Wednesday, 24 June 2015

தவத்திரு தயானந்த சரசுவதி சுவாமிகள்

வணக்கம் .ஓர் இனிய காலைப் பொழுதில் ஆனைகட்டி தயானந்த சரசுவதி சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்ற போது எடுத்த படம்.

தனிமை

வணக்கம் . யாருமில்லாத அவினாசி சாலையில் பைக் பயணத்தில்   எடுத்த புகைப்படம்.

Sunday, 21 June 2015

மாவீரன் திரு.பிரபாகரன்..

#‎பிரபாகரன்‬ பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் ‪#‎சிலிர்க்கச்‬ செய்திருக்கும்
மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...
தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!
01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!
02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!
03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!
04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!
05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!
06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."
07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!
08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!
09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!
10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!
11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!
12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!
13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!
14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!
15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!
16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!
17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!
18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!
19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!
20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!
21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!
22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"
23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!
24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!
25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்...
                                                                                ஆனந்த விகடன் இதழ்  வாயிலாக.....

Friday, 19 June 2015

தனுஷ்கோடி பயணத்தில் சந்தித்த மனிதர்களும் தனுஷ்கோடியின் சில காட்சிகளும்...





 மின்சாரம் தராத அரசு ஏர்டெல்-க்கு டவர் அமைக்க அனுமதி கொடுத்துள்ள மர்மம்...
 இலங்கை ராணுவத்தால் கணவனை இழந்த பெண் மனநிலை பாதிப்புடன் ...
 ஊடுருவிய பன்னாட்டு குளிர்பானங்கள்..

 தனுஷ்கோடி மக்களின் வசிப்பிடம்...
 சுற்றுலா வாசிகளின் பிளாஸ்டிக் குப்பைகள்...
 நீச்சல் காளி அவர்கள்....
 அழிந்து போன ரயில் நிலையம்...
 திரு.பாபு அவர்கள்...
 இந்தியாவின் கடைசி கிராமத்திற்கு செல்லும் வழி.....


 இந்தியாவின் கடைசி கிராமத்திற்கு செல்லும் வழி

மின்சாரம் ,குடிநீர் என அடிப்படை வசதிகள் இல்லாத மக்களின் வசிப்பிடம்...ஓட்டுக்கு வருகை புரியும் அரசியல்வியாதிகள் கவனிப்பார்களா?

                                                                                    அன்புக்கு ஏங்கும் மனிதர்களுடன்
                                                                                                                பொ.சங்கர்.

Monday, 15 June 2015

அழியும் பேருயிர்...யானைகள்..

அழியும் பேருயிர் - யானைகள் : திரு.ச.முகமது அலி & க.யோகானந்த்






"அழியும் பேருயிர் : யானைகள்" என்ற நூலை வாசித்து முடிக்கும் போது, எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உலகின் மிகப் பெரிய தரை வாழ் விலங்காக விளங்கும் யானைகள் எப்படி அழிவை சந்திக்கின்றன என்னும் பேருண்மை நம் முகத்தில் அறைகிறது. நம் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் யானைகள் பிரிக்க முடியாதவை. ஆனால் அவற்றின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் இந்தயாவில் லட்சக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளன.


ஆப்ரிக்க யானைகளும் லட்சகணக்கில் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. இன்று யானைகள் அழிந்து வருவதற்கு நம் மக்களின் மூட நம்பிக்கையும், இயற்கையைப் பற்றிய புரிதல் இல்லாததுமே எனச் சாடுகிறார் ஆசிரியர். இன்றைய சூழ்நிலையில் கூட, ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் யானைகளை ஒரு கொடூர விலங்காக சித்தரிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்.


"மனிதர் அன்போடு வளர்ப்பதாகக் கூறப்படும் யானைகள் வண்டி இழுத்தன, கடும் வெயிலில் ஏர் உழுதன, மூட்டை சுமந்தன, கல்லையும், கட்டைகளையும் இழுக்கின்றன. வழிபாட்டுத்தலங்களில் வெந்ததைத் தின்று விதி வந்து சாகும்வரை வதைபட்டு பெருமை காட்டுகின்றன. சர்க்கஸ் செய்கின்றன, தன் சகோதரனுடன் சண்டையிட வைக்கப்பட்டன. மன்னர்கள் என்ற மமதை கொண்ட குண்டர்களைத் தூக்கிச் சுமந்தன, பிச்சை எடுக்கின்றன, அடிமையாக சந்தைகளில் விற்பனைக்குள்ளாகின்றன, கெட்டவார்த்தைகளால் திட்டு வாங்குகின்றன, அடி உதைகளால் ரத்தம் சிந்தி அழுகின்றன.



வேண்டிய நீரும், உணவும், நிழலும் கிடைக்காமல் துடிக்கின்றன, அழுக்கடைந்த, கூச்சல் மிகுந்த வீதிகளில் அலைக்கழிக்கப்படுகின்றன, தனிமையில் தவிக்கின்றன, மொட்டை வெயில், புகைதூசிகளால் மன உளைச்சலடைகின்றன, இயற்கையான சத்துள்ள ஆகாரமின்றி நோயால் கஷ்டப்படுகின்றன, தன் வாழ்விடத்தை தானே அழிக்கவும், தன் இனத்தை தானே பிடிக்கவும் உள்ளாக்கப்படுகின்றன. “இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’’ என கொல்லப்பட்டு தனது தந்தத்திலேயே செய்த தன் உருவத்தைச் சுமக்கும் கொடுமைக்கு ஆளாகின்றன. ஆனால் இவ்வளவையும் பரிதாபத்திற்குரிய யானைகள் மகிழ்ச்சியோடு செய்வதாகவே நினைக்கிறது `ஆறறிவு கொண்ட’ மாந்தரினம்" என்ற இவருடைய எழுத்துக்கள், யானைகள் மீது ஆசிரியர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும், நம் சமூகத்தின் மீதான கோபத்தையும் பிரதிபலிக்கிறது.


யானைகள் அக ஒலி மூலம் பேசிக் கொள்கின்றன என்ற செய்திகள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ஐந்து கி.மீ தொலைவிலுள்ள யானைகள் அக ஒலி மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன எனும் செய்தி வியப்பை அளிக்கிறது. இதில் மேலும் ஒரு ஆச்சர்யம் அந்த ஒலி மனிதர்களால் உணர முடியாத அளவுக்கு மிக நுட்பமாக இருப்பதுதான்.


மேலும் ஆப்ரிக்க மற்றும் ஆசிய யானைகளுக்கு இடையேயான வேறுபாடுகளையும் அவற்றின் வாழிடப் பரவலையும் எளிமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆசிய யானைகளின் தும்பிக்கை ஒரு விரல் நுனியையும் ஆப்ரிக்க யானைகளின் தும்பிக்கை இரண்டு விரல் நுனியையும் கொண்டிருப்பது போன்ற செய்திகள், யானைகளை எளிதில் வேறுபடுத்தி புரிந்து கொள்ள உதவுகிறது.


பள்ளிபருவத்திலேயே எல்லோரும் இந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென விரும்புகிறேன்...




                                                             நன்றி..திரு.சதிஷ் அவர்களின் இணையப் பக்கத்தில் இருந்து...
                                                                                                          அன்புடன்
                                                                                                          பொ.சங்கர்

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக...

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்



 அழிந்து வரும் இயற்கையின் மீதான தன்னுடைய வருத்தத்தை "இன்னும் பிறக்காத தலைமுறைக்காக" என்னும் நூலில் கனத்த இதயத்துடன் பதிவு செய்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள். தமிழ் நாட்டில் காட்டுயிர் பற்றிய ஆர்வம் குறைவாக இருப்பது பற்றியும், காட்டுயிர் தொடர்பான பல சொற்கள் தமிழில் வழக்கொழிந்து வருவது பற்றியும் வேதனை தெரிவிக்கிறார்.

புலிகள் ஏன் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற இவருடைய விளக்கம் தமிழ் நாடு அரசின் பாட புத்தகங்களில் இருக்க வேண்டும். ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் ஒரு குறுகிய மூளைக்குள் அடங்கி இருப்பதும் அதை மோடி மற்ற மாநிலங்களுக்கு தர மறுப்பது பற்றியும் பதிவு செய்திருக்கிறார். தமிழ் நாட்டில் வாழ்ந்த கான மயிலும், சிவிங்கப் புலியும் இன்று முற்றிலும் அழிந்து விட்ட செய்தி எத்தனை பேருக்கு தெரியும்?


அமராவதி ஆற்றில் வாழ்ந்த மயில் கெண்டை என்ற மீன் இனம் முற்றிலும் அழிந்து விட்ட செய்தி மிகவும் துயரப்படுத்தியது. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த நதி இன்று வறண்டு போய்க் கிடக்கிறது. திரு.தியடோர் அவர்களின் சிறு வயதில் அமராவதி எப்படி இருந்தது என்பதை வாசிக்கும் போது, நாம் எப்படிப்பட்ட ஒரு ஆற்றை இழந்திருக்கிறோம் என்பது வேதனை அளிக்கிறது. குளங்களையும் ஏரிகளையும் ஆழப்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்காமல், நாடு முழுவதும் அணைகள் கட்டி, இன்று ஆறுகளும் வீணாகி, ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சீரழிந்து வருவதை பதிவு செய்திருக்கிறார்.


பழனி மலை தொடர்ச்சியில் இருந்த குறிஞ்சி செடிகளின் வாழ்விடங்கள் சிதைக்கப்ட்டு இன்று அவை ஒரு குறுகிய இடத்துக்குள் இருப்பதை பற்ற்யும் கவலை தெரிவிக்கிறார். நம் வீடுகளை சுற்றி இருக்கும் விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். ஆறுகள் இணைக்கப்படுவதால்  ஏற்படும் அபாயங்களையும் சுட்டிக் காட்டுகிறார். கங்கை எப்படி உருவாகிறது (இமயமலையின் பனிச் சிகரங்களில்), காவிரியும் வைகையும் (மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை மற்றும் நீரை தன்னுள் தக்கவைத்து ஆண்டு முழுவதும் நீரை வெளிவிடும் அடர்ந்த காடு)  எப்படி உருவாகிறது என்ற புரிதல் இருந்தாலே நம்மால் அதன் விளைவுகளை புரிந்து கொள்ள முடியும்.


இயற்கைக்காக இது வரை பாடுபட்டவர்களை பற்றியும் இந்த நூலில் பதிவு செய்திருப்பது கூடுதல் சிறப்பு. திரு.ஜே.சி.குமரப்பா, மா.கிருஷ்ணன், ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (இந்திய காங்கிரசை தோற்றுவித்தவர் என்ற செய்தி மட்டுமே பல வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவர் பறவைகளை ஆராய்ச்சி செய்து அவற்றின் பெயர்களை பதிவு செய்தவர் என்ற செய்தியை இந்த நூலில் தான் முதல் முறையாக படித்தேன்), பி.கே.மேத்யூ, ழான் ழியோனோ போன்றவர்களின் பணிகளையும் சிறப்பாக எழுதியுள்ளார்.


இன்னும் பிறக்காத தலைமுறைக்காக மட்டும் இல்லை இந்த நூல். இன்றைய தலைமுறையும் கூட இயற்கையில் இழந்தவற்றையும் , இழந்து வருவது பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது.


                                                           நன்றி..திண்ணை இணையம் மற்றும் சதிஷ் அவர்கள்..
                                                                                                    அன்புடன்
                                                                                                  பொ.சங்கர்

காடோடி நூல்....

சமீபத்தில் நான் வாசித்த ஒரு நூலை இன்று அறிமுகப்படுத்துவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். திரு.நக்கீரன் அவர்கள் எழுதிய "காடோடி" என்ற நூலை வாசித்தேன்.

தமிழில் எத்தனையோ நாவல்கள் எழுதப்பட்ட போதிலும், காட்டை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்கள் மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். அதிலும் காட்டுயிரை பற்றிய புரிதலோடு, காட்டின் அழிவுகள் ஏற்படுத்தும் விளைவுகளை கருத்தில் கொண்டு இதுவரை நாவல் எழுதப்பட்டுள்ளதா என்பது சந்தேகமே. காடோடி ஒரு தொடக்கம் என்றே நினைக்கிறேன். காட்டுயிர் பற்றிய கட்டுரை நூல்களே எழுதப்பட்டு வந்த நிலையில் ஒரு கதைக்குள்ளும் காட்டுயிர் பேனலின் அவசியத்தை உணர்த்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார், திரு.நக்கீரன் அவர்கள்.




ஒரு பறவை பறக்கிறது என்ற காலம் கடந்து ஒரு இருவாசி பறக்கிறது என்பதை நாவலில் வாசிக்கும் போது, தமிழ் எழுத்துலகில் காட்டுயிர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது. இந்த நாவலின் மையப்பொருளே காடுகள் அழிவது பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் தான். தொல்குடி மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதும், இன்று மனிதர்கள் தங்கள் பேராசைக்காக காட்டை எப்படி கொள்ளை அடிக்கிறார்கள் என்பதையும் தன் அனுபவத்தின் மூலமாக நாவலில் செதுக்கியிருக்கிறார்.

போர்னியோ காடுகள் அழிக்கப்படுவது குறித்து, அதிக விழிப்புணர்வு நம் சமூகத்தில் இல்லை. அந்த வகையில் இந்த நூல், நாம் அறிந்திராத ஒரு நிலப்பகுதியை அப்படியே கண்முன் நிறுத்துகிறது.

மரங்களை பெரிய அளவில் வணிகம் செய்யும் மேற்கத்திய நாடுகளின் பார்வையில் மரம் என்றால் என்ன அர்த்தம் என்று தொடங்குகிறது இந்த நூல் :

மரம் என்றால் அது இலைகள் அல்ல. பூக்கள் அல்ல. காய்கள் அல்ல. கனிகளும் அல்ல. ஏன். அது மரமே அல்ல. மரம் என்றால் அது வெறும் டாலர், டாலர், டாலர் மட்டுமே.

காடழிப்பு மெல்ல மெல்ல காட்டில் எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஒவ்வொரு காட்டுயிரும் எப்படியான சிக்கலை சந்திக்க நேரிடும் என காட்டுயிர் மீதான அக்கறையோடும் அறிவியல் புரிதலோடும் எழுதிருக்கிறார். காட்டை சுற்றுலாதலமாகவும், மது அருந்தும் இடமாகவும் மட்டுமே பார்க்கும் இன்றைய தலைமுறைக்கு, காட்டை பற்றிய புரிதலை இந்த நூல் உருவாகும். இந்த நாவலில் வரும் பிலியவ் என்ற தொல்குடி மனிதர் தான் நாவலின் நாயகன். வாசித்துப் பாருங்கள். பனுவலில் இந்த நூலை பெறலாம்.

                                            திரு.சதிஸ் அவர்களின் இணையத்தில் இருந்து...
                                                                                அன்புடன்
                                                                              பொ.சங்கர்

தமிழ்க் கல்லூரிகள் ...தி இந்து வாயிலாக..

கடைவிரித்தேன்... கொள்வாரில்லை என்பது எதற்குப் பொருந்துமோ இல்லையோ? அது தமிழகத்தில் தமிழை பாடமாக வைத்து, அதை ஒரு துறையாக அங்கீகரித்திருக்கும் கல்லூரிகளுக்குப் பொருந்தும். தமிழ் பாடம் படிக்க மாணவர்களைத் தேடி திண்டாட வேண்டியிருப்பதாக கூறுகின்றனர் தமிழ்த்துறை கல்வியாளர்கள்.
தமிழ்ப் பாடத்தை முதன்மையாக எடுத்து ஆய்வு செய்து வரும் ஆய்வு மாணவர்கள் சிலர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கல்லூரிகளும், 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் உள்ளன. அரசு கலைக் கல்லூரி, பொள்ளாச்சியில் ஒரு தனியார் கல்லூரி தவிர வேறு எங்கும் தமிழுக்கு பி.ஏ இளங்கலை பட்டப் படிப்புகள் இல்லை. பாரதியார் பல்கலைக்கழகமும், இரண்டு அரசு உதவி பெறும் கல்லூரிகளும் தமிழ் எம்.ஏ பாடத்தை பெயரளவுக்கே வைத்துள்ளன. முழுமையான மாணவர்கள் சேர்க்கை இல்லை. இந்தக் கல்லூரிகளில் தமிழ் பாடத்தை எடுத்துப் படிக்க மாணவர்கள் விண்ணப்பங்கள் வாங்குவது மிகக் குறைவு. கடைசியாகவே மாணவர்கள் சேருகிறார்கள், வேறு பாடம் கிடைத்தால் டி.சி-யை வாங்கிச் சென்றுவிடுகிறார்கள்.
தமிழகம் முழுக்க உள்ள தமிழ்க் கல்லூரிகளின் பாடு பெரும் திண்டாட்டம். 1938-ம் ஆண்டு திண்டிவனம் அருகே மயிலம் சிவஞான பாலய்ய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியும், தஞ்சாவூரில் கரந்தை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்க் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டன.
கும்பகோணம் திருப்பனந்தாள் மடம் காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரி 1945-லும், தர்மபுரம் ஆதீனம் சார்பாக தர்மபுரம் தமிழ்க் கல்லூரி 1946-லும், கோயம்புத்தூர் பேரூர் ஆதீனம் சார்பாக தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி 1953-லும், மேலைச் சிவபுரியில் கணேசர் செந்தமிழ்க் கல்லூரி 1955-லும், அதன்பிறகு பாபநாசம் அருள்நெறி திருப்பணி மன்றம் சார்பாக திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியும் தொடங்கப்பட்டன.
இவற்றில், திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பாடத்தைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் குறைவு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டுவிட்டது. பிற தமிழ்க் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது பத்தாண்டுகளாகவே திண்டாட்டமாகத்தான் உள்ளது.
கோவை சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பி.லிட் பாடப் பிரிவில் 60 சீட்டுகள் உள்ளன. அவற்றில் 51 சீட்டுகளே சென்ற ஆண்டு கடைசிவரை காத்திருந்து நிரப்பப்பட்டன. மற்ற மாவட்டங்களில் உள்ள தமிழ்க் கல்லூரிகளில் இந்த அளவு கூட மாணவர்கள் சேர்க்கை இல்லை. இதே கல்லூரியில் எம்.ஏ தமிழ் 25 இடங்கள் உள்ளன. அதில் 15 இடங்களே நிரம்பின. மற்ற தமிழ்க் கல்லூரிகளில் பாதி கூட இல்லை.
தமிழ் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்களுக்கு தமிழ்நாடு தொல்பொருள்துறை, இந்து சமய அறநிலையத் துறை, பத்திரிகை, தொலைக்காட்சிகள் என நிறைய வாய்ப்புகள் தற்போது உள்ளன. இணையதளங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் மட்டுமல்லாது, லண்டன், கனடா, பிலிப்பைன்ஸ, இலங்கை என அனைத்து நாடுகளிலும் தமிழ் வளர்க்கும் ஆர்வலர்கள் கூட்டம் பெருகிவிட்டது.
அவர்கள் எல்லாம் இணையதளங்கள் மூலம் பதிப்பகங்கள், பத்திரிகைகள் நடத்துகிறார்கள். அவற்றுக்கு நிறைய பிழை திருத்துந ர்கள், தட்டச்சர்கள் தேவைப்படு கிறார்கள்.
பலருக்கு இதன்மூலம் வெளிநாட்டு பணி வாய்ப்பும் அமைகிறது. ஆனால், அது புரி யாமல் தமிழை தீண்டத்தகாத தாகவே மாணவ சமுதாயம் பார்ப்பது வேதனைக்குரியதாக உள்ளது. ஆனால், எந்த ஒரு விஷயம் அருகி வருகிறதோ அதற்கு எதிர்காலத்தில் நிறைய மதிப்பு வரும். விலைமதிக்க முடியாததாகவும் மாறும். அது தமிழுக்கும் பொருந்தும் என்பதே உண்மை. அதை உணர்ந்து மாணவர்கள் தமிழில் பட்டம் பெற முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தனர். 


                                                            திரு.கா.சு.வேலாயுதம் அவர்களுக்கு தமிழ்க்கல்லூரிகள் பற்றிய தரவுகளைக் கொடுத்து இச்செய்தி வெளிவர உதவினேன்.    
                                                                                                        அன்புடன் 
                                                                                                       பொ.சங்கர்...

சிவப்பிரகாச சுவாமிகள்...தரும்புர ஆதீனம்..


                                      தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள்


சிவப்பிரகாச சுவாமிகள், காஞ்சிபுரத்தில் இறைவன் திருவருளால்


பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை பறிகொடுத்துவிட்டதால்

தனது தமையன் வேலாயுதம், கருணைப்பிரகாசம்,தமக்கை

ஞானாம்பிகை ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு

வந்து சேர்ந்தார். தனது தந்தையின் குருவான குருதேவரை தரிசித்து. அவருடனே தங்கியிருந்து கல்வி கற்றார். சிவஞானத்தில் பெருநிலை அடையப்பெற்ற குருதேவரிடம் தீட்சை பெற்றார்.

சதா சிவசிந்தனையிற் திளைத்திருந்தார், சுவாமிகள். திருவண்ணாமலை கிரிவலத்தின் பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டார்.





ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் அருணாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி-அன்றைய தினத்தில் 100 பாடல்கள் இயற்றினார்.
அதற்கு “சோண சைலமாலை” என்று பெயர். சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற ஆசையினால் தமது சகோதரர்களுடன் தென்னகப் பிரயாணம் தொடங்கினார். திருச்சிக்கருகில் உள்ள பெரம்பலூரில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து சிவபூஜையை செய்து வந்தார்.


அங்கிருந்து திருநெல்வேலி வந்து தாமிரபரணி ஆற்றங்கரையருகில் உள்ள சிந்துபூத்துறைக்கு வந்து சேர்ந்தார்.அவ்வூரிலுள்ள தர்மபுர ஆதினத்து கட்டளை தம்பிரான் வெள்ளியம்பல சுவாமிகளுக்கு சீடனாக இருந்து கல்வி கற்க விரும்பினார்.


வெள்ளியம்பலவாணர் தருமை ஆதீனம் நான்காம் பட்டத்தில் விளங்கிய குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றவர்,காசிக்கு சென்று குமரகுருபரரிடம் கல்வி பயின்றவர்.
அத்தகைய இலக்கண இலக்கிய செம்மலிடம் மாணாக்கன் ஆவதைப்
பெரும் பேறாகக் கருதினார் சிவப்பிரகாச சுவாமிகள்.


சிவப்பிரகாசரின் தமிழார்வத்தை அறிந்த முனிவர்- அவரின் ஆற்றலை அறிய விரும்பி “கு” என்று தொடங்கி “கு” என்று முடித்து இடையே ஊருடையான் என்று வருமாறு நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு ஆணையிட்டார். சுவாமிகளும் தயங்காமல் உடனே பாடிக் காட்டினார்.
வெண்பாவைக் கேட்டவுடன் சிவப்பிரகாசரின் ஆற்றலைக் கண்டு
வெள்ளியம்பல சுவாமிகள் மிகுந்த வியப்புற்றார்.அவரை அப்படியே ஆரத் தழுவிகொண்டார்.” இத்தகைய ஆற்றல் படைத்த உமக்கா தமிழ் சொல்லித்தர வேண்டும் “ என்று கேட்டார். வெள்ளியம்பல சுவாமிகள், சிவப்பிரகாசரை தன்னுடன் இருத்திக்கொண்டு சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலாயுத சுவாமிகள், கருணைப்பிரகாச சுவாமிகள் ஆகிய இருவருக்கும் பதினைந்து நாட்களில் ஐந்திலக்கணங்களையும்
கற்றுக் கொடுத்தார்.

சிவப்பிரகாசரின் எண்ணம் நிறைவேறியது. மகிழ்ச்சியில் மலர்ந்தார். பெரம்பலூரில் தனக்கு காணிக்கையாக கொடுத்த முந்நூறு பொற்காசுகளை தனது குருவின் காலடியில் சமர்ப்பித்தார்.வெள்ளியம்பல சுவாமிகளோ,” இவை எமக்கு வேண்டா, அதற்குப் பதிலாக திருச்செந்தூரில் எம்மை இகழ்ந்து பேசுதலையே இயல்பாக கொண்டு திரியும் ஒரு தமிழ்ப்புலவனின் அகங்காரத்தை ஒடுக்கி எம் கால்களில் விழச் செய்ய வேண்டும் “என்றார்.

குருவின் அவாவை நிறைவேற்றும் பொருட்டு திருச்செந்தூர் புறப்பட்டார். கோவிலினுள் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை தரிசித்து விட்டு-வலம் வந்தார்.அப்பொழுது முனிவர் சொன்ன அப்புலவனைக் கண்டார். புலவனும், சுவாமிகளைக் கண்டு இவர் வெள்ளியம்பல
சுவாமிகளிடமிருந்து வந்தவர் என்பதையறிந்து வசை மாறி பொழிந்தான். இருவருக்கும் விவாதம் முற்றியது.

புலவன் சுவாமிகளை பந்தயத்திற்கு அழைத்தான். இருவரும்
நீரோட்டகயமகம் பாடவேண்டும் என்றும் யார் முதலில் முப்பது பாடலை பாடி முடிக்கிறார்களோ அவரே ஜெயித்தவர்- தோற்பவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும் என்றான். சிவப்பிரகாச சுவாமிகளும் சிறிதும் தயங்காது பாடி முடித்தார். ஆனால் புலவனால் ஒரு பாடல் கூட பாட முடியவில்லை-வெட்கித் தலைகுனிந்து சுவாமிகளிடம் சரணடைந்தான்.
அதற்குச் சுவாமிகள் அடியேன் வெள்ளியம்பல சுவாமிகளின் அடிமை-நீர் அவருக்கே அடிமையாதல் முறை” என்று கூறி தம் குருநாதரிடம் அழைத்துச் சென்று அவருக்கே அடிமையாக்கினார்.

வெள்ளியம்பல சுவாமிகள் அகங்காரம் கொண்ட  புலவனின் அகந்தையை அடக்கி அவனுடைய கவனத்தை பரம் பொருளிடத்தே செலுத்த வைத்து “நல்வாழ்வு-வாழ்ந்து வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.


குருநாதரிடம் பிரியாவிடை பெற்று தமது இளவல்களுடன்  துறைமங்கலம் வந்து, பின்னர் அங்கிருந்து வாலிகண்டபுரத்தின் வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி சிவபூஜை செய்துவந்தார்.

வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில் தங்கியிருந்தவாறே -திருவெங்கைக் கோவை,திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை அலங்காரம் என்னும் நான்கு நூல்களைத் தந்தருளினார். சிவப்பிரகாச சுவாமிகள், தமது உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து-அண்ணாமலை ரெட்டியாருடன் புனித பயணம்
புறப்பட்டார்.

சிதம்பரத்திற்கு வந்து, அங்கு ஆத்ம சாதனையில் தீவிரமாக இறங்கினார். அங்கு சிவப்பிரகாச விசாகம்,தருக்க பரிபாஷை, சதமணிமாலை, நான்மணி மாலை முதலிய நூலகளை செய்தருளினார்.

அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவபெருமானை தரிசனம் செய்து -சில காலம் தங்கியிருந்து விட்டு-பின்னர் காஞ்சிபுரத்திற்கு
புறப்பட்டார்கள். வழியில் சாந்தலிங்க சுவாமிகளை கண்டு அளவளாவி
மகிழ்ந்து, அவருடன் சிவஞான பாலய சுவாமிகளை தரிசிக்க புதுவை
வந்து,அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தனர்.


சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய சுவாமிகளின் பேராற்றலை -பெருமைகளை வானளாவ புகழ்ந்து கூறி, அவரைப் பற்றி ஒரு பா பாடுங்களேன் என்றார்.அதற்கு சிவப்பிரகாச சுவாமிகள்- இறைவனைத் துதிக்கும் நாவால்  மனிதனை துதியேன் என்று கடுமையாக கூறி விட்டார்.

இருவரும் அருகிலுள்ள புத்துப்பட்டு ஐயனார் கோவிலின் பின்புறம்
அன்றிரவு தங்கினர்.சிவப்பிரகாச சுவாமிகளின் கனவில் முருகப் பெருமான்ம்மயில் வாகனத்தோடு காட்சியளித்தார். நிறைய பூக்களை முருகப்பெருமான் சுவாமிகளிடம் கொடுத்து இவற்றை ஆரமாக தொடுத்து எமக்குச் சூட்டுவாய் என்றருளினார்.

காலையில் கண் விழித்ததும் சாந்தலிங்க சுவாமிகளிடம் கனவில் முருகப் பெருமான் வந்ததை தெரிவித்தார். சாந்தலிங்க சுவாமிகள்,சிவஞான பலைய சுவாமிகளுக்கு, முருகப் பெருமான் குரு.அவர் மீது பேரன்பு கொண்டு பெரும் பூஜை செய்து வருகிறார்-தேசிகர்.

சிவஞான பாலைய சுவாமிகளின் பெருமையை உணர்த்துவதற்காகவே முருகபெருமான் சிவப்பிரகாச சுவாமிகளின்  கனவில் வந்து உணர்த்தியுள்ளார்- என்று விளக்கினார். மறுநாள் சிவஞான பாலைய சுவாமிகளை இருவரும் சந்தித்தனர். தாலாட்டு, நெஞ்சு விடு தூது என்ற இரு பிரபந்தங்களைப் பாடி தேசிகர் சன்னிதானத்தில் அரங்கேற்றினார்-சிவப்பிரகாச சுவாமிகள்.

சிவஞான பாலைய சுவாமிகளும், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு ஞானாபதேசம் செய்தார். இருவரும் குருவின் சீடர்களானார்கள்.சிவஞான பாலைய சுவாமிகளின் சொற்படியே தன் தமக்கையை சாந்தலிங்க சுவாமிகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.தேசிகரிடம் விடைபெற்று, காஞ்சிபுரத்திற்கு வந்து கன்னட மொழியில் எழுதப்பட்ட விவேக சிந்தாமணி என்னும் நூலின் ஒரு பகுதியை தமிழில் வேதாந்த சூடாமணி என்று மொழிபெயர்த்தார்.மேலும் சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்கலீலை என்ற நூல்களை எழுதினார். திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்ற இரண்டு நூல்களைதன் ஞானாசிரியர் மேல் பாடினார்.


காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு கூவம் என்னும் சிவத்தலத்தை
அடைந்து திருக்கூவப்புராணம் பாடி அருளினார். அங்கிருந்து புறப்பட்டு பொம்மையாபாளையத்திற்கு வந்து தன் ஞானாசிரியரை தரிசித்து லிங்கதத்துவம், அனுபவம், ஈசனின் உறைவிடம்  அவத்தைகள் போன்ற நுணுக்கமான தத்துவ விஷயங்களை தெரிந்துகொண்டார். பின்னர் விருத்தாசலம் புறப்பட்டார்.

சிவஞான பாலைய சுவாமிகள் இறைவனோடு கலந்த செய்தியை
கேள்விப்பட்டு மறுபடி பிரம்மபுரத்திற்கு வந்தடைந்தார். குருவின்
சந்நிதானத்தில் வீழ்ந்து, அழுது புலம்பினார். தம் குருவின் மீதிருந்த
அளவற்ற அன்பினால் பலமுறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார்.
பொம்மையார்பாளைய கடலோரத்தில் அமர்ந்து மணலிலே “நன்னெறி”
வெண்பா நாற்பதையும் தன் விரலால் எழுத, அங்குள்ளோர் அதை
எழுதிக் கொண்டனர்.

காலம் வேகமாக சென்றது. பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை வந்து சிவதலங்களை வணங்கி விட்டு,நல்லாத்தூர் வந்து சேர்ந்தார்.அது ஒரு சிற்றூர்.எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும், கள்ளிக் காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது. அக்கோயிலின் அருகே உள்ள நுணா மரத்தின் கீழ் அமர்ந்து தன் தவத்தை மேற்கொண்டார்.

அதிகாலையில் எழுந்து நல்லாற்றிலிருந்து புறப்பட்டு வில்லியனூர் அருகே ஓடும் அற்றில் நீராடுவார்.அங்குள்ள வில்வ இலைகளை
சிவபெருமான் பூஜைக்காக பறித்துக் கொண்டு, நல்லாற்றூருக்கு அதிகாலையிலேயே சென்று விடுவார்.


அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது, சிவஞான மகிமையும்அபிஷேக மாலையும் நெடுங்கழி நெடிலும், குறுங்கழி நெடிலும்,நிரஞ்சன மாலையும், கைத்தலமாலையும் சீகாளத்திப்புராணத்தில் கண்ணப்பச் சருக்கமும், நக்கீரச்சருக்கமும் எழுதினார்.

பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்தார்.தவம் முடிந்தது.தவ சித்தி பெற்றார்.சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின.அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது.தாம் சிவமாகும் காலம் வந்ததை உணர்ந்தார்.

புரட்டாசி மாதம- பௌர்னமி திதியில் பரம்பொருளோடு ஐக்கியமானார்.
எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை சமாதி வைப்பதற்காக அங்குள்ள நுணா மரம் வெட்டப் பட்டது.அந்த நுணா மரத்தின் கீழ் தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம். வெட்டப் பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய்ட்டார்கள். அக்கணமே அந்நுணா மரம் எரிந்து சாமபலாகியது.ஆனால் வீட்டிலிருந்த வேறு எந்தவொரு பொருளையும் அந்நெருப்பு தீண்டவில்லை.


சுவாமிகளின் காலம் 17-ம் நூற்றாண்டாகும்.சுவாமிகள் வாழ்ந்தது
32 ஆண்டுகள். சுவாமிகளின் நூல்களிலே ஆழ்ந்த சைவ சித்தாந்தக் கருத்துக்கள்,தெளிவான உயிர்நிலைத் தத்துவங்கள், மெய்ப் பொருளைக்
காட்டுகின்ற விரிவான தர்க்க பாஷை யாவும் மலை போல் குவிந்துள்ளன. முப்பத்திரண்டு வயதில் முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் தந்தருளியவர் ஓம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்.
                                                                                  நன்றி...தருமபுர ஆதீன இணைத்தில் இருந்து ......

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை.திரு.எஸ்.ராமகிருஷ்ணன்

 கலாப்ரியா கட்டுரை

பதினெட்டாம் நூற்றாண்டின் மழையை முன் வைத்து சில தூறல்கள்-கலாப்ரியா
அவனே
**
அந்தச் சிறுகதைக்குள்ளிருந்து
அவன் உடலை மீட்டு வர
மிகச் சிரமப்பட்டதாக
அவன் நண்பர்கள் சொன்னார்கள்
அங்கோர்வாட் கோயில் மண்டபச்
சிதிலங்களூடே பாம்பெனப்
பிதுங்கி நிற்கும்
மர வேர்கள் போல
அவன் அந்தக் கதையில்
அடிக் கோடிட்டிருந்த
வரிகள் பற்களைத்
துளைத்துக் கொண்டும்
கண்குழி
மூக்குப் பொந்து என்று
கபாலம் முழுக்க
இறுக்கிக் கொண்டிருந்ததாயும்
அதை எடுக்கவே
அதிகச் சிரமமென்றும்
அவன் உறவினர்களிடம்
சொன்னார்கள்
பிய்த்தெடுத்த வேர்கள்
தாது விருத்திக்குப்
பயன் படுமென்று
தாங்களே வைத்துக் கொண்டதாகவும்
சொன்னார்கள்
….. …… ……
இறப்பைத் தாங்கி வந்த
கருமாதிக் கடிதத்தை
வழக்கம் போல
கிழிக்க மறந்ததற்காக
மனைவியிடம்
கடிந்து கொண்டான்
எதிர்நாள் ஒன்றில்
அவனே
(யூமா வாசுகிக்கு)
இது 2000 வாக்கில் யூமா வாசுகியின் சிறு கதைத் தொகுப்பொன்றைப் படித்து விட்டு எழுதிய கவிதை. சிறுகதைத் தொகுப்புகளைப் படிக்கும் அனுபவம் ஒரு விதமான, நீச்சல் தெரிந்தவனே ஆற்றுத் தண்ணீரில் தெவங்கும் அனுபவம் போன்றது. இழுப்பும் எதிர் நீச்சலுமாய் திக்கு முக்காடிக் கொண்டிருக்கையில்,ஒரு சுழிப்பில் கதையே கொஞ்சங் கொஞ்சமாக கரைக்குத் தள்ளி விடும். ஆனால் அடுத்த கதைக்குள் மெல்லப் படியிறங்கும் ஆவல், ஒரு நல்ல கதாசிரியனைப் பொறுத்து தவிர்க்க முடியாது.
இப்படி ஒரு சூழலுக்குள்/ மாயச் சுழலுக்குள் அடிக்கடி நாம் வேண்டுமென்றே நம்மை வெவ்வேறு ஆளுமைகளின் சிறு கதைகளைப் படிக்கையில் அமிழ்த்திக் கொள்கிறோமென்று படுகிறது..எஸ்.ராமகிருஷ்ணன் நம் காலத்தின் முக்கியமான ஆளுமை. அவர் யாருடனும் இயல்பாக எவ்வளவு நேரமும் உரையாடக் கூடியவர், கதையாடக் கூடியவர். இதைத் தன்னுடைய பலமாகவே அவர் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார், அல்லது வெகு இயல்பாக அவரில் அது வளர்ந்திருக்கிறது. அவர் எப்போதுமே ஒரு கதை சொல்லி.ஆனால் கதை சொல்வது என்பது வேறு அதையே ஒரு சிறு கதையாக எழுதுவது என்பது வேறு. ஒரு நிகழ்வை, நடந்த கதையை அப்படியே சொல்லி விடலாம். அதை நல்ல சிறுகதையாக்க ஒரு அபூர்வக் கற்பனை வேண்டியிருக்கிறது. என்னுடைய உருள்பெருந்தேர் கட்டுரைகள் நினைவும் புனைவும் சேர்ந்தவைதான்.அதிலேயே ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன என்று நண்பர்கள் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அவற்றில் ஒன்று கூட சிறுகதையாகவில்லை. ஏதோ ஒரு போதாமை இருக்கிறது. கதை சொல்வது என்பது கயிற்றில் நடப்பவனை விவரிப்பது, சிறுகதை எழுதுவது என்பது கயிற்றில் நடப்பது, என்று எங்கோ படித்ததை இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
எஸ்.ராமகிருஷ்ணன் இந்தத் தொகுப்பின் முன்னுரையில் அழகாக இதைச் சார்ந்து ஒரு குறிப்பு சொல்லியிருக்கிறார்.’ இதிலுள்ள கதைகள் இரு வகைப்பட்டவை. ஒன்று கடந்த கால மௌனத்தைச் சிதறடித்து அதன் மீதான புனைவை உருவாக்குவது’ மற்றொன்று நகர வாழ்வில் எளிய சம்பவங்கள் கூட எவ்வளவு விசித்திரங்களையும் மனப்போக்கையும் உருவாக்குகின்றன. நம்மைச் சுற்றி எவ்வளவு திரைகள், கூண்டுகள் கயிறுகள் கட்டப்பட்டுள்ளன என்பதில் கவனம் கொள்கின்றன’, என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலுள்ள 27கதைகளை இந்த இரு வகைமையில் அடக்கி விடலாம்தான்.ஆனால் ஒரு படைப்பாளியின் பார்வைக்கு வாசகன் தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுக்க வேண்டியதில்லை. இவ்விரண்டு வகைமை தாண்டியும் எவ்வளவோ சொல்பவைதான் எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள். உதாரணத்திற்கு தலைப்புக் கதையான ‘பதினெட்டாம் நூற்றண்டின் மழை’ – அதன் உள்ளாக ஒரு சரித்திரம் ஓடுகிறது.போர்ஹேயின் மணல் புத்தகம் போல மலைவாசிகளின் மொழி வலேசா என்கிற மதப்பிரச்சாரகனுக்கு நினைவில் நிற்காமல் மறந்து மறந்து போய் விடுகிறது. அவன் அங்கு வந்த நோக்கம் எல்லாமே ஆதி வாசிகளின் அபூர்வங்களினால் சிதறடிக்கப் பட்டு விடுகிறது.
இன்றும் ஆதி வாசிகளின் அபூர்வ பழக்க வழக்கங்கள்,மருத்துவம், மாந்த்ரீகம் ஆச்சரியம் தரும் வகையில் நிலைத்து நிற்கிறது. இந்தக் கதையில் பர்மிய தேச ஆதிவாசிப்பெண்ணின் உடல் மிருதுத் தன்மை பற்றிக் கூறுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இதேபோல படகர் இனப் பெண்களின் உடல் மென்மையாக உள்ளதாகவும் அதை அவர்களே சொல்லிச் சட்டை மறைக்காத பெண்ணின் மேல் கையில் தொட்டுப் பார்க்கச் சொன்னதாகவும் ஒரு முறை கி.ரா. சொல்லிக் கொண்டிருந்தார். பிலிப்பைன்ஸ் பெண்கள் உடலும் அப்படி மிருதுவாய் இருக்கும் என்று சிங்கப்பூரில் சந்தித்த,சினேகிதியாகிவிட்ட ஒரு ஃபிலிப்பைன்ஸ் கவிதாயினி என்னிடம் சொன்னார். ஆனால் தொட்டுப் பார்க்கச் சொல்லவில்லை.
இதே போல ‘ஹசர் தினார்’என்கிற மாலிக் கபூர் பற்றிய கதை புதிய கோணத்தில் புனையப்பட்டுள்ள கதை. மாலிக்கபூரை அரவாணி என்றே சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதில் வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது.விவிலியத்தில் வருகிற ’சிட்டி ஆஃப் சோதோம்’ போல் ஒரு பால் புணர்ச்சியாளர் நகரமாக டில்லியைப் புனைவமைக்கிறார்.இதற்கான ஆதாரங்களை அவர் சலிப்பற்ற பயணங்கள் வாயிலாகக் கூடத் திரட்டியிருக்கலாம்.ஒரு பிரம்மாண்டமான நாடோடிக் கதையின் தன்மையில் சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் படித்து முடிக்கும்போது 377 வது சட்டப்பிரிவை உடனடியாக நீக்கச் சொல்லி அதன் எதிப்பாளர்கள் கூடப் போராடலாம் என்று தோன்றுகிறது. அவ்வளவு அழகியலோடு கையாளப் பட்டிருக்கிறது.
”துண்டு துண்டான நினைவுத் துகள்களாய் கரையும் இவ்வாழ்க்கையை எப்படியோ வாழ்ந்து காட்டுங்கள், எந்தப் பகுத்தறிவினாலும் வாழ்வின் அர்த்தத்தை தேடி அலைய வேண்டாம் நீங்கள் முதலில் எப்படியேனும் வாழ்ந்து விடுங்கள்.” என்று காம்யூ சொல்வது போல, எஸ்.ராமகிருஷ்ணன் கதை மாந்தர்கள் வாழ்க்கையை இப்படி வாழ்பவர்கள்தான். அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்க்கையின் பால் பெரிதும் நேர்மறையான நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். அப்படி ஒருவரால்த்தான் ஈடுபாடுமிக்க வாசிப்பும், வியப்புமிக்க பயணங்களும் மேற்கொள்ள முடியும். எஸ்.ராமகிருஷ்ணன்ஒரு மகத்தான வாசகன், சலிக்காத பயணி.
அவரே சொல்வது போல இன்றைய சிறுகதையின் முக்கிய சவால் அதைச் சொல்லும் முறை. எனவே இக்கதைகள் பல்வேறு சொல்லும் முறைகளை கதையாடல்களைக் கொண்டிருக்கின்றன. சில கதைகளின் மாய யதார்த்தம் கூட, யதார்த்த நிகழ் முறைகளிலிருந்து, வாழ்வின் இயல்பான தர்க்கங்களிலிருந்து அதிகமும் விலகுவதில்லை என்பதுவே எஸ்.ராமகிருஷ்ணன்கதைகளின் சிறப்பு.’வீட்டிற்கு அப்பால் எதுவுமில்லை’’‘ என்கிற கதையில் கண்ணுக்கு தோல் கட்டிய குதிரை போல தணிகை என்பவர் தன்னுடைய விஷயங்களை மட்டுமே பார்ப்பவராக ஒரு தணிக்கைப் பார்வையை ஏற்படுத்திக் கொள்கிறார்.( எனக்கென்னவோ தணிகை என்ற பெயருக்குப்பதிலாக ’தணிக்கை’ என்று அவருக்குப் பேர் சூட்டியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.) அப்புறம் அவருக்கு தேவையானது மட்டுமே பார்வையில் படும் ஒரு வகை மனப்பிறழ்வு வந்து விடுகிறது. இதில் எஸ்.ராமகிருஷ்ணன் கதையை வெகு இயல்பான தர்க்க நடையில் எழுதிச் செல்லுகிறார்.எல்லாமே வாழ்வியல், குறிப்பாக தமிழ் வாழ்வியல் சார்ந்த தர்க்கங்கள். காஃப்காவின் ’உருமாற்றம்’கதாநாயகன், க்ரகர் சம்சா போல தணிகை ஒரு முற்றான கரப்பான் பூச்சியாக மாறுவதில்லை. இங்குதான் எஸ்.ராமகிருஷ்ணனின் வெற்றி அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் தன் வாசிப்பின் பாதிப்புகள், தன் படைப்புகளை அணுக விடுவதேயில்லை.
வெயில், எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளிலும் சரி நெடுங்குருதி போல நாவல்களிலும் சரி தவறாது வித விதமான பாவனைகளில் தன் வெக்கையின் ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருக்கும். ஒன்றில் தாரை தாரையாக வழிந்து கொண்டிருக்கும் இன்னொன்றில் வெல்லப்பாகு போல பிசினாய் அப்பிக் கொள்ளும். இதன் ஊடாகத்தான் அவரது கதையும் பாத்திரங்களும் வாழ்கிறார்கள். ’நற்குடும்பம்’ கதையில் வருகிற அம்மா அவள் மேல் எவ்வளவு ’’வெயில்’ விழுந்தாலும் தாங்கிக் கொள்கிறாள். காஸ ப்ளாங்கா கதையில் வருகிற சிறுவனைப் போல அவள் அப்பா வரும் வரை பயணியர் அறையிலேயே அசையாது அமர்ந்திருப்பாள். கைசூம்பிய பிச்சைக்காரி கூட அவளிடம் தன் கைக்குழந்தையை ஒப்படைத்து விட்டு பஸ்ஸில் ஏறிப் பிச்சை கேட்பாள். இங்கேதான் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வது போல, சிறுகதைகள் நமது வாழ்வனுபவம் உருவாக்காத நினைவுகளை நம்முள் உருவாக்குகின்றன. இந்தக் கதாபாத்திரங்கள் நம்மைக் காலகாலமாகத் தொடர்கிறார்கள்.ஒரு கணம் நாம் அந்தப் பிச்சைக்காரியின் பிள்ளைச் சுமையை தாங்கிக் கொள்கிறவர்களாக, அதைப் பார்த்துக் கொள்கிறவர்களாக மாறி விடுகிறோம். மேன்ஷனில் நண்பர்களின் அறையில் ஒண்டிக் கொள்ளும் சாம்பல் கிண்ணமாக உபயோகப் படுத்தப்படும் ஒருவனாக நாமே உருக்கொள்கிறோம். நம்மில் பலர், இவ்வளவு துயரும் சேடிஸமும் அனுபவித்தது இல்லையென்றாலும் பணக்கார நண்பர்களிடம் கிட்டத்தட்ட இதே போல அனுபவித்திருப்பது நினைவுக்கு வரலாம். நான் ஓரளவு அனுபவப்பட்டிருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளில் வரும், பிச்சைக்காரி கேட்டுக்கொள்வது போன்ற கண நேர அவதானிப்புகள் இப்படித்தான் நம்மைக் கட்டிப் போட்டு, எங்கெங்கோ கூட்டிப் போய் விடுகின்றன.
சென்னை நகர் தன் துயரும் மாயையும் நிறைந்த போர்வைக்குள் ராமகிருஷ்ணனை ஏற்றுக் கொண்ட கால கட்டங்களை அவர் மீண்டும் வாழ்ந்து பார்க்கிறார், பேராலயம், ‘ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவிற்கும் சம்மந்தமில்லை’ போன்ற கதைகளில்.பேராலயம் படிக்கிற போது எலியட்டின் “Journey of the Magi’’ கவிதை படிப்பது போலப்ம் பேரார்வமாய் இருந்தது. காசுக் கடைகளில் தங்கத்தை துடைப்பதற்காக நாய்த் தோல் வைத்திருப்பார்கள்.அதை பெரும்பாலும் நாய்த்தோல் என்று சொல்லுவதில்லை.அது துடைத்துத் துடைத்து நைந்து அழுக்காக இருக்கும். அந்த நாய்த்தோலைப் போன்ற நினைவுகளிலிருந்து தன்னை அரவணைத்துக் கொண்ட சென்னையைப் பலகதைகளில் ராமகிருஷ்ணன் துடைத்து மெருகுடன் மீட்டெடுக்கிறார்.அவை எல்லாமே புனைவின் உச்சம் கொண்டவை.
மஞ்சள் கொக்கு என்ற கதை. ’நெருப்புச் சுடர்’ ஒன்று எரிவதில் எத்தனை விதம் இருக்கிறது என்ற ஆச்சரியத்தை உள்ளடக்கியது. வாழ்க்கை தண்டிக்கப்பட்ட ஒருவனை இந்தச் சுடரும் அதில் அவன் காண்கிற மஞ்சள் கொக்கும் எப்படியான மலர்ந்த விடுதலையை அவனுக்கு வழங்குகிறது, என்று கச்சிதமான புனைவுடன் சொல்லியிருக்கிறார். இந்த புனைவுக்கூர்மை எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளின் தனித்துவம். தன் புனைவை அவர் வாழ்வின் கணங்களிலிருந்தே எடுத்துக் கொள்கிறார். ஆன்மீக, தத்துவார்த்த தளங்களை அவசியமில்லாத பொழுது நாடுவதேயில்லை. புத்தன் இறங்காத குளம் போன்ற கதைகளில் சித்தார்த்தனை புத்தனை நோக்கிச் செலுத்திய வாழ்வு அடுக்குகளைச் சொல்லும்போது தேவையான அளவு சொல்கிறார்.அது இத்தொகுப்பின் சிறப்பான கதைகளில் ஒன்று. பௌத்த ஓவியங்களிலும் சிற்பங்களிலும் காணப்படும் தாமரை எந்தக் கலைஞனையும் கவர்ந்து நீரின் குளுமையை அவன் கற்பனையில் வழிய விடக்கூடியவை,
புத்தன்
தடாக நடுவின்
தாமரையைப் பார்க்கிறான்
ஏதோ நினைவுடன்
பாய்ந்து நீந்திப்
பறித்து வந்து நீட்டுகிறான்
ஆடு மேய்க்கும் சிறுவன்
புதிய முறுவலுடன்
அவனிடம் அன்று
கடன் வாங்கியதுதான்
புத்தனிடம் இன்று
நாம் காணும்
இன் முறுவல்
என்று நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். இதை எழுதுகையில் புத்த கயாவில் இருக்கும் அழகான தடாகத்தை நான் பார்த்திருக்கவில்லை. இந்தக் கதையையும் நான் படித்திருக்கவில்லை. ஆனால் குளமும் தாமரையும் எப்படியோ எல்லாக் கலைஞனின் புனைவுக்குள்ளும் நிறைந்திருக்கும் போல. நான் பார்த்தது கயாவின் குளம். எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வது கபிலவஸ்துவின் குளம். அதில் புத்தன் இறங்கவில்லை.ஆனால் கற்பனையில் எல்லாக் கலைஞனும் இறங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. எண்ணிறந்த புனைவை அது எல்லோரிலும் மலர்த்தியிருக்கும் போலிருக்கிறது.
இந்தக் கதையில் அற்புதமான வரிகள் அழகான ஜென் கவிதைகளாக வந்து விழுகின்றன. “தவளையைப் போல பாதி மூடிய கண்களால் உலகைக் கண்டு கொண்டிருப்பது போல….” என்று ஒரு வரி. “சித்தார்த்தன் தன் குழந்தையை நெருங்கிச் சென்று பார்க்கும்போது அது தன் நிழல் குளத்தில் தெரிவதைக் காண்பதைப் போலத்தான்…” என்று ஒரு வரி. சித்தார்த்தனை வாழ்வு எப்படி புத்தனை நோக்கிச் செலுத்துகிறது என்று இவ்வளவு பூரிதமான மொழியில் யாராலும் சொல்ல முடியுமா தெரியவில்லை.
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளைப் பொறுத்து அறிமுகமாகச் சொல்ல எதுவுமில்லை. ஏனெனில் அவை தாங்களே யாரையும் விட மிக மிகப் பாந்தமாய் வாசகனோடு அறிமுகமாகி விடும். கதைகளை விளக்குவது என்பது அபத்தமானது. ஒரு வாசகன் தானே விளங்கிக் கொள்ள அவற்றில் ஏராளமானவை உள்ளன. அதே போல் எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் குறித்து விமர்சனமாகச் சொல்லவும் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. கதைகளை எழுதும் அவசரத்தில், அல்லது தனக்குத்தானே முதல் வாசகனாகச் சொல்லிக் கொள்ளும் அவசரத்தில் ஒன்றிரண்டு தவறான வாக்கிய அமைப்புகள் வாசிப்பைச் சங்கடப்படுத்துகின்றன என்று சின்னஞ்சிறு பண்டிதத்தனமான குறைபாட்டை வேண்டுமானால் சொல்லலாம்.மற்றப்படி அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருப்பது போல “ சிறுகதை மேற்கிலிருந்து வந்த வடிவம் என்றாலும் இங்கே தமிழில் நாம் அதைத் தனித்துவத்துடன் வளர்த்தெடுத்திருக்கிறோம்…” ஆமாம் எஸ்.ராமகிருஷ்ணன் உங்களுக்கு அதில் பெரும்பங்கு இருக்கிறது. உங்களது இந்தக் கால் நூற்றாண்டுச் சாதனைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகளைச் சொல்லி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.
நன்றி : கவிஞர் கலாப்ரியா
   நன்றி.திரு.எஸ்.ராமகிருஷ்ணன் வலைப் பக்கத்தில் இருந்து............
                                                                                       அன்புடன் பொ.சங்கர்.....