Sunday, 16 February 2025

இந்திய விடுதலையும் இங்கிலாந்து தேர்தலும் - பொ.சங்கர்

     (ஆறாம் ஜார்ஜ் மன்னருடன் அட்லி)


இரண்டாம் உலகப்போர் (1939 முதல் 1945) நடைபெற்ற காலத்தில் முதல் இரண்டு ஆண்டுகளில், அமெரிக்கா நடுநிலைமை கொள்கையைப் பின்பற்றியது. பல்வேறு நாடுகள் போரில் ஈடுபட்டமையால் உலகம் முழுமையும் ஒருவித பதட்ட மனநிலை மக்களிடையே காணப்பட்டு வந்த நேரத்தில் 1945 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

           முதல் உலகப்போரில் தீவிரப் பங்காற்றிய கிளமெண்ட் அட்லீ அதன் பிறகு தொழிலாளர் கட்சியில் இணைந்து அரசியலில் தீவிரமாக ஈடுபடலானார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இங்கிலாந்தில்  1945 ல் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தொழிலாளர் கட்சியை (Labor Party) வெற்றி பெற வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். 


            (தொழிலாளர் கட்சி தலைமை அலுவலகம் )

      இரண்டாம் உலகப்போர் காரணமாக இங்கிலாந்து கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆட்பட்டிருந்தது. அதனை மீட்டெடுக்கவும் காலனித்துவ நாடுகளான இந்தியா இலங்கை மலேசியா பர்மா போன்ற நாடுகளுக்கு விடுதலை அளிப்பது தொடர்பாகவும் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஏனெனில் இந்த நாடுகளுக்குக் கட்டாய விடுதலை வழங்க வேண்டிய  கட்டாயத்தில் இங்கிலாந்தின் பொருளாதாரம் இருந்தது. போரில் பெருமளவு செல்வங்களை இழந்த காரணத்தால் தன் சொந்த நாட்டை மேம்படுத்த வேண்டும் என்பதில் Labor Party கட்சியைச் சார்ந்த கிளமெண்ட் அட்லீ தீவிரமாக இருந்தார். 

        தொடர்ச்சியான போர் இங்கிலாந்து மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்த நேரத்தில்  கிளமெண்ட் அட்லீயின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடையே சிறு மாற்றத்தை அளிக்க முன்வந்து  , தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. 

                இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இங்கிலாந்து நாட்டை நன்முறையில் கட்டமைக்க வேண்டிய நெருக்கடியில் இருந்த அட்லீ பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இங்கிலாந்து நாட்டில் ஐந்தில் ஒரு பங்கு தொழில்களை தேசிய மயமாக்கி தனியார் பங்களிப்பைக் குறைத்து அரசின் நிதி வருவாயைப் பெருக்கினார். நிலக்கரிச் சுரங்கம், மின்சாரம் மற்றும் ரயில்வே போன்ற பிரிட்டனின் மிகப்பெரிய தொழில்கள் பலவும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. தொடர்ச்சியான  பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உணவு  வளங்களின் பற்றாக்குறை மிகவும் கடுமையானதாக இருந்தமையால்  போருக்குப் பிறகு நீண்ட நாட்களுக்கு நாட்டில்   ரேஷன்  முறையிலேயே பொருட்களை வழங்க  வேண்டியிருந்தது. 

        தன் நாட்டின் மேம்பட்ட நிலைக்குப் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்த அட்லீ தலைமையிலான கட்சி , தேர்தல் வாக்குறிதுகளின் படி தமது காலனித்துவ நாடுகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 


1947ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி பிரிட்டன் பிரதமர் கிளமெண்ட் அட்லீ 1948 ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  அதன் வாயிலாக இந்தியாவின் வைசிராய் மவுண்ட் பேட்டனிடம் , இந்திய விடுதலைக்கான பணிகளைத் துவங்குங்கள் என்றும் 1948 ஜூன் மாதத்திற்குள் இந்தியாவுக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும் என்றும் அட்லீ உத்தரவு பிறப்பித்தார். ஆனால் நடந்தவை வேறுவிதமாக இருந்தது. முகமது அலி ஜின்னா இசுலாமியர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்பதில் மிகத் தீவிரமாக இருந்தார். இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இடையிலான பிரச்னை வலுத்திருந்தது. 1947 பிப்ரவரி 10ஆம் தேதி தான் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார்.  சுதந்திரம் வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தலைவர்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

      இந்திய விடுதலை எளிதாக இருக்கும் என்று எண்ணிய அட்லீ , மவுண்ட் பேட்டன் ஆகியோருக்கு இந்திய விடுதலைப்பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெரும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன.  இந்த நிகழ்வுகள் இங்கிலாந்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தின.  இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனைகள் குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டது.

                 

 அட்லி ஏற்கனவே அறிவித்த 1948 ஜூன் மாத விடுதலை என்பதை முன்னதாகவே மாற்றி விரைவாகவே இந்தியாவிற்கு விடுதலை வழங்கி விடலாம் என்ற முடிவிற்கு வந்தார்.  அதன்படி மவுண்ட் பேட்டனிடம்  இந்தியாவின் சுதந்திரத்தை விரைவுப்படுத்துங்கள்.  சிக்கல்களைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறினார். 

 இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதிலான  முகமது அலி ஜின்னா தமது கோரிக்கையில் உறுதியாக இருந்தார்.  இந்தியாவை இரண்டு நாடுகளாக பிரிப்பதற்கு பல்வேறு சிக்கல்களும் நடைமுறை போராட்டங்களையும் மௌண்ட் பேட்டன் சந்திக்கலானார். கல்கத்தா வரலாறு காணாத பேரழிவை வன்முறைகளால் சந்தித்து இருந்தது.  இந்தியத் தலைவர்களும் மவுண்ட்பேட்டனும் இந்தக் கலவரங்களை எதிர்பார்க்கவில்லை.  விரைவில் இரண்டு நாடுகளாகப் பிரித்து  விடுதலை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற முடிவுக்கு இங்கிலாந்து தீர்க்கமாக வந்தது. 

      1947 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வைஸ்ராய் மாளிகையின் அலுவலக அறையில் மவுண்ட்  பேட்டன் இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரிப்பதற்கு இந்திய தலைவர்களின் ஒப்புதலைப் பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

        இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பஞ்சாப் மாநிலத்திலும் வங்காளத்திலும் எல்லைக் கோடுகள் வரையும் பணியை பிரிட்டனின் புகழ்பெற்ற நீதிபதி சர்சிரில் ராட்கிளிப்   என்பவரிடம் மவுண்ட் பேட்டன் ஒப்படைத்தார். 

    இங்கிலாந்து நாட்டின் அரச நெருக்கடிகளுக்கு மத்தியில் மவுண்ட்பேட்டன் தன்னிச்சையாக இந்தியாவின் சுதந்திரம் ஆகஸ்ட் 15 என்று அறிவித்தார். ஆனால் இந்தியாவில் ஆகஸ்ட் 15 ல் கிரக நிலைகளின் சேர்க்கை சரியில்லை அதற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ விடுதலை தர வேண்டும் என்று இந்தியாவில்  பலரும் கேட்கத் தொடங்கினர். பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 இந்தியாவை ஒரு பகுதியாக பிரித்து பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்படும் என்று மவுண்ட்பேட்டன் அறிவித்தார்.  முதலில் பாகிஸ்தான் சுதந்திரம் வழங்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தார். 

            

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் நாள் காலை 9 மணிக்கு கராச்சி நகரத்தில் முறைப்படி பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டு மவுன்ட் பேட்டன் தலைமையில் முகமது அலி ஜின்னாவிடம்  பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டமைக்கான அதிகாரப்பூர்வ அறிக்கை வழங்கி ஜின்னாவிற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.  இந்த இடத்தில் ஒரு முக்கியமான செய்தியை பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.  அதாவது இந்திய விடுதலைக்கு முன்னரே பாகிஸ்தான் விடுதலை வழங்கப்பட்டமையை எதிர்த்து மவுண்ட்பேட்டனை கராச்சி நகரத்தில் வைத்துத் தாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது அல்லது தவிர்க்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது. 

         The man who could do miracles என்ற வெல்சியின் கதையை    மவுண்ட்  பேட்டன் நினைத்துக் கொண்டார். இந்தியாவில் அதிசயங்கள் நிகழ்த்தும் மனிதனாக தன்னை அவர் நினைத்துக் கொண்டாலும் இந்தியாவின் எதிர்காலத்திற்காக பல்வேறு செயல் திட்டங்களை மிகப் பொறுமையாகத் இந்தியத் தலைவர்களிடம் எடுத்துரைத்து மிகக் கவனமாக இந்திய விடுதலையைக் கையாண்டார்.  ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கான சுதந்திரம் முறைப்படி அறிவிக்கப்பட்டது.  இந்தியாவிற்கான சுதந்திரம் தலைவர்கள் உடனிருக்க தென்னிந்தியாவிலிருந்து வருகை புரிந்த துறவிகள் இருவர்(திருவாவடுதுறை ஆதீனம் ) மவுண்ட் பேட்டனிடம் இருந்து  செங்கோலை வாங்கி ஜவஹர்லால் நேருவிடம் வழங்கிய பதிவு  இந்திய வரலாற்றுக் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  பல  ஆண்டுகள்  நடந்த போராட்டமும் இந்திய மக்களின் தீராத வேட்கையும் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில்     வகித்த பங்கை போல இங்கிலாந்து நாட்டின் தேர்தலும் முக்கியப் பங்கு வகித்தது. இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி தேர்தலில் வைத்து வாக்குறுதிகளின்படி  அதன் காலனித்துவ நாடுகள் ஒவ்வொன்றாக அதன் பிறகு விடுதலை பெற தொடங்கின என்பதும்,  இந்திய விடுதலையில் இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி மிகத் தீவிரம் செலுத்தியதும்  நாம் அறிய வேண்டிய ஒன்று.