பொன். சங்கர்
Monday, 24 August 2026
நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -6
Monday, 6 July 2026
அறிய வேண்டிய வரலாறு - தஸ்தாவெஸ்கி
உலகின் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டு இன்று கொண்டாடப்படும் தஸ்தாவெஸ்கி என்னும் ஆளுமை உருவாக அன்னா என்ற கதாபாத்திரம் அடைந்த அவமானங்களே காரணம் என்றால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.
நாடு, மொழி, மதம் ஆகியவற்றைக் கடந்து
பலராலும் வாசிக்கப்படும் கரம்சோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டணையும் அசடன் எனப் பல புகழ் பெற்ற நூல்களை எழுதிய தஸ்தாவெஸ்கி வாழ்வு, அன்னாவுக்கு முன் -
அன்னாவுக்குப் பின் எனக் கூறினால் பொருத்தமாக இருக்கும்.
சில செயல்கள் காரணமாக மிகப்பெரிய கடனில்
சிக்கி நீதிமன்ற வழக்கிற்கு ஆளாகிறார் தஸ்தாவெஸ்கி. நீதிமன்றத்தில் கடும்
தண்டனைக்கு ஆளாக நேர்ந்த போது நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை அளித்தது.
அந்தத் தீர்ப்பு என்னவெனில்
மூன்று மாதத்திற்குள் ஒரு நாவலை எழுதி அதன் மூலம் கடனை அடைக்க வேண்டும் என்று
தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட தஸ்தாவெஸ்கி , எனக்கு என் எழுத்துகளைத்
தட்டச்சு செய்ய ஒரு உதவியாளர் வேண்டும் என்று மட்டும் கேட்டார்.
அதன்படி அன்னா என்ற
பெண்ணை தஸ்தாவெஸ்கிக்கு உதவியாளராக நீதிமன்றம் நியமித்தது. ஆரம்பத்தில் அந்தப்
பணியை விருப்பமில்லாமல் செய்த அன்னா , சில நாட்களில் தஸ்தாவெஸ்கி எழுத்துகளின் மீது பெரும் காதல் கொண்டவராக மாறினார்.
அவரின் மீது அன்பு செலுத்தி அவரை நேசிக்கலானார்.
தஸ்தாவெஸ்கியின்
கடன்களை அன்னா தன்
உடமைகளை விற்று அடைத்தார். கடனில் சிக்கியிருந்த தஸ்தாவெஸ்கியின் இல்லத்திற்குக்
கடனாளர்கள் வந்து கடனைக் கேட்கும் போதெல்லாம் அன்னாவே எதிர் நின்று பதில் கூறினார் .
வீட்டின்
இயலாமைச் சூழல் தஸ்தாவெஸ்கிக்குத் தெரியாமல் அவரை நன்குப் பார்த்துக் கொண்டார்.
தஸ்தாவெஸ்கி எழுதும் போது அவருக்கு அருகில் எப்போதும் ஒரு கெட்டிலில் தேநீர்
இருக்குமாறும் , அந்த அறையை கடன்காரர்கள் யாரும்
நெருங்காமலும் பாரத்துக்கொண்டார்.
வீட்டின் உள்ளேயே அமர்ந்து இரவு பகல் பாராமல் எழுதிக் கொண்டே இருந்த தஸ்தாவெஸ்கி, இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே எழுதி வந்தார். பலரின்
அவமானச் சொற்களை எதிர்கொண்டு பதில் அளித்து அந்த அவமானங்கள் எதுவும்
தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பணியைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டார்.
தஸ்தாவெஸ்கி எழுதியதை அன்னா உரிய முறையில் தட்டச்சு செய்து நூல் வடிவத்திற்கு வர பெரும்
முயற்சிகள் பலவற்றை எடுத்தார். எழுபத்தி ஏழு நாட்களில் நூல் பணியை நிறைவு செய்த தஸ்தாவெஸ்கி
வெளியே வந்து பார்த்த போது , கேட்ட போது
அன்னா சந்தித்த அவமானங்கள் , கடன்கள்
எல்லாவற்றையும் கேட்டு அந்த பெரும் எழுத்து மேதை கலங்கி நின்றது. அன்னா அடைந்த
அவமானங்களின் ஊக்கம்தான் குற்றமும் தண்டனையும் என்ற நூல். குற்றமும் தண்டனையும் வெளிவந்து
பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டு அவர்களின் ஏழ்மையைப் போக்கியது.
இரஷ்ய வரலாற்றில் பல
வருடங்கள் ஆனாலும் கொண்டாடப்படும் தஸ்தாவெஸ்கியின் எழுத்துக்குப் பின்னால் அவரது
மனைவி அன்னா அடைந்த அவமானங்களே ஊக்கமாய் உறுதுணையாய்
இருந்தது.
அன்னா மட்டும் என் வாழ்வில் வராமல் போயிருந்தால் அவமான உலகில் நான் சிறையிலோ அல்லது தற்கொலை செய்தோ இறந்திருப்பேன் என்று கூறிய தஸ்தாவெஸ்கியின் வாழ்க்கை அன்னா அடைந்த அவமானங்களின் பரிசு என்பதை அவரின் வரலாறு பதிவு செய்துள்ளது.
நீங்கள்
உங்கள் வாழ்நாளில் கரமசோவ் சகோதரர்கள், சூதாடி, வெண்ணிற உறவுகள், உலகப்
புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள், அசடன், குற்றமும்
தண்டனையும், தஸ்தயெவ்ஸ்கி
கதைகள், அப்பாவியின்
கனவு நூல்களை அவசியம் வாசித்து விடுங்கள். குற்றமும்
தண்டனையும் நூல் என்னை வாசிப்பு அனுபவத்தில் திளைக்கச் செய்தது.
Saturday, 4 July 2026
நல்லியம் பாளையம் கதை பேசுவோம் 11. அரச மரம் ,ஆலமரம் , வேப்ப மரம்
Thursday, 2 July 2026
என் ஊரின் கங்கை- நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -13
Tuesday, 30 June 2026
கவிஞர் புவியரசு
கவிஞர் புவியரசு
Monday, 29 June 2026
நோம்பி சாட்டுதல் - நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -24
மார்கழி மாசம் இரண்டாம் வாரத்தில் ஊரில் நோம்பி சாட்டிடுவாங்க… செவ்வாய்க்கிழமை கோயில் கிணத்துல இருந்து கம்பம் எடுத்து இரவு கோயில் நடுவில் நட்டவுடன் நோம்பி சாட்டிய அறிகுறி ஊருக்குள் தென்படத்தொடங்கும்.
மறுநாள் காலை ஊர்ப் பெண்கள் வரிசையாய் வந்து கைகளில் குடத்துடன் , வேண்டுதலுடன் கம்பத்திற்கு நீரூற்றி கோயில் நெற்றி நிறைய திருநீறு அணிந்து அவரவர் இல்லம் செல்வர்.
ஊரில் வெள்ளையடிக்க வெளியூர் பெண்கள் வேலை கேட்டு ஊருக்குள் வர ஆரம்பிப்பார்கள். நாங்க சென்னிமலை ரோட்டுல இருக்கற சுண்ணாம்பு சூலையில் போய் சாக்குல சுண்ணாம்பு வாங்கிட்டு வருவோம். வெளியூர் பெண்கள் ஏணி வச்சு ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளையடிக்க கூலி பேசி வேலை ஆரம்பிப்பார்கள்.
கூலிக்குக் கணக்குப் பார்த்தாலும் வேலை செய்யும் பெண்களுக்கு வயிறு நிறைய உணவிட்டு , கையில , பையில காய்கறி , தேங்காய் எல்லாம் கூலிக்கு மேல கொடுத்து விடும் வழக்கம் நல்லியம்பாளையம் கிராமத்தில் உண்டு.
ஆடு குட்டு போட்ட கதை தொடங்கி , வூடு சுத்தம் செய்யும் போது கண்ணில் அகப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை வச்சி அந்தக் கதையை வெள்ளையடிக்கும் பெண்களிடமும் பக்கத்து வீட்டு ஆத்தாக்களிடமும் பேசி மகிழ்வார்கள்.
நல்லியம் பாளையம் கிராமத்தில் வீடுகள் எல்லாம் கிராமத்து வீடுகள். வீட்டின் வாசலில் செக்கு, அம்மிக்கல் கட்டாயம் இருக்கும். வருசம்பூரா இருக்கும் அம்மிக்கல்ல வெள்ளையடிக்க நகத்தும் போது பூரான் போன்ற பூச்சியினங்கள் கலைந்து ஓடும்.
நோம்பி சாட்டி பூச்சாட்டு தொடங்கி நான்கு ஐந்து நாட்களில் ஊரில் எல்லா வீடுகளும் வெள்ளையாய் அழகாய் தென்படத் தொடங்கிவிடும்.
அன்றாடம் பொழுது சாயும்போது ஆடு மாடுகளைத் தொண்டுபட்டி பார்த்து ஊர்க் கவுண்டர்கள் ஓட்டிட்டு போயி , தீவனம் போட்டு ,காய வச்ச வெந்தண்ணிய மேலுக்கு ஊத்திட்டு இருக்கும் போது நல்லியம்பாளையம் மாரியம்மன் கோயிலில் ‘தப் தப்’ எனச் சத்தம் கேட்கத் தொடங்கும்.
பறை சத்தம் கேட்கத் தொடங்கியதும் நல்லியம்பாளையம் கிராமத்தில் எல்லோரும் ஊர்க் கோயில் நோக்கி வரத் தொடங்கிவிடுவார்கள்.
பறை அடிப்பவர்கள் கோயிலின் வெளியே சருகுகள் போட்டு , சிறு குச்சிகள் வச்சி பறை கருவியைக் காய்ச்சுவர் . கிராமத்து பெண்கள் எல்லாம் கோயில் வந்து கோயில் திண்ணைல உட்காந்து காத்திருக்க , நாங்க எல்லாம் தப் தப் இசைக் கருவிக்குக் காத்திட்டு இருப்போம். பறை இசைக்க கோயில் பூசாரி கையில் வேப்பிலையோடு பூச்சட்டி(தீச்சட்டி) எடுத்து கம்பத்தைச் சுற்றி , சுற்றி ஆடி வருவார். கிட்டத்தட்ட மூன்றுமுறை இவ்வாறு ஆட, ஆண்கள் உட்கார இயலாமல் அதன் தாளகதிக்கு ஏற்ப நயத்துடன் ஆடத்தொடங்கி விடுவோம். கிட்டதட்ட 8 மணி வாக்கில் தொடங்கும் ஆட்டம் இரவு பத்தைத் தாண்டி ஆடிக்கொண்டே இருப்போம்.
ஒண்ணாம் அடி தொடங்கி பறை இசையின் அனைத்து அடிகளையும் பறை இசைக் கலைஞர்கள் வாசிக்க , வாசிக்க ஊர்க் கவுண்டர்களும் சிறுவர்களாகிய நாங்களும் ஆடிக்கொண்டே இருப்போம்.
யாராச்சும் ஓரிரு ஊர்க்கவுண்டர்கள் பறை இசைக்கலைஞர்களின் தாளகதியைப் பாராட்டி பணம் கொடுப்பார்கள். புதன்கிழமை தொடங்கி கிட்டத்தட்ட நோம்பி சாட்டு முடியும் அடுத்த வாரம் திங்கள் வரை இந்த தாளகதி ஆட்டம் தொடர்ச்சியாய் நடைபெறும். செல்போன் இல்லாத காலம். தொலைபேசி மட்டுமே இருந்த காலம். தூர்தர்சன் மட்டுமே இருந்த காலமும் கூட. ஆதலால் இந்த ஆட்டகதியில் ஆண்கள் மெய்யாக நடை நடந்து ஒய்யாரமாக ஆட, பெண்கள் கோயில் திண்ணையில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே கதைகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் இதே போல காட்டு வேலை ஊட்டு வேலை முடிஞ்சு ஊரார் அனைவரும் கோயில் திண்ணையில கூடி இருக்க , வருசாந்திர கதைகள் பல நல்லியம் பாளையம் மண்ணின் மைந்தர்களால் பேசப்படும். அதில் ஒரு கதை.
நல்லியம் பாளையம் ஊருக்கு வெளியே குடியிருந்த மின்சாரத்துறை ஊழியர் ஒருவர் குடித்து விட்டு கோயிலுக்குச் சென்று ஆடிட , ஊரார் தட்டிக்கேட்க , அந்த மின்துறை ஊழியர் ஊரின் டிரான்ஸ்பார்மரை அணைத்து விட்டு செல்ல , அதனைக் கண்டுபிடித்து , அவரை அழைத்து உரிய முறையில் சில பதிலடிகள் கொடுத்து ஊர்க்கவுண்டர்கள் கண்டித்த கதை இன்றும் நினைவில் உள்ளது.
நல்லியம் பாளையம் மாரியம்மன் கோயில் உள்ளே ஆட்டம் தாளகதிக்கு ஏற்ப நடந்தாலும் ஊர்க்காரங்க யாரும் ஊரின் மரியாதைக்கு ஏற்பவே நடந்து கொள்வார்கள்.
ஊர் மரியாதை , கோயில் மரியாதை ஆகியவற்றை நல்லியம்பாளையத்தினர் தங்களின் கண்கள் போலவே காத்து அதன்படியே வாழ்வியலை வாழ்ந்தனர்.
நோம்பி சாட்டி ஒரு வாரம் நடக்கும் இந்த வைபவம் திங்கள் இரவு வரை நடக்கும். அடுத்த நாள் பறை இசைப்பவர்கள் ஊரில் அனைத்துத் தெருவிலும் சென்று அடுத்த செவ்வாய்க்கிழமை சாயங்காலம் காவிரிக்கு தீர்த்தம் எடுக்க போறோம், எல்லோரும் 3 மணிக்கு வந்துடுங்க என்று பறை இசைத்துச் சொல்லி செல்வர்.
நாங்கலாம் திங்கட்கிழமைல இருந்தே பள்ளிக்கூடம் விடுப்பு எடுத்துவிடுவோம். செவ்வாய் மாலை காவிரி சென்று தீர்த்தம் சுமந்து , நடைநடையாய் நடந்து எங்கள் ஊரின் காக்கும் தெய்வம் மாரியம்மனுக்கு நீர் ஊற்றுவோம்.
பூச்சாட்டு தொட்கி , தீர்த்தம் கொண்டு வந்து ஊர்க் காக்கும் கோயிலுக்கு நேந்துகடன் தீர்க்க பல வேண்டுதல்களைக் கொண்டு அடுத்தநாள் பொங்கல் தொடங்கும்.
கொங்கு மண்ணில் ஊர் காக்கும் காவல் தெய்வங்கள் வடக்கு நோக்கியே எல்லா ஊர்களிலும் இருக்கும். அதன்படி நல்லியம்பாளையம் கிராமத்திலும் எங்கள் மாரியம்மன் வடக்கு நோக்கியே அருள்புரிந்து அருளாட்சி செய்து வருகிறார்.
வாழ்வியலை வகுத்து அதற்கேற்ப வாழ்ந்த நல்லியம்பாளையம் ஊரின் கதை கொங்கு மண்ணின் கதையும் கூட. பூச்சாட்டு என்பது மக்களையும் ஊரையும் வருடந்தோறும் ஒன்று சேர்க்கும் கொங்குத் திருவிழா.