கிராமத்தில் இருந்து இரட்டபாளிவலசு செல்லும் பாதை மரங்கள் அடர்ந்த சிறு பாதையாக இருக்கும். மாட்டுவண்டிப்பாதையாக மட்டுமே இருந்த இந்தப்பாதை இன்று சாலை வசதியோடு வாகனங்கள் செல்லும் பாதையாக மாறிவிட்டது. அந்தப்பாதையில் தொட்டியங்காடு, ஷாப்காரர் காடு தோட்டங்கள் இருக்கும்.
யாராச்சும் ஒரு ஆத்தாவோ அப்புச்சியோ இரங்கம் பாளையம் ரேசங்கடை திறந்திருக்கா என்று தெற்குப் பக்கம் அரச மரத்துட்ட நின்னு விசாரிச்சு , உறுதி சொன்னா நடையா நடந்து போய் பொருள் வாங்கி வருவாங்க.
சின்ன மணியக்கார கவுண்டர் எங்கள் ஊரின் அழகான கதை சொல்லி. கடையில் சங்கு பீடியை வாங்கி காற்று லாவகமாக வீசிக் கொண்டிருக்கும் போது நெருப்புப் பொட்டில அழகாக சீவி தீயை வரவைத்து ,கைக்குள் குவித்து நெருப்பு அணையாமல் பீடியில் நெருப்பு வைக்கும் வித்தையை நின்று இரசிக்கும் சிறுவர்கள் நாங்கள். கோயிலுக்குப் போனா வெளக்குக்கு திரி வச்சி அணையாம விளக்கேத்த நாங்க படாதபாடு படுவோம். ஆனால் எங்க அப்புச்சிங்க அழகாக கைக்குள் நெருப்பைக் குவித்து பற்றவைக்கும் வித்தை கண்டு வியப்போம்.
கோயில் திண்ணைல ஒட்காந்து ரேசங்கடைப் பற்றிய கதையை அழகாக நயமுடன் சொல்வார். நான் அவரிடம் இருந்துதான் முதன்முதலாக பர்மா என்று நாடு பற்றி அறிந்தேன். இந்தியா ல அரிசிப் பஞ்சம் வந்தப்ப பர்மா அரிசி வாங்கி நம் ரேசன் கடைகள் வாயிலாக இரங்கூன் அரிசி கொண்டு வந்து தருவாங்க என்று சொல்வார். மேலும் தாது வருசப் பஞ்சம் என்ற சொல்லாட்சியும் அவரிடம் இருந்துதான் முதன்முதலாக அறிந்தேன். அதன்பிறகு
இந்தியாவுல பஞ்ச காலத்தில் புதிதாக கண்டறிப்பட்ட நெல் இரகம் இரங்கூன் அரிசி இரகம் னு அந்தக் கதையை அழகாக எடுத்துச் சொல்வார்.
நல்லியம்பாளையம் மாந்தர்களில் சின்ன மணியக்கார ஐயன் கதைகள் கேட்க கேட்க வியப்பை வர வைக்கும். அங்கராக்கு (சட்டை) அணியாமல் மேலில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு தான் எப்போதும் செல்வார்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்துல ஊருக்குக் கட்டப்பட்ட பாலம் , கட்டப்பட்ட விதம் பற்றி சுவை குன்றாமல் எடுத்துச் சொல்வார். அப்போதெல்லாம் எங்களுக்கு எல்லா சனி ஞாயிறும் விடுமுறை. அதனால் மாரியம்மன் கோயில் திடலில் கதைகளும் , தாயம் ஆட்டமும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
எப்போதாச்சும் வேட்டுவங்காட்டு சின்னக் கவுண்டர் கோயில் அருகே வரும்போது , ஏது திடீர்னு தெக்கால பக்கம்லா வாறீங்க என்று கதைகள் நீளும். எனக்கு சிறுவயதில் மஞ்சக் காமாலை வந்து விட்டது என்று எல்லோரும் சொன்னப்ப, வேட்டுவங்காட்டு சின்ன கவுண்டரும் மணியக்கார கவுண்டரும் சோற்றுக் கற்றாழையை அரைத்து நீராக்கி மிரட்டி மிரட்டி குடிக்க வைத்தனர். இப்படி தினமும் சின்ன மணியக்கார ஐயனும் , வேட்டுவக்காட்டு சின்ன ஐயனும் எனக்கு கற்றாழை நீரை வாயில் ஊற்றி என் நோயைக் குணப்படுத்திய மருத்துவர்கள். நாங்க அன்றைய காலத்தில் ஊர்ப் பெரியவர்களைக் கண்டாலே மரியாதையுடன் நின்று கடந்து செல்வோம். வேட்வங் காட்டு பெரிய கவுண்டர் எப்போதும் ஒரு கைத்தடியோடு வலம் வருவார்.
பெரிய மணியக்கார கவுண்டர் , உயரமாக நெற்றி நிறைய திருநீறு அணிந்து , வீட்டில் இருந்து நடந்து கோயில் அருகே வந்து நின்று பருவ மழை தொடங்கி , வாய்க்காலில் நீர் விடும் காலம் என எல்லாவற்றையும் சொல்வார். எங்கள் ஊரில் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லும் கவுண்டர்களில் பெரிய மணியக்கார கவுண்டர் புதுமையானவர்.
கலைஞர் கருணாநிதி , எம்.ஜி.ஆர் அரசியல் கதைகளை வியப்புக் குன்றாமல் நகர்த்திச் செல்லும் பாங்கு அழகானது. ஒவ்வொரு பிரதோச நாளிலும் பெரிய மணியக்கார கவுண்டருடன் ஈரோடு சிவன் கோயில் சென்று வரும் நினைவுகள் இன்றும் கண்முன் நிழலாடுகிறது. எங்கள் ஊரின் கதை சொல்லிகளால் நாங்கள் கற்றது ஏராளம்.
நல்லியம்பாளையம் ஊர் மாந்தர்கள் மருத்துவமனைக்குச் சென்று எங்கள் வயதில் பார்த்ததே இல்லை. இன்றைய காலத்தில் மாதம் ஒரு முறை நாம் மருத்துவமனை செல்லும் நிலையை எண்ணி அன்றைய நிலையை எண்ணாமல் இருக்க இயலவில்லை. காலம் பல மாந்தர்களை நமக்குத் தருகின்றது. அந்தக் கதை சொல்லிகள் நம்மை, நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பண்பாட்டு மாந்தர்கள்.
சினிமாவும் அரசியலும் அதிகம் கலவாமல் நல்லியம்பாளையம் கிராமம் அழகிய ஊராக இருந்தது. இரயிலோடும் ஓசை கேட்கும். நீரோடும் ஓசை கேட்கும். மண்ணின் மைந்தர்களின் கதை கேட்கும்.
Thursday, 12 February 2026
ஈரோடு நல்லியம் பாளையமும் எழுதிங்கள் சீரும் - 21
நல்லியம் பாளையம் கதை பேசுவோம்
கொங்கு நாட்டுக் கிராமங்களில் எழுதிங்கள் சீர் முக்கியமானதாகப் போற்றப்பட்டு வருகின்றது. அதிலும் கொங்கு நாட்டில் ஈரோடு மாவட்டத்தில்தான் எழுதிங்கள் சீர் சிறப்பானதாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வகையில் எங்கள் ஊரான நல்லியம் பாளையம் கிராமத்திலும் எழுதிங்கள் சீர் சிறப்பாகக் நடந்துள்ளது. நான் சிறுவனாக இருந்த போது ஊரில் நல்ல முகூர்த்த நாட்களில் , நாளை எழுதிங்கள் சீருக்குப் போறேனுங்க என்று எங்கள் கடை அருகில் ஊர்க் கவுண்டர்கள் பேசுவார்கள். எந்த ஊருல சீரு என்று இன்னோரு கவுண்டர் கேட்க அது கதையாக நீளும்.
தோட்டத்தில் இருந்து பால் கறந்து வரும் ஐயனும் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச செல்லும் ஐயனும் நேரமாச்சு என்று சொல்லிக் கொண்டே முக்கால்மணிநேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். இந்தக் கதைகளின் ஊடாகத் தோட்டத்தில் இருந்து காய்களையும் சுமந்து வரும் ஆத்தாக்களும் கதைகளில் கலந்து நின்று கொண்டே பேசிக்கொண்டிருப்பார்கள்.
கவுண்டிச்சி பாளையம் குடி நாவிதன் வந்து பத்திரிக்கை கொடுத்தமாதிரி இருந்திச்சே யாரு வூட்டுல விசேசம் என்று மீண்டும் ஒரு கதை தொடங்கும். கவுண்டிச்சி பாளையம் வாய்க்கால ஒட்டி மேக்கால தோட்டத்து என்று சொல்லி அவர்களின் ஒறவு முறை கூறிட , அட ஆமா ஆமா தெரியும் சொல்லுங்க என்று கதை நீளும்.
நாங்கள் ஓடியாடி விளையாடிக்கொண்டு இருக்கும் போது மாலை அந்தி சாயத் தொடங்கும் கதை, லேசாக இருட்டு விளும் நேரத்தில் , அட நேரமாயு போச்சு போகனும்ங்க காட்டுல தண்ணிக் காட்டணும் என்று ஒரு கவுண்டர் ஆரம்பிக்க , அட ஒங்க கூட பேசிட்டே நானும் பால் ஊத்தப் போகனுங்கறத மறந்துப்புட்டேன். சரி பாப்போங்க நாளைக்கு எழுதிங்கள் சீர் க்கு போகனுங்க வாரேங்க என்று கிளம்புவார்கள்.
நல்லியம்பாளையம் மண்ணின் மைந்தர்கள் பலரின் கதைகள் செவி வழியாகவே கடத்தப்பட்டு வாழ்வியலாகக் கடந்துள்ளது. அவ்வகையில் நல்லியம் பாளையம் கிராமத்தில் எழுதிங்கள் சீர் என்பது கொங்கு வேளாள மக்களின் முக்கிய சீராக நடத்தப்பட்டு வருகின்றது.
கொங்கு கிராமங்களின் கொத்துக்காரர் பட்டம் எவ்வாறு முக்கியமானதோ அதுபோல அருமைக்காரர் பட்டமும் முக்கியமானதாகக் கருதப்படும். என் ஊரிலும் அருமைக்காரர் திரு. தங்கமுத்துக் கவுண்டரின் தந்தை சென்னிமலைக் கவுண்டர் ஊரின் முக்கியமானவராக , ஊரின் சடங்குகளை முன் நின்று நடத்துபவராகத் திகழ்ந்துள்ளார்.
நல்லியம்பாளையம் கிராமத்தில் எழுதிங்கள் சீரினை நடத்தும் முக்கியமானவராக வெள்ளோடு மேட்டுப்பாளையம் அருமைக் காரர் இருந்துள்ளார்.
எழுதிங்கள் சீர் என்பது கொங்கு வழக்கப்படி வீட்டில் உள்ள பெண்ணின் மகள் பூப்பெய்தும் போதோ அல்லது அவரின் மகன் திருமண வயதின்போதோ நடத்தப்படுவது. அதற்கான செலவுகளை பெண்ணின் தாய்வீடே பெருமையாக ஏற்றுக் கொள்ளும். அவ்வகையில் எழுதிங்கள் சீர் நடத்த நாள் குறித்தல் என்பது முதல் நிகழ்வாகும்.
எழுதிங்கள் சீருக்கு நாள் குறித்தவுடன் ஊரின் அருமைகார ஐயனுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பர். அந்த அழைப்பை அருமைக்காரர் ஏற்றுக்கொண்டு நிகழ்வை நடத்தித் தர ஒப்பதல் வழங்குவார். அதன் பிறகு பின் முறைமையில் அருமைக்காரர் வந்து முகூர்த்தகால் நட ,விநாயகர் பூஜை செய்துசீர் தண்ணீர் கொண்டு வருதல் நிகழ்வு நடத்தப்படும். அடுத்து எழுதிங்கள் செய்யும் பெண் , குலவிக்காரி, புடைச்சட்டிகாரர், கட்டுகண்ணிகளுக்கு முறையே வெற்றிலைப் பாக்கு கொடுத்தல் முறைமையில் நிகழ்வு நடத்தப்படும்.
அடுத்ததாக கங்கணம் கட்டும் முறைமை நடத்தப்படும்.
புடைச்சட்டி,வானைசட்டி, கோதைமாவு, அச்சு வெல்லம் ஆகியவை வைத்து பூஜை செய்து கங்கணம் கட்டப்படும்.
.பின்னர் சில சீர் முறைகள் செய்து எழுதிங்கள் செய்து கொள்ளும் பெண்ணுக்கு சிகப்பு இட்டு நீர் வார்த்தல் நடைபெறும்.
எழுதிங்கள் பெண் நீராட்டு முடிந்தவுடன் , கோதை மாவை நிலவு மேல் வைத்து கோடாரியில் எழுதிங்கள் செய்து கொள்வார். பின்னர் அருமைக்காரர் முன் நிற்க எழுதிங்கள் பெண் வெல்லம் எடுத்துக் உறவுகளுக்கு காட்டி, கோதை மாவை அனைவருக்கும் கொடுப்பார்.பின்னர் அருமைக்காரர் உத்தரவு படி ஊரில் உள்ள வேப்ப மரம் அரச மரம் விநாயகர் கோயில் சென்று வணங்கி வருதல் நிகழ்வு நடக்கும். இது முடிந்தபின்னர் எழுதிங்கள் பெண் அருமைக்காரர் மற்றும் இல்லத்துப் பெரியவர்களை வணங்கி ஆசி பெறுவார். பின்னர் அந்தப் பெண் தன் உடன் பிறந்தவர் இல்லம் சென்று வெல்லம் சாப்பிடுவார். இதோடு எழுதிங்கள் சீர் நிறைவுறும் .
எங்கள் நல்லியம் பாளையத்தில் நான் சிறுவனாக இருந்தபோது கிட்டத்தட்ட ஒரு திருமணம் நடப்பது போலவே பெரிய ஏற்பாடுகளுடன் எழுதிங்கள் சீர் நடைபெறும்.
நல்லியம் பாளையம் கிராமத்தில் ஆரம்ப நாட்களில் திருமணம் , எழுதிங்கள் சீர் போன்ற மரபுகள் இல்ல மரபாகவே நடந்துள்ளது. அருமைக்காரர் நடத்தி வைக்கும் திருமண முறைகள் தற்காலங்களில் மாற்றம் பெற்று திருமணக் கூடங்களில் நடக்கின்றது.
இது போல எண்ணற்ற சீர் முறைகளும் , உறவுக் கதைகளும் கொண்டதாகக் கொங்குக் கிராமமான நல்லியம் பாளையம் திகழ்கின்றது. .