Monday, 28 April 2025

உழைப்பாளர் தினம் தோன்றிய வரலாறு

 
காடாயினும் மேடாயினும் கணினியானும் கழனியாயினும் வீடாகினும் எங்கு உழைத்தாலும் அவர்கள் தொழிலாளர்களே. பகலும் இரவும் சந்திரனும் சூரியனும் இந்த உலகில் நிலையாய் இருப்பது போல உழைப்பும் நிலையானது. நாட்டின் வறுமை போக்க வீட்டின் வறுமையைத் துரத்த ஓடி ஓடி உழைக்கும் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். 
            எண்ணத்தில் ஏற்றமிகு வண்ணங்களைக் கனவுகளாக வைத்து கைகளில் உழைப்பைத் தந்து பாரினில் பாடுபடும் பாட்டாளிகள் மட்டுமல்ல உழைப்பாளிகள். அதிகாலை எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு பின்னர் சமையலறை புகுந்து பக்குவாய் சமைத்து குடும்பத்தினர் மகிழ்வோடு பருகிட தேநீர் பானங்கள் தந்து துணி துவைத்து மடித்து மணிக்கணக்காய் ஆனாலும் உழைப்பு மட்டும் தீராத இல்லற பெண்களும் உழைப்பாளிகளே…
       எப்படி வந்தது இதற்கென்று ஒரு தினம் . இதை அறிய உங்கள் செவிகளைக் கொஞ்சம் கொடுங்கள். 
       1880களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அங்கே தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சில இடங்களில் வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்றன. 8 மணி நேரம் தான் வேலை என்ற கோரிக்கை உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது.
1806-ம் ஆண்டில் அமெரிக்காவின் பில்டெல்பியா நகரத்தின் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட போதுதான் தொழிலாளர்களின் கஷ்டங்களும் அவர்களின் உழைப்பின் மீதான சுரண்டலும் உலகுக்குப் புரிய ஆரம்பித்தது. இந்த நகரின் இயந்திரத் தொழிலாளர்கள் ஆரம்பித்த சங்கம்தான் உலகின் முதல் தொழிலாளர் சங்கம் என்கிறது வரலாறு.
1820, 1830-ம் ஆண்டுகளில் பத்து மணிநேர வேலை நேரம் என்கிற கோரிக்கையை வகுத்து நிர்வாகத்திடம் போராடினர் தொழிலாளர் வர்க்கத்தினர். வேன் பியுரன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தன் முதல்படியை எடுத்து வைத்தது. அதன்படி அரசாங்க ஊழியர்களின் வேலைநேரம் பத்து மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இது எந்தவித பலனையும் அளிக்கவில்லை. அனைவருக்கும் பத்து மணிநேர வேலை என்கிற தங்களின் கோரிக்கையோடு தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.
1850-களில் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் தோன்றியிருந்தன. பத்து மணிநேர கோரிக்கை இச்சங்கங்களின் அறிவுறுத்தல்களால் எட்டு மணி நேர வேலைக்கான கோரிக்கையாக மாறியது. அமெரிக்கா மட்டுமன்றி எங்கெல்லாம் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறதோ அங்கெல்லாம் கிளர்ந்தெழுந்தனர் தொழிலாளர்கள். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் கட்டடத் தொழிலாளர்கள், 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுது போக்கு, 8 மணி நேர ஓய்வு என்கிற தங்கள் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வெற்றியும் கண்டனர். இவ்வெற்றி உலகின் அத்தனை தொழிலார்களுக்கும் போராடினால் வெற்றி கிட்டும் என்கிற உத்வேகத்தை அளித்தது.
அமெரிக்காவில் அனைத்து தொழிலாளர்களுக்குமான ஒருங்கிணைந்த சங்கத்தின் தேவையை உணர்ந்து 1866-ல் தேசிய தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அந்த ஆண்டு பால்டிமரில் நடந்த சங்க மாநாட்டில் 8 மணிநேர வேலை நாளை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தலைவராக வில்லியம் சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் இந்த தேசிய தொழிலாளர் சங்கத்தைப் போன்றே லண்டனில் ``ஃபர்ஸ்ட் இன்டர்நேஷனல்" என பொதுவாக அறியப்படும் `சர்வதேச தொழிலாளி சங்கம்' 1866-ல் ஜெனிவாவில் 8 மணிநேர வேலை நாளுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. இப்படியாக இந்த இரு அமைப்புகளும் ஒரே கொள்கைகளோடு செயல்பட்டு வந்தன. வேலை நாளுக்கு சட்டபூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது…. வேலை நாளுக்கான சட்டபூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும் என்றும் இம்மாநாடு முன்மொழிந்தது. எட்டுமணி நேர இயக்கத்தைக் குறித்துக் கார்ல் மார்க்ஸ் 1867-ல் வெளியான தனது மூலதனம் புத்தகத்தில் `வேலை நாள் குறித்து’ எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார். 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் மிகப்பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது வன்முறையில் முடிந்து சில தொழிலாளர்கள் இறக்க நேர்ந்தது. 
 தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்த காலகட்டம் அது. இப்போராட்டங்களின் மையப்பகுதியாக சிகாகோ இருந்தது. முதலாளித்துவத்தின் மீதான வெறுப்பு , நாடு முழுவதும் பரவி புரட்சிக்கான உணர்வோடு உழைக்கும் வர்க்கத்தினர் இருந்தனர். தங்களின் தொழிற்கருவிகளை கீழே வைத்துவிட்டு சாலையை நோக்கித் திரண்டு வந்த தொழிலாளர்களின் படை உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. 8 மணிநேர வேலை நாள் என்கிற கோஷம் விண்ணைப்பிளந்தது. ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் திரண்டெழுந்து தொழிலாள வர்க்கத்தின் மொத்தப் போராட்ட வரலாற்றையும் மே 1 என்கிற இந்த ஒற்றை நாளில் தூக்கி நிறுத்தினர். புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. 

தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வர 1889 ஜூலை மாதம் 14ம் தேதி உலகத் தொழிலாளர்களின் சர்வதேசக் கூட்டம் பாரிசில் நடைபெற்றது. அதில் காரல் மார்க்ஸ் தான் 8 மணி நேர வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கவும், மே 1ஐ உலகத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடவும் அறைகூவல் விடுத்தார். அதில் இருந்துதான் மே தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடுகளும் படிப்படியாக இந்த தினத்தையே தொழிலாளர் தினமாக கொண்டாடவும் துவங்கினர். 

 உலகத் தொழிலாளர் நாள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த அமெரிக்காவில் தொழிலாளர் தினம் செப்டம்பர் முதல் வாரத்தில்தான் கொண்டாடுகின்றது . 
இந்தியாவில் முதன்முறையாக 1923-ம் ஆண்டு சிங்காரவேலர் என்கிற தமிழர் மே தினத்தை மெரினாவில் செங்கொடி ஏற்றி கொண்டாடியுள்ளார். 1957 வரை இந்த தினம் விடுமுறை நாளாக இந்தியாவில் அறிவிக்கப்படவில்லை. 1957-ல் கேரளாவில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு விடுமுறை நாளாக மே முதல் நாளை அறிவித்தது. உழைப்பாளர் நாளின் நினைவாக மெரினாவில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் இருக்கும் உழைப்பாளிகள் சிலை 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தொழிலாளர்களும் அவர்களது உழைப்பும்தான் இப்பூவுலகின் இயக்கத்தை நின்றுவிடாமல் சுழல வைக்கிறது. இன்று வாழும் இந்த நவீன யுகம் ஆண்டாண்டு காலமாய் உழைத்துக் கொண்டிருக்கிற பாட்டாளி வர்க்கத்தின் வியர்வைத் துளிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான ஒரு தினம் என்பது எவ்வளவு கொண்டாட்டமாக இருக்க வேண்டும். ஆனால், மிகுந்த போராட்டங்களுக்கும் வலிகளுக்கும் பிறகே வரலாறு தொழிலாளர்களுக்கென ஒரு தினம் கொண்டாட அனுமதித்தது.

 உலகில் மிகப்புனிதம் என ஒன்று இருக்குமென்றால் அது தொழிலாளர்களின் வியர்வைத் துளிகளேயன்றி வேறெதுவாக இருந்துவிட முடியும்! அனைத்துத் தொழிலாளர்களுக்கும் இனிய உழைப்பாளர்தின வாழ்த்துகள். 

No comments: