Thursday, 25 April 2024

சிக்கிம் நாடு, இந்திய மாநிலமான கதை - அறிய வேண்டிய வரலாறு

     


                                           

   


 ஆங்கிலேயர்கள் இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கு சுதந்திரம் அளித்த வரலாறு நாம் அறிந்தது. நம் அருகில் உள்ள நாடான நேபாளம் சுதந்திர தினம் இல்லாத நாடு. ஏனெனில் ஆங்கிலேயர்கள் முந்நூறு வருடங்கள் இந்தியாவில் ஆட்சி செலுத்திய போதும் அருகில் இருந்த நேபாளத்தின் மீது ஆங்கிலேயர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. சில சமயங்களில் உதவி , படைகள் தங்குமிடம் என சில காரணங்களுக்கு மட்டுமே நேபாளத்தைப் பயன்படுத்தினர். ஆனால் இந்தியாவோடு இன்னோரு நாடும் பிரிட்டீஸ் ஆட்சியாளர்களிடம் இருந்து விடுதலை பெற்றது. ஆம் அந்த நாட்டின் பெயர் சிக்கிம். 

                      சிக்கிம் கொடி

        சிக்கிம் இந்தியா மாநிலம். அது எப்படி நாடாகும் ? என்னும் கேள்வி பலருக்கு எழலாம். 1975 ஆம் ஆண்டுவரை சிக்கிம் இந்தியாவில் தனித்த நாடாகவே இருந்தது. 

                      

        இந்தியா சுதந்திரம் அடைந்த போது சிக்கிம் நாட்டு மக்களின் தனித்த பண்பாட்டு உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜவவஹர்லால் நேருவும் படேலும் தனி நாடாக செயல்பட ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர். சிக்கிம் நாட்டின் வெளி விவகாரம், பாதுகாப்பு ஆகியவை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. சிக்கிம் நாட்டில் மன்னராட்சி நடந்தும் வந்தது. 

           இந்தியாவின் நிலவியல் அமைப்பில் சிக்கிம் இருந்தாலும் அதன் கலாச்சாரத் தன்மைகள் கொண்டு அந்த நாட்டின் வரலாறு 1642 ல் இருந்து தொடங்குவதாக அறிய முடிகின்றது. 17 ஆம் நூற்றாண்டில் திபெத் நாட்டில் நிகழ்ந்த சிவப்புத் தொப்பி மஞ்சள் தொப்பி சண்டையால் பூட்டியா மக்கள் சிக்கிம் நிலப்பகுதிகளில் வாழத் தொடங்கினர். சிக்கிம் மக்களை பெளத்த சமயத்திற்கு மாற்ற முயன்று அதில் வெற்றியும் பெற்றனர். திபெத் , நேபாள் , சிக்கிம் ஆகிய மூன்று பகுதிகளிலும் போர்களும் தஞ்சமும் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்தன. 

          1814 ஆம் ஆண்டு நேபாளம் சிக்கிம் மீது கோபம் கொண்டு போர்தொடுக்க, இப்போரில் சிக்கிம் மன்னர் ஆங்கிலேயரின் உதவியை நாட, சிக்கிம் நேபாள் போரானது, ஆங்கிலேயர் நேபாளப் போராக மாறிப்போனது. 1817 ஆம் ஆண்டு நேபாளம் கைப்பற்றிய பகுதிகள்  உடன்படிக்கைகள் வாயிலாக சிக்கிமிடம் ஒப்படைக்கப்பட்டன. 


பண்டைய பட்டுப்பாதை அருகில் நிலவியலில் மலைகளால் சூழப்பட்ட நாடாக சிக்கிம் இருந்து வந்தது. பிரித்தானிய அரசாங்கம் திபெத் நாட்டில் வணிகம் மற்றும் வழித்தடங்கள் பயன்பாடுகள் ஏற்படுத்திய போது சிக்கிம் ஆங்கிலேயரின் வசமானது. 1824 மற்றும் 1825 ஆம் ஆண்டுகளில் சிக்கிமில் உள்நாட்டுக் கலவரம் காரணமாக அந்த நாட்டுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு சிக்கிம் மன்னருக்கும் ஆங்கிலேய அரசுக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன் தொடர்ச்சியாக பிரித்தானிய சிக்கிம் நாடு மன்னராட்சியின் கீழ் பிரித்தானிய ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. 

           1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகள் பிரிக்கப்பட்ட காலத்தில் சிக்கிம் இந்தியாவுடன் இணைய பொது வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைய சிக்கிம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் பிறகு சிக்கிம் நாடு , இந்தியாவைச் சார்ந்த சுதந்திர நாடாகத் தொடர நேரு ஒப்புக் கொண்டார். 

        1962 ல் இந்தியா சீனப் போரின் போது சிக்கிம் நாட்டின் பகுதியில் அமைந்துள்ள நாதூலா கணவாயில் போர் நடைபெற அந்தக் கணவாயை சிக்கிம் நாடு மூடியது. சிக்கிம் அரசர் டாஷி நாம்கால் தலைமையில் சிக்கிம் மக்கள் இந்தியாவின் பாதுகாப்புடன் வாழ்ந்து வந்தனர். 1963 ஆம் ஆண்டு டாஷி நாம்கால் வயது மூப்பு மற்றும் நோய்கள் காரணமாக இறக்க நேரிடுகிறது. சிக்கிம் நாட்டு சாம்ராஜ்ஜியத்தின் இறுதி வாரிசான பால்தன் நம்க்யால் சிக்கிம் அரசராகப் பதவி ஏற்கிறார். 

         1964 ஆம் இந்திய நாட்டின் பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணமடைகிறார். நேரு இந்தியாவின் பிரதமராக இருந்த வரை சிக்கிம் நாடு சிக்கல் இல்லாமல் மன்னராட்சியின் கீழ் இயங்கியது. அதன்பிறகு இந்தியாவில் போதுமான ஆதரவு கிடைக்கப்பெறாமல் இருந்தது. 1970 ஆம் ஆண்டு சீக்கிய தேசிய காங்கிரசு கட்சி மன்னராட்சிக்கு எதுராகவும், தேர்தலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கத் தொடங்கியது. நேபாளியர்களுக்கு அதிக முக்கியத்துவமும் இதன் கோரிக்கைகளில் ஒன்றாக மாறியது.   

            1973 ஆம் ஆண்டு சிக்கிம் அரண்மனை முன்பு உரிமைப் போர்களும் போராட்டகளும் தொடங்க, சிக்கிம் மன்னர் இந்தியாவின் பாதுகாப்பை வேண்டினார். திபெத் பகுதியின் ஒரு பகுதியாக சிக்கிம் இருப்பதால் , தலாய்லாமா பிரச்சினையில் சீனா சிக்கிம் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வாய்ப்பு உள்ளது எனக் கருதிய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி பி.எஸ்.தாஸ் என்பவரை சிக்கிம் தலைமை ஆலோசகராக நியமித்தார். 


         மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டோரிஜி என்னும் பிரதமருக்கும் சிக்கிம் அரசர் பால்தன் நம்க்யால் அவர்களுக்கும் பனிப்போர் தீவிரமடைந்தது. பிரதமர் டோரிஜி தம் அமைச்சரவை மூலம் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து அரசாட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தியாவிடம் ஒரு மாநிலமாக சிக்கிமை சேர்த்துக்கொள்ள சிக்கிம் பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்திய இராணுவம் அரசரின் படைகளை வென்று சிக்கிமை இந்திய நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சிக்கிம் மக்கள் அரசாட்சி தொடர்வதை எதிர்த்து வாக்களிக்க  இந்தியாவின் 22 வது மாநிலமாக  சிக்கிம் சேர்த்துக்கொள்ள இந்தியப் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு சிக்கிம் நாடு இந்திய மாநிலமானது. 


         இதனை சீனா கடுமையாக எதிர்த்தது. இந்தியா சிக்கிமைக் கைப்பற்றிக்கொண்டது எனக் குரல் கொடுத்து வந்தது. 2003 ஆம் ஆண்டு சிக்கிம் இந்தியாவின் மாநிலம் என்பதை ஏற்றுக்கொண்டதையடுத்து 2005 ஆம் பல உடன்படிக்கைகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கையெழுத்தாகின. 1962 ல் மூடப்பட்ட நாதுலா கணவாய் இந்தியா சீனா ஒப்பந்தப்படி 2005 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 


        மிகச்சிறிய சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம் காங்டாங். தொடர்வண்டி நிலையமோ, விமான நிலையமோ இல்லாத மாநிலமாக, வடகிழக்கு மாநில சர்ச்சைகள் , தீவிரவாத , இனவாத சண்டைகள் இல்லாத அமைதியான அழகான மாநிலமாக சிக்கிம் திகழ்ந்து வருகின்றது. 


       

          


               

 


Sunday, 21 April 2024

இந்திய சுதந்திர வரலாற்றில் மிண்டோ மார்லி சீர்திருத்தம் மாற்றமா? ஏமாற்றமா? - அறிய வேண்டிய வரலாறு

   

          இந்திய சுதந்திரப் போர் பன்நெடுங்கால வாரலாற்றையும் பலரின் தியாகங்களையும் உள்ளடக்கியது. இந்தப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க பதிவாக நாம் அறிய வேண்டியது மிண்டோ மார்லி சீர்திருத்தம். பிரிட்டன் ஆட்சி அதிகார இந்தியாவின் 17 வது வைசிராயாக பதவி வகித்து இந்தியர்களுக்கு சில அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியமான சூழல் காரணமாக மிண்டோ சில வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கினார்.  

        இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பிரிவாக அதிகமான தலைவர்களைக் கொண்ட இயக்கமாக காங்கிரசு இயங்கியது. இந்த இயக்கத்தில் இரண்டு பிரிவினராக அதாவது மிதவாதிகள் , தீவிரவாதிகள் என்னும் இருபிரிவினர் தத்தம் கோரிக்கைகளுக்கு வலு சேர்த்தனர். தீவிரவாதப் பிரிவினரால் சில விரும்பத்தகாத செயல்கள் நடந்தேறின. பிரிட்டீஷ் இந்தியாவின் வைசிராய் பதவி வகித்த மிண்டோ இந்தச் செயல்பாடுகளை அடக்க சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். மிதவாதப் பிரிவினருடன் பேச்சு நடத்தவும் ஒப்புக் கொண்டார். அப்படி எனில் மிதவாதப் பிரிவினர் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க வேண்டிய கட்டாயம் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு இருப்பதை இங்கிலாந்துக்குத் தெரிவித்தார். 

       சட்டப்பிரிவுகளில் இந்தியர்களுக்கும் பங்கு வகிக்கும் அதிகாரத்தைப் பெற்றுத் தர வைசிராய் மிண்டோ மற்றும் வெளியுறவுச் செயலர் மார்லி ஆகியோர் அடங்கிய நிர்வாக சபைக்கு பிரிட்டீஷ் ஆட்சி மன்றக் குழு அதிகாரம் வழங்கியது.  

      பம்பாய், மேற்கு வங்காளம், மெட்ராஸ், பஞ்சாப் போன்ற மாகாணங்களில் இந்தியர்கள் பங்கு பெறும் அதிகாரத்தை வழங்கியது. பல்கலைக்கழகங்கள் மற்றும் நிர்வாகச் சபைகளில் பங்கு பெறும் அதிகாரத்தை வழங்க மிண்டோ மார்லி குழுவினர் சில வரையறைகளைச் செய்தனர். 

        நிதி நிர்வாகச் செயல்பாடுகளில் இந்தியர்கள் பங்கு பெறவும் வாக்குரிமை அளிக்கவும் பட்ஜெட் விவாதங்களில் கேள்விகள் கேட்கவும் மோர்லி சில வரையறைகளைக் கொண்டு வந்தார். இதனடிப்படையில் முஸ்லீம் பிரதிநிதித்துவம் வழங்கவும் மிண்டோ மார்லி குழுவினர் குழு ஒப்புதல் வழங்கியது. பிற்காலத்தில் சீக்கிய பிரதிநிதித்துவம் , ஆங்கிலோ இந்திய பிரதிநிதித்துவம் வழங்கவும் இந்தச் சீர்திருத்தம் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அனைத்துச் சட்டமன்றங்களிலும் ஆங்கிலோ இந்திய பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் நியமிக்கப்படுவது மரபாக , அல்லது இந்த மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் காரணமாகவோ இருக்கின்றது. 

       மிண்டோ மார்லி சட்டம் மிதவாதிகளைச் சமாதானப்படுத்த  நிறுவப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, மத்திய மற்றும் மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இருப்பினும், இந்த சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களின் மொத்த உறுப்பினர்களில் பாதிக்கும் குறைவாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக ஜமீன்கள் அல்லது வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக  வேண்டும்.  இந்தச்  சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்கள் வகுப்புவாத வாக்காளர்களையும் அறிமுகப்படுத்தினர். சபைகளில் சில இடங்கள் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவதற்காக ஒதுக்கப்பட்டன. 

    மிண்டோ மார்லி சீர்திருத்தம் இந்தியர்களுக்கு உரிமைகளை வழங்கியது வரவேற்கலாம். ஆனால் வகுப்பு வாரியாக பிரிவினைகளை ஏற்படுத்தி இன்று வரை தனித்தொகுதிகள் இருப்பதற்கு இந்த மிண்டோ மார்லி சீர்திருத்தமே முக்கிய காரணம் என்பதையும் நாம் அறிய வேண்டும். 

     மிண்டோ மார்லி சீர்திருத்த வடிவத்தை மனதில் வைத்து அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வரையறை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு வரையறை வழங்கினால் இந்து மதத்தில் இருந்து அம்மக்கள் நீக்கப்பட்டு தனித்த மக்களாகக் கருதப்படுவார்கள் என  காந்தி அச்சமுற்றார். ஆனால் பிரதிநிதித்துவ அடிப்படையில்  தனித்தொகுதிகள் வழங்க வேண்டும் என்பதில் அம்பேத்கர் உறுதியுடன் இருந்தார். அந்த வகையில் இந்திய அளவில் 131 தனித்தொகுதிகள் இந்த மிண்டோ மார்லி சட்டப்பிரிவின் வாயிலாகவே வழங்கப்பட்டது என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

      1858 ஆம் ஆண்டு சுதந்திரப் போர் காரணமாக இங்கிலாந்து மகாராணி அறிவித்த இந்திய நிர்ணய சபையின் ஒரு பகுதியே இவை என்றும் , 1909 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தால் இந்திய ஜமின்தார்கள் , இளவரசர்கள் மட்டுமே அதிகார பரவல்களில் அமர முடிந்தது என்றும் வரலாற்றாய்வாளர்கள் கருதினர். மிதவாதிகள் திருப்திபடுத்தப்பட்டு தீவிரவாதிகளின் செயல்கள் குறைக்கப்பட்டு சில காலம் மாற்றுப் பேசு பொருளாக மட்டுமே மிண்டோ மார்லி சீர்திருத்தம் இருந்திருக்கின்றது என்பது பாலகங்காதர திலகர் போன்றோரின் கருத்தாக முன்வைக்கப்பட்டது. 

          


Friday, 5 April 2024

அறிய வேண்டிய வரலாறு - காந்திஜியின் கடைசி உண்ணாவிரதமும் 55 கோடியும்

         
    வரலாற்றில் மகாத்மா காந்தியின் உண்ணாவிரதம் பல நோக்கங்களைக் கொண்டது. தனது ஆசிரமத்தில் பலமுறை தனது சீடர்களிடம் கோபித்துக் கொண்டு அடிக்கடி உண்ணாவிரதம் இருந்துள்ளார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் மேற்கொண்ட உண்ணாவிரதம் சூரியன் மறையாத நாடு என்று வர்ணிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தை சில நேரங்களில் பயப்பட வைத்ததும் உண்டு. ஆம் மகாத்மா காந்தியடிகள் தமது வாழ்நாளில் 17 முறை உண்ணாவிரதம் இருந்து ஆட்சியாளர்களை மிரள வைத்த வரலாறு நாம் அறிய வேண்டியது. நான்கு முறை 21 நாட்களைக் கடந்து அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம் இந்தியாவிற்கு பல மாற்றங்களை ஏற்படுத்தித் தந்தது. 

       தமது சபர்மதி ஆசிரமத்தில் பலமுறை உண்ணாவிரதம் இருந்த காந்தியடிகள் முதன்முறையாக மக்கள் போராட்டத்திற்காக உண்ணாவிரதம் இருந்தமை எதுவெனில் அது அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டம். 1918 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொழிலாளர்களின் நலன் கருதி சபர்மதி ஆசிரமத்தில் மரத்தடியில் அமைதியாகப் போராடத் தொடங்கினார். போராட்டம் நாளுக்கு நாள் வலுவிழந்து தொழிலாளர்கள் பலர் போராட்ட களத்திற்கு வராமல் பின்வாங்கினர். யாருக்காக போராடுகிறோமோ அவர்களே முன்வராத போது ஏன் இந்தப் போராட்டம் என்று காந்தியுடன் இருந்தவர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். ஆனால் வறுமையில் வாடிக்கொண்டிருந்த தொழிலாளர்களின் நலன் கருதி தமது போராட்டத்தை உண்ணாவிரதமாக மாற்றும் முடிவிற்கு மகாத்மா காந்தியடிகள் வந்தார். 
       மகாத்மா காந்தியின் போராட்டக் களத்தில் முதலில் அணி திரண்ட தொழிலாளர்கள் ஆலைத் முதலாளிகளின் பேச்சுவார்த்தைக்கு இணங்கி குறைந்த ஊதியத்திற்கு பணிக்கு செல்ல நேர்ந்தது. ஆனால் மகாத்மா காந்தியடிகள் தமது போராட்டத்தை உண்ணாவிரதமாக மாற்றிய போது பணிக்குச் சென்ற தொழிலாளர்களும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வருகை புரிந்தனர். உண்ணாவிரதம் தீவிரமடைய தொடங்கியது. 21 நாட்கள் தொடர் போராட்டத்தில் காந்தியடிகள் மூன்று நாட்கள் உணவு உண்ணாமல் போராடினார். இந்த நிகழ்வு ஆலை முதலாளிகளைச் சிந்திக்க வைத்தது. மகாத்மாவை  நேரடியாக சந்தித்து உங்களது கோரிக்கைகளுக்கு நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஆகையால் உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று வேண்டினர். ஆலை முதலாளி அம்பாலால் பல நேரங்களில் சபர்மதி ஆசிரமத்திற்கு உதவி புரிந்துள்ளார். இருந்தும் தொழிலாளர்களின் நலனுக்காக தனது ஆசிரமத்திற்கு உதவிய அம்பாலாலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து போராட்டக் களத்தில் வெற்றியும் பெற்றார் மகாத்மா காந்தியடிகள். மக்கள் பிரச்சினைக்காக போராடிய மகாத்மா காந்தியின் முதல் போராட்டம் 1918இல் வெற்றி பெற்றது. 

     மகாத்மா காந்தியின் முதல் உண்ணாவிரதம் எவ்வாறு கவனம் பெற்றதோ அதுபோலவே அவரது கடைசி உண்ணாவிரதமும் வரலாற்றுப் பக்கங்களில் அழுத்தமான தடங்களைப் பதிவு செய்துள்ளது. 

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் கடைசி உண்ணாவிரதம் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் நாள் காலை 11: 55 க்குத் துவங்கியது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகாத்மா காந்தியடிகள் உண்ணாவிரதம் தொடங்கியதில் முக்கியமான கோரிக்கை பாகிஸ்தான் நாட்டிற்கு 55 கோடி அவசியம் கொடுக்க வேண்டும் என்பதுதான். மவுண்ட் பேட்டன் அவர்கள் இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாகிஸ்தான் என்ற நாடு கட்டமைக்கப்பட நிச்சயம் சில கோடிகள் வேண்டும் என்பது ஜின்னா அவர்களின் கோரிக்கை. ஆனால் இந்திய நாடு பல காரணங்களால் அதனைத் தவிர்த்து வந்தது. நேரு அவர்களும் படேலும் எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்தனர். இடையில் மவுண்ட் பேட்டன் சமரச பேச்சு வார்த்தைகளை நடத்தினார். இந்த நிலையில் தான் மகாத்மா காந்தியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. மவுண்ட் பேட்டன் காந்திஜியிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள். பேச்சுவார்த்தை மூலம் நல்லது நடக்கும் என்று கூறினார். ஆனால் காந்திஜியோ, இப்போது நான் சொல்வதை அவர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் எனது உண்ணாவிரதம் துவங்கி விட்டால் என்னை அவர்கள் புறக்கணிக்கவும் மாட்டார்கள் என்று உறுதிப்பட உறுதியளித்தார்.
     1948 ஜனவரி 13ஆம் நாள் காலை இரண்டு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டுவிட்டு தனது உண்ணாவிரதத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். திடீரென்று காந்திஜியின் உண்ணாவிரதம் நாட்டு மக்களிடையே பல்வேறு குழப்பங்களைத் தோற்றுவித்தது. ஏனெனில் அவர் முன்வைத்த கோரிக்கைகள் அப்படிப்பட்டது.
     1948 ஜனவரி 13 மாலைப் பொழுதில் ஆடம்பரமான அரசு மாளிகையில் நடைபெற இருந்த தற்காலிக அமைச்சரவைக் கூட்டம் காந்திஜியின் கயிற்றுக் கட்டிலைச் சுற்றி நடைபெறத் தொடங்கியது. பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன. காந்திஜி தனது பிடிவாதத்தில் பிடிவாதமாக இருந்தார். காந்தி உடன் எப்போதும் உடன் இருக்கும் அவரது மருத்துவர் சுசிலா நய்யார் ஜனவரி 15 ல் காந்திஜியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்தார். மருத்துவர் சுசிலா நய்யார் காந்திஜியின் உடல் நிலையை நேரு அவர்களிடம் தெரிவித்தார். இந்திய தலைநகரமும் இந்தியாவின் முக்கிய நகரங்களும் பதட்டத்தில் இருந்தன. எங்கே காந்திஜியை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் நேரு அவர்களுக்கு இருந்தது. உண்ணாவிரதம் மூன்று நாட்களைக் கடந்து கொண்டிருந்தது. டெல்லி செங்கோட்டையில் ஜவஹர்லால் நேரு உரையாற்ற ஏற்பாடுகள் நிகழ்ந்து வந்தன. மவுண்ட் பேட்டன் அவர்கள் அரசின் அத்தனை சிறப்பு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து அவசர தந்தி ஒன்று காந்திஜியின் கட்டிலுக்கு வந்தது. எங்களுக்காக நீங்கள் உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிடுமாறு வேண்டினர். 

 காந்திஜி மவுன புன்னகை புரிந்தார். இந்த நிலையில் இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் மகாத்மா காந்தியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக பாகிஸ்தான் நாட்டிற்கு 55 கோடிகள் வழங்க ஒப்புதல் அளித்தது. மூன்று நாட்கள் கடுமையான உண்ணாவிரதம் மேற்கொண்ட 78 வயதான மகாத்மா காந்தியடிகளின் போராட்டம் வெற்றி பெற்றது.
      அகில இந்திய வானொலி நிலையம் ஒவ்வொரு மணிக்கு ஒரு முறையும் மகாத்மா காந்தியின் உடல்நிலை குறித்து நாட்டு மக்களுக்கு அறிவித்து வந்தது. ஜனவரி 16 இல் இந்திய அரசு, காந்தியின் பொருட்டும் பாகிஸ்தானுடனான விரிசலை முடிவுக்கு கொண்டு வர நல்லதொரு சமிக்ஞை அளிக்கும் பொருட்டும் 55 கோடியைத் தருவதாக அறிவித்தது. காந்தியின் உண்ணாவிரதம் அத்தோடு முடிவு பெறவில்லை. அவர் அதை வரவேற்றார் எனினும் பிரச்சனை அதனால் மட்டும் முடிவுக்கு வராது என நம்பவே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். ஜனவரி 18 இல் பலரின் வேண்டுகோளுக்கும் உறுதிமொழிக்கும் பிறகு தான் காந்தி உண்ணாநோன்பை கைவிடுகிறார். 
    வரலாற்றில் காந்திஜியின் கடைசி உண்ணாவிரதம் பல மாற்றங்களையும் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளையும் இந்தியாவுக்கு அளித்தது. காந்தியம் என்பது தனி ஒரு மனிதரைப் பற்றியது அல்ல. அது ஒரு தத்துவம். அதை எல்லோராலும் பின்பற்ற முடியாது. ஆமாம் சில நேரம் காந்திஜியே கூட அந்தத் தத்துவத்தை பின்பற்ற முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இடைவிடாத வலியுறுத்தல், தொடர் போராட்டம் ஆகியவற்றை வென்று காட்டிய காந்திஜியின் கடைசி உண்ணாவிரதம் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு சாதிக்க வைத்தது. மரணத்தின் இறுதி வரை சென்ற காந்திஜியின் கடைசி உண்ணாவிரதம் ஜனவரி 18 ஆம் நாள் அன்று மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் இந்த உண்ணாவிரதம் காந்திஜியின் கடைசி உண்ணாவிரதம் மட்டுமல்ல அவரது வாழ்வின் கடைசி போராட்டமாகவும் மாறிப்போனது. அடுத்த 12 நாட்களில் வரலாற்றில் துயர சம்பவம் ஒன்று நடந்தேறியது. அடுத்த பதிவில் அதனைக் காண்போம்.