மிளிர் கல்- நூல் மதிப்பாய்வு

கொங்கு நாட்டின் பகுதிகளில் குறிப்பாக காங்கேயம், கரூர் பகுதிகள்
பிரஸ்யஸ் ஸ்டோன்ஸ் என்றழைக்கப்படும் மாணிக்கம், மரகதம், கோமேதகம் என்ற
ரத்தினக்கற்கள் விளையும் பூமி. வெளிநாட்டு நிறுவனம் ஒன்று
அவ்விளைநிலங்களை ஆக்கிரமித்து கற்கள் இருக்கிறதா என்று ஆராய்ந்து கற்களை
ஏற்றுமதி செய்யத் திட்டமிடுகிறார்கள். இதற்காகப் பழங்கால வணிகப்பாதைகள் பற்றி
ஆராய்ச்சியில் ஈடுபடும் ஸ்ரீகுமார் என்ற பேராசிரியரை அவருக்கே தெரியாமல் இவ்வேலையில் ஈடுபடுத்துக்கிறது அந்நிறுவனம். வடமாநிலத்தில் வளர்ந்த தமிழ்ப்பெண் முல்லை. தன் தந்தையின் மூலம் சங்ககால இலக்கியங்களை கற்றவள்.
சிலப்பதிகாரத்தின் கண்ணகி மேல் கொண்ட மிகுந்த ஆர்வம்
காரணமாக சிலப்பதிகாரக் கதை நிகழ்ந்த இருப்பிடங்களை ஆவணப்படமாக்க
வேண்டும் என்ற முனைப்பில் இடதுசாரி இயக்கக் கொள்கையின் பிடிப்பில் அலையும் நவீன்
என்ற நண்பனுடன் பூம்புகார் வருகிறாள். அங்குப் பேராசிரியருடன் ஒன்று
சேர்ந்து சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி நடந்த சாலையில் பயணம் செய்து
சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்ற பூம்புகார் காண்டம்,
மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டத்தில் நிறைவு செய்வதுதான் கதை. அதிக
விறுவிறுப்புடன், சுவாரஸ்யம் குறையாமல் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன்
பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் முருகவேள். ஏற்கனவே எரியும் பனிக்காடு நாவலை
தமிழ்ப்படுத்தியவர். மிளிர்கலில் சிலப்பதிகாரத்தைஎளிமைப்படுத்தியுள்ளார்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சிலப்பதிகாரம்
உணர்த்தும் மூன்று அறநெறிகளாகும். இதன் அர்த்தத்தை மாணவன் ஆசிரியரிடம்
வினவுவதுப் போல் சந்தேகங்களை ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக வினவ வைத்து
இன்னொரு கதாபாத்திரத்தின் மூலம் அர்த்தம் தெரிவிப்பதாக நாவலில் பல
காட்சிகள் வரும். நாவலின் பலமான பகுதிகள் அவை. குறிப்பாக கோவலனும்
கண்ணகியும் சோழ நாட்டை விட்டு சென்றதும் மிகப்பெரிய வணிக குடும்பத்தில்
பிறந்த அவர்களைத் தேடி யாரும் வராததும், கண்ணகியை ஏன் சேர மன்னன்
தெய்வமாக்கினான் ? உண்மையில் சிலப்பதிகாரம் நம் நிலத்தில் நடந்ததா ? என்ற
வினாக்கள் இக்காப்பியத்தை படிக்கும் எல்லாருக்கும் ஏற்படும் ஐயங்கள்.
இதற்குப்பதில் நாவலில் இருக்கிறது. பதில் வெறும் ஒற்றை வார்த்தையாக
இல்லாமல் தனிக்கவனத்துடன் ஆராயப்பட்ட பதில்களாக இருக்கும்.
பூம்புகாரின் ஏழுநிலை மாடங்களையும் கரைபுரண்டு ஓடும் காவேரியையும்
எதிர்ப்பார்த்து வந்த முல்லைக்கு, தற்போது இருக்கும் பூம்புகாரின்
தற்கால நிலையைக் கண்டு கலங்கும் நேரத்தில் ' உண்மையான வரலாறு
வேண்டுமென்றால் மக்களிடம் கேள் ' என்று பேராசிரியரின் பதில் கள ஆய்வு
எவ்வளவு முக்கியம் என்று உணர்த்துவதாகும். பேராசிரியருக்கும்
முல்லைக்கும் உண்டான உரையாடல்கள் நாவலின் உவப்பனதாகும். ஏன் சார்,
எதுக்கு சார், இப்படி இருந்திருக்கலாமோ என்ற கேள்விகள் கேட்டுக்கொண்டே
இருக்கும் முல்லை சீக்கிரம் நம் மனதில் இடம்பெற்றுவிடுகிறாள்.
கோவலன் என்ற பெயர் கோவலர்கள் என்ற இனத்தின் பெயராக இருக்கலாம். கொங்கு
நாட்டில் வாழ்ந்த ஆடு மேய்க்கும்
பழங்குடி இனத்தின் பெயர் கோவலர்கள் என்றும், அவர்கள்
சேரப்புமலைப்பகுதியில் வாழ்ந்ததாகவும் அந்தமலைதான் இப்போது காங்கேயம்
அருகில் உள்ள சிவன்மலை என்றும், பதிற்றுப்பத்தில் கூட கோவலர்கள் என்ற
சொல் இடம்பெற்றிருக்கிறதாகவும், கொற்றவை கோவிலில் கண்ணகியைப் பார்த்து
கொங்கர் செல்வி என்று எய்னர்களால் பாடப்படுகிறாள். கோவலன் கண்ணகி
மூதாதையர் ரத்தின வியாபாரம் காரணமாக சோழ நாட்டுக்கு
இடம்பெயர்ந்திருக்கலாம், உண்மையில் அவர்கள் கொங்கு நாட்டுப்பகுதியை
சார்ந்தவர்களாக இருக்கலாம் என்ற ரீதியிலும் முருகவேள் ஆராய்ச்சி
நடத்தியுள்ளார்.
அவர்கள் பயணம்தான் எவ்வளவு சிறப்பானது. "வடகரை காவேரி, உறையூர்,
நெடுங்குளம் சிறுமலை, மேலூர், மாங்குளம் சமணக்குன்றுகள், அழகர் மலை,
மதுரை மூதூர், கோவலன் பொட்டல், கம்பம் கண்ணகி கோவில், திருச்சுர்,
கொடுங்களூர் பகவதி கோவில்" என நாவல் பல பிரதேசங்களின் பகுதிகளைத் தொட்டு
இட்டுச் செல்கிறது.
சமண இரவுத்தங்கலில் ஏற்படும் உரையாடல்களாக இருக்கட்டும் , மத வரலாறு,
இனவரையியல் பற்றிய பேச்சுகளாகட்டும், வணிக வரலாறு, இடதுசாரிக்கொள்கையின்
கருத்துக்கள், நிகழ்கால அரசியல் விமர்சனம், ராஜஸ்தான் கல்பட்டை
தீட்டுபவர்கள் பற்றி, உயிர்ப்பலிகள் பற்றி, அரவான் வழிபாடு,அடிமை
வரலாறுகள், ஆரிய திராவிடத் தோற்றம், சமணக் கழுவேற்றம், கோசோம்பி
கருத்துக்கள், தாய்த்தெய்வ வழிப்பாட்டு நம்பிக்கைகள், கொடுமணல் நாகரிகம்,
சங்ககால இலக்கியங்கள்
ர், கொடுங்களூர் கண்ணகி கோவில் வெளிச்சப்பாடுகள் என ஒட்டுமொத்தத் தர்க்க
கருத்துக்களின் வழியே நாவல் புதுப்புது பரிமாணம் எடுத்து மிளிர்கல்லாக ஒளிர்கிறது.
எதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது
படைப்பிலக்கியத்தின் வெற்றி எதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது என்றால் வாசிப்பின் முடிவில் ஏற்படும் வெறுமையா? அல்லது அதன்பின்
உருவாகும் அக எழுச்சியா என்று சொல்லிவிட முடியாது. எந்தப்புள்ளியில்
படைப்பின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்று உறுதியிட்டுக் கூறமுடியாது.
படைப்பின் மீறல்களையும் தர்க்க ரீதியாக ஆராயவும், கதையின்
இருப்பிடங்களையும் கதாபாத்திரங்களின் எண்ணங்களையும் வாசகனை தேடத்தொடங்க
வைக்க வேண்டும். அந்த வகையில் இளங்கோவடிகள் வழி முருகவேள் வெற்றி பெற்றுள்ளார்.
சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை ஒர் வாசகன் மனநிலையில் ஆராய்ந்து, கதை
நிகழ்ந்த தற்கால இருப்பிடங்களை தேடி அலைந்து, கண்ணகி ஏன் தெய்வமானாள் ?
என்ற ரீதியிலும் சிலப்பதிகாரம் என்ற மிளிர்கல் படைப்பைச் சிறந்த படைப்பாகத்
தந்துள்ளார் எழுத்தாளர் முருகவேள்...