ஊருக்கு ‘கொத்துக்காரர்’ நாட்டுக்கு ‘பட்டக்காரர், சடங்குக்கு ‘அருமைக்காரர்’ என்று நியமித்து, நீதிநெறிக்கு கட்டுப்பட்டு வாழும் சமுதாயம் கொங்குச் சமுதாயம். எங்கள் ஊர் நல்லியம்பாளையத்திலும் ஊர்க் கொத்துக்காரர் ஊரின் முக்கியமானவராக முதன்மையானவராகக் கருதப்படும் மரபு இன்றும் பேணப்பட்டு வருகின்றது. ஊர்க் கோயில் திருவிழா தொடங்கி ஊரின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று வழிநடத்தும் மரபாக , கொத்துக்காரர் மரபு வழிநடத்தப்படுகிறது.
அதுபோல ஊர் அருமைக்காரர் பொறுப்பும் ஊருக்கு மிகவும் முக்கியமான பொறுப்பு.( கொங்கு வேளாளக் கவுண்டர்களின் பல ஆவணங்களை அடையாளப்படுத்திய புலவர் இராசு ஐயாவின் பேரன் எனது மாணவன். அதன்மூலம் இராசு ஐயா அவர்களிடம் ஊர் அருமைக்காரர் பற்றிய தரவுகளை அவர்வழியே பத்தாண்டுகளுக்கு முன்னர் பெற்றேன். அந்தப் பதிவுகளே இங்கும் பகிரப்படுகிறது)
மணமகன், மணமகளின் பெற்றோர் தங்கள் மக்களுக்குத் திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்வதற்கு ஏற்ப ‘குருபலன்’ வந்துவிட்டதா? என்று தெரிந்து கொள்வர். முன்பு பெரும்பாலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தில் மணமகன் அத்தை, தாய்மாமன் வீட்டுப் பெண்களையே திருமணம் முடிப்பது வழக்கம். அப்பெண்ணை ‘உரிமைப் பெண்’ என்று அழைப்பர். மணமகன்-மணமகள் வீட்டாரிடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள இடையில் இருப்பவரை ‘தானாவதிக்காரர்’ என அழைப்பர். அவர் மூலம் சாதகம் பெற்றுப் பொருத்தம் பார்க்கச் செல்லும் போதே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துச் ‘சகுனம்’ வழியில் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவர். பூனை குறுக்கே போகக் கூடாது. விறகுக்கட்டு எதிரே வரக்கூடாது. வண்ணான் அழுக்கு மூட்டை எதிர்வருவது, கழுதை கத்துவது நல்லது; பறவை- விலங்கு வலம் போக வேண்டும் என பலவற்றை எதிர்கொண்டு அதன்படி நடப்பர். ஒரே குலத்தில் பெண் எடுக்கும் ‘அகமணம்’ கவுண்டர்களிடம் இல்லாத காரணத்தால் முதலில் கூட்டத்தை (குலத்தை) விசாரித்து அறிந்து கொள்வர். பொருத்தம் பொருந்தி வந்தால் கூடச் சிலர் குலதெய்வக் கோயிலில் ‘பூவாக்கு’ கேட்டோ அல்லது ‘பல்லி சகுணம்’ கேட்டோதான் மேற்கொண்டு செயல் செய்யத் தொடங்குவர் என்று இராசு சொன்னதையும் நடைமுறை வாழ்வியலையும் பொருந்தச் செய்தன.
பெண் பார்த்தல்
சாதகம் பொருந்தியவுடன் பெண் பார்க்கும் நிகழ்வை கொங்குச் சமுதாயம் அண்மைக்காலம் வரை வெளிப்படையாகச் செய்வது இல்லை. பத்துப்பேர் கூடிக் சென்று பெண்ணை சிற்றுண்டி, காப்பி கொடுக்கச் செய்து, நடக்கச் செய்து, பாடச் சொல்லிப் பின்னர் பெண் பிடிக்கவில்லை என்று கூறுவதைக் கொங்குச் சமுதாயம் நாகரிகமுடையதாகக கருதவில்லை என்பதே இதற்குக் காரணம் ஆகலாம் என்று கூறினார். எனது நல்லியம் பாளையம் மற்றும் கொங்கு கிராமங்களில் இதே நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
கோயிலுக்கு அழைத்துச் சென்றோ, கிராமம் ஆயின் தண்ணீர் எடுக்கச் செல்லும்போதோ அல்லது ஏதாவது திருவிழாவின்போதோ பெண்ணை முதலில் பார்த்து அதன்பின்னரே உறுதி செய்வர்.
ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த்தப் புடவை, நகை, மங்கலப் பொருள்களுடன் மணமகன் வீட்டார் தங்கள் நெருங்கிய சுற்றமுடன் மணமகள் வீடு செல்வர். மாத்து விரிக்கப்பட்ட தரையின் இடையில் மங்கலப் பொருள் முன் அருமைக்காரர் அமர்ந்திருப்பார்.
அவர் முன் எதிர் எதிராக இரு வீட்டாரும் அமர்வர். மணமகன் வீட்டுச் சார்பில் பெண் கேட்க வந்ததாகக் கூறப்படும்.
பெண் வீட்டார் சார்பில் சம்மதம் தெரிவித்தபின் இரு வீட்டாரும் வெற்றிலை-பாக்கு மாற்றிக் கொள்வர்.
அருமைக்காரர், பெண் வீட்டு மங்கலப் பெண்களிடம் நீர் விளாவி தூபம் காட்டி மணமகன் வீட்டுத் தட்டத்தைக் கொடுப்பார். மணப்பெண் மணமகன் வீட்டார் கொண்டு வந்த நகையை அணிந்து சேலையை உடுத்தி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், எலுமிச்சம் பழம் இவைகளை மடியில் கட்டி வந்து சபையில் அமர்ந்து எல்லோரையும் கும்பிடுவார்கள். பெரியவர்களை வணங்க, மணமகன் வீட்டுப் பெண்கள் மணமகளுக்குச் சந்தனம் பூசிப் பூ வைப்பர். முடிவு செய்த திருமணத் தேதியை ஊர் அருமைக்காரர் சபையில் அனைவருக்கும் அறிவிப்பர்.
நிச்சயதார்த்தத்தில் விருந்து உவசாரம் முதலில் நடைபெறுவதால் ‘பருப்புச்சாத விருந்து’ என்றும் அழைப்பர்.
அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பல எண்ணிக்கை சார்ந்த சடங்கு முறைகளை பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் செய்வார்கள் . அந்தச் சடங்குகள் அனைத்தும் அருமைக்காரர் தலைமையிலேயே நடைபெறும். சடங்குப் பெயர்களை மட்டும் இங்கு ஆவணப்படுத்த விரும்புகிறேன்.
மாங்கல்யத்திற்குப் பொன் கொடுத்தல், திருமண அழைப்பு, விருந்து அல்லது சோறாக்கிப் போடுதல்,பட்டினிச் சாதம், முகூர்த்தக்கால் போடுதல்,படைக்காலம் வைத்தல்,காப்புக் கட்டுதல்,சீர்த்தண்ணீர் கொண்டு வருதல்,மங்கலன் முகம் துடைத்தல்,கோயில் மாலை பெறுதல்,குப்பாரி கொட்டல்,நிறைநாழி,கணபதி வணக்கம்,குலதெய்வ வழிபாடு,நாட்டுக்கல் வழிபாடு,வெற்றிலை கட்டுதல்,இணைச்சீர்,தாயுடன் உண்ணல்,கூடைச்சீர் அல்லது நாழியரிசிக் கூடை,பால் பழம் சாப்பிடுதல்,பட்டம் கட்டுதல்,பெண்ணெடுத்தல்,மணமேல் பணம் மேற்காணும் சீர் முறைகளை ஊர் அருமைக்காரர் செய்வார்.
திருமணம் முடிந்த பின்னர் ஓலை எழுதிய புலவர் , நகை ஆசாரி, மங்கலன் என்றழைக்கப்படும் நாவிதன் , குயவன், வண்ணான் பதினெட்டு சமூகத்தாருக்கு பொருள் கொடுத்து பெரிய நிகழ்வாக திருமணம் நடத்தும் பாங்கு ஊர் அருமைக்காரருக்கு உண்டு. நல்லியம்பாளையம் கிராமத்தின் கொத்துக்காரர் மற்றும் அருமைக்காரர், மணியக்காரர் என நல்லியம்பாளையத்தின் அடையாளமாகிப்போன கவுண்டர்களை நினைவு கொள்கிறேன். எனது பால்ய வயதில் இவர்களின் பெருமை தெரியாமல் இவர்களுடன் பேசி உள்ளேன். ஆனால் ஊரின் ஆவணங்களே இவர்கள்தான் என்பதை என்னும் வயதில் இன்னும் ஊரைப் பற்றித் தொகுக்க வேண்டும் என்று ஆர்வம் கொள்கிறேன். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை இருக்கும். நல்லியம்பாளையத்தின் கதையும் விதவிதமாக இருக்கும். மேலும் கதை பேசுவோம்.
No comments:
Post a Comment