Tuesday, 28 May 2024

மார்க்கோபோலோ- அறிய வேண்டிய வரலாறு

 


 

  சாகசங்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாலேயே சாதிக்கப்படுகின்றன. பயணங்கள் மூலம் வரலாற்றின் பக்கங்களை மாற்றியவர்கள் உலக வரலாற்றில் தமக்கென தனித்த இடத்தைப் பிடித்தார்கள். அவ்வகையில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் வெனிஸ் நகரத்தில் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் மார்க்கோபோலோ. 
    செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் தாய்ப்பாசத்தையும்,தந்தை அன்பையும் சிறு வயதிலேயே இயற்கைக் காரணிகளால் இழந்தார். ஆம் ,சிறு வயதில் தாயை இழந்தார். தந்தை வணிகராதலால் பெரும்பாலும் வணிகநோக்கத்திற்காகப் பயணத்திலேயே இருந்தமையால் அன்பை அடைய இயலாதவராகவே இருந்தார். இருப்பினும் தமக்குக் கிடைத்த வாழ்க்கையை வரலாறாக மாற்ற வேண்டும் என்னும் முனைப்பில் பயணியாக மாற வேண்டும் என்னும் கனவை விதைக்கலானார். விதை விருட்சமாகும் வரை தம் வாழ்நாளில் பல காலங்களை , பல நாடுகளை, பல கோடைகளை, பல குளிர்காலங்களை நடந்தே கடக்கலானார்.

   மார்க்கோபோலோ நடந்த பாதைகள் இன்று உலகின் புகழ்பெற்ற பட்டுப்பாதை(Silk Road) என்று அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட நான்காயிரம் மைல்களுக்கும் மேல் நடை நடையாய் நடந்து வரலாற்றின் அதிசயங்களுக்கு அடையாளம் தந்தவர் மார்க்கோபோலோ. உலகின் பெரும்பகுதியை நடந்து கடந்தவரின் வாழ்வியலை ஒரு காலத்தில் ஐரோப்பிய உலகம் புறக்கணித்துச் சிரித்தது.

    ஐரோப்பிய நாடுகளில் நாடகங்களில் கோமாளி வேடத்தின் புனைகதைகளில் மார்க்கோபோலோ பாத்திரம் நகைச்சுவைப் பாத்திரமாகப் படைக்கப்பட்டது. தன் சொந்த தேசமே ஏளனப்படுத்திய போதும் தன் பயணத்தின் குறிக்கோளை அடைந்தே அடையாளமாக்கினார் மார்க்கோபோலோ. “த ட்ராவல்ஸ் ஆஃப் மார்கோ போலோ” என்னும் நூலை சிறையில் எழுத்தாளர் ருஸ்டி செல்லா உதவியுடன் எழுதி ஆவணப்படுத்தினார். எந்த ஐரோப்பிய உலகம் இவரை எள்ளி நகையாடியதோ அதே ஐரோப்பிய உலகம் ஒரு காலத்தில் இவரை உயரத்தில் வைத்துக் கொண்டாடியது. அதற்குக் காரணம் இவர் விரைந்து சென்ற வெற்றிக்கான தூரங்களே!

         மண், மலை, நிலம், காடு, வெயில், குளிர், வெப்பம், காற்று, மொழி இவ்வாறு பல தடைகளைத் தகர்த்து பயணம் செய்த மார்க்கோபோலோ பல நிலங்களில் பல கலாச்சாரங்களைக் கண்டடைந்தார். தமது பயணத்தில் சீனா நாட்டைப் பற்றி மிக அதிகமாக மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்டின் அரசன் குப்லாய்கானின்(செங்கிஸ்கானின் பேரன்) நம்பிக்கை மிகுந்தவராகவும் மாறிப்போனார். சீனா நாட்டின் கரங்கள் தம்மை கட்டி அணைத்து வரவேற்றதாகக் குறிப்பிடும் அவர் சீனாவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் தங்கியிருந்தார். சீனாவிலிருந்து வெனீஸ் நோக்கி தம் பயணத்தைத் தொடங்கிய போது குப்லாய்கானின் மகளை பாக்தாத் வரை பயண அனுபவத்திற்குப் படையுடன் அழைத்துச் சென்றார். தம் வாழ்வில் கிட்டத்தட்ட இருபத்தி ஏழு ஆண்டுகள் பயணத்திலேயே வாழ்ந்த மார்க்கோபோலோ , பாக்தாத் , ஈரான் , ஆசியப்பகுதிகளைக் கடந்து இந்தியா வந்தடைந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் கப்பலில் இறங்கிய மார்க்கோபோலோ தமிழகத்தின் பெரும் பகுதி நிலங்களுக்கும் சென்றார். தமிழகத்தின் பண்பாட்டையும் சிறப்பையும் தமது il million - the travelsof marcopolo என்னும் நூலில் அழகுபடக் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் மயிலாப்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்றதைக் குறிப்பிடுகிறார்.

           தமிழ்நாட்டில் இராஐராஐ சோழன் , இராஜேந்திரச் சோழனுக்குப் பிறகு பெரும் அரசனாக சேர ,சோழ, பாண்டிய , இலங்கை மற்றும் மகத நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனை தமது பயணத்தில் சந்தித்த நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். தமது நூலில் ‘ அரசர்கள் தரையில் அமர்வதை விரும்புவதாகவும், எளிய ஆடைகளில் அழகுமிகு ஆபரணங்கள் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். தாம் பார்த்த நாடுகளில் தமிழகமே செல்வ வளமிக்க நாடு என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகப் பயணத்தை நிறைவு செய்து மீண்டும் பயணத்தைத் தொடங்கினார். அதன் பின் மார்க்கோபோலோ அடைந்த துயரங்கள் மிகுதியானது. தன்னுடன் பயணித்த பலரையும் நோய்த்தாக்குதலில் , இயற்கைக் காரணிகளில் இழக்க வேண்டியிருந்தது. பல சிரமங்களைக் கடந்து தன் சொந்த தேசத்தை அடைய முற்பட்ட போது வெனீஸ் மற்றும் ஜெனோவா இடையிலான போரில் மார்க்கோபோலோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தம் உடன் தங்கியிருந்த எழுத்தாளர் ஒருவரின் உதவியுடன் தம் பயண அனுபவங்களை எழுதத் தொடங்கினார்.

      மார்க்கோபோலோவின் எழுத்துகள் பல படிகளாக பலரால் வாசிக்கப்பட்டு கிழக்காசியா நோக்கிய பயணத்தையும் , சீனா , இந்தியா போன்ற நாடுகள் பற்றியும் அறிய வைத்தது. பிற்காலத்தில் கொலம்பஸ் போன்ற பயணிகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு வருவதற்கு மூல காரணம் மார்க்கோபோலோவோவோவின் நூலே காரணமாய் அமைந்தது. மார்க்கோபோலோ தமது பயணத்தில் வணிகராக, நாடோடியாக,கடலோடியாக தம் பயணத்தைத் தொடந்து கொண்டே இருந்தார். உலகின் பெரும்பாலான நாடுகளின் கலாச்சாரத்தை 13 ஆம் நூற்றாண்டுகளில் பதிவு செய்தவராகத் திகழும் இவரின் பயணங்கள் தூரங்களையும் துயரங்களையும் கொடுரங்களையும் சிறைகளையும் கடந்து பிற்காலத்திய தலைமுறைக்குப் பெரும் வரலாற்றைச் சொல்லும் களஞ்சியமாக இவரின் வரலாறு திகழ்கிறது. இத்தாலியில் இவர் பயணம் சென்ற பாதைகள் , வரைபடங்கள் குறித்த தரவுகள் அடங்கிய மாபெரும் நூலகம் ஒன்றை அந்நாடு பராமரித்து வருகிறது. பதினேழு வயதில் பயணியாக வாழ்வைத் தொடங்கி பெரும் பள்ளத்தாக்குகளை, பாலைவனங்களைக் கடந்து தம் எழுபது வயதில் ஜனவரி மாதம் எட்டாம் நாள் பயணியாகத் தம் வாழ்வை நிறுத்திக்கொண்டார் . அச்சு இயந்திரம் வருவதற்கு முன்பாக அறிஞர்கள் , துறவிகளால் கைகளால் எழுதப்பட்ட நூலாக மார்க்கோபோலோவின் நூல்கள் இடம் பெறுகின்றன. பயண இலக்கியத்தின் மிகச்சிறந்தபடைப்புகளாக மார்க்கோபோலோவின் il milion - the travels of marco polo , The Description of the World என்னும் இரண்டு நூல்கள் திகழ்கின்றன. தம் வாழ்வின் இறுதிக்காலங்களில் மிகச்சிறந்த தொழிலதிபராக வாழ்வை நகர்த்திய மார்க்கோபோலோ பலருக்கும் வரலாறாய் வாழ்கின்றார். பிறக்கின்றோம் , வாழ்கின்றோம், இறக்கின்றோம் என்பதற்குப் பதிலாக வாழ்ந்த பூமிக்குப் பரிசாக வழங்க வேண்டிய கடமைகளை சரிவர செய்த பயணியாக , உலகைப் பற்றிய பதிவைப் படைத்தவராக விளங்கும் மார்க்கோபோலோ நமக்கக் கற்றுத் தந்த பாடம் ‘ விரைந்து செல்லுங்கள் வெற்றிக்கான தூரம் அதிகம்’ என்பதுதான். மார்க்கோபோலோவின் குறிப்புகள் நாம் படிக்கவேண்டிய பாடங்கள் என்பதை உணர்ந்து ஒவ்வொரு ஜனவரி மாதமும் அவரின் நினைவு நாளைப் போற்றுவோம்.









Tuesday, 14 May 2024

இந்திய சுதந்திரப் போரில் தூந்தாஜி வாக் எனும் தோண்டியா வாக் - அறிய வேண்டிய வரலாறு

      


                      வரலாறு சில மனிதர்களின் தியாகத்தை மறந்தும் மறைத்தும் விடும். வரலாற்று ஆசிரியர்களும் சில நேரங்களில் மறைத்து விடுவதும் உண்டு. அப்படி வரலாறால் , வரலாற்று ஆய்வாளர்களால் மறைக்கப்பட்ட தூந்தாஜி வாக் என்பவர் இந்திய சுதந்திரப் போரில் ஆற்றிய பங்கு குறித்து நாம் அறிவது அவசியம். 




ஆங்கிலேயர்களை தென்னிந்திய அரசர்களே கதிகலங்க வைத்தனர் என்பதற்கு ஆங்கிலேய அதிகாரிகளின் பதிவுகளே சாட்சியாகவும் சரித்திரமாகவும் இருக்கின்றன. அவ்வகையில் தென்னிந்திய பகுதிகளில் ஐதர் அலி , அவரது மகன் திப்பு சுல்தான், ராணி வேலு நாச்சியார் , கட்டபொம்மன், தீரன்சின்னமலை என பல தென்னிந்திய அரசர்கள் ஆங்கிலேயர்களை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அந்த வகையில் தூந்தாஜி வாக் என்னும் வீரன் அரசனாகி ஆங்கிலேயர்களை மிரள வைத்தார் என்பதும் நமது வரலாற்றுப் பக்கங்களில் விடுபட்ட பெயராகவும் இருப்பது காலத்தின் பிழை. 

      திப்பு சுல்தானின் ஒரு படைப்பிரிவுக்கு தளபதியாக, திப்பு சுல்தானின் நம்பிக்கைக்கு உரிய மாவீரனாகத் திகழ்ந்தவர் தூந்தாஜி வாக். திப்பு சுல்தானின் தந்தையார் காலத்தில் அவரது படைப்பிரிவில் படை வீரனாக பணியைத் துவங்கி திப்பு சுல்தான் காலத்தில் தளபதியாக உயர்ந்தவர் தூந்தாஜி வாக். 

         இந்திய அரசர்களில் ஆங்கிலேயர்களை அவர்களுக்கு நிகரான ஆயுதங்கள் வைத்து தாக்கியவர்கள் ஐதர் அலியும், திப்பு சுல்தானும் மட்டுமே. அந்த வகையில் சிறந்த படையணிகளை வைத்திருந்த மைசூர் மாகாண அரசர் ஐதர் அலி காலத்தில் ‘ஆங்கிலோ மைசூர் போர்’ முதலிரண்டும் வெற்றி தோல்வி இன்றி நிறைவடைய ஐதர் அலியின் மகன் திப்பு சுல்தான்  ‘மூன்றாம்ஆங்கிலோ மைசூர் போர்’ குறித்து வெளிப்படையாக அறிவித்து ஆங்கிலேயருக்கு எதிராக போரைத் தொடங்கினார். அந்தப் போரில் மிக முக்கிய தளபதிகளில் ஒருவராக தூந்தாஜி வாக் பணியாற்றினார்.

 

           ‘மூன்றாம்ஆங்கிலோ மைசூர் போர்’  கோயம்புத்தூர், பாலக்காடு, சத்தியங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களில் ஆங்கிலேயர்களை விரட்டியட்த்து வெற்றி கண்டனர். அதன்பிறகு திப்பு சுல்தானுடன் மன வேறுபாடு காரணமாக தனி படையணி ஒன்றை உருவாக்கி மராட்டிய எல்லைப் பகுதிகளைத் தாக்கினார். எதிர்ப்புகள் காரணமாக மீண்டும் திப்பு சுல்தானிடம் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினார். 

             நான்காவது ஆங்கிலோ மைசூர் போருக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை சிறைப்பிடிக்க அதன் பிறகு மைசூர் படைகள் பிரிந்து போயின. திப்பு சுல்தானை வென்று விட்டோம் என்று வெற்றிக் களிப்பில் இருந்த நேரத்தில் திப்பு சுல்தானின் பல ஆயிரக்கணக்கான படை வீரர்களை    தூந்தாஜி வாக் ஒன்றிணைத்தார். ஆங்கிலேயர்களுக்கு சிப்ப சொப்பனமாகத் திகழ்ந்தார். 

        திப்பு சுல்தானிடமிருந்து ஆங்கிலேயர்கள் மைசூர் பகுதியை மீட்ட நேரத்தில் பெரும் படையுடன் மைசூரின் வடக்குப் பகுதியில் ஆங்கிலேயர்களைத் தாக்கி வெற்றி கொண்டார் தூந்தாஜி வாக். சத்ரபதி மன்னர்களுக்கு அடுத்து பேஷ்வா என்னும் பதவியுடன் பொறுப்பில் இருந்து மராட்டிய பகுதிகளை ஆட்சி நடத்த மராட்டிய அரசர்களால் நியமிக்கப்பட்ட தலைமைப் பொறுப்பாளர்கள் பேஷ்வாக்கள். இவர்களை தூந்தாஜி வாக் எதிர்த்து மைசூரின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றி ‘இரு உலகங்களின் இராஜா’ என்று தூந்தாஜி வாக் பட்டம் சூட்டிக்கொண்டார். 

(பேஷ்வா)  

      ஆங்கிலேயரும் பேஷ்வா படையும் இணைந்து    தூந்தாஜி வாக்கை எதிர்க்க முடிவு செய்தன. மராட்டிய பேஷ்வாவும் , மாறுவேடத்தில் சில வீரர்களை மைசூரின் வடக்குப் பகுதிக்கு அனுப்பினார்கள். மாறுவேடத்தில் சென்றவர்களை தூந்தாஜி வாக் சிறைபிடிக்க , ஆங்கிலேயர்கள்  அவர் மீது படையெடுக்க திட்டமிட்டனர்.

          தூந்தாஜி வாக் தலைமையிலான படையில் 90 ஆயிரம் குதிரைப்படை வீரர்களும் 75 ஆயிரம் காலாட்படை வீரர்களும் இருந்தனர். திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு பெரும்பாலான படை வீரர்கள் தூந்தாஜி வாக் தலைமையில் ஒன்றிணைய ஆங்கிலேயர்கள் பெரும் சிக்கலாக தூந்தாஜி வாக் மாறினார். பெரும்பாலான மைசூர் பகுதிகளை தூந்தாஜி வாக் கைப்பற்றிக் கொண்டே வந்தார். அவரின் பலத்தைக் கண்டு திகைத்த ஆங்கிலேயர்கள் பலமான கூட்டணி அமைத்து தூந்தாஜி வாக் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று திட்டம் தீட்டினர். 

         1800 ஆம் ஆண்டு மைசூர் கவர்னராக ஜெனரல் வெல்லஸ்லி நியமிக்கப்பட்டார். ஜெனரல் வெல்லஸ்லி மைசூரைச் சுற்றியிருந்த பல அரசுகளுக்குக் கடிதம் எழுதி , தூந்தாஜி வாக் வளர்ச்சியைத் தடுக்க நாம் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி 1800 மே 26 ல் கடிதம் எழுதினார். . ஜெனரல் வெல்லஸ்லி தலைமையில் மைசூர் உடையார் வம்சம், ஹதராபாத் நிஜாம் அரசர்கள் ஒன்றிணைந்து 1800 ஆம் வருடம் ஜூன் மாதம் 16 ஆம் நாள் தாக்குதலைத் தொடங்கினார்கள். ஆங்கியேயரின் படைகள், உடையார் வம்ச படைகள், ஹதராபாத் நிஜாம் படைகள் என பல படைகள் மோதியும் அவர்களை தூந்தாஜி வாக் தைரியமுடன் எதிர்கொண்டார். 

               ஜூன் மாதம் 16 ஆம் நாள் தொடங்கிய போர் ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தது. போரில் முதலில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் தூந்தாஜி வாக் கைப்பற்றி ஆங்கிலேயர்களுக்கும் நிஜாம் அரசர்களுக்கும் அதிர்ச்சி அளித்தார். ஆங்கிலோ மைசூர் போர்கள் கூட குறிப்பிட்ட நாட்களில் முடிவடைய , தூந்தாஜி வாக் உடனான போர் நீண்டு கொண்டே சென்றது. செப்டம்பர் 10 ஆம் நாள் இன்றைய இராய்ச்சூர் மாவட்டத்தில் தூந்தாஜி வாக் ஆங்கிலேய படையால் கொல்லப்பட்டார். ஆங்கிலேயர்களுக்கு பெரும் சொப்பனமாகத் திகழ்ந்த தூந்தாஜி வாக் கிட்டத்தட்ட 90 நாட்கள் படைகளை நடத்தி ஆங்கிலேயர்களையும் பிற அரசர்களையும் திணறடித்தார். போரின் இறுதியில் அவரது சொற்ப வீரர்கள் கைது செய்யப்பட்ட போது , ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வெல்லஸ்லி , தூந்தாஜி வாக் மகனுக்குப் பாதுகாப்பை வழங்க முன்வந்தார். மைசூர் உடையார் வம்சத்தினரும் ஹதராபாத் நிஜாமும் தூந்தாஜி வாக்கின் 4 வயது மகன் சலாபத் கானை கொல்ல முடிவெடுத்த போது ஜெனரல் வெல்லஸ்லி அதனைத் தடுத்து சலாபத் கானை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

( ஜெனரல் வெல்லஸ்லி)

           வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட தோண்டியா வாக் என்று அழைக்கப்பட்ட தூந்தாஜி வாக் நிச்சயம் அறிய வேண்டிய சுதந்திர வீரர்களில் குறிப்பிடத்தக்கவர்.