Saturday, 5 April 2025
"ஈரோடு நல்லியம் பாளையம் கதை பேசுவோம்"
நல்லியம் பாளையம் கதை பேசுவோம்- 5
அம்மா கடையில் இருப்பார். கடைக்கு வரும் அருமைகாரர் பொடுசுங்க(குழந்தைகள்) எல்லாம் எங்க போச்சு என்று கேட்பார். கேட்டுவிட்டு பேப்பர் வந்துடுச்சா என்று விசாரிப்பார். நல்லியம்பாளையம் கிராமம் முழுமைக்கும் சேர்த்து கோயில் திடலில் ஒரு தினத்தந்தி நாளிதழ் இருக்கும்.
காலை 8 மணி அளவில் எங்கள் ஊரின் பெரிய மணியக்காரர் நடையாய் நடந்து கோயில் திடலுக்கு வந்து பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொள்வார். எங்கள் ஊரில் வானொலி செய்திகளை நேரம் தவறாமல் கேட்டு எங்களுக்கு நேரத்திற்கு ஒருமுறை அதன் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் மனிதர். ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் உரிய பூச பொருட்களை எடுத்துக்கொண்டு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அவரோடு நானும் சென்று வழிபாடாற்றி வருவேன். கலைஞரின் அறியாத பல தகவல்களை அவர் மூலமாக எங்கள் ஊர் அறிந்து கொண்டது. ஒருமுறை கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது காலையில் தான் நாளிதழில் மூலம் ஊர் அறிந்து கொண்டது. இன்று போல் அன்று உடனடிச் செய்தி ஊடகங்கள் எதுவும் இல்லை. மாரியம்மன் கோயில் திடலில் ஊர் மக்கள் பலரும் கூடி நின்று பல மணி நேரங்களுக்கு அவரின் அரசியல் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை பல தகவல்களை எங்களுக்கு அவர் பகிர்ந்து கொள்வார். எங்கள் ஊரின் பெரியவர்களில் மிக உயர்ந்த படிப்பு படித்தவர் அவர் ஒருவரே.
.. என்னமோ போங்க யாரு எப்படி போனா என்ன நமக்கு ஊடு, காடு, ஆடு, மாடு இத விட்டா வேற என்ன இருக்குதுங்க என்று வள்ளியம்மாள் ஆத்தா பேசிக்கொண்டே செல்வார். கொங்கு கிராமங்களில் யாரையாவது அழைத்தால் “ஓவ்” சொல்லுங்க என்று பதில் முறை இருக்கும். தற்காலங்களில் இந்த முறை மாறிவிட்டது. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஊர் முச்சூடும் எங்கு ஓடி திரும்பினாலும் ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு ஆத்தா நின்று என்னத்துக்குடா இந்த ஓட்டம் ஓடுறீங்க இரு உங்க அப்பன் ஆத்தா கிட்ட சொல்றேன் என்று கூறுவார். எங்களுக்கு காதில் எதுவும் விழாது. இப்படி ஊர் மூச்சுடூம் சுத்திட்டு திரிஞ்சீங்கனா மாடு மேய்க்கிறதுக்கு தான் லாக்கி என்ற சொலவடை எங்களை எதுவும் செய்யாது. இப்ப மட்டும் என்ன பண்ணிட்டு இருக்கோமுங்க என்று நாங்கள் கூற , அடி என்று ஒரு எட்டு எடுத்து வைத்து எங்களை செல்லமாக துரத்துவார். நாங்கள் ஓடி ஓடி சந்தில் ஒளிந்து திரிந்து விளையாடிக் கொண்டிருப்போம். எங்கள் ஊரின் கோயில் திண்ணையில் எப்படி கதை நிகழுமோ அதுபோல ஊர் கொத்துக்காரர் வீட்டு திண்ணையிலும் அவ்வப்போது கதைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சின்னாத்தா வீட்டுக்கு போனியே என்ன ஆச்சு என்று கேட்க அந்த கதையை ஏனுங்க கேக்குறீங்க என்று ஆடி காத்து கதை ஆரம்பித்து மார்கழி குளிர் வரை மக்கள் உரையாடி உவப்பாக இருப்பார்கள்.
பேசும் மக்கள் பேசிக் கொண்டிருக்க சாலையிலிருந்து (தோட்டத்திலிருந்து) பால் கறந்து பை நிறைய காய்களை எடுத்துக்கொண்டு வருபவர்களை பார்த்து வாங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போலாம் என்று அழைப்பார்கள். இப்பதான் காட்டு வேலை முடிஞ்சுது. அடுத்த ஊட்டு வேல இருக்கு. வெந்தண்ணில (சுடுநீரில்) தண்ணில தண்ணி வாத்தா தான் நல்லா இருக்குதுங்க. மேலுவலி நான் போய் கொஞ்ச நேரம் வெந்த தண்ணில தண்ணி வாத்துட்டு வாரனுங்க.
போய் தான் அடுப்பு மூட்டோனும் என்று கூறிக் கொண்டு சிலர் நடந்து சென்று விடுவார்கள். மாலையில் சீக்கடி (கொசுக்கடி) ஆரம்பிக்கும். வாய்க்கால்ல தண்ணி வுடப் போறானுங்க. தண்ணி வந்ததும் நடவு ஆரம்பிக்கனுமுங்க.
காட்டு வேலைக்கு போறவங்க எல்லாம் இன்னைக்கு வூட்டு வேலைக்கு போறதுனால காட்டு வேலைக்கு ஆளே இல்லாம போச்சு. என்னமோ போங்க…என்று ஒரு புலம்பல் குரல் கேட்க…சரி நடவு மட்டும் ஆள புடிங்க அதான் அறுக்கிறதுக்கு மிஷனு வந்துருச்சே என்று இன்னொரு தீர்வு கிடைக்கும்.
ஊரின் தெக்கு பக்கம் கோயில் திண்ணையிலும்
ஊர் மத்தியில் உள்ள பெருமாள் கோயில் வேப்பமரத்து திண்ணையிலும் ஊரின் வடக்குக் பக்கம் கொத்துக்காரர் வீட்டுத் திண்ணையிலும் கதைகள் கதைகளாய் எங்கள் மக்களால் பேசப்பட்டு கொண்டே இருக்கும். கதையில் எங்கள் ஊரின் வாழ்வியலும் வலிகள் நிறைந்த சூழியலும் இருந்து கொண்டே இருக்கும்.
கதை பேசுவோம்.
ஈரோடு நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -4.
Sunday, 16 February 2025
இந்திய விடுதலையும் இங்கிலாந்து தேர்தலும் - பொ.சங்கர்
(ஆறாம் ஜார்ஜ் மன்னருடன் அட்லி)
இரண்டாம் உலகப்போர் (1939 முதல் 1945) நடைபெற்ற காலத்தில் முதல் இரண்டு ஆண்டுகளில், அமெரிக்கா நடுநிலைமை கொள்கையைப் பின்பற்றியது. பல்வேறு நாடுகள் போரில் ஈடுபட்டமையால் உலகம் முழுமையும் ஒருவித பதட்ட மனநிலை மக்களிடையே காணப்பட்டு வந்த நேரத்தில் 1945 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
முதல் உலகப்போரில் தீவிரப் பங்காற்றிய கிளமெண்ட் அட்லீ அதன் பிறகு தொழிலாளர் கட்சியில் இணைந்து அரசியலில் தீவிரமாக ஈடுபடலானார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இங்கிலாந்தில் 1945 ல் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தொழிலாளர் கட்சியை (Labor Party) வெற்றி பெற வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
(தொழிலாளர் கட்சி தலைமை அலுவலகம் )
இரண்டாம் உலகப்போர் காரணமாக இங்கிலாந்து கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆட்பட்டிருந்தது. அதனை மீட்டெடுக்கவும் காலனித்துவ நாடுகளான இந்தியா இலங்கை மலேசியா பர்மா போன்ற நாடுகளுக்கு விடுதலை அளிப்பது தொடர்பாகவும் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஏனெனில் இந்த நாடுகளுக்குக் கட்டாய விடுதலை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்தின் பொருளாதாரம் இருந்தது. போரில் பெருமளவு செல்வங்களை இழந்த காரணத்தால் தன் சொந்த நாட்டை மேம்படுத்த வேண்டும் என்பதில் Labor Party கட்சியைச் சார்ந்த கிளமெண்ட் அட்லீ தீவிரமாக இருந்தார்.
தொடர்ச்சியான போர் இங்கிலாந்து மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்த நேரத்தில் கிளமெண்ட் அட்லீயின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடையே சிறு மாற்றத்தை அளிக்க முன்வந்து , தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இங்கிலாந்து நாட்டை நன்முறையில் கட்டமைக்க வேண்டிய நெருக்கடியில் இருந்த அட்லீ பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இங்கிலாந்து நாட்டில் ஐந்தில் ஒரு பங்கு தொழில்களை தேசிய மயமாக்கி தனியார் பங்களிப்பைக் குறைத்து அரசின் நிதி வருவாயைப் பெருக்கினார். நிலக்கரிச் சுரங்கம், மின்சாரம் மற்றும் ரயில்வே போன்ற பிரிட்டனின் மிகப்பெரிய தொழில்கள் பலவும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உணவு வளங்களின் பற்றாக்குறை மிகவும் கடுமையானதாக இருந்தமையால் போருக்குப் பிறகு நீண்ட நாட்களுக்கு நாட்டில் ரேஷன் முறையிலேயே பொருட்களை வழங்க வேண்டியிருந்தது.
தன் நாட்டின் மேம்பட்ட நிலைக்குப் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்த அட்லீ தலைமையிலான கட்சி , தேர்தல் வாக்குறிதுகளின் படி தமது காலனித்துவ நாடுகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1947ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் கிளமெண்ட் அட்லீ 1948 ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் வாயிலாக இந்தியாவின் வைசிராய் மவுண்ட் பேட்டனிடம் , இந்திய விடுதலைக்கான பணிகளைத் துவங்குங்கள் என்றும் 1948 ஜூன் மாதத்திற்குள் இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்றும் அட்லீ உத்தரவு பிறப்பித்தார். ஆனால் நடந்தவை வேறுவிதமாக இருந்தது. முகமது அலி ஜின்னா இசுலாமியர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்பதில் மிகத் தீவிரமாக இருந்தார். இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையிலான பிரச்னை வலுத்திருந்தது. 1947 பிப்ரவரி 10ஆம் தேதி தான் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். சுதந்திரம் வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்திய விடுதலை எளிதாக இருக்கும் என்று எண்ணிய அட்லீ , மவுண்ட் பேட்டன் ஆகியோருக்கு இந்திய விடுதலைப்பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெரும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. இந்த நிகழ்வுகள் இங்கிலாந்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தின. இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.
அட்லி ஏற்கனவே அறிவித்த 1948 ஜூன் மாத விடுதலை என்பதை முன்னதாகவே மாற்றி விரைவாகவே இந்தியாவிற்கு விடுதலை வழங்கி விடலாம் என்ற முடிவிற்கு வந்தார். அதன்படி மவுண்ட் பேட்டனிடம் இந்தியாவின் சுதந்திரத்தை விரைவுப்படுத்துங்கள். சிக்கல்களைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறினார்.
இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதிலான முகமது அலி ஜின்னா தமது கோரிக்கையில் உறுதியாக இருந்தார். இந்தியாவை இரண்டு நாடுகளாக பிரிப்பதற்கு பல்வேறு சிக்கல்களும் நடைமுறை போராட்டங்களையும் மௌண்ட் பேட்டன் சந்திக்கலானார். கல்கத்தா வரலாறு காணாத பேரழிவை வன்முறைகளால் சந்தித்து இருந்தது. இந்தியத் தலைவர்களும் மவுண்ட்பேட்டனும் இந்தக் கலவரங்களை எதிர்பார்க்கவில்லை. விரைவில் இரண்டு நாடுகளாகப் பிரித்து விடுதலை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற முடிவுக்கு இங்கிலாந்து தீர்க்கமாக வந்தது.
1947 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வைஸ்ராய் மாளிகையின் அலுவலக அறையில் மவுண்ட் பேட்டன் இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரிப்பதற்கு இந்திய தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பஞ்சாப் மாநிலத்திலும் வங்காளத்திலும் எல்லைக் கோடுகள் வரையும் பணியை பிரிட்டனின் புகழ்பெற்ற நீதிபதி சர்சிரில் ராட்கிளிப் என்பவரிடம் மவுண்ட் பேட்டன் ஒப்படைத்தார்.
இங்கிலாந்து நாட்டின் அரச நெருக்கடிகளுக்கு மத்தியில் மவுண்ட்பேட்டன் தன்னிச்சையாக இந்தியாவின் சுதந்திரம் ஆகஸ்ட் 15 என்று அறிவித்தார். ஆனால் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ல் கிரக நிலைகளின் சேர்க்கை சரியில்லை அதற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ விடுதலை தர வேண்டும் என்று இந்தியாவில் பலரும் கேட்கத் தொடங்கினர். பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 இந்தியாவை ஒரு பகுதியாக பிரித்து பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்படும் என்று மவுண்ட்பேட்டன் அறிவித்தார். முதலில் பாகிஸ்தான் சுதந்திரம் வழங்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் நாள் காலை 9 மணிக்கு கராச்சி நகரத்தில் முறைப்படி பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டு மவுன்ட் பேட்டன் தலைமையில் முகமது அலி ஜின்னாவிடம் பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டமைக்கான அதிகாரப்பூர்வ அறிக்கை வழங்கி ஜின்னாவிற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த இடத்தில் ஒரு முக்கியமான செய்தியை பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதாவது இந்திய விடுதலைக்கு முன்னரே பாகிஸ்தான் விடுதலை வழங்கப்பட்டமையை எதிர்த்து மவுண்ட்பேட்டனை கராச்சி நகரத்தில் வைத்துத் தாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது அல்லது தவிர்க்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
The man who could do miracles என்ற வெல்சியின் கதையை மவுண்ட் பேட்டன் நினைத்துக் கொண்டார். இந்தியாவில் அதிசயங்கள் நிகழ்த்தும் மனிதனாக தன்னை அவர் நினைத்துக் கொண்டாலும் இந்தியாவின் எதிர்காலத்திற்காக பல்வேறு செயல் திட்டங்களை மிகப் பொறுமையாகத் இந்தியத் தலைவர்களிடம் எடுத்துரைத்து மிகக் கவனமாக இந்திய விடுதலையைக் கையாண்டார். ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கான சுதந்திரம் முறைப்படி அறிவிக்கப்பட்டது. இந்தியாவிற்கான சுதந்திரம் தலைவர்கள் உடனிருக்க தென்னிந்தியாவிலிருந்து வருகை புரிந்த துறவிகள் இருவர்(திருவாவடுதுறை ஆதீனம் ) மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை வாங்கி ஜவஹர்லால் நேருவிடம் வழங்கிய பதிவு இந்திய வரலாற்றுக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகள் நடந்த போராட்டமும் இந்திய மக்களின் தீராத வேட்கையும் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் வகித்த பங்கை போல இங்கிலாந்து நாட்டின் தேர்தலும் முக்கியப் பங்கு வகித்தது. இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி தேர்தலில் வைத்து வாக்குறுதிகளின்படி அதன் காலனித்துவ நாடுகள் ஒவ்வொன்றாக அதன் பிறகு விடுதலை பெற தொடங்கின என்பதும், இந்திய விடுதலையில் இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி மிகத் தீவிரம் செலுத்தியதும் நாம் அறிய வேண்டிய ஒன்று.
Saturday, 25 January 2025
மகாத்மா காந்தியடிகள் அறிவித்த சுதந்திர தினம் ஜனவரி 26
இந்தியா சுதந்திரம் அடைந்து அதன்பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே குடியரசாக இந்தியா மலர்ந்தது என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் ஜனவரி 26 என்ற நாளை ஏன் நேரு நேர்ந்தெடுத்தார் என்பதும் இந்த நாளுக்கும் மகாத்மா காந்தியடிகளுக்கும் என்ன தொடர்பு என்பதும் நாம் அறிய வேண்டிய வரலாறு.
இந்தியாவிற்கு சுதந்திரம் 1947 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்றாலும் நம் நாட்டிற்கு என்று தனியாக சட்டங்களும் விதிகளும் இறையாண்மையும் இல்லாமல் பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டங்களையே நாம் கடைப்பிடித்தோம். நம் நாட்டிற்கு என்று தனித்து சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டது . ஆனால் இதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியடிகளால் ஜனவரி 26 இந்தியாவின் சுதந்திர நாளாக மகாத்மா காந்தியடிகளால் அறிவிக்கப்பட்டது. ஆம் 1929 டிசம்பரில், பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தியடிகள் 1930 ஜனவரி 26 அன்று, ஆண்டுதோறும் அந்த நாளை இந்தியாவின் விடுதலை நாளாக அனுசரிக்க நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
அந்த நாள்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்திய விடுதலைக்குப் பின்னர் 1946 டிசம்பர் மாதம் 12 ஆம் நாள் இந்தியாவின் நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு வரைவை சமர்ப்பித்தது.
இந்திய அரசியலமைப்பு வரைவு , 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்களில் எழுதி முடிக்கப்பட்டது. உலகின் 60 நாடுகளின் அரசியல் அமைப்புகளைக் கொண்டு இந்தியாவின் அரசியலைப்பு வரைவு உருவாக்கப்பட்டது. ஜனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாடவும் இந்தியாவின் சுதந்திர நாளாக மகாத்மா அறிவித்த நாளான ஜனவரி 26 ல் குடியரசாகக் கொண்டாடப்பட வேண்டும் எனவும் நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.
ஜனவரி 26, 1950 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் நமது நாட்டின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். புதுதில்லியில் உள்ள இர்வின் ஆம்பிதியேட்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தேசியக் கொடியை ஏற்றினார்.
1950 முதல் மகாத்மா காந்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனவரி 26 ல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.