Sunday, 22 June 2025

பொ.சங்கரின் - இந்தியாவில் மவுண்ட் பேட்டன்

 

சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியமான பிரிட்டீஷ் அரசு  , தனது ஆட்சிப்பரப்பில் பல நாடுகளிலும் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தது. பிரிட்டீஷ் அரசாங்கம் தமது நிலப்பரப்பையும் செல்வங்களையும் தக்க வைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. 

இந்தியாவில் ஆட்சி அமைப்பைத் தக்க வைக்க பலமுனை ஏற்பாடுகளைப் பிரிட்டீஸ் அரசு செய்தாலும் நாளுக்கு நாள் புதிய போராட்டங்களை இந்தியா முன்னெடுத்தது. இந்த நிலையில் இங்கிலாந்து தேர்ந்தெடுத்த நபர் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன். இந்திய சுதந்திரத்திற்கான பாதையை வகுத்தவர்களில் மவுண்ட் பேட்டன் முக முக்கிய மனிதராக அறியப்பட வேண்டியவராகத் திகழ்ந்த பாதையில் நாமும் கொஞ்சம் பயணிப்போம்.


 ஜார்ஜ் மவுண்ட் பேட்டன் இந்தியாவிற்கு எப்படி வந்தார்? இந்தியாவின் அதிகார மாற்றத்தில் இவரின் பங்களிப்பு என்ன? இந்தியாவின் வைசிராயாக இருந்த வேவல் ஏன் மாற்றப்பட்டார்? இங்கிலாந்து பிரதமர் அட்லி மவுண்ட் பேட்டனை ஏன் தேர்வு செய்தார்? மவுண்ட் பேட்டன் திட்டம் என்றால் என்ன? என்ற பல  கேள்விகளுக்குப் பதிலை வரலாற்றின் பக்கங்களில்  , மவுண்ட் பேட்டன் வரலாற்றில்,  இந்திய வரலாற்றில் இருந்து காண்போம்.  


      பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900-ம் ஆண்டு ஜூன் 25-ல் இங்கிலாந்தில் வின்ஸ்டர் எனும் இடத்தில் பிறந்தார். 

இங்கிலாந்து இராணி எலிசபெத்தின் உறவினரான இவரின் முழுப்பெயர் லூயிஸ் பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் மவுண்ட்பேட்டன்.

மவுண்ட்பேட்டன் என்பது குடும்பப் பெயர். இவரின் தந்தை லூயி இளவரசர் ஆஸ்திரியாவில் பிறந்தமையால் முதல் உலகப்போருக்குப்பின் இவரது குடும்பம் பாட்டன்பர்க் என்பதற்குப் பதிலாக மவுண்ட்பேட்டன் என மாற்றிக் கொண்டது. முதல் பத்து வருடங்கள் வீட்டில் கல்வி பயின்றார்.

மவுண்ட்பேட்டன்ஆஸ்போர்ன் மற்றும் டார்ட்மவுத் ராயல் கடற்படைக் கல்லூரியில் பயின்றார்.  1916 ஆம் ஆண்டு தமது விருப்பத்தின் படி பிரிட்டிஷ் கப்பற்படையில் அதிகாரியாக முதல் உலகப்போரில் பங்கேற்றார். 

செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மவுண்ட்பேட்டன் நேரிடையாக முதல் உலகப்போரில் பங்கேற்றார். போரும் கடலும் படிப்பும் என மூன்று முனைகளிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். கேம்பிரிட்ஜ் கிரைஸ்ட் கல்லூரியில் பொறியியல் படிப்பையும் உரிய நாளில் பயின்று நிறைவு செய்தார். 

இங்கிலாந்து அரச குடும்பத்தின் நெருங்கிய உறவு முறையாக இருந்தமையால் மவுண்ட் பேட்டனைத் தேடி பல பதவிக்களும் வாய்ப்புகளும் வரிசை கட்டி நின்றன. 


Wednesday, 4 June 2025

The rise and fall of Soviet Union -சோவியத் இரஷ்யா உருவாகி உடைக்கப்பட்ட வரலாறு 1917 -1991

 






  ரஷ்யாவின் ஜார் ஆட்சி 1917 ல் கவிழ்க்கப்பட்டது. ஜார் மன்னராட்சி என்பது ரஷ்யாவில் 16 ஆம் நூற்றாண்டு முதல் 1917 வரை நடந்த முடியாட்சி அரசாட்சி ஆகும். 1917 க்குப் பிறகு  ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உருவான நான்கு சோசலிச குடியரசுகள் டிசம்பர் 30, 1922 அன்று சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

   ஒரு தீவிர இடதுசாரி  குழுவான போல்ஷிவிக்குகள், ரஷ்யாவின் இரண்டாம் ஜார் நிக்கோலஸைத் தூக்கியெறிந்து, பல நூற்றாண்டுகளாக முடியாட்சி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர். முன்னாள் ரஷ்யப் பேரரசின் பிரதேசங்களைக் கைப்பற்றிய போல்ஷிவிக்குகள் ஒரு சமூக அரசை நிறுவினர்.

அதைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரில், போல்ஷிவிக்குகள் போராடி, பழைய ஜாரிச ஆட்சியில் எஞ்சியிருந்த அனைத்தையும் முற்றிலுமாக ஒழித்தனர்.  1922 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ​​ஜார்ஜியா, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே கையெழுத்தான ஒரு ஒப்பந்தம் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கியது. சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைவர் விளாடிமிர் லெனின் ஆவார்.

<div class="paragraphs"><p>லெனின்</p></div> 


சோவியத் ஒன்றியத்தின் முதல் தலைமையாக, தலைவராகத் திகழ்ந்த லெனின் 1924 இல்  இறந்த பிறகு, ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியனின் தலைவரானார்.  இலட்சக்கணக்கான தனது நாட்டு மக்களை தொழில் துறை மேம்பாட்டில் ஈடுபடுத்தினார். லெனின் உருவாக்க விரும்பிய கொள்கைகளை கைவிட்டு , கூட்டுப் பொருளாதாரமயமாக்கல் மூலம் விவசாய உற்பத்தியைத் தொழில்மயமாக்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தும் தொடர்ச்சியான கொள்கைகளை உருவாக்க ஸ்டாலின் முயன்றார்.


  சோவியத் பகுதியில் விவசாயத் துறையின் கூட்டுப் பண்ணைமயமாக்கலை அமல்படுத்திட ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கினார்.  விவசாயிகள் தங்கள் தனிப்பட்ட நிலங்களையும் கால்நடைகளையும் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  மேலும் கூட்டுப் பண்ணைகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடுமையான பொருளாதாரச் செழிப்பை இழந்திருந்தாலும் சோவியத் உலகின் மிக முக்கியமான நாடாகத் திகழ்ந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பனிப்போர்களால் இரஷ்யா பாதிப்பை அடைந்தது.  இதனால் ஸ்டாலின் செல்வாக்கையும் சொல்வாக்கையும் குறைக்க பல்வேறு மறைமுக நடவடிக்கைகளை அந்நாடுகள்  எடுத்து வந்தன. பல நடவடிக்கைளை எடுத்தாலும் சோவியத் வளர்ச்சி பிரமாண்டமாகவே இருந்தது. 

 

   உலகம் வியந்த ஒரு செயலை சோவியத்  1957ஆம் ஆண்டு முதன்முதலாக நிகழ்த்தியது. 1957  அக்டோபர் 4 ஆம் தேதி ஸ்புட்னிக் 1 ஐ சோவியத்  ஏவியபோது உலக நாடுகள் மிரண்டு போயின. 

       சோவியத்தின் விண்வெளி முயற்சிக்குப் பதிலடி தர அமெரிக்கா அடுத்தடுத்த விண்வெளி முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டது. விண்வெளி , தொழில் போன்ற பல நடவடிக்கைகள் காரணமாக சோவியத் பொருளாதார ரீதியாக கடுமையான பல சவால்களை எதிர்கொண்டது. 

1980களில்  அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் விலைகளைக் மிகக் குறைந்த அளவிற்குக் கொண்டு வந்து சோவியத் பொருளாதாரத்தை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தியபோது சோவியத் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 

சோவியத் ஒன்றியத்தைக் கலைக்க அமெரிக்கா பல நேரடி மறைமுகத் தாக்குதல்களைத் தொடர்ந்து செய்து வந்தது. 

    கோர்பச்சேவ், டிசம்பர் 25, 1991 அன்று சோவியத் ஒன்றியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி சோவியத் ரஷ்யா 15 நாடுகளாகப் பிரிந்தது. அதன்படி ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ​​ஜார்ஜியா, ஆர்மேனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், லாட்வியா, லித்துவேனியா, மால்டோவா, எஸ்டோனியா என பதினைந்து நாடுகளாகப் பிரிவதாக ஒவ்வொரு நாடுகளும் விடுதலை அறிவிப்பை வெளியிட்டன.

 உலகத்தை ஒரு குடைக்குள் கொண்டு வர போராடிய சோவியத் இரஷ்யா,  சிதறி பொருளாதாரக் காற்றால் பிய்த்து வீசப்பட்டன. அமெரிக்காவின் கனவு நிறைவேறியது. 1924 முதல் 1991 வரை உலகம் சோவியத் என்ற கட்டமைப்பைக் கண்டு சற்று மிரண்டது என்பது அறிய வேண்டிய வரலாறு . 

அறிய வேண்டிய பார்க்க வேண்டிய சில படங்கள்



    சோவியத் யூனியன், உலகின் ஆறில் ஒரு பங்கு பரப்பளவைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நாடாகும். இது சுமார் 22,402,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு விளங்கியது என்பது நாம் அறிய வேண்டிய வரலாறு. 


Sunday, 25 May 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் 11. அரச மரம் ,ஆலமரம் , வேப்ப மரம்

அரசமரம்
     நல்லியம் பாளையம் கிராமம் ஐந்திணை அமைப்பில் மருத நிலம் என்னும் தகவமைப்பில் அமைந்துள்ளது. ஊரின் தெற்குப் பக்கத்தில் வாய்க்காலை ஒட்டி பெரிய அரசமரம் ஒன்று அமைந்திருக்கும்.
எங்கள் ஊர் பெரியவர்களை நான் கேட்டிருக்கிறேன். இந்த மரம் எத்தனை ஆண்டுகளாய் உள்ளது என்று. 
     நல்லியம்பாளையம் கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த போதே இந்த மரம் இது போலவே தான் உள்ளது என்று கூறுவார்கள். 

வாய்க்காலுக்கு தெற்கு பக்கம் உள்ள காட்டில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிவிட்டு மதிய வெயிலில் நாங்கள் வாய்க்காலைத் தாண்டி வரும்போது எங்களை அறியாமல் நாங்கள் அண்ணாந்து பார்க்கும் அரசமரம் எங்களின் களைப்பைப் போக்கும் போதி மரமாக இருக்கும்.
 அதன் திண்ணையில் நாங்கள் அமர்ந்து கொள்வோம். காற்று சித்திரையிலும் சிலு சிலு என்று எங்கள் மீது வீசும். மகிழ்ந்து அரச மரத்தடியில் அமர்ந்திருப்போம்.

 எங்கள் அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை வீற்றிருக்கும். போகும்போதும் வரும்போதும் நாங்கள் எங்களை அறியாமலேயே வணங்கி விட்டு செல்வோம். 

அரச மரத்தை ஒட்டி ஓர் அறை இருக்கும். அந்த அறையில் ஒற்றுமை குழு நண்பர்கள் நற்பணி மன்றம் என்று ஒரு போர்டை பார்த்திருப்போம். 
ஆடு மாடுகளை மேய்த்து விட்டு வருவோர், இரங்கம்பாளையம் சென்று வருவோர், நல்லியம்பாளையம் வழியில் வருவோர் என அனைவரும் அந்த மரத்தடியில் நின்று சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்வார்கள். 

அரச மரத்தை எப்போது கடந்து சென்றாலும் பறவைகளின் கீச்சொலி கேட்டுக் கொண்டே இருக்கும்.
எங்கள் ஊரின் முன்னோர்கள் பார்த்து அரசமரம் இன்று நாங்கள் பார்க்கும் அரசமரம், நாளை அடுத்த தலைமுறை பார்க்கும் அரசமரமாக எப்போதும் கம்பீரமாக உயரமாக வீற்றிருக்கும் அரசமரம் எங்கள் ஊரின் போதிமரம் தான். 

ஆலமரம்

       அரசமரம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சற்று கிழக்கு நோக்கி சென்றால் வாய்க்கால் சற்று வளைவாகச் செல்லும் ஓர் இடம் வரும். அந்த இடத்தில் அரச மரத்திற்கு நிகராக எங்கள் ஊரின் ஆலமரம் வீற்றிருக்கும்.

 கோடையானாலும் குளிரானாலும் நாங்கள் இல்லத்திலிருந்து துணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஆலமரத்தின் அடியில் வளைவில் சலசலவென்று ஓடும் வாய்க்கால் நீரில் குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவோம்.

 ஆலமரத்தின் விழுதுகள் வாய்க்காலை ஒட்டி தவழ்ந்திருக்கும். ஆலமரத்தின் விழுதுகள் நிலத்தை நோக்கி வந்து அதன் தூண்களாய் வளர்ந்திருக்கும்.
 சிறுவயதில் விவரம் புரியாமல் எப்படி மரத்தின் மேலிருந்து மண்ணுக்குள் விழுது செல்கிறது என்று செந்தில் கவுண்டமணி காமெடி போல ஆராய்வோம். பக்கத்து தோட்டத்தில் பப்பாளி பழம் பறித்து வந்து ஆல மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வோம்.

 இப்போது போல எங்களுக்கு அன்று கைக்கடிகாரம் எதுவும் இல்லை. ஆல மர நிழலில் கோடை வெயிலில் குதூகலமாய் வளைந்து நெளிந்து ஓடும் வாய்க்காலில் குளித்து குளித்து மகிழ்ந்தோம்.

 ஆலமரத்தில் சிறுசிறு பழங்கள் இருப்பதால் அந்த மரத்தில் எப்போதும் பறவைக் கூட்டங்கள் உற்சாகமாய் கத்திக் கொண்டே இருக்கும். வாய்க்காலில் எங்கள் சத்தம் , மரத்தில் பறவைகளின் சத்தம் என எப்போதும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்.

ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அந்த இடத்தை சென்று பார்த்து வர வேண்டும் என்று எண்ணுவேன். ஏனோ செல்ல இயல்வதில்லை. அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது ஆலமர வாய்க்காலுக்கு எனது மகனையும் அழைத்துச் செல்ல வேண்டும். 
வேப்ப மரம் 
            எங்கள் ஊரின் நடுநாயகமாக ஊரின் மத்தியில் ஒரு வேப்பமரம் இருக்கும். 

அந்த வேப்ப மரத்தின் அடியில் பெருமாள் கோயில். 
மரத்தின் அடியில் ஒரு திண்ணை இருக்கும். அந்த வீட்டில் நாங்கள் நெடுங்காலம் குடியிருந்தோம். குளிர்ச்சியான வேப்ப மரத்தின் காற்று எப்போதும் எங்களை புத்துணர்வாக வைத்திருக்கும். 

 ஊரில் உள்ள வயதான தாத்தா பாட்டிகள் வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும் வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் திண்ணை எப்போதும் நிழலாக இருக்கும். எங்கள் ஊரில் சைவம் வைணவம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. ஆனால் எங்கள் ஊர் மக்கள் மாரியம்மனையும் விநாயகரையும் பெருமாள் தெய்வத்தையும் வணங்கி மகிழ்கிறார்கள். வைகுண்ட ஏகாதசி நாள் அன்று அந்த பெருமாள் கோயில் திருவிழா கோலம் கொண்டிருக்கும். பிரசாதம் தருவார்கள். உண்டு மகிழ்ந்து ஓடி விளையாடுவோம். 
 
நல்லியம்பாளையம் கிராமத்தின் அரச மரம் ஆலமரம் வேப்பமரம் மூன்றும் எப்போதும் நீங்காத நினைவுகளை எங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் வைத்திருக்கிறது. காலங்கள் பல மாறினாலும் இன்னும் சில அரச மரங்கள் ஊருக்குள் நடப்பட வேண்டும். 
ஏனெனில் ஊரின் பண்பாட்டை மரங்கள் தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் என என் ஊரின் முன்னோர்கள் கூறிய சொற்கள் இன்றும் நினைவில் வந்து செல்கிறது. 

எங்கள் பால்ய காலம் மரங்களைச் சுற்றி வாய்க்காலைச் சுற்றி கிணறுகளைச் சுற்றி காடு மேடுகளைச் சுற்றி வயல் வரப்புகளைச் சுற்றி வலம் வந்த நினைவுகள் என்றும் நீங்கா நினைவுகள்.