Tuesday, 17 March 2026

கதை சொல்லிகளின் காலம் - நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -22

 

                                        


வேச காலத்தில அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர முடில. ஒரே வேக்காடா இருக்கு…சீக்கடி வேற  … இந்தச் சொற்தொடர்கள் எங்கள் நல்லியம் பாளையம் கிராமத்தில் பங்குனியில் கேட்கத் தொடங்கி விடும். 

எட்டித் தொடும் அளவில் கிணறுகளில் நீர் இருந்த காலம் மாறி எட்டிப் பார்க்கும் ஆழம் வரை நீரின் உயரம் பங்குனியில் கீழே சென்று விடும். 

பங்குனில ஒரு ஒலவு மழை கூட இருக்காது. இட்டேறில நடக்கறப்ப வேச காத்து மூஞ்சிலயே வீசும். பண்டம் பாடிலா மேயாம மர நிழலில் படுத்துக்கொள்ளும். 

25 வருசங்களுக்கு முன்பு நல்லியம்பாளையம் கிராமத்தில் இருந்து இரட்டபாளிவலசு செல்லும் பாதை மரங்கள் அடர்ந்த சிறு பாதையாக இருக்கும். மாட்டுவண்டிப்பாதையாக மட்டுமே இருந்த இந்தப்பாதை இன்று சாலை வசதியோடு வாகனங்கள் செல்லும் பாதையாக மாறிவிட்டது. அந்தப்பாதையில் தொட்டியங்காடு, ஷாப்காரர் காடு தோட்டங்கள் இருக்கும். 

யாராச்சும் ஒரு ஆத்தாவோ அப்புச்சியோ இரங்கம் பாளையம் ரேசங்கடை திறந்திருக்கா என்று தெற்குப் பக்கம் அரச மரத்துட்ட நின்னு விசாரிச்சு ,  உறுதி சொன்னா நடையா நடந்து போய் பொருள்  வாங்கி வருவாங்க. 

சின்ன மணியக்கார கவுண்டர் எங்கள் ஊரின் அழகான கதை சொல்லி. கடையில் சங்கு பீடியை வாங்கி காற்று லாவகமாக வீசிக் கொண்டிருக்கும் போது நெருப்புப் பொட்டில அழகாக சீவி தீயை வரவைத்து ,கைக்குள் குவித்து நெருப்பு அணையாமல் பீடியில் நெருப்பு வைக்கும் வித்தையை நின்று இரசிக்கும் சிறுவர்கள் நாங்கள். கோயிலுக்குப் போனா வெளக்குக்கு திரி வச்சி அணையாம விளக்கேத்த நாங்க படாதபாடு படுவோம். ஆனால் எங்க அப்புச்சிங்க அழகாக கைக்குள் நெருப்பைக் குவித்து பற்றவைக்கும் வித்தை கண்டு வியப்போம். 

கோயில் திண்ணைல ஒட்காந்து ரேசங்கடைப் பற்றிய கதையை அழகாக நயமுடன் சொல்வார். நான் அவரிடம் இருந்துதான் முதன்முதலாக பர்மா என்று நாடு பற்றி அறிந்தேன். இந்தியா ல அரிசிப் பஞ்சம் வந்தப்ப பர்மா  அரிசி வாங்கி நம் ரேசன் கடைகள் வாயிலாக இரங்கூன் அரிசி கொண்டு வந்து தருவாங்க என்று சொல்வார். மேலும் தாது வருசப் பஞ்சம் என்ற  சொல்லாட்சியும் அவரிடம் இருந்துதான் முதன்முதலாக அறிந்தேன். அதன்பிறகு 

இந்தியாவுல பஞ்ச காலத்தில் புதிதாக கண்டறிப்பட்ட நெல் இரகம் இரங்கூன் அரிசி  இரகம் னு அந்தக் கதையை அழகாக எடுத்துச் சொல்வார். 

நல்லியம்பாளையம் மாந்தர்களில் சின்ன மணியக்கார ஐயன் கதைகள் கேட்க கேட்க வியப்பை வர வைக்கும். அங்கராக்கு (சட்டை) அணியாமல் மேலில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு தான் எப்போதும் செல்வார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்துல ஊருக்குக் கட்டப்பட்ட பாலம் , கட்டப்பட்ட விதம் பற்றி சுவை குன்றாமல் எடுத்துச் சொல்வார். அப்போதெல்லாம் எங்களுக்கு எல்லா சனி ஞாயிறும் விடுமுறை. அதனால் மாரியம்மன் கோயில் திடலில் கதைகளும் , தாயம் ஆட்டமும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். 

 

எப்போதாச்சும் வேட்டுவங்காட்டு சின்னக் கவுண்டர்  கோயில் அருகே வரும்போது , ஏது திடீர்னு தெக்கால பக்கம்லா வாறீங்க என்று கதைகள் நீளும். எனக்கு  சிறுவயதில் மஞ்சக் காமாலை வந்து விட்டது என்று எல்லோரும் சொன்னப்ப, வேட்டுவங்காட்டு சின்ன கவுண்டரும் மணியக்கார கவுண்டரும்  சோற்றுக் கற்றாழையை அரைத்து நீராக்கி மிரட்டி மிரட்டி குடிக்க வைத்தனர். இப்படி தினமும் சின்ன மணியக்கார ஐயனும் , வேட்டுவக்காட்டு சின்ன ஐயனும் எனக்கு கற்றாழை நீரை வாயில் ஊற்றி என் நோயைக் குணப்படுத்திய மருத்துவர்கள். நாங்க அன்றைய காலத்தில் ஊர்ப் பெரியவர்களைக் கண்டாலே மரியாதையுடன் நின்று கடந்து செல்வோம். வேட்வங் காட்டு பெரிய கவுண்டர் எப்போதும் ஒரு கைத்தடியோடு வலம் வருவார். 

பெரிய மணியக்கார கவுண்டர் , உயரமாக நெற்றி நிறைய திருநீறு அணிந்து , வீட்டில் இருந்து நடந்து கோயில் அருகே வந்து நின்று பருவ மழை தொடங்கி  , வாய்க்காலில் நீர் விடும் காலம் என எல்லாவற்றையும் சொல்வார். எங்கள் ஊரில் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லும் கவுண்டர்களில் பெரிய மணியக்கார கவுண்டர் புதுமையானவர். 

கலைஞர் கருணாநிதி , எம்.ஜி.ஆர்  அரசியல் கதைகளை வியப்புக் குன்றாமல் நகர்த்திச் செல்லும் பாங்கு  அழகானது. ஒவ்வொரு பிரதோச நாளிலும் பெரிய மணியக்கார கவுண்டருடன் ஈரோடு சிவன் கோயில் சென்று வரும் நினைவுகள் இன்றும் கண்முன் நிழலாடுகிறது. எங்கள் ஊரின் கதை சொல்லிகளால் நாங்கள் கற்றது ஏராளம். 


நல்லியம்பாளையம் ஊர்  மாந்தர்கள் மருத்துவமனைக்குச் சென்று எங்கள் வயதில் பார்த்ததே இல்லை. இன்றைய காலத்தில் மாதம் ஒரு முறை நாம் மருத்துவமனை செல்லும் நிலையை எண்ணி அன்றைய நிலையை எண்ணாமல் இருக்க இயலவில்லை. காலம் பல மாந்தர்களை நமக்குத் தருகின்றது. அந்தக் கதை சொல்லிகள் நம்மை, நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பண்பாட்டு மாந்தர்கள். 


சினிமாவும் அரசியலும் அதிகம் கலவாமல் நல்லியம்பாளையம் கிராமம் அழகிய ஊராக இருந்தது. இரயிலோடும் ஓசை கேட்கும். நீரோடும் ஓசை கேட்கும். மண்ணின் மைந்தர்களின் கதை   கேட்கும். 








1 comment:

Anonymous said...

😂மீண்டும் ஒரு கோபல்லபுரத்து கதையை படித்த நினைவாக இருக்கிறது. அடுத்த கி.வ.நாரயணன் நீங்கள் தான் கரிசல் கதை அற்புதம்