Sunday, 25 May 2025

நல்லியம் பாளையம் கதை பேசுவோம் 11. அரச மரம் ,ஆலமரம் , வேப்ப மரம்

அரசமரம்
     நல்லியம் பாளையம் கிராமம் ஐந்திணை அமைப்பில் மருத நிலம் என்னும் தகவமைப்பில் அமைந்துள்ளது. ஊரின் தெற்குப் பக்கத்தில் வாய்க்காலை ஒட்டி பெரிய அரசமரம் ஒன்று அமைந்திருக்கும்.
எங்கள் ஊர் பெரியவர்களை நான் கேட்டிருக்கிறேன். இந்த மரம் எத்தனை ஆண்டுகளாய் உள்ளது என்று. 
     நல்லியம்பாளையம் கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த போதே இந்த மரம் இது போலவே தான் உள்ளது என்று கூறுவார்கள். 

வாய்க்காலுக்கு தெற்கு பக்கம் உள்ள காட்டில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிவிட்டு மதிய வெயிலில் நாங்கள் வாய்க்காலைத் தாண்டி வரும்போது எங்களை அறியாமல் நாங்கள் அண்ணாந்து பார்க்கும் அரசமரம் எங்களின் களைப்பைப் போக்கும் போதி மரமாக இருக்கும்.
 அதன் திண்ணையில் நாங்கள் அமர்ந்து கொள்வோம். காற்று சித்திரையிலும் சிலு சிலு என்று எங்கள் மீது வீசும். மகிழ்ந்து அரச மரத்தடியில் அமர்ந்திருப்போம்.

 எங்கள் அரச மரத்தின் அடியில் விநாயகர் சிலை வீற்றிருக்கும். போகும்போதும் வரும்போதும் நாங்கள் எங்களை அறியாமலேயே வணங்கி விட்டு செல்வோம். 

அரச மரத்தை ஒட்டி ஓர் அறை இருக்கும். அந்த அறையில் ஒற்றுமை குழு நண்பர்கள் நற்பணி மன்றம் என்று ஒரு போர்டை பார்த்திருப்போம். 
ஆடு மாடுகளை மேய்த்து விட்டு வருவோர், இரங்கம்பாளையம் சென்று வருவோர், நல்லியம்பாளையம் வழியில் வருவோர் என அனைவரும் அந்த மரத்தடியில் நின்று சற்று நேரம் இளைப்பாறி விட்டு செல்வார்கள். 

அரச மரத்தை எப்போது கடந்து சென்றாலும் பறவைகளின் கீச்சொலி கேட்டுக் கொண்டே இருக்கும்.
எங்கள் ஊரின் முன்னோர்கள் பார்த்து அரசமரம் இன்று நாங்கள் பார்க்கும் அரசமரம், நாளை அடுத்த தலைமுறை பார்க்கும் அரசமரமாக எப்போதும் கம்பீரமாக உயரமாக வீற்றிருக்கும் அரசமரம் எங்கள் ஊரின் போதிமரம் தான். 

ஆலமரம்

       அரசமரம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சற்று கிழக்கு நோக்கி சென்றால் வாய்க்கால் சற்று வளைவாகச் செல்லும் ஓர் இடம் வரும். அந்த இடத்தில் அரச மரத்திற்கு நிகராக எங்கள் ஊரின் ஆலமரம் வீற்றிருக்கும்.

 கோடையானாலும் குளிரானாலும் நாங்கள் இல்லத்திலிருந்து துணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஆலமரத்தின் அடியில் வளைவில் சலசலவென்று ஓடும் வாய்க்கால் நீரில் குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவோம்.

 ஆலமரத்தின் விழுதுகள் வாய்க்காலை ஒட்டி தவழ்ந்திருக்கும். ஆலமரத்தின் விழுதுகள் நிலத்தை நோக்கி வந்து அதன் தூண்களாய் வளர்ந்திருக்கும்.
 சிறுவயதில் விவரம் புரியாமல் எப்படி மரத்தின் மேலிருந்து மண்ணுக்குள் விழுது செல்கிறது என்று செந்தில் கவுண்டமணி காமெடி போல ஆராய்வோம். பக்கத்து தோட்டத்தில் பப்பாளி பழம் பறித்து வந்து ஆல மர நிழலில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வோம்.

 இப்போது போல எங்களுக்கு அன்று கைக்கடிகாரம் எதுவும் இல்லை. ஆல மர நிழலில் கோடை வெயிலில் குதூகலமாய் வளைந்து நெளிந்து ஓடும் வாய்க்காலில் குளித்து குளித்து மகிழ்ந்தோம்.

 ஆலமரத்தில் சிறுசிறு பழங்கள் இருப்பதால் அந்த மரத்தில் எப்போதும் பறவைக் கூட்டங்கள் உற்சாகமாய் கத்திக் கொண்டே இருக்கும். வாய்க்காலில் எங்கள் சத்தம் , மரத்தில் பறவைகளின் சத்தம் என எப்போதும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்.

ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அந்த இடத்தை சென்று பார்த்து வர வேண்டும் என்று எண்ணுவேன். ஏனோ செல்ல இயல்வதில்லை. அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது ஆலமர வாய்க்காலுக்கு எனது மகனையும் அழைத்துச் செல்ல வேண்டும். 
வேப்ப மரம் 
            எங்கள் ஊரின் நடுநாயகமாக ஊரின் மத்தியில் ஒரு வேப்பமரம் இருக்கும். 

அந்த வேப்ப மரத்தின் அடியில் பெருமாள் கோயில். 
மரத்தின் அடியில் ஒரு திண்ணை இருக்கும். அந்த வீட்டில் நாங்கள் நெடுங்காலம் குடியிருந்தோம். குளிர்ச்சியான வேப்ப மரத்தின் காற்று எப்போதும் எங்களை புத்துணர்வாக வைத்திருக்கும். 

 ஊரில் உள்ள வயதான தாத்தா பாட்டிகள் வேப்ப மரத்தின் நிழலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும் வேப்ப மரத்தின் அடியில் இருக்கும் திண்ணை எப்போதும் நிழலாக இருக்கும். எங்கள் ஊரில் சைவம் வைணவம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. ஆனால் எங்கள் ஊர் மக்கள் மாரியம்மனையும் விநாயகரையும் பெருமாள் தெய்வத்தையும் வணங்கி மகிழ்கிறார்கள். வைகுண்ட ஏகாதசி நாள் அன்று அந்த பெருமாள் கோயில் திருவிழா கோலம் கொண்டிருக்கும். பிரசாதம் தருவார்கள். உண்டு மகிழ்ந்து ஓடி விளையாடுவோம். 
 
நல்லியம்பாளையம் கிராமத்தின் அரச மரம் ஆலமரம் வேப்பமரம் மூன்றும் எப்போதும் நீங்காத நினைவுகளை எங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் வைத்திருக்கிறது. காலங்கள் பல மாறினாலும் இன்னும் சில அரச மரங்கள் ஊருக்குள் நடப்பட வேண்டும். 
ஏனெனில் ஊரின் பண்பாட்டை மரங்கள் தான் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் என என் ஊரின் முன்னோர்கள் கூறிய சொற்கள் இன்றும் நினைவில் வந்து செல்கிறது. 

எங்கள் பால்ய காலம் மரங்களைச் சுற்றி வாய்க்காலைச் சுற்றி கிணறுகளைச் சுற்றி காடு மேடுகளைச் சுற்றி வயல் வரப்புகளைச் சுற்றி வலம் வந்த நினைவுகள் என்றும் நீங்கா நினைவுகள்.

No comments: