சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியமான பிரிட்டீஷ் அரசு , தனது ஆட்சிப்பரப்பில் பல நாடுகளிலும் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தது. பிரிட்டீஷ் அரசாங்கம் தமது நிலப்பரப்பையும் செல்வங்களையும் தக்க வைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இந்தியாவில் ஆட்சி அமைப்பைத் தக்க வைக்க பலமுனை ஏற்பாடுகளைப் பிரிட்டீஸ் அரசு செய்தாலும் நாளுக்கு நாள் புதிய போராட்டங்களை இந்தியா முன்னெடுத்தது. இந்த நிலையில் இங்கிலாந்து தேர்ந்தெடுத்த நபர் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன். இந்திய சுதந்திரத்திற்கான பாதையை வகுத்தவர்களில் மவுண்ட் பேட்டன் முக முக்கிய மனிதராக அறியப்பட வேண்டியவராகத் திகழ்ந்த பாதையில் நாமும் கொஞ்சம் பயணிப்போம்.
ஜார்ஜ் மவுண்ட் பேட்டன் இந்தியாவிற்கு எப்படி வந்தார்? இந்தியாவின் அதிகார மாற்றத்தில் இவரின் பங்களிப்பு என்ன? இந்தியாவின் வைசிராயாக இருந்த வேவல் ஏன் மாற்றப்பட்டார்? இங்கிலாந்து பிரதமர் அட்லி மவுண்ட் பேட்டனை ஏன் தேர்வு செய்தார்? மவுண்ட் பேட்டன் திட்டம் என்றால் என்ன? என்ற பல கேள்விகளுக்குப் பதிலை வரலாற்றின் பக்கங்களில் , மவுண்ட் பேட்டன் வரலாற்றில், இந்திய வரலாற்றில் இருந்து காண்போம்.
பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் 1900-ம் ஆண்டு ஜூன் 25-ல் இங்கிலாந்தில் வின்ஸ்டர் எனும் இடத்தில் பிறந்தார்.
இங்கிலாந்து இராணி எலிசபெத்தின் உறவினரான இவரின் முழுப்பெயர் லூயிஸ் பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் மவுண்ட்பேட்டன்.
மவுண்ட்பேட்டன் என்பது குடும்பப் பெயர். இவரின் தந்தை லூயி இளவரசர் ஆஸ்திரியாவில் பிறந்தமையால் முதல் உலகப்போருக்குப்பின் இவரது குடும்பம் பாட்டன்பர்க் என்பதற்குப் பதிலாக மவுண்ட்பேட்டன் என மாற்றிக் கொண்டது. முதல் பத்து வருடங்கள் வீட்டில் கல்வி பயின்றார்.
மவுண்ட்பேட்டன்ஆஸ்போர்ன் மற்றும் டார்ட்மவுத் ராயல் கடற்படைக் கல்லூரியில் பயின்றார். 1916 ஆம் ஆண்டு தமது விருப்பத்தின் படி பிரிட்டிஷ் கப்பற்படையில் அதிகாரியாக முதல் உலகப்போரில் பங்கேற்றார்.
செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மவுண்ட்பேட்டன் நேரிடையாக முதல் உலகப்போரில் பங்கேற்றார். போரும் கடலும் படிப்பும் என மூன்று முனைகளிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். கேம்பிரிட்ஜ் கிரைஸ்ட் கல்லூரியில் பொறியியல் படிப்பையும் உரிய நாளில் பயின்று நிறைவு செய்தார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் நெருங்கிய உறவு முறையாக இருந்தமையால் மவுண்ட் பேட்டனைத் தேடி பல பதவிக்களும் வாய்ப்புகளும் வரிசை கட்டி நின்றன.