Wednesday, 26 November 2025

பொ.சங்கரின் நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -19-

 


   கட்சிக் கம்பங்கள் இல்லா ஊர் 


தமிழக அரசியல் களம் தேர்தல் வந்தால் பரபரப்பாய் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் , சட்டமன்றத் தேர்தல் , ஊராட்சி மன்றத் தேர்தல் என மூன்று வகையான தேர்தல்கள் நடக்கும் போது ஊரில் சிறிது பரபரப்பு இருக்கும். 

அன்றைய நாட்களில் கோயில் பொது மேடையில் ஒரு தினத்தந்தி நாளிதழ் பொதுவாய் வரும். எல்லோரும் படிப்பார்கள். தேர்தல் நேரத்தில் சில அரசியல்வாதிகள் , தமிழகத்தில் என் காலடி படாத கிராமமே இல்லை என்று முழங்கியிருப்பது செய்தியாக வந்திருக்கும். என் நினைவில் அந்த முக்கிய அரசியல்வாதிகள் யாரும் எங்கள் நல்லியம்பாளையம் மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வந்ததாய் நினைவில்லை. 

வேட்பாளர் சார்பாய் ரேடியோ கட்டிய வண்டில நோட்டிஸ் போட்டுக்கொண்டு வாகனம் வரும். யாரேனும் ஒரு பேச்சாளர் வண்டிக்குள்ள உட்கார்ந்து கொண்டு ,உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ________ சின்னத்தில் மறக்காமல் பதிவு செய்யுங்க. தேர்தல் நாள் _____ என்று பதிவு செய்து போவார்கள். 

ஏதேனும் ஒரு சில சுவர்களில் மட்டும் மாநிலக் கட்சிகளின் சின்னங்கள் வரையப்பட்டு இருக்கும். மற்றபடி என் நினைவில் தெரிந்து நல்லியம்பாளையம் கிராமத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் எங்கும் இருந்தது இல்லை. 

நல்லியம்பாளையம் கிராமத்தில் பல கட்சியினரும் இருந்தாலும் பொது இடங்களில் , கோவில்களில் யாரும் அரசியல் பேசாமல் ஊரின் தன்மானம் காக்க ஒற்றுமையாய் இருந்தனர். 

என் பதினோரு வயதில் உள்ளாட்சித் தேர்தலில் சம்புக் கவுண்டர் வெற்றி பெற்று ஊரில் வெற்றி ஊர்வலம் வந்தது நினைவில் உள்ளது. அவரது முயற்சியால் ஊரின் தென்புறம் இரட்டபாளி வலசு செல்லும் பாதையில் வசிக்கும் மக்களுக்காக வாய்க்காலைக் கடந்து செல்ல பாலம் கட்டித் தர முயற்சி எடுக்கப்பட்டது. 

நல்லியம்பாளையம் கிராமம் கிட்டத்தட்ட 1998 வரை கிராமமாகவே இருந்தது. அதன்பிறகு ஊருக்கு அருகில் ஹவுசிங் போர்டு வர நூற்றுக்கணக்கான வீடுகள் ஊரைச் சுற்றி உருவாகத் தொடங்கின.

நல்லியம்பாளையம் ஊரில் வசித்த உள்ளூர் மக்கள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக நகரங்களில் குடியேறத் தொடங்கினர். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரிலும் தோட்டத்திலும் வசித்த நிலையில் இன்று ஊரில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே உள்ளூர் மக்கள் வசிக்கும் நிலை உருவானது. ஆனாலும் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நாட்களிலும் , மாதந்தோறும் பெளர்ணமி நாட்களிலும் ஊர்க்கோயில்களில் ஒன்றுகூடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

நல்லியம்பாளையம் கிராமம் காலப்போக்கில் ஊராட்சி மன்ற அமைப்பில் இருந்து , மாநகராட்சியின் எல்லைக்குள் வந்தது.  

மண்மணம் மாறினாலும் ஊரின் நிலையை என்றும் எடுத்துரைப்பது ஊர்க்கோயிலும் , பெருமாள் கோயிலும்  அரச மர அடையாளமும் தான். ஊர் மாநகராட்சி எல்லைக்குள் வந்தாலும் ஊரின் கட்டுப்பாடுகள் என்றும் மாறாமல் இன்றும் இருப்பதே அதன் பெருமைக்குக் காரணமாய் இருக்கின்றன. 

இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு நின்று நிதானமாய் கதை பேசி நகர்ந்து சென்ற ஆத்தாக்களும் , தாத்தாக்களும் இன்று எண்ணிக்கை குறைந்து விட்டார்கள். 

ஆனாலும் நல்லியம்பாளையம் கதை இன்னும் பல பேசப்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு ஊரின் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும். 


Saturday, 22 November 2025

பொ. சங்கரின் நல்லியம்பாளையம் கதை பேசுவோம் 18

 

                                     சின்னப்புள்ள அக்கா

                    




    மண் மணம் மாறாத எங்கள் நல்லியம்பாளையத்தில்  வாழ்ந்த ஒரு அக்காவின் பெயர் சின்னப் புள்ள. அவங்க பேரு ‘சின்னபுள்ள ‘ தானா என்று இதுவரை தெரியவில்லை. 

நல்லியம் பாளையம் கிராமத்தில் இரவு பகல் பாராமல் எப்போது உறங்குவார் என்றே தெரியாத நிலைக்கு எப்போதும் நடந்து கொண்டே இருப்பார். 

நாங்கள் பால்ய வயதில் ஊரின் மேற்குப் புறம் கிழக்கு, வடக்கு என எல்லாத் திசைகளிலும் ஓடி ஓடி கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு இருப்போம். கோவில் திண்ணையில் விளையாட்டுத் தொடங்கும். யாரோ ஒருவர் தேடும் பொறுப்புக்கு ஆட்படுவார். ஊரெல்லாம் சுற்றி சுற்றி தேடினாலும் காணக்கிடைக்காத சில இடங்களில் , சில மரங்களில் ஒளிந்து கொள்வோம். 

       எங்கள் விளையாட்டுத் தொடங்கும் நேரத்தில் கோவில் திண்ணை அருகே நிற்கும் சின்னப்புள்ள அக்கா அடுத்தடுத்த நிமிடங்களில் கொத்துக்காரர் வீடு அருகே நடந்து வந்துவிடுவார். மனநிலை சற்று மாறி இருக்கும் சின்னப்புள்ள அக்காவ யாரும் ஊரில் எதுவும் சொல்ல மாட்டார்கள். 

யாரையும் பார்த்து சிரிக்க மாட்டார். யாருடனும் பேச மாட்டார். ஆனால் எதையோ பேசிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் விபரம் புரியாத வயதில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்க , திடிரென்று சத்தம் போட்டு அடிக்க வருவார். ஆனால் அடிக்க மாட்டார். நடந்து சென்று விடுவார்.

எனது சிறுவயதில் வள்ளியம்மாள் ஆத்தாவிடம் , சின்னப்புள்ள அக்காவுக்கு என்னாச்சு என்று கேட்ட போது ஒரு கதை கூறினார் வள்ளியம்மாள் ஆத்தா. 

எங்கள் கண்ணாமூச்சி ஆட்டம் இரவு ஒன்பதைக் கடந்தும் நீடித்துக் கொண்டிருக்க யாரேனும் ஒருவர் ஆட்டத்தில் இருந்து இல்லம் செல்ல தொடங்கினால் கண்ணாமூச்சி ஆட்டம் நின்று விடும்.வூடு வந்ததும் அம்மா திட்டுவாங்க. காதில் வாங்கிக் கொள்ளாமல் விளையாட்டு பற்றி சிந்தித்து , அடுத்த நாள் கிரிக்கெட், கிணறு னு யோசிச்சு தூங்கப் போவோம். ஆனால் இரவில் எந்தத் தெருவிலும் எங்கேயும் உறங்காமல் சின்னப்புள்ள அக்கா எதையோ பேசி நடந்து கொண்டிருப்பார். 

சின்னப்புள்ள அக்கா பேசுவது யாருக்கும் புரியாது. சில நேரங்களிலும் பாடல் கூட பாடி கேட்டதுண்டு. சிறு வயதில் மிக அழகாக இருப்பார் என்று ஊர்ப் பெரியவங்க சொல்லிக் கேட்டதுண்டு. 

சின்னப்புள்ள அக்கா மனதளவில் பாதிப்பு அடைந்திருந்தாலும் ஒருநாளும் யாரையும் காயப்படுத்தி கேள்விப்பட்டதில்லை. 

ஈரோட்டில் இருந்து பழையபாளையம் வழியில் இரவு எட்டு மணிக்கு வேலை முடிந்து பலரும் வருவார்கள். ஊருக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் சின்னப்புள்ள அக்காவ யாராச்சும் பார்த்து , ஊருக்குள்ள போ என்று சொல்லிச் செல்வார்கள். மீண்டும் நடந்து ஊரின் தென்புறம் அரசமரம் அருகே வந்து நின்றிருப்பார். மீண்டும் யாராச்சும் ஊர்க்கவுண்டர்கள் சொல்ல , சின்னப்புள்ள அக்கா மாரியம்மன் கோயில் அருகே வந்து நின்றிருப்பார். 

மனநிலை மாறினாலும் ஒருநாளும் சின்னப்புள்ள அக்கா ஊரை விட்டு எங்கேயும் சென்றது இல்லை. ஊரின் மத்தியில் சின்னப்புள்ள அக்காவுக்கு ஒரு வீடு இருக்கும். ஆனால் வீட்டில் இல்லாமல் பல இடங்களிலும் நடந்து கொண்டே இருப்பார். 

ஒருமுறை ஊரில் சின்னப்புள்ள அக்காவிடம் வெளிப்புறத்தான் கைவரிசை காட்டி தவறாக நடக்க  முயல ,  சின்னப்புள்ள சத்தமிட்டுக் கத்து ஷாப்கார கவுண்டர் அந்த வெளிப்புறத்தானைப் பிடித்து அடி துவைத்து அழ வைத்து சின்னப்புள்ள அக்கா காலில் விழவைத்தார். நாங்கள் பால்ய வயதில் அந்த நிகழ்வுகளைக் கண்டு அந்த அக்கா மீது பரிதாபம் கொண்டே நடந்து கொண்டோம். 

ஊரில் எங்கள் பெரியவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட போலிசு மாதிரியே இருந்தமையால் தப்பித்தவறி கூட , அறிந்தும் அறியாமல் கூட நாங்கள் தவறே செய்து விட முடியாது. 

குடும்ப நிலை, ஊரின் கெளரவம் , ஊர்க் கவுண்டர்களின் மீது இருந்த மரியாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டே நாங்கள் வளர்ந்தோம். 

இப்படியாக நீண்ட நல்லியம்பாளையத்தில் பல மணிநேரங்களாக சின்னப்புள்ள அக்கா காணாமல் இருக்க பலரும் பல இடங்களில் தேட , அவர் நடக்காமல் , அவர் பேசாமல் , பாடாமல் தம் மூச்சை நிறுத்திக் கொண்டார். அந்த அக்கா எதையோ சொல்ல பல ஆண்டுகளாக முயன்றும் , பலருக்கும் புரியாமலேயே அவரின் இறுதி வாழ்வு நிறைவடைந்தது. 

இன்னமும் நினைவில் உள்ளது அவரின் குரல். ஆனால் என்ன சொன்னார் என்பது மட்டும் இன்னமும் புரியவில்லை. நல்லியம் பாளையம் கதையில் ஊரின் வடக்கு, கிழக்கு, மேற்கு , தெற்கு என அனைத்து வீதிகளிலும் , அரச மரம் , வேப்பமரம், ஆழமரம் என அனைத்து இடங்களிலும் அவர் நின்று கொண்டிருப்பார். என்ன சொல்லியிருப்பார்...அந்த மரங்களே சாட்சி….



    


Tuesday, 4 November 2025

பொ.சங்கரின் நல்லியம் பாளையம் கதை பேசுவோம் 17

நம்ம நல்லியம்பாளையத்துக்கு 
ஐப்பசி மாதம் வந்து சேர்ந்தாச்சுன்னா,  ஒரு விதமான மகிழ்ச்சி! 

காலை எழுந்தவுடனே வானம் முழுக்க கரிய மேகம் சூழ்ந்திருக்கும். கிழக்கில காற்று வீசும் – அது ஒரு மணம்! “அடடா, மழை வாசனை தானே இது!”ன்னு யாரோ ஒரு அப்பத்தா சொல்லி புன்னகை வருட விடுவாங்க. 

மழை வரப்போகுது என்ற உணர்ச்சிதான் ஊர்ல ஒரு திருவிழா மாதிரி இருக்கும்.  வாய்க்கால்ல நீர் ஓடும். நீர்த்தாரை வந்து சேரப் போறது போல நீலக் குன்றுகள் தூரத்தில மங்கலாய் தெரியும். நெல் வயலுக்குள்ள மண்ணு நனைந்து, பசுமையோட மிளிரும்.

பிள்ளைகள் எல்லாம் களத்தில ஓடி விளையாடும் “ஏய்! தண்ணி பொழியுது டா, நனைந்தா சளி பிடிச்சிரும்!”ன்னு அம்மாக்கள் கத்துவாங்க. ஆனா யாரு கேப்பா! நீரில் கால்கள விட்டு துள்ளுறது தான் அவர்களோட சந்தோஷம்.
மழை விழும் ஒலியும், பிள்ளைகளோட சிரிப்பும் சேர்ந்தா ஒரு இனிமையான இசை மாதிரி இருக்கும்.
மாடுகளும் மழைத் துளியில நிம்மதியா நிக்குது. மாடு தலையில விழும் துளியைக் கண்டு வால் ஆட்டுது. அதைக் கண்டு ஒரு தாத்தா சொல்லுவார் ,

“மாடு மகிழ்ந்தா மழை நல்லா பெய்யும் டா! இதுதான் நம்ம ஊர்ல பழமொழி!”
அந்த வார்த்தை கேட்டு நெஞ்சுக்குள்ளே ஒரு நம்பிக்கை எழும்.
மழை கொட்டிக் கொட்டிப் பெய்யும் போது, யார் வீட்டுக்குள்ளோ  அடுப்பில  வெந்தயக் குழம்பு வாசனை வரும்.
 
  திண்ணையில ஆத்தா ஒரு தாளம் போட்டுட்டு மழை ஒலி கேட்டு மகிழ்வாங்க.
“மழை நன்றா பெய்யணும் டா, அப்போ தான் வயல் பசுமையா இருக்கும்!”ன்னு அப்பத்தா பேசிச்  செல்வார்.
அந்த நேரத்துல நெல் நாற்று மழையில மிதந்த மாதிரி ஆடும். பசுமையான வயல் காணும் போதே விவசாயிகளின் மனசு நிறைவு ஆகிடும்.
இரவில மழை நின்னதும் வெளியே போனா , மண் வாசனை எப்படியோ ஒரு சுகம் தரும். 
நிலா மேகத்துக்குள்ள நுழைந்து ஒளி தரும் காட்சி. மரத்தில மழைத்துளி வழிந்துசெல்லும் சத்தம் காதுக்குச் சங்கீதம் மாதிரி இருக்கும்.
அடுத்த நாள் காலை, மண் மிதமிஞ்சிக் குளிர்ந்திருக்கும். பெண்கள் கோலமிட முடியாது. 

  சின்னப்பிள்ளைகள் மண்ணுல சின்ன மண் கோட்டைய கட்டுறது.
ஐப்பசி மழை நம்ம ஊர்க்கு வெறும் தண்ணி இல்லப்பா – அது நம்ம உயிர் தண்ணி!
அது வந்தா தான் வயல் பசுமையா இருக்கும், களங்கள் வளம் தரும், மனசு மகிழும்.
மழை வரணும், மண் குடிக்கணும், நம்ம ஊரு உயிரோட புன்னகைக்கணும் – அதுதான் எல்லாரோட ஆசை!
“மழை பெய்யட்டும் தாய்மண்ணே குடிக்கட்டும்,
நம்ம நல்லியம் பாளையம் நெல் தளிர் எழுந்து புன்னகைக்கட்டும்!”