Sunday, 24 March 2024

செளரி - செளரா போராட்டம் - காந்திஜி ஏன் மெளனம் காத்தார்?

 

                                 

    செளரி - செளரா என்பது  உத்திரப்பிரதேசம் அருகில் செளரி மற்றும் செளரா என்னும் இரு சிறு நகரத்தையும் இணைக்கும் ஒரு இரயில் நிலையமாகும். ரெளலட் சட்டம் கடுமையான நடைமுறையில் இந்தியாவில் இருந்த காலத்தில் , தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வருகைபுரிந்த மகாத்மா காந்தியடிகள் , தென்னாப்பிரிக்காவில் நடத்தியது போன்று ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். ஆனால் அன்றைய இந்திய விடுதலைப் போராட்ட மூத்த தலைவர்கள் பலர் இந்த இயக்கத்தை ஆதரிக்கவில்லை. மாறாக இளைஞர் பட்டாளம், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஒத்துழையாமை இயக்கத்தைப் பின்பற்றினர். அரசு பதவிகளில் இருப்போர் பதவி விலகினர். பிரிட்டீஸ் பட்டம் பெற்றவர்கள் பட்டங்களைத் திருப்பி அளித்தனர். உள்நாட்டு வணிகப் பொருட்கள் மட்டுமே பெரும்பான்மையான மக்களால் கேட்டு வாங்கப்பட்டது. இதனால் பிரிட்டீஸ் அரசாங்கம் மகாத்மா மீதும் , மக்கள் மீது கடுமை காட்டத் தொடங்கியது. 


        பிப்ரவரி 4 ,1922 அன்று    செளரி செளரா இரயில் நிலையத்தில் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வழிநடத்தும் தலைமை இல்லாத காரணத்தால் , போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையை அடக்க ஆங்கிலேய அரசு துப்பாக்கிச் சூடு நடத்திட அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட மக்கள் அங்குள்ள காவல் நிலையத்தைத் தாக்க அதில் 22 ஆங்கிலேய காவலர்கள் கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் தொடர்புடைய மக்களை, இயக்கத்தினரை ஆங்கிலேயர்கள் தேடித்தேடி கைது செய்தனர்.பிரிட்டீஸ் நீதிமன்றம் சம்பவத்தில் தொடர்புடைய 172 பேருக்குத் தூக்கு தண்டனை அறிவித்தது. 

               


ஒத்துழையாமை இயக்க நிகழ்வு வன்முறையாக மாறியமைக்குப் பொறுப்பேற்று மகாத்மா காந்தியடிகள் 5 நாட்கள் உண்ணாவிரதமும் , பேசா  விரதமும் இருக்கத் தொடங்கினார். இந்தியா முழுமைக்கும் இந்தப் போராட்டம் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். காந்திஜியின் உண்ணாநோன்பும் , பேசா விரதமும் தொடங்க ,   இந்த நிகழ்வில் தண்டனை பெற்ற பலரும் செய்வதறியாது திகைத்தனர். அந்த நேரத்தில் மானவேந்திரனாத் ராய் என்னும் தலைவர் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க, வேறு வழியின்றி பிரிட்டீஸ் அரசாங்கம் மேல்முறையீடு செய்து 172 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை மாற்றப்பட்டு , 19 பேருக்கு தூக்குதண்டனையும் , மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும், கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் பேச வேண்டிய மகாத்மா காந்தியடிகள் , மூன்று பேரின் கொலையை மட்டும் கண்டித்த நிலையில் மற்றவர்களுக்கு எந்தவிதமான ஆதரவையும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தது நூற்றாண்டுகள் கடந்தும் பலரால் ஏனென்று  இன்றும் பேசப்பட்டு வருகிறது. 

        ஒத்துழையாமை இயக்கத்தை 1920 ல் காந்திஜி தொடங்கியமையால் தான் இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டன என்பதைக் கருத்தில் கொண்டு , தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில், 1922 மார்ச் 10-ல் காந்தி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 1922-ல் இதே நாளில் காந்தி மீதான குற்றச்சாட்டு உண்மை எனக் கூறி அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, காந்தி சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு  1924-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

        தான் பின்பற்றிய நெறிக்கு மாறாக, ஒத்துழையாமை இயக்கம் சென்றமையால் போராட்டத்திற்கும் வன்முறைக்கும் தாமே காரணம் என்று பொறுப்பேற்றுக் கொண்டு காந்திஜி சிறையும் சென்றார். இந்த நிகழ்வில் காந்திஜியின் மெளனமே போராட்டத்தை அமைதியாக்கியது என்று வாதிடுவோரும் உண்டு. பலருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தமைக்கு காந்திஜி குரல் கொடுக்காமையும் அவரது மெளனமும் ஏன் என்பதற்கு விடை அறியப்பட வேண்டும். எம்.என் .சர்மா அவர்கள் எழுதிய cowrie cowra violence- suspension of Movement என்னும் நூல் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூலாகும். 

               

 


Sunday, 17 March 2024

பாலம் கல்யாண சுந்தரம் - அறிய வேண்டிய வரலாறு

                       
                  
ஆறுகளிலும் , வாய்க்கால்களிலும் பாலம் இருந்தால் எளிதாகக் கடக்கலாம். அதுபோல எளிய மனிதர்களின் வாழ்க்கைக்குப் பாலமாக இருந்தவரைப் பற்றி அறிய வேண்டுமெனில் பில் கிளிண்டனிடம் இருந்து தொடங்கினால் இவரை அறிய முடியும். ஆம் , அமெரிக்காவின் அதிபராக பில் கிளிண்டன் இருந்த போது இந்தியா வருகை புரிந்தார். அப்போது அரசு சாராமல் அமெரிக்க அரசு சார்பாக இருவரைச் சந்திக்க விரும்புவதாக அதிபர் மாளிகை இந்திய அரசுக்குத் தகவல் தெரிவித்தது.அவர்களில் ஒருவர் அப்துல்கலாம். மற்றொருவர் பாலம் கல்யாணசுந்தரம். 

         ஐக்கிய நாடுகள் சபை ‘இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ என்று சிறப்பித்தது. உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் சர்வதேச குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார். இத்தனை சிறப்புகளுக்கு உரியவர் நம் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பதை எண்ணுவதில் ஏற்றம் கொள்வோம். யார் இந்த பாலம் கலியாணசுந்தரம்? அறிவோம். 
  திருநெல்வேலியில் மேலகருவேலங்குளம் கிராமத்தில் மிக வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் பிற்காலத்தில் தான் கொண்ட கொள்கையால் தன் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது என்னும் உயரிய சிந்தனையில் உயர்ந்த மனிதராக உயர்வான மனிதராக வாழும் மானுடமாக வாழ்கிறார். 
         திருவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில் நூலகராக 35 ஆண்டுகள் பணியைத் தொடர்ந்தார். தன் பணிக்காலத்தில் தமக்குக் கிடைத்த ஊதியத்தை இல்லாத மக்களுக்கு வாரி வழங்கி ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தினார். தனது மாத சம்பளத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு அளித்துவிட்டு திருநெல்வேலி ஆர்யாஸ் உணவகத்தில் சர்வர் வேலை செய்து தமக்கான செலவினங்களை சரிபார்த்துக்கொண்டார். தமது குடும்பத்தின் சொத்துக்களாக 1970களில் கிடைத்த 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிதியை உடனடியாக ஏழைகளுக்கு , கல்விக்கு , கிராமத்திற்கு தானம் அளித்து நடைபாதை மனிதரானார். பாலம் கல்யாணசுந்தரம் பாதையைப் இன்றைய இளம் தலைமுறையினர் படித்தால் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்திருக்க இயலுமா? என்றுதான் கேள்வி எழுப்புவார்கள்.  
 இந்தியாவில் எங்கு இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டாலும் தனி மனிதராக முயன்று பலரிடம் கையேந்தி அதில் கிடைக்கும் நிதியை குழந்தைகளுக்காக அளித்து ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதராகத் திகழ்ந்தார். சுனாமியில் ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை இழந்த போது தமது பாலம் அமைப்பின் மூலம் நிதி பெற்று எளிய மக்களின் முகவரியாய் , ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்கி கதராடை மகாத்மாவாகவே திகழ்ந்தார். 
      பணிக்காலத்தில் மேடைகளில் நின்று பகட்டு உடைகள் அணிந்து எளிமை பற்றி பேசினால் பொருத்தமாக இருக்காது என்று எண்ணி , மகாத்மா மதுரையில் கதராடை அணியத் துவங்கியது போல இவரும் திருநெல்வேலியில் எளிய கதராடை மனிதராக மாறிப்போனார். இவரால் கல்வி பெற்றவர்கள் தமிழகம் மட்டுமல்ல உலகின் அனைத்துக் கண்டங்களில் , அனைத்து நாடுகளிலும் உள்ளனர் என்பது இவருக்கான முகவரி. ஏழை மக்களின் துயரினை அறிய ஏழு ஆண்டுகள் நடைபாதையில் உறங்கி நடைபாதை மக்களுக்கும் இல்லம் கிடைக்க உறுதுணையாக இருந்தார். பாலம் கல்யாணசுந்தரத்தின் பணிகளைப் பாராட்டி தமிழக அரசு இல்லம் ஒன்று வழங்கியது. இல்லத்திற்கு எளிய பொருட்கள் வாங்க தொகை இல்லை உதவுங்கள் என்று 30 கோடியை உலகக் குழந்தைகளுக்குத் தானமாக வழங்கியவர் கேட்க இந்தியக் குடியரசுத் தலைவர் முதல் நடிகர்கள் ரஜினிகாந்த் வரை ஒரு ருபாய் வழங்கி உதவினர். அதிலும் தன் தேவைக்கு மேல் தொகை சேர்ந்தவுடன் மீதித் தொகையை சர்வதேச குழந்தைகள் அமைப்புக்கு அளித்து விட்டார். பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களின் பணிகளைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தமது தந்தையாகத் தத்தெடுத்துக் கொண்டார். ரஜினிகாந்த் இல்லத்தின் பாதுகாப்பை மீறி உதவி கேட்க வருபவர்கள் இவரைச் சந்திக்க முடியாமல் போக , ரஜினிகாந்த் அவர்களின் அன்பைப் பாராட்டிவிட்டு மீண்டும் தமது சமுதாயப் பணிகளை எளிய மக்களுடன் தொடர்ந்தார். பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப் பற்றி திரைப்படம் எடுக்கத் திட்டமிட்ட போது அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராக அமிதாப்பச்சன் இருப்பார் என்று எண்ணி அணுகிய போது , ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி அவருக்கே அளித்துவிட்டு திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார். பாலம் கல்யாணசுந்தரம் உடல் மொழிகள் தமக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக  சில நாட்கள் மாறுவேடத்தில் பாலம் கல்யாணசுந்தரத்துடன் தங்கி இருந்தார் என்பதையும் குறிப்பிடவேண்டும். 
          ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தத்து எடுத்து தம் பாலம் அமைப்பின் மூலம் உதவினார். அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெற இயலாத மாணவர்களை அடையாளம் கண்டு உயர்கல்வி பெற வழிவகுத்தார். 1963 ல் இந்திய சீன யுத்த நிதிக்காக தமது 5 பவுன் தங்க நகையை காமராசரிடம் வழங்கியதிலிருந்து இவரது பயணம் தொடர்கிறது. இன்றும் எளிய மனிதராக , அலைபேசியில் பேசும் மனிதராக , குரலில் உறுதியுடன் கொள்கையில் ஏணியாக , கதராடை மனிதராக வாழ்ந்து வருகிறார். இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதரை நமது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவோம். இந்த நூற்றாண்டின் எளிய மனிதரிடம் நீங்கள் பேசும் வாய்ப்பையாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . 98402 18847 என்ற எண்ணில் அழைத்து அவரை நாம் பணிவுடன் வணங்கினால் இந்த உலகம் வளரும். இவரின் சமூகப் பணிகள் தொடர நாமும் அவரது வேண்டுகோளை ஏற்று ஒரு ரூபாய் மட்டும் அனுப்பி அவரின் அன்பில் கரைந்திடுவோம். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தன்னம்பிக்கையாளர், பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களை வழிகாட்டியாய் கொண்டு சமுதாயப் பணிகளில் இணைத்து இந்த உலகம் ஏற்றம் பெற ஏணியாய் திகழ்வோம்.