தருமை ஆதீனம்

2013 ஆம் வருடம்.
வைகாசி , சித்திரை மாதங்களில்
நான் தமிழக ஆதீனங்களுக்கு யாத்திரையாக
திடிரென்று கிளம்பி விட்டேன். திருவாவடுத்துறை ஆதீனம் , திருப்பனந்தாள் முடித்து அடுத்ததாக வைகாசி முதல் நாளன்று காலை பதினோரு மணியளவில்
தரும்புரம் பேருந்து நிறுத்தத்தில்
இறங்கி , நீண்ட அரண்மனைத்
தோற்றம் கொண்ட மாளிகையை
நோக்கி நடந்து சென்றேன்.
காலனியை ஓரத்தில் இருத்தி விட்டு ஆதீனத்தின் நிலவு மேல் ஒருவித மாயையுடன் காலடி எடுத்து
வைத்தேன். ஆதீனத்தில் ஆட்கள்
அதிகம் இருந்தார்கள். ஆனாலும் ஆதீன மணியோசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. ஆதீனப் பணியாட்கள்
ஓரமாய் நிற்கச் சொன்னார்கள். ஓரமாய் நின்ற போது
, ஒய்யாரமாய் குனிந்த உருவமாய் குருஞானசம்பந்தருக்குப் பூசைகள்
செய்து கொண்டிருக்க, தம்பிரான்கள் பயபக்தியோடு பணிந்து வணங்கி தருமபுரம்
குருமகாசன்னிதானங்களை வணங்கி ஆசி பெற்றனர்.

வரிசையில்
நின்று அவரது திருவடியை நான் வணங்கிய போது அவரது மோதிர
விரல்கள் என்னைத் தீண்டி , திருநீறு இட்ட போது, அவரது கண்கள் என்னைக்
கூர்ந்து நோக்கியது. எனக்கு நேருக்கு
நேராய் அவரது கண்களைச்
சந்திக்க சற்றுப் பயமும் , கூச்சமும் ஆட்கொண்டன.

பூசைகள் முடித்து, மதிய உணவு முடித்து பெரிய , நீண்ட
வராந்தாவில் அமர்ந்திருந்தோம். ஒருவர் பின் ஒருவராக
அவரைச் சந்தித்தனர். மாலை
4.10 மணிக்கு எனக்கு அழைப்பு.
உள்ளே சென்றேன். சிம்மாசனத்தில் கம்பீரமாய் சன்னிதானம்
அமர்ந்திருக்க, நான் நடக்க நடக்க என்னையே
அவரது கண்கள் பனித்து
கவனித்தன. நெடுஞ்சாண்கிடையாய் கிடந்து எழுந்து ஓரத்தில்
நின்றேன். அமரச் சொல்லி உத்தரவு கிடைக்கக்,
கீழே அமர்ந்தேன். எங்கிருந்து வருகை எனக் கேட்க,
பேரூராதீனம் எனச் சொல்லிய
போது, பேரூராதீனக் குருமகாசன்னிதானங்களை
நலம் விசாரித்தார்கள்.

ஐம்பது
வருடங்களுக்கு முன்பு , நாமும்
, பேரூராரும் பல்வேறு தலங்களுக்கு
தல யாத்திரை மேற்கொண்டோம் என்று
நினைவைப் பகிர்ந்தார்கள். இடைஇடையே தமிழ், சமசுகிருத முரண்பாடுகள் பற்றியும்
விவரித்தார்கள். 1.30 மணிநேரம் பல்வேறு
செய்திகளை இளையவனான என்னிடம் பகிர்ந்து கொண்டே இருந்தார்கள்.

தருமையாதீன 25 ஆம்
சன்னிதானம் பற்றி வியந்து பல செய்திகளைப்
பகிர்ந்து கொண்டார்கள். ஆதீனத்தின்
மூன்றாம் மாடியில் இராஜ துறவியாய்
25 ஆம் சன்னிதானம் காட்சிக்
கொடுப்பார்கள் என்று 26 ஆம் இராஜ துறவி கூறிய போது
, பேரூராதீனம் தவத்திரு குருமகாசன்னிதானம் கண்முன்
வந்து சென்றார்கள்.
6.30 மணியளவில் உத்தரவு
கிடைத்த பின் வெளியே
வந்தோம். சற்றுநேரத்தில் ஆதீனப் பணியாள்
ஓடி வந்து , மீண்டும் சன்னிதானம் அழைப்பதாய் கூற ஓடிச்
சென்றேன். இரவு தங்கிச் செல்ல உத்தரவு கொடுத்து , காணிக்கையாய் 20 ரூபாய்
நோட்டும் கொடுத்தார்.


இரவு 7.45 க்கு உணவு. நீண்ட
மற்றும் அதிகளவு உயரம் கொண்ட பெரிய அறையில் ஒற்றையாளாய் பழங்காலத்து மரக் கட்டிலில் ஓய்வு. விடிந்து நெடுநேரம்
கழித்து ஆதீனத்தைச் சுற்றிப்
பார்த்தேன். தமிழக அரசின்
தலைமைச் செயலகக் கட்டிடம்
போல் பல அறைகள். பல அறைகள் பயன்பாடு இன்றி இருப்பது கண்டு கண்ணுற்றேன்.
ராஜாஜி அவர்கள் இந்தக்
கட்டிடங்களைப் பார்த்து வியந்து
போனதாய் படித்தக் குறிப்பு
நினைவுக்கு வந்தது. கோவை கிழார்
எழுதிய கட்டுரையிலும் இந்தக்
கட்டிடங்கள் பற்றி ஓர் குறிப்பு நினைவுக்கு
வந்தது. காலை 11 மணி அளவில் மதிய பூசைக்கு சன்னிதானம்
எழுந்தருளினார்கள். 12.10 க்கு ஆசி
பெற்று வணங்கி விடைபெற்றேன்.