Monday, 21 June 2021

தருமபுரம் ஆதீனம்

தருமையாதீன_பூசைமடம்

#திருத்தருமபுரம் மடத்தின் ஆன்மார்த்த பூஜாமூர்த்தியாக "#ஸ்ரீசெந்தமிழ்_சொக்கநாதப்பெருமான் எழுந்தருளி உள்ளார்!!", இவர் ஸ்படிகலிங்கமாக தாம் எழந்தருளி இருக்கும் பெட்டகத்துடன் "ஆதிகுரு முதல்வருக்கு மதுரை பொற்றாமரை குளத்தில் இறையருளால் கிடைக்கப் பெற்றவர்!!",

"கண்ணுக்கு இனிய பொருளாகி என் கரத்தில் வந்தனை!!" என்று இதனை ஸ்ரீகுருஞானசம்பந்தப் பெருமானும் குறிக்கிறார்கள், "இவர் திருவாலவாய் பெருமான் ஆதலால் ஆலவாய் சொக்கநாதப் பெருமான்தான் தருமையாதீன கர்த்தர்களுக்கு ஆன்மார்த்த மூர்த்தியும் ஆவார்!!"

இம்மூர்த்தி எழுந்தருளியுள்ள இடம் தருமபுர மடத்தில் "#பூசைமடம்" என்ற பெயரில் தெற்கு நோக்கி அமைந்துள்ளதும் இதன் இருபக்கங்களிலும் உள்ள "96 கண்கள்" உடைய சாளரசன்னலும் தில்லை சிற்றம்பலத்தையே நினைவு கூறுகிறது!!"

"மதுரை, உச்சந்தலைக்கு மேலே உள்ள #துவாதசாந்த_ஸ்தான_தலம் ஆதலால், இப்பூசைமடத்தின் "தொட்டிகட்டு" என்னும் இடத்தில் நின்று செந்தமிழ் சொக்கநாதரை வழிபடுவோரின் உச்சந்தலைக்கு நேரே சொக்கநாதப் பெருமான் எழுந்தருளி இருக்கும் பீடம் இருப்பது தனிச்சிறப்பு ஆகும்!!"

"தில்லையிலும் ஓதுவார்கள் நின்று பாடும் எதிரம்பலத்தின் கீழ்பகுதியில் நின்று தரிசிக்கும் போது கூத்தபிரானின் #குஞ்சிதபாதம் நம் உச்சந்தலைக்கு நேரே இருக்கும்!! இந்த இரு ஆலயத்தையும் துவாதசாந்த பூர்வமாக நினைவு கூறும் வகையிலேயே தருமையாதீன பூசை மடம் அமைந்துள்ளது!!" இவ்வமைப்பு வேறு எங்கும் கிடையாது!!

"பரார்த்த பூசைக்கு உரிய ஆலயங்களை போலவே கருவறையை சுற்றி வர சுற்றாலை, தீர்த்த கிணறு, தனி மடைப்பள்ளி முதலியவற்றுடன் ஒரு தனித்தொகுப்பாக தருமையாதீன பூசை மடம் அமைந்துள்ளது வேறெங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்",

இப்பூசை மடத்தின் தொட்டிகட்டு என்ற பகுதி மிக விசேசமானது, இந்த "தொட்டிகட்டில் நின்று தரிசிப்போர் ஒரே நேரத்தில் ஸ்ரீசொக்கநாதப் பெருமான், ஸ்ரீகுருஞானசம்பந்தப் பெருமான், ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதனங்கள், தம்பிரான்கள், திருக்கூட்டத்து அடியவர்கள்   என அனைவரையும் தரிசிக்க முடியும்!!" இவ்வமைப்பு வேறு எங்கும் இல்லை என்பது எண்ணி இன்புறத் தக்கதாம்,

"தருமையாதீன பூசை மடத்தில் ஸ்ரீசெந்தமிழ் சொக்கநாதப் பெருமானோடு குருமகா சன்னிதானங்களின் உடையவர் என்னும் சிவபூசை, ஸ்ரீசித்திவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர் ஆகிய மூர்த்திகளும் எழுந்தருளி உள்ளனர்", பூசைக்கு வரும் குருமகா சன்னிதானங்கள் முதலில் தம் உடையவர், விநாயகர், முருகன் உள்ளிட்டோருக்கு அபிசேகம் செய்துவிட்டு பிறகு, "தங்கப் பேழையில் இருக்கும் ஸ்ரீசெந்தமிழ் சொக்கநாதராம் ஸ்படிக லிங்க மூர்த்தியை வெளிக் கொணர்ந்து ஸ்நான வேதிகையில் எழுந்தருளப் பன்னுவார்கள்!!"

"ஸ்ரீ சொக்கநாதருக்கு திருமடத்து நந்தன வனத்தில் மலரும் பூக்களே உபயோகப் படுத்தப் படும், கடைகளில் வாங்குவதில்லை என்றாலும் அன்பர்கள் பக்தியுடன் கொடுக்கும் மலர்களையும் பெருமான் ஏற்கிறார், இவருக்கான அபிசேக தீர்த்தமாக பூசைமடத்து உள்ளேயே இருக்கும் கிணற்று நீர் மட்டும்தான் பயன்படுத்தப் பெறும், இவரது நெய்வேத்யங்கள் பூசைமடத்திலேயே உள்ள பிரத்யோக மடைப்பள்ளியில் மட்டுமே தயரிக்கப் படும்!!"

"எவ்வளவு விலை கூடினாலும் சுவாமியின் பூசைக்கு தேவைப்படும் சந்தனம் முழுவதும் தினமும் புதிதாக கைகளால் அரைத்தே பெறப்படுகின்றது!!", இதற்காக உயர்ந்த ரக சந்தன கட்டைகள் வாங்கப்பட்டு, பூசைமடத்தில் பச்சைகற்பூரம் குங்குமப்பூ முதலியவற்றுடன் சேர்த்து அரைக்கப் படுகின்றது!!

தினமும் புதிய சந்தனத்தால் சுவாமியின் மேனிமுழுவதும் காப்பிடும் அளவுக்கும் ஏனைய தேவைகளுக்கும் இங்கு சந்தனம் அரைத்தே பயன்படுத்த படுவது வேறங்கும் இல்லாத சிறப்பம்சமாகும்!!

சிவதீபன்: ஆதீனத்தின் கோசாலையில் இருந்து பெறப்படும் பால் தயிர் முதலிய திரவியங்களுடன் நீராட்டு காணும் ஸ்ரீ சொந்தமிழ் சொக்கநாதப் பெருமானுக்கு ஆதிகாலம் தொட்டே நீராட்டுவதற்காக, "சகஸ்ரதாரை, காண்டாமிருக கொம்பு, யானைதந்தம், பசுகொம்பு, தங்கப்பூணிட்ட வலம்புரி இடம்புரி சங்குகள் முதலிய அரிய பாத்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றது!!"

நீராடிய பிறகு சந்தனகாப்பு, சந்தனாபிசேகம் ஆகியதும் சுவாமிக்கு ஜலதோஷம் வராமலிருக்க "ஸ்நான வேதிகையிலேயே மிளகு சாதம் நிவேதனமும்" பிறகு அலங்காரம் ஆனபிறகு "மகாநெய்வேத்யமும்" நடைபெறும்

மகாநெய்வேத்யம் என்பது, "ஞாயிறன்று வெண்பொங்கல், திங்களன்று சர்க்கரை பொங்கல், செவ்வாயன்று சம்பாசாதம், புதனன்று புளியோதரை, வியாழனன்று பருப்பு சாதம், வெள்ளியன்று தயிர்சாதம், சனியன்று எள்ளன்னமுமுமாக" #கமலபாத்திரத்தில் இருப்பதோடு, நித்யபடி சுத்தான்னத்துடன் பருப்பு மசியல், ஒருகூட்டு, ஒருபொறியல், தயிர் வீதம் நடைபெறும் கூடவே, "நெய்வேத்தியத்தின் பொழுது தாகசாந்திக்காக பருக நீரும் சுவாமிக்கு வைக்கப்படும் ஒரே சம்பிரதாயம் தருமை பூசை மடத்திற்கு மட்டுமே உரிய சிறப்பாகும்!!"

பிறகு விசேட சோடசோபச்சாரத்துடன் தீபாராதனை நடைபெறும், "ஸ்ரீ செந்தமிழ் சொக்கநாதப் பெருமானுக்கு பழங்கலந் தொட்டே சோடசோபச்சாரம் நிகழ்ந்தது!!" என்பதனை குமரகுருபரர சுவாமிகள்,

"அருத்தியோடு எம்மை உருத்திர கணங்கள் தெரித்து மற்று இவ்வாறு அருச்சனை புரிதீர் என்று அங்கையற்கண்ணி பங்கில் வீற்றிருந்த செக்கர் வார்சடை சொக்க நாயகனை ஈறெண் திறத்து உபசாரம் வாய்ப்ப!!" என்று பாடுகிறார்கள்!!

ஆன்மார்த்த பூசையில் சோடசோபச்சாரம் கொடுப்பதில் பழமையானது தருமையாதீனம் என்பது இதன் மூலம் விளங்குகின்றது

சிவபூசை நிறைவில் மகாதீபாராதனை ஆனதும் சண்டேச பூசை நடைபெறுவது வழக்கம், ஆனால் "தருமபுரத்தில் சொக்கநாதருக்கு "#சுத்தபூஜை!!" என்ற முறையில் பூசைகள் நடைபெறுவதால் இங்கு சண்டேசர் பூசை பத்தி என்பது கிடையாது!!"

சிவதீபன்: "ஸ்ரீசொக்கநாதப் பெருமானை பெட்டகத்தில் ஒடுக்கும் பொழுது பெருமானின் இண்டை மாலையை பூசை செய்யும் சன்னிதானங்கள் தமக்கு தீட்சை பன்னிய முந்தய சன்னிதனங்களுக்கு அர்பணிப்பதாக கருதி எடுத்து வைத்து, சிவபூசை பலனையும் அவர்களுக்கே கொடுத்து விட்டு சுவாமியை பெட்டகத்தில் ஒடுக்கும் சம்பிரதாயமும் தருமபுரத்தில் மட்டுமே நடைபெறும் சிறப்பு வழக்கம் ஆகும்!!"

பூசைக்கு வரும் சன்னிதானங்கள் சிவசிந்தனையோடு வருவார்கள் அவர்களது செவியில் வேறு உலகியல் ஒலிகள் சேராத வண்ணம், அவர்களது பணிவிடையும் நீராடி ஈரத்துண்டுடன், "ஹரஹர மகாதேவ!! சிவா!!" என்று கோஷம் எழுப்பி கொண்டு கைதட்டியபடி வருவார்

அப்போது சன்னிதானங்கள் திருமஞ்சனம் செய்து அனுட்டானம் நிறைவு பன்னி கண்ணாடி, காகிதம் உள்ளிட்ட பொருட்களை தீண்டாமல் எவர் முகத்தையும் ஏறிட்டு பார்க்காமல் சிவபூசை செய்யும் கரங்களை ஹிருதயத்திற்கு நேராக சின்முத்திரை காட்டியபடி வைத்து கொண்டு நாமஜபம் செய்தபடி பூசை மடத்திற்கு பிரவேசிக்கும் காட்சி மிக ஆனந்தமான ஒன்று!!

"ஸ்ரீ சொக்கநாதப் பெருமான் பூசை நிறைவேறும் வரை ஒருவரிடமும் உரையாடாமலும் நீர் கூட பருகாமலும் எவரையும் தீண்டாமலும் மிக ஆச்சாரமாக இருந்து பூசையை நிகழ்த்துவது தருமைக்குரிய சிறப்புகளுள் ஒன்றாம்!!"

"சிவபூசை செய்யும் பொழுதோ வேறு பூசைகளிலோ உடுத்தியிருக்கும் வேட்டி முழங்காலுக்கு மேலே இருக்க வேண்டும் என்ற மரபு படி, சன்னிதானங்களும் தருமை தம்பிரான்களும் வேட்டி நுனியை முழங்காலுக்கு மேலே தூக்கி செருகி இருப்பார்கள்!!"*

இக்காட்சி தருமையாதீனம் தவிரவேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய காட்சியாம், இதற்கு "கந்தை மிகையாம் கருத்து!!"* என்ற தேவார வாசகமும், "வழிபட கடவ மறையோன் முன்னும் துகிலிடை சுற்றி தூநீர் ஆட்டி!!" என்ற பதினோறாம் திருமுறை வரிகளும் சான்றாக அமையும்!!

சிவதீபன்: சுவாமிக்கு பூசை நிறைவேறிய பிறகு ஓதுவார்கள் தோத்திரம் பாடுகையில் சன்னிதானங்கள் பெருமானுக்கு நமஸ்காரம் செய்வார்கள், சன்னிதானம் எழுந்த பிறகு தம்பிரான்கள் நமஸ்காரம் செய்வார்கள் அவர்கள் எழுந்த பிறகு வந்திருப்போர் அனைவரும் நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பது விதி!!

பூசை மடத்தில் பாடும் ஓதுவார்கள் "இண்டை கட்டிய ஓதுவார்கள்!!" எனப்படுவர், இவர்கள் மட்டுமே பூசை மடத்தில் பாடும் தகுதி உடையவர்கள்  ஆவார்கள்

பிறகு ஸ்ரீகுருஞான சம்பந்தப் பெருமானுக்கு பூசை தீபாராதன நிறைவேறியதும் "தம்பிரான்கள் "ஹரஹர மகாதேவ சிவா!!" என்று கோஷமிட சன்னிதானங்கள் அனைத்து மூர்த்தங்கள் படங்கள் முதலியவற்றுக்கும் மலரிட்டு வணங்கி பண்டாரகட்டுக்கு எழுந்தருளுவது தருமையில் உள்ள தனிப்பட்ட நடைமுறை ஆகும்!!"

பூசை நிறைவில் பெட்டகத்தில் ஸ்ரீசொக்கநாதப் பெருமான் எழுந்தருளிவிடுவதால், *வெள்ளித் தேரில் நாள்முழுதும் சுப்ரமணியர் காட்சி தருவது வழக்கம்!!"

ஏனைய சைவ ஆதீனங்கள் எதிலும் இல்லாத தருமையில் மட்டுமே உள்ள சிறப்பான ஒரு கட்டமைப்பு "#பதினாறொடுக்கம்" ஆகும்!! இது ஆகாமோத்தமான யோக கலையின் பதினாறு ஸ்தானங்களை கூறும் பதினாறு சிற்றறைகள் ஆகும், "இந்த அமைப்பை பூசை மடத்தினை வலம் வரும் பொழுது தரிசிக்கலாம் பூசை மடத்தை வலம் வரும் அமைப்பும் பதினாறு ஒடுக்கமும் பூசைமட விமானம் தில்லை சிற்றம்பல பொற்கூரை போன்ற அமைப்பும் வேறு எங்கும் காணக்கிடைக்காத அற்புத அமைப்பு என்பதனை எண்ணுகையில் நம் மனம் கற்கண்டினும் இனிய உவகை கொள்ளும்!!"

சிவதீபன்: நித்யபடி நடைபெறும் "ஸ்ரீ சொக்கநாத ஸ்வாமி ஆன்மார்த்த பூசையை சன்னிதானங்கள் தலயாத்திரை செய்கையிலும் உடன் எழுந்தருள பன்னி கொண்டு போகும் வகையில் பல்வேறு கட்டளை மடங்களிலும் தனிபூசை மடமும் வெள்ளித்தேரும் தனி மடைப்பள்ளியும் ஆதீன நிர்வாகத்தால் அமைக்கப் பட்டுள்ளது!!"

இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக "ஆன்மார்த்த மூர்த்திக்கு வருடாந்திர உற்சவம் செய்யும் ஒரே வழக்கம் திருத்தருமபுரம் மடாலயத்திற்கே உரிய சிறப்பாகும்!!"

"ஆதீன ஆன்மார்த்த சுவாமி, திருவாலவாய் சொக்கநாதர் ஆகையால் அவர் விரும்பி மகிழும் "#ஆவணிமூல #பிட்டுதிருவிழா!!" இங்கு வருடாந்திர உற்சவமாகவே கடைபிடிக்கப் படுகிறது!!"

மதுரையில் ஆவணிமூலம் கொடியேறியது முதல் பத்து நாட்களும் தருமபுரத்திலும் பெருமானுககு விசேச ஆராதனைகள், பிட்டு அப்பம் முதலியவை நிவேதனம் செய்து திருவிளையாடல் புராணம் சொற்பொழிவும் செய்து விழா எடுக்கப் படுவதும் தருமைக்கு மட்டுமே உரிய தனிப் பெருஞ்சிறப்பாகும்!!
என்ற அளவில் அரிய தகவல்களை விரிவஞ்சி நிறைவு செய்கிறோம்!!

"மூர்த்தி எல்லாம் வாழி!! எங்கள் மோனகுரு வாழி!!அருள் வார்த்தை என்றும் வாழி!! அன்பர் வாழி!! பராபரமே!!"

திருச்சிற்றம்பலம்🙏🏻

Tuesday, 25 May 2021

புதுக்கோட்டை நார்த்தாமலை பயணம்

 

                      நார்த்தாமலை பயணம்

 

       2021 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் காலை 6 மணிக்கு கோவை – திருச்சி முதன்மைச் சாலையில் குளித்தலை காவிரிக் கரையோரம் காற்று வாங்கி நின்று கொண்டிருக்க, கோவையிலிருந்து பேராசிரியர் திரு. திருநாவுக்கரசு அண்ணா , வரலாற்று அறிஞர் திரு. இளங்கோவன் மற்றும் அன்புத் தம்பி திரு. பிரபாகரன் ஆகியோர் அழகிய மகிழுந்தில் வர இயற்கைக் காற்றை விடுத்து , செயற்கைக் காற்றுடன் மகிழுந்தில் ஏறி திருச்சி நோக்கி சென்றோம்.

        திருச்சி மாநகரை அடைந்து அடையாறு ஆனந்தபவன் உணவகத்தில் மினி டிபன் அருந்தி மீண்டும் வாகனம் திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியனவற்றைக் கடந்து புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பறந்தது. மகிழுந்தில் திரு. திருநாவுக்கரசு அண்ணா மற்றும் வரலாற்று அறிஞர் திரு. இளங்கோவன் அவர்கள் பல்வேறு தரவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். திருச்சியில் இருந்து 40 கல் தொலைவில் , முத்திரையர்களின் படைத்தளமாக விளங்கிய நார்த்தாமலை குன்றுக்குச் சென்று சேர்ந்தோம்.



       இந்தக் கிராமத்தின் பெயர் பண்டைய காலத்தில் நகரத்தார் மலை என இருந்திருக்கக்கூடும்.  இந்த மலை தான் நகரத்தார் மக்களின் முக்கிய வணிகத்தலமாக இருந்துள்ளது. ‘’ நானாதேசத்து ஐநூற்றுவர் ‘’ எனும்  வணிகக்  குழுவினர் இங்கு தங்கி வாணிபம் செய்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

       முதன்மைச் சாலையில் இருந்து பிரிந்து 20 நிமிட நேரத்தில் பார்க்க மிரமிக்கும் வகையில் ஓர் அழகிய பாறைக் குன்றுகளை அடைந்தோம். தம்பி பிரபாகரன் அவர்கள் அழகுடன், பொறுப்புடன் வாகனத்தை இயக்கினார். கண்கொள்ளாகாட்சி வடிவுடன் நார்த்தாமலையில் முக்கிய அடையாளமாக விளங்கும் விஜயாலய சோழீச்சுவரம் கோயிலை மலை முகட்டில் கண்டோம். பலரிடம் வழி கேட்டு , அதனால் வலி பெற்று தவறானப் பாதைகளில் சென்று , மீண்டும் நேர்வழியில் சென்று சேர்ந்து பாறைகளில் நீர்த் தடாகத்தை அடைந்து மிகப் பிரமாண்டமான பாறைக் குவியல்களை இயற்கை அதிசயத்தைக் கண்டு நின்றோம்.

          விஜயாலய சோழிச்சுவரம் கோயிலை அடைய உள்நுழைகையில் கருப்பசாமி சன்னதி வரவேற்க , கருப்பனிடம் உத்தரவு பெற்று பாறைகளின் மீது நடக்க ஆரம்பித்தோம். தொல்லியல் துறையினர் எந்தவிதமான குறிப்புகளையும் வைக்காமல் தேடி வருவோரைத் தேட வைத்தனர் .



கருப்பசாமி கோயில் முன்பு 


        1871 ஆம் ஆண்டு தொண்டைமான் ராணியால் சுனைநீர் இறைக்கப்பட்டு நீருக்குள் இருந்த சிவலிங்கத்தைத் தரிசித்த தகவல்களைக் கண்டோம். நீருக்குள் மூழ்கிய சிவலிங்கத்தைத் தரிசித்து மேலேறிச் சென்றோம் . ஓர் குகைக்கோயில் இடதுபக்கம் வரவேற்க உள்நுழைந்து பார்த்தோம். முகமதிய அன்பர் ஒருவரின் சமாதிக் கோயிலாக இருந்தது.

      சுனைநீரை கைகளால் தழுவி முகம் துடைத்துக் கொண்டே மேலேறிச் சென்றால் பிரமாண்டமான பிரதானக் கோயில் தென்பட்டது.



 அங்கே எங்களை வரவேற்க  நந்திபெருமான்  அழகுற வீற்றிருந்தார். அவருக்கு முன்னே விஜயாலய சோழிசுவரர் வீற்றிருக்கும் கோயில் , பூட்டப்பட்டிருக்க    அலைபேசி வெளிச்சத்தில் தரிசித்தோம். சிவலிங்கத்தைச் சுற்றி வர சாந்தார அறை காணப்பட்டது. விமான அமைப்பு வேசார முறையில் இருப்பதை திரு. இளங்கோவன் அவர்கள் விளக்கிக் கூறினார். வட்டவடிவ முறையில் கலைநயத்துடன் தென்தமிழகத்தில் கட்டப்பட்ட மிக அற்புதமான கோயில் என்பதையும் திரு. இளங்கோவன் கூறினார். தமிழகத்தில் வேசர பாணி அமைப்பிலான கோயிலின் தொடக்கம் இதுவென்பதையும் விளக்கினார்.



      


      கோயிலின் முன்புறம் முதலாவதாக பதிணென்பூமி விண்ணகரம் என்னும் திருமால் குடைவரைக் கோயிலை அடைந்து , திருமாலின் பத்து அவதாரச் சிலைகளையும் காண முடிந்தது. முதலில் சமணர் குடைவரையாக இக்கோயில் வெட்டப்பட்டு இருக்க வேண்டும் என  வரலாற்று அறிஞர் திரு. இளங்கோவன் அவர்கள் குறிப்பிட்டார். இந்தக் குடவரையில் மண்டபத்தை யானை , யாளி , சிங்கம் ஆகியவை வரிசையாகத் தாங்குவதைப் போன்று அழகுப் பாணியில் விண்ணகரம் அமைக்கப்பட்டுள்ளதை கண்டு மகிழ்ந்தோம்.

 கருவறையில் சிலைகள் எதுவும் இல்லை. அர்த்த மண்டபத்தில் ஒரே தோற்றத்தில் காணப்பட்ட திருமால் சிலைகள் ஒன்றுபோலக் காட்சியளிக்க , திருமால் தனது சுதர்சன  சக்கரத்தை ஏவும் காட்சி அழகுபட சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.



திரு.இளங்கோவன் அவர்களும், திரு.திருநாவுக்கரசு அவர்களும் விளக்கம் சொல்லும் காட்சி



   பதிணென்பூமி விண்ணகரம் கோயில் உட்புறம்

   பதிணென்பூமி விண்ணகரம் அரிகில் ‘’பழியிலி ஈசுவரம் ‘’  எனும் சிறிய குடைவரைக் கோயில் காணப்பட அருகே அவ்விடத்தின் குளுமைக்கு ஆதாரமாக மிகப்பெரிய மாமரம் விற்றிருக்க , அவ்விடத்தின் பிரமிப்பு ஆட்கொண்டது. இந்த குடைவரையின் உட்புறம் அழகிய துவாரபாலகர்கள் வீற்றிருக்க ‘’ பழியிலி சிவனார்’ என்னும் அழகிய பெயரில் சிவனார் வீற்றிருந்தார். நகரத்தார் மக்கள் ஒருசிலர் வருடத்திற்கு ஒருமுறை நார்த்தாமலை வந்து வணங்கிச் செல்கின்றனர் என்பதைக் கூற்றுகளின் வழி அறிந்து மகிழ்ந்தோம்.  விஜயாலய சோழிச்சுவரம் கோயிலின் மேலிருந்து கீழ் பார்ப்பின் கழுகுப் பார்வையில் அனைத்தும் தெரிய , கீழிருந்து மேல் நோக்கின் எதுவும் தெரியாத முறையில் கோயிலின் அமைப்புக் கட்டப்பட்டுள்ளது.

      தஞ்சாவூர் பெரிய கோயில் , கங்கை கொண்ட சோழீச்சுவரம் கோயி்ல்களுக்கு இங்கிருந்துதான் கற்கள் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டன என்பதை வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

 ‘’பழியிலி ஈசுவரம் ‘’  கோயில் முன்பு...மரங்கள் சூழ்ந்த பாறை வனத்தில்

 

                 பொ.ஆ 9 ஆம் நூற்றாண்டின் விஜாயலய சோழிச்சுவரம் கோவிலின் பிரமிப்பையும், நீர் சுனைகளின் குளுமையையும் உணர்ந்து , இராசராச சோழன் வெட்டி எடுத்துச் சென்ற பாறைகளின் குவியல்களைக் கண்ணுற்றும் , தொல்லியல் துறையின் அலட்சியத்தைக் கண்டு கவலையுற்று,  தை குளுமையும் உணர்ந்து, அடுத்த பயணத்திற்கு ஆயத்தாமானோம்....குளுமை  சூழ்ந்த வனாந்தரமான பாறையில் கருப்பசாமி வீற்றிருக்க கண்ணுற்று உத்தரவு பெற்று வாகனம் இடமாகத் திரும்பியது.

 

மீண்டும் அடுத்த  பயணத்தில் ........  

Monday, 17 May 2021

முசிறி மதகு , கரிகால சோழப் பேராறு,

 

               முசிறி  என்னும்  அழகிய கிராமம் காவிரிக் கரையில் திருச்சி நாமக்கல் சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் சங்க காலம் தொட்டே  புகழுடன்  விளங்கி வரும் ஊராகும். இந்த ஊரின் அருகே புகழ் பெற்ற திருஈங்கோய்மலை கோவில் உள்ளது. முசிறி நகரத்தின் மையப்பகுதியை ஒட்டி ஒரு கி.மீ தொலைவில் காவிரிக்கரையில்  புகழ்பெற்ற ஒரு மதகு உள்ளது. காவிரியில் இருந்து நீரைப் பிரித்து அருகில் உள்ள வேளாண் நிலங்கட்கு நீர் பிரித்து அனுப்ப 800 ஆண்டுகளுக்கு முன்பு இம் மதகு அமைக்கப்பட்டன என்பதை அறிய முடிகின்றது.

 

 


800 ஆண்டுகள்  பழமையான  மதகு

     திருச்சி நாமக்கல்  புறவழிச்சாலை  திட்டம்  செயல்படுத்தத்தப்பட்டால்  இம்மதகு  அழிக்கப்படும்  என வரலாற்று அறிஞர்கள் வேதனைப்படுகின்றனர். அப்படி என்னதான் உள்ளது இந்த மதகுக் கல்வெட்டில்  என விசாரித்தில் பல அற்புதத் தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

      காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்றும் பெயர் இருந்தது என்பதை மதகு அருகில் உள்ள கல்வெட்டு உணர்த்துகின்றது.  இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டை தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி நான்கில் 394-ம் கல் வெட்டாக அரசு பதிவு செய்துள்ளது  என்பதும் இங்கு  உற்றுநோக்கத்தக்கது.  வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் அண்மையில் இந்தக் கல்வெட்டு இருக்குமிடத்தை  சமீபத்தில் ஆய்வு செய்து பல அரிய தரவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

                    குலோத்துங்க சோழன் காலத்தில்  கரிகால சோழ கரையை பலப்படுத்த ‘விநியோகம்’ என்ற பெயரில் வரிவசூல் முறை இருந்தது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இது, காவிரிக்கு கரிகால சோழ பேராறு என்று இன்னொரு பெயர் இருந்ததை உறுதிப்படுத்துகிறது என்னும்  சிறப்புமிகு தரவினையும்  பதிவு செய்கின்றனர் .

                    மூன்றாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறிய நான்காம் ஆண்டில் (கி.பி.1220) முசுறி (முசிறி) என்ற மும்முடிச் சோழன் பேட்டையில் அகண்ட காவிரியிலிருந்து பிரியும் வாய்க்காலில் மதகு பாலம் ஒன்று கட்டப்பட்டது என்பதை அக்கல்வெட்டு உணர்த்துகின்றது.  குறுநில மன்னரான வாணகோவரையரின் படைத் தளபதி ராமன் சோழகோன் என்ற நிலவாளை வெட்டுவார் நாயன் என்பவர் தான் இந்த மதகு பாலத்தை கட்டி இருக்கிறார் என்றும் இதற்கு ஆதாரமான கல்வெட்டு அந்த பாலத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ளது என்பதும்  கவனிக்கத்தக்கது.  



           இந்த கல்வெட்டை ஆதாரமாக வைத்துத்தான் காவிரி ஆற்றுக்கு கரிகால சோழப் பேராறு என்று பெயர் இருந்ததை இந்திய கல்வெட்டுத் துறை உறுதி செய்தது. இந்திய கல்வெட்டுத் துறையின் ஆண்டறிக்கை குறிப்பு மற்றும் கல்வெட்டுச் சாசன நகலை வைத்து இதை உறுதி செய்துள்ளோம் என குடவாயில் பாலசுப்பிரமணியம் ஐயா கூறுகின்றார்.  ஆனால், அதன் முக்கியத்துவம் மக்களுக்குத்  தெரிவிக்கப்படவில்லை. அதனால் தான் அதை ராணி மங்கம்மாள் மதகு என்று இந்தப் பகுதி மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ராணி மங்கம்மாள் காலத்தில் இம் மதகு சீரமைக்கப்பட்டு  இம் மதகை அடைத்தாலோ அல்லது சேதப்படுத்தினாலோ ஆயிரம் வராகன் அபராதம் என்றக் குறிப்புக் கல்லை மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர் . அரசுத் துறை அதிகாரிகள் சேதப்படுத்தியுள்ளதும், மக்கள் அம் மதகின் மேற்புரம் அடைத்து குப்பைகளையும் கொட்டுகின்றனர்.  வழக்கம்போல  தொல்லியல் துறையினரின் வழக்கமான வாசங்கங்கள் அடங்கிய இரும்புப்  பதாகை  குப்பைமேட்டின் அருகே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மதகு பல ஆண்டுகளாக சிறப்புடன் அரசர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு  தற்போது  சாலை விரிவாக்கத்திற்காக விரைவில்  அழிக்கப்படும்  பட்டியலில்  இம்மதகும் உள்ளது வேதனைக்குரியது

        சோழர் காலத்தில் இந்த மதகுத்  திறப்பான்கள் மரப்  பலகைகளில் இருந்திருக்கிறது. பொதுப் பணித் துறையினர் அதை ரோலிங் ஷட்டர்களாக மாற்றிய போது, மதகுப் பாலத்தின் அடியில் உள்ள கல்வெட்டில் பாதியை அதன் முக்கியத்துவத்தை உணராமல் சுவர் வைத்து மறைத்து விட்டார்கள் . தொல்லியல் துறை அந்த அளவு கவனமாக இதைப் பாதுகாத்து வந்துள்ளனர்  என்பதற்கு இந்த சுவர் ஒரு சான்று

           இந்த  ஊரில்  தமிழ்ச்சங்கம்  மற்றும் ரோட்டரி அமைப்பினர், அரசினர் கலைக் கல்லூரி  என பல அமைப்புகள் உள்ளதை இங்குக்  காணமுடிகின்றது. ஆனால் ஒரு அமைப்புக் கூட இதன் முக்கியத்துவம் உணர்ந்து இங்கு அதன் விபரங்கள் அடங்கிய பதாகை அடங்கிய குறிப்பு வைக்காதது வேதனை அளிக்கின்றது. வெளிநாடுகளில் 100 ஆண்டுகள்  ஆனாலே அதன் பெருமை உணர்ந்து கொண்டாடுகின்றனர். 800 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்வெட்டை முசிறியில்  கண்டுகொள்ளாமல் இருப்பது நம் மக்களின்  ஆர்வமின்மையை உணர்த்துகின்றது.

 

 

நடந்தாய் வாழி காவேரி!  நாடெங்குமே செழிக்க!

நன்மையெல்லாம் சிறக்க!

“உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை

சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி”

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக்

கருங்கயற்கண் விழத்தெல்கி நடந்தாய் வாழி காவேரி”

 என்று  சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள்  பாடிச் சிறப்பித்த காவிரியின் சிறப்பினை வரலாறு அறியாத மன்னர்கள் சிறப்பாகத்தான் கையாண்டனர். எல்லாம் அறிந்த நாம் வரலாறை  இழப்போம் என்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் இப்படி பல சான்றுகள்.   யாரேனும் இதை மீட்டெடுப்பார்கள் என்று நம்புவோமாக ........