Saturday, 7 February 2026

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -20 ஊரும் உறவும்


நல்லியம் பாளையம் கிராமம் பல மனிதர்களின் உழைப்பால் உணர்வால் உயிரோட்டமான கிராமமாக இருந்து வருகின்றது. தென்னை மரங்களும் வயலும் சூழ்ந்த வளமான கிராமம் எங்கள் நல்லியம் பாளையம். ஊரின் அடையாளங்கள் பல இருந்தாலும் இப்போதும் எப்போதும் ஊரின் அடையாளமாக இருப்பது உறவாகத் திகழும் மக்கள் தான். 

நல்லியம்பாளையம் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.. அந்தக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் கவுண்டர்கள். அவர்களில் சாத்தந்தை கூட்டம் , கண்ணன் கூட்டம் , காடை கூட்டம், முத்தங் கூட்டம் , தூரன் கூட்டம் , மணியங் கூட்டம், செல்லன் கூட்டம், ஆந்தை கூட்டம், அந்துவன் கூட்டம் , ஓதாளன் கூட்டம்  இன்னும் பிற கூட்டங்கள் கூட்டமாய் நின்று ஊரின் பெருமை காத்து வந்தனர். 

நல்லியம்பாளையம் கிராமத்தின் காவல் தெய்வம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பணிகளில் எப்போதும் முன் நிற்பர். ஊரின் பெருமைக்குச் சிறப்பு சேர்க்க ஊர்க் கவுண்டர்கள் தங்களை எப்போதும் முன் நிறுத்தி பெருமை கொள்வர். 

கொங்கு வேளாள கவுண்டர்களின் கூட்டம் என்பது சோழர் காகாலத்திலிருந்தே நிலம் மற்றும் உறவுமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவான குலப்பிரிவுகள் ஆகும். திருமண உறவு முறையை முறைப்படுத்தவும், ரத்த உறவு அடையாளத்தை நிலைநிறுத்தவும், நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் (குலக்குழுக்கள்) பங்காளி முறைப்படி பிரிக்கப்பட்டுள்ளன.

எங்கள் ஊர் நல்லியம்பாளையத்தார்கள் சொல் ஒன்று வெட்டு ஒன்று என்றே இருப்பார்கள்’. ‘தங்கள் குடும்பத்திற்கோ, ஊருக்கோ, குலத்திற்கோ வரும் இழிவைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தங்களின் முன்னோர்கள் வழியில் ஊரைக் காப்பதில் முன்நிற்பர். 

நல்லியம்பாளையத்தின் முன்னோர்கள் காடு திருத்தி நாடு நலம் பெற பெரும் வேளாண்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். கொங்கு நாடு 24 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஊருக்கு ஒரு கொத்துக்காரர் மூலம் ஊர் வழிநடத்தப்படும் மரபு வழிவழியாக இருந்து வருகின்றது. எம் ஊரிலும் அந்த மரபு இருந்து வருகின்றது. 


நல்லியம்பாளையம் கிராமத்தில் கவுண்டர்கள் ஆரம்ப காலங்களில் வேளாண் தொழிலில் சிறந்து விளங்கினர். அடுத்தடுத்த தலைமுறைகளில் வந்தவர்கள் நகரம் நோக்கிச் சென்று பல்வேறு தொழில் முனைவோராக உருவாகி நல்லியம்பாளையத்திற்குப் பெருமை சேர்த்தனர்.நல்லியம்பாளையம் கவுண்டர்கள்  மிகக் கடினமாக உழைக்கக் கூடியவர்கள்’. 

    ஊர்க்கவுண்டர்களில் ஒருவரான சூரம்பட்டியார் ஐயனின் மகன் குழந்தைசாமி அண்ணன் அவர்கள் நகரம் சென்று தொழில்துறையில் சிறந்து விளங்கினார். பல்வேறு முயற்சிகளில் அடுத்தடுத்த நிலைக்குச் சென்ற திரு. குழந்தைசாமி அண்ணன் அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது. அவரைச் சிறப்பிக்கும் வகையில் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக ஊரின் தெற்குப் புறத்தில் அரச மரத்தின் அருகில் மேடை அமைத்து ஊர் மக்கள் அனைவரின் சார்பாக அவருக்குப் பாராட்டு விழா எடுத்தனர். அப்போதெல்லாம் நாங்கள் சிறுவயது பாலகனாய் விளையாடிக்கொண்டு இருப்போம். 

திரு.குழந்தைசாமி அண்ணன் அவர்கள் தனது உரையில் , இந்த விருது எனது நல்லியம்பாளையம் கிராமத்திற்குச் சேர்ந்தது என்று பெருமைபட கூறினார்கள். 

ஊரின் பெரும்பாலான காணியாளர்கள் விவசாயம் போக மாற்றுத் தொழிலாக நகரம் சார்ந்து பல்வேறு தொழில் முனைவோர்களாகத் திகழ்ந்தனர். எங்கள் நல்லியம்பாளையம் கிராமத்திற்கு ‘நகைக்கடைக்காரர் ஊர்’ என்ற பெயர் இன்றும் உண்டு. ஊரில் பெரும்பாலானவர்கள் நகைக்கடைத் தொழிலில் சிறந்து விளங்கினர். 

ஊர் நகரமயமாகத் தொடங்கியதால் ஊரின் பெரும்பாலான வேளாண் நிலங்கள் வீடுகளாக மாறத்தொடங்கினாலும் ஊரின் பெருமை என்றும் மாறாமல் இருப்பதற்கு ஊர்க்கவுண்டர்களின் அயராத உழைப்பும் ஊர்க்கட்டுப்பாடும் காரணமாய் இருந்து வருகின்றது. 

               பதினெட்டு வகையான சமூகங்களை  ஆதரித்து சமய விழா, சமுதாய விழா, குடும்ப விழாக்களில் அனைவரையும் பங்கு கொள்ளச் செய்து தாராளமாக அவர்கட்குத் தானியம் வழங்கி ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி’ பொதுவுடைமைச் சமுதாய வாழ்வை நடைமுறைப் படுத்தியது கொங்குச் சமுதாயம். பொதுவாக அவர்களைப் ‘பணி மக்கள்’ என்று மக்கள் உரிமையோடு அழைத்தது கொங்குச் சமுதாயம்.

நல்லியம்பாளையம் கிராமத்தில் ஊர்க்கவுண்டர்கள் போக ஆசாரியார்கள் சமூகம் ,திருக்கோயில் பணி புரியும் பண்டார சமூகம் , செட்டியார் சமூகமாக எங்கள் குடும்பம் ஆகியோர்  வசித்து வந்தனர். 

       ஊர்க்கவுண்டர்களின் இல்லத்தின் நிகழ்வுகளில் பண்டார சமூகத்தினர் முன்நின்று பல பணிகளைச் செய்வர். ஊரில் காவல் தெய்வமாக இருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூஜை பணிகளில் அவர்கள் முன்நிற்பர். ஊரில் பூச்சாட்டு தொடங்குவதில் இருந்து கம்பம் எடுத்து வந்து கம்பத்தை ஊரின் பொதுக்கிணற்றில் விடுவதுவரை ஒவ்வொரு கொங்கு கிராமத்திலும் பண்டார சமூகத்தினரின் பணி முக்கியமானது. 

ஊரில் ஊர்க் கவிண்டர் சமூகத்தில் அவர்களின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபெறும் முக்கிய சமூகமாக குடிநாவிதர் சமூகம் இருக்கும். கொங்கு கிராமங்களில் பண்டாரத்தினர் மற்றும் குடிநாவிதர் இன்றி கிராமங்கள் கிடையாது என்ற அமைப்பு முறையை கொங்கு வேளாள முன்னோர்கள் உருவாக்கித் தந்தனர்.


நான் சிறுவனாக இருந்தபோது ஊர்க்கவுண்டர் வீட்டுத் திருமணங்களில் அழைப்பிதழை கவுண்டர் வீட்டுச் சமூகம் வந்து கொடுப்பதற்கு முன்பாக , குடிநாவிதர் சமூகம் ஒவ்வொரு இல்லம் சென்றும் வழங்கும் முறையை உருவாக்கி வைத்திருந்தனர். 

கொங்கு வேளாளக் கவுண்டர்களின் இல்ல நிகழ்வுகளில் , ஆண் , பெண் ஆகியோரின் உறவு முறைகளை விசாரித்து , சொத்து பத்து எவ்வளவு ? வெளியூர் மாப்பிள்ளையின் நடத்தை ஆகியவற்றை விசாரித்து வந்து சொல்வதில் நாவிதர் சமூகத்திற்கு அந்த உரிமையை வேளாளக் கவுண்டர்கள் அளித்திருந்தனர். 

கவுண்டர்களின் திருமண மேடையில் மங்கல வாழ்த்துப் பாடி குலதெய்வ வழிபாடு வரை நாவிதர் சமூகம் முன்நிற்பர். கொங்கு நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் நாவிதர் சமூகம் இன்ப , துன்ப நிகழ்வுகளில் முன்நிற்பர். ஏதேனும் இல்லங்களில் துக்க காரியம் நடந்தால் அதனைக் கொங்கு கிராமங்களில் பெரிய காரியம் என்று சொல்வர். அப்படி நடந்தால் முதன்மையாக நாவிதர் சமூகத்திற்குத்தான் முதன்மையாகச் சொல்லி அனுப்புவர். பெரிய காரியம் நடந்தவுடன் இறந்தவரின் உடலை ஆடைபோற்றி , தலைமாட்டில் சூடம் ஊதுபத்தி ஏத்தி பன்னீர் தெளித்த பிறகே அழும் வழக்கம் கொங்குக் காணியாளர்கள் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.  

      இன்று மின்மயானங்கள்  வந்தாலும் அந்த முறைகளிலேயே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பணிகளில் நாவிதர் சமூகத்தின் பணி முக்கியமானதாக இருந்துவருகின்றது. 

நல்லியம்பாளையம் போன்ற கொங்குக் கிராமங்கள் இன்றும் உயிர்ப்போடு இருப்பதற்கு முன்னோர்கள் உருவாக்கித் தந்த நடைமுறைகளே சாட்சியாய் இருந்து வருகின்றது.  

ஊருக்குக் ‘கொத்துக்காரர்’ நாட்டுக்கு ‘பட்டக்காரர், சடங்குக்கு ‘அருமைக்காரர்’ என்று நியமித்து, நீதிநெறிக்கு கட்டுப்பட்டு வாழும் சமுதாயம் கொங்குச் சமுதாயம்.  எங்கள் ஊர் நல்லியம்பாளையத்திலும் ஊர்க் கொத்துக்காரர் ஊரின் முக்கியமானவராக முதன்மையானவராகக் கருதப்படும் மரபு இன்று பேணப்பட்டு வருகின்றது. ஊர்க் கோயில் திருவிழா தொடங்கி ஊரின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று வழிநடத்தும் மரபாக , கொத்துக்காரர் மரபு கொங்கு கிராமங்களில் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. 

நல்லியம்பாளையம் கதை கொங்கு கிராமங்களின் கதை. நல்லியம்பாளையம் முன்னோர்கள் ஊர் எப்படி இருக்க வேண்டும் என்ற மரபை உருவாக்கி அதை அடுத்த தலைமுறையிடம்  ஒப்படைத்துள்ளனர். 

ஊரின் பெருமை என்பது மக்களால் உருவாக்கப்படுவது. எங்கள் ஊர் பெருமைமிகு ஊர் என்பதில் கர்வம் கொள்வோம். 





No comments: