Monday, 6 April 2020

ஆசிரியராற்றுப்படை _ கவிதை

ஆசிரியராற்றுப்படை

வைகாசி மாத புலர் காலைப் பொழுதில் ஆதீனத்
தென்னந்தோப்பு பம்பு செட்டில்  குளியல் முடித்து சாந்தலிங்கனார் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பயிலத் தொடங்கினோம்.

நால்வரையும் அறியாது நாலாயிர திவ்ய பிரபந்தமும் தெரியாது நாங்கள் வீற்றிருக்க நாவுக்கரசராய் நீர் நுழைய
நிமிர்ந்து அமர்ந்தோம்.

வறுமை எங்கள் வயிற்றைப் பதம் பார்க்க
பாணர்களாய் நாங்கள்
கல்விக்கு ஊற்றெடுக்க தமிழை வாரி வாரி வழங்கிய வாகீசரே!

கல் தூணைப் பூட்டி கடலில் பாய்ச்சியது போல ,
கற்களையும் சிற்பமாக்கிய சிவநேசரே!

பருவம் தீண்டிய போது
பக்குவமாய் ஆற்றுப்படுத்திப் பதிகப் பலனை பரிசளித்த அப்பரே!

பரிபாடலை நொய்யல் ஆற்றின் நதியில் அமர வைத்து உணர வைத்த ஆற்றின்ப வெள்ளமே!

திருநாவுக்கரசரே!
உமக்குக் குரு காணிக்கை அளிக்காமல் உமது நடையை கொள்ளையடித்துக் கொண்ட சீர் மரபில் நான் மட்டும்
நேர் நேர் தேமா!

வினைத் தொகையை முக்காலமும் உணர்த்தி வரும் பண்புப் பெயரே!

வேற்றுமை எட்டு வகை மட்டுமல்ல (உலகில்) என்பதைக் கற்றுக்கொடுத்த தை மழையே!

உங்கள் வாழ்வில் மட்டும் இயல்புப் புணர்ச்சியாய் இருங்கள் என்றும் , உலக வாழ்க்கையில் விகாரப் புணர்ச்சியாய் தோன்றி, திரிந்து அடுத்தவரை கெடுக்காமல் வாழ வழி செய்த திருநாவுப்படையில் என்னையும் ஓர் அணியாய் அழகு படுத்திய ஆவணமே!

அலகு மட்டுமல்ல
அழகையும் கற்றுணர்ந்தால் அம்மை அப்பனுக்கு சீர் பிரிக்க வேண்டியது இல்லை என்பதை "நாள் மலர் காசு பிறப்பால்" உணர வைத்த உவமைத் தொகையே!

ஆசிரியராய் ஞானத் தகப்பனாய் எங்களை (பாணர்களை) ஆற்றுப் படுத்தி வரும் பேரூராதீனத் தமிழ்க் கல்லூரியின் திருநாவுக்கரசே !
உம்மை வணங்குகிறோம்.

பொ‌.சங்கர்

Wednesday, 1 April 2020

கீழடி

கீழடி

உச்சம் கண்ட தமிழனின் வரலாற்றை இனியும் மிச்சம் வைக்கக் கூடாது என்று வட நாட்டுக் கூட்டம் திட்டம் போடுது!

நாகரீகத்தின் தொட்டிலில் கட்டில் போட்டு அமர்ந்து, வரலாற்றைக் கடுகளவாய் ஒரு கூட்டம்
குறைக்கின்றது!

கீழடி அகழ்வாய்வை மேலே அடி வைக்காமல் வெளியிடாமல் வேகம் கூட்டி வாசம் காட்டி வஞ்சனைகள் தொட்டு வருடுகிறது இன்னொரு கூட்டம்!

முப்போகம் விளைய வைத்த வரலாற்றை வெளியிடாமல்
முச்சந்தியில் நிற்க வைத்து தமிழனுக்கு இலவச அரிசி தருகின்றது மற்றொரு கூட்டம்!!

குழிக்குள் குழி வெட்டி
கூட்டமாய் கூடி நின்று கற்பனைகள் பல செய்து எட்டிப்பார்த்த கீழடியை , இது மண் குழி தான் என்று எட்டப்பன் வேலை செய்த நாகசாமிக்கு செம்மொழி பதவி!

மூடு பல்லக்கில் கீழடி பொருட்களை எருமை தேசம் கொண்டு சென்று ஊனம் ஆக்கிய வீணர்களுக்கு உயர் பதவி!

ஹரப்பா அகழ்வாய்வை உரைப்பாய்  சொன்ன ஊது குழல்கள் கீழடியை கல்லடியில் போட்டு வைத்திருக்கும் கயமைத்தனம் என்று வெளியாகும்?
ஆதவனைக் கைகளில் மறைக்க முடியாது!
தமிழர்களின் வரலாற்றைக் கீழடியில் முடக்க முடியாது!

வஞ்சனைகளை வெஞ்சினம் வெல்லும்!

பொ.சங்கர்