நல்லியம் பாளையம் - இந்தப் பெயரை கூறும்போது எங்களுக்குள் எப்போதும் ஒரு பெருமை இருக்கும். கட்டுப்பாடு மிகுந்த ஊர். தப்பித் தவறி கூட நாங்கள் தவறுகள் ஏதும் செய்து விடாமல் எங்களைப் பக்கவமாய் வளர்த்த ஊர். திண்டல் அருகே மேல்நிலைக் கல்விக்காக பள்ளிக்கூடத்தில் சேர்ந்த போது பள்ளி ஆசிரியர் எங்கள் ஊரையும் பெயரையும் வரிசையாகக் கேட்டார். நான் எழுந்து என் பெயரையும் என் ஊரான நல்லியம்பாளையம் என்ற பெயரையும் இயல்பாக கூறிய போது அந்த ஆசிரியர் மிகுந்த கட்டுப்பாடான ஊர் நல்ல இயற்கையான கிராமம் என்று அப்போது கூறினார். எனக்கு அப்போது அதன் அருமையும் பெருமையும் புரிபடவில்லை. இப்போது நன்றாய் புரிகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக பெரும் முயற்சிகள் எடுத்து ஊர்மக்கள் பலரிடமும் கையொப்பம் பெற்று பல முயற்சிகள் எடுத்து எங்கள் ஊருக்கு அரசுப் பேருந்தை வர வைத்தார்கள். காலை மதியம் மாலை என மூன்று நேரங்கள் எங்கள் ஊரைத் தொட்டு அரசுப் பேருந்து செல்லும். நண்பர்கள் நற்பணி மன்றத்திற்கு முன்பாக எங்கள் ஊரில் ஒற்றுமைக் குழு நற்பணி மன்றம் என்று ஒன்று இருந்தது என்பதை ஊர்ப் பெரியவர்கள் கூறியுள்ளார்கள். ஊரின் அனைத்துப் பகுதிகளிலும் நற்பணி மன்றத்தின் சார்பாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு முறையாக குடிநீர் வசதியை நற்பணி மன்றத்தினர் ஏற்படுத்தித் தந்தனர். ஊரின் அனைத்து தேவைகளையும் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் முன்னின்று முதன்மையாய் செய்தனர். நீர் என்ற போது இந்த கிணறுகள் எங்கள் நினைவலைகளில் நிச்சயம் வந்துவிடும். செந்தில் புக் கடைக்காரர் வீட்டு அருகே ஊரின் வடபுறத்தில் இறக்கத்தில் குட்டிக் கிணறு என்று ஒரு கிணறு அந்த நீரின் சுவை எந்த சுவைக்கும் ஈடாகாது. பக்கத்து ஊர்க்காரர்களும் சைக்கிளிலும் இருசக்கர வாகனத்திலும் வந்து கிணற்றில் நீர் எடுத்துச் செல்வார்கள். அதுபோல ஊரின் மத்தியில் இருக்கும் சேந்து கிணறு. ஊர் மக்களுக்கு மட்டுமே அந்த கிணறு பயன்பாடு உடையது. அடுத்து கோயிலுக்குத் தென்புறத்தில் ஒரு அடி பைப் இருக்கும். அந்த நீரின் சுவையும் அளவிட முடியாத ஆனந்தத்தைத் தந்தது. நாங்கள் பகல் முழுவதும் கிரிக்கெட் விளையாடிவிட்டு மேடேறி வந்து அந்த அடி பைப்பில் நீர் பருகும் போது தாகம் தீராது. தண்ணீரின் சுவையும் தீராது. எங்கள் ஊருக்குப் பக்கத்தில் அப்போதுதான் வீட்டு வசதி வாரியம் அமைத்தார்கள். வீட்டு வசதி வாரியத்தில் நீர் வசதி இருப்பினும் குடிப்பதற்கான நீர் அங்கு குறைவாகவே இருந்தது. ஆதலால் ஹவுசிங் போர்டு மக்கள் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் எங்கள் ஊருக்கு வந்து சைக்கிள்களில் நீர் எடுத்துச் செல்வார்கள். நல்லியம்பாளையம் ஊரைச் சுற்றி குடியிருப்புகள் பெருகினாலும் எங்கள் ஊரின் மண் மனம் மாறாத கலாச்சாரமும் கட்டுப்பாடும் அப்படியே இருந்தது. ஊருக்கு வடபுறத்திலும் தென்புறத்திலும் மேகமாய் வரும் வாகனங்கள் கூட நல்லியம்பாளையம் எல்லையைத் தொட்டதும் வேகத்தை இயல்பாகவே குறைத்து விடுவார்கள். அவசியமின்றி ஹாரன் அடிக்க மாட்டார்கள். அவசரமாக எந்த பயணமும் நிகழாது. நிதானமாக ஓடும் வாய்க்கால் நீரைப் போல பக்குவமாய் எங்கள் ஊர் நல்லியம்பாளையம் பெயரிலும் நீரிலும் சிறந்து விளங்கியது.
No comments:
Post a Comment