ஆசிரியர்: சி.ஆர்.இளங்கோவன்
சிறுவாணி மலைத்தொடரில் தொடங்கும் இந்த நூல் குறிஞ்சி நிலம் முல்லை நிலம் மருத நிலம் ஆகிய நிலங்களின் நிலை இயல்பை மக்களின் வாழ்வியலை இயற்கையின் போக்கை போகிற போக்கில் மிக அழகாக சுட்டிச் செல்கிறது.
உயிர்ச் சூழல்
சூழல் மண்டலமாகத் திகழும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தனித்தியல்பை சி ஆர் இளங்கோவன் அவர்கள் அழகாக விளக்குகிறார்.
நொய்யல் நதி உருவாகும் இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்று மரங்களின் பெயர்களையும் பறவைகளின் பெயர்களையும் அறிமுகப்படுத்தி நொய்யல் நதியின் பார்வையிலேயே நம்மையும் அழைத்துச் செல்கிறார். 900 மூர்த்திகண்டி என்ற சிற்றாரின் பெயரையும் குறிப்பிட்டு, சாடி வயல் என்பதற்கு மிக அழகான விளக்கத்தை வழிகாட்டி போல விளக்குகிறார்.
அங்கிருந்து அந்த நதியின் போக்கிலேயே பேரூர் அழைத்து வந்து நம்மை பயணத்திற்கு ஆட்படுத்துகிறார்.
பேரூரில் நொய்யல் ஆற்றின் இடையே வீர ராஜேந்திர சோழ மன்னர் எழுப்பிய தேவி சிறை அணை குறித்தும் அது உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் அன்றைய காலத்திற்கே நம்மை கைப்பிடித்து வழி நடத்துகிறார்.
நொய்யல் நதி கரையில் 36 சிவாலயங்கள் இருக்கின்றன என்பதையும் குறிப்பிடுகிறார்.
மேற்குக் கடற்கரை சாலையையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் மையப் புள்ளியாக நொய்யல் நதி விளங்குவதை குறிப்பிடும் சி ஆர் இளங்கோவன் அவர்கள் ராஜகேசரி பெருவழி குறித்து அற்புதத் தகவல்களை அள்ளி வழங்குகிறார்.
ரோமானியர்களின் வணிகம் நொய்யல் நதி கரையில் எவ்வாறு நடைபெற்றது இங்கிருந்து பொருட்கள் எப்படி அந்த நாடுகளுக்கு சென்றன என்பதை வரலாற்று ஆய்வாளராக அழகாக விளக்குகிறார்.
கோவை நகரில் இருக்கும் குளங்களை சுட்டிக்காட்டி சிங்காநல்லூரின் குளத்தின் இடையில் செல்லும் பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் குளத்தின் இடையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் செல்லும் காட்சியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ரயில் பாதையையும் கூறி ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறார்.
கோவை சுற்றுச்சூழல் அமைப்புகள் இயற்கையை காக்கும் விதத்தையும் ஆங்காங்கே அடிக்கோடிட்டு காட்டுகிறார். நொய்யல் பாதையிலேயே நம்மையும் அழைத்துச் சென்று வெள்ளலூர் குளத்தில் நிறுத்தி அங்கு உருவாக்கப்பட்ட மியாவாக்கி காடுகளை அறிமுகப்படுத்துகிறார்.
வெள்ளலூர் குளக்கரையில் ஏரி காத்த இரண்டு சகோதரர்களின் கோயில் குறித்து எடுத்துக் கூறுகிறார்.
கல்கண்டு மதகு கதையை எடுத்து கூறி...
வெற்றிலை மிகுதியாக விளைந்து நல்ல மருத நிலமாக இருந்த சோமனூர் பகுதி விசைத்தறி கூடமாக எப்படி மாறியது என்பதை நொய்யல் கரையோட்டத்துடன் கதையோடு கூறுகிறார்.
செம்மாண்டம் பாளையம் என்ற ஊர் பெயர் எவ்வாறு வந்தது அந்த ஊரில் குளம் எவ்வாறு வந்தது என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் சென்று விளக்குகிறார்.
குருடி மலையில் தோன்றும் நீர் தன்னாசி பள்ளமாக மாறி கௌசிகா நதியாக உருவெடுக்கும் விதத்தை வியப்புடன் கூறுகிறார். நொய்யல் நதியில் கௌசிகா நதி இணையம் விதத்தை காட்சிப்படுத்தும் விதம் அழகிலும் அழகு.
திருப்பூரில் பணத்துக்குள் திருப்பூர் என்ற நிலை மாறி வனத்துக்குள் திருப்பூர் என்ற நிலை எவ்வாறு வந்தது இதில் உச்ச நீதிமன்றத்தின் பங்கு என்ன உள்ளூர் மக்களின் பங்கு என்ன ஏன் திருப்பூர் சாயக்கழிவுகளின் பிறப்பிடமாக மாறி பின்னர் மரம் வளர்ப்போம் என்ற நிலைக்கு ஏன் சென்றது என்பதை ஆதாரங்களுடன் அடுக்குகிறார்.
திருப்பூர் இன் சாயக்கழிவுகள் கொடுமணல் நிலத்தை எப்படி கொடுமை செய்தது என்பதை துல்லியமாக எடுத்துக் கூறுகிறார்.
கொடுமணல் சுற்றி பச்சைக் கல் வணிகம் எவ்வாறு நடைபெற்றது... ரோமானிய வணிகர்கள் இங்கு வந்து சூழலையும் சூழ்நிலையோடு விளக்குகிறார்.
சிறுவாணி மலைத்தொடரில் இருந்து நம்மை பல ஊர்களின் வழியே அழைத்துச் சென்று கரூர் அருகே நொய்யல் என்ற கிராமத்தில் நொய்யல் நதி காவிரியில் கலக்கும் இடம் வரை கைப்பிடித்து மனம் பிடித்து சொல்பிடித்து சோர்வடையாமல் 160 பக்கங்களில் அழகாக அழைத்துச் செல்கிறார். இந்தப் பாதையில் பயணம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தையும் தூண்டுகிறார். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
கோவை திருப்பூர் ஈரோடு கரூர் வாழ் மக்கள் தங்கள் ஊரில் பாயும் நதியின் வரலாற்றை அறிய வாசிக்க வேண்டிய தெரிந்து கொள்ள வேண்டிய அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான நூல்.
No comments:
Post a Comment