Wednesday, 26 November 2025

பொ.சங்கரின் நல்லியம் பாளையம் கதை பேசுவோம் -19-

 


   கட்சிக் கம்பங்கள் இல்லா ஊர் 


தமிழக அரசியல் களம் தேர்தல் வந்தால் பரபரப்பாய் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் , சட்டமன்றத் தேர்தல் , ஊராட்சி மன்றத் தேர்தல் என மூன்று வகையான தேர்தல்கள் நடக்கும் போது ஊரில் சிறிது பரபரப்பு இருக்கும். 

அன்றைய நாட்களில் கோயில் பொது மேடையில் ஒரு தினத்தந்தி நாளிதழ் பொதுவாய் வரும். எல்லோரும் படிப்பார்கள். தேர்தல் நேரத்தில் சில அரசியல்வாதிகள் , தமிழகத்தில் என் காலடி படாத கிராமமே இல்லை என்று முழங்கியிருப்பது செய்தியாக வந்திருக்கும். என் நினைவில் அந்த முக்கிய அரசியல்வாதிகள் யாரும் எங்கள் நல்லியம்பாளையம் மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வந்ததாய் நினைவில்லை. 

வேட்பாளர் சார்பாய் ரேடியோ கட்டிய வண்டில நோட்டிஸ் போட்டுக்கொண்டு வாகனம் வரும். யாரேனும் ஒரு பேச்சாளர் வண்டிக்குள்ள உட்கார்ந்து கொண்டு ,உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் ________ சின்னத்தில் மறக்காமல் பதிவு செய்யுங்க. தேர்தல் நாள் _____ என்று பதிவு செய்து போவார்கள். 

ஏதேனும் ஒரு சில சுவர்களில் மட்டும் மாநிலக் கட்சிகளின் சின்னங்கள் வரையப்பட்டு இருக்கும். மற்றபடி என் நினைவில் தெரிந்து நல்லியம்பாளையம் கிராமத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் எங்கும் இருந்தது இல்லை. 

நல்லியம்பாளையம் கிராமத்தில் பல கட்சியினரும் இருந்தாலும் பொது இடங்களில் , கோவில்களில் யாரும் அரசியல் பேசாமல் ஊரின் தன்மானம் காக்க ஒற்றுமையாய் இருந்தனர். 

என் பதினோரு வயதில் உள்ளாட்சித் தேர்தலில் சம்புக் கவுண்டர் வெற்றி பெற்று ஊரில் வெற்றி ஊர்வலம் வந்தது நினைவில் உள்ளது. அவரது முயற்சியால் ஊரின் தென்புறம் இரட்டபாளி வலசு செல்லும் பாதையில் வசிக்கும் மக்களுக்காக வாய்க்காலைக் கடந்து செல்ல பாலம் கட்டித் தர முயற்சி எடுக்கப்பட்டது. 

நல்லியம்பாளையம் கிராமம் கிட்டத்தட்ட 1998 வரை கிராமமாகவே இருந்தது. அதன்பிறகு ஊருக்கு அருகில் ஹவுசிங் போர்டு வர நூற்றுக்கணக்கான வீடுகள் ஊரைச் சுற்றி உருவாகத் தொடங்கின.

நல்லியம்பாளையம் ஊரில் வசித்த உள்ளூர் மக்கள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக நகரங்களில் குடியேறத் தொடங்கினர். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரிலும் தோட்டத்திலும் வசித்த நிலையில் இன்று ஊரில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே உள்ளூர் மக்கள் வசிக்கும் நிலை உருவானது. ஆனாலும் அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நாட்களிலும் , மாதந்தோறும் பெளர்ணமி நாட்களிலும் ஊர்க்கோயில்களில் ஒன்றுகூடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

நல்லியம்பாளையம் கிராமம் காலப்போக்கில் ஊராட்சி மன்ற அமைப்பில் இருந்து , மாநகராட்சியின் எல்லைக்குள் வந்தது.  

மண்மணம் மாறினாலும் ஊரின் நிலையை என்றும் எடுத்துரைப்பது ஊர்க்கோயிலும் , பெருமாள் கோயிலும்  அரச மர அடையாளமும் தான். ஊர் மாநகராட்சி எல்லைக்குள் வந்தாலும் ஊரின் கட்டுப்பாடுகள் என்றும் மாறாமல் இன்றும் இருப்பதே அதன் பெருமைக்குக் காரணமாய் இருக்கின்றன. 

இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு நின்று நிதானமாய் கதை பேசி நகர்ந்து சென்ற ஆத்தாக்களும் , தாத்தாக்களும் இன்று எண்ணிக்கை குறைந்து விட்டார்கள். 

ஆனாலும் நல்லியம்பாளையம் கதை இன்னும் பல பேசப்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு ஊரின் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும். 


Saturday, 22 November 2025

பொ. சங்கரின் நல்லியம்பாளையம் கதை பேசுவோம் 18

 

                                     சின்னப்புள்ள அக்கா

                    




    மண் மணம் மாறாத எங்கள் நல்லியம்பாளையத்தில்  வாழ்ந்த ஒரு அக்காவின் பெயர் சின்னப் புள்ள. அவங்க பேரு ‘சின்னபுள்ள ‘ தானா என்று இதுவரை தெரியவில்லை. 

நல்லியம் பாளையம் கிராமத்தில் இரவு பகல் பாராமல் எப்போது உறங்குவார் என்றே தெரியாத நிலைக்கு எப்போதும் நடந்து கொண்டே இருப்பார். 

நாங்கள் பால்ய வயதில் ஊரின் மேற்குப் புறம் கிழக்கு, வடக்கு என எல்லாத் திசைகளிலும் ஓடி ஓடி கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டு இருப்போம். கோவில் திண்ணையில் விளையாட்டுத் தொடங்கும். யாரோ ஒருவர் தேடும் பொறுப்புக்கு ஆட்படுவார். ஊரெல்லாம் சுற்றி சுற்றி தேடினாலும் காணக்கிடைக்காத சில இடங்களில் , சில மரங்களில் ஒளிந்து கொள்வோம். 

       எங்கள் விளையாட்டுத் தொடங்கும் நேரத்தில் கோவில் திண்ணை அருகே நிற்கும் சின்னப்புள்ள அக்கா அடுத்தடுத்த நிமிடங்களில் கொத்துக்காரர் வீடு அருகே நடந்து வந்துவிடுவார். மனநிலை சற்று மாறி இருக்கும் சின்னப்புள்ள அக்காவ யாரும் ஊரில் எதுவும் சொல்ல மாட்டார்கள். 

யாரையும் பார்த்து சிரிக்க மாட்டார். யாருடனும் பேச மாட்டார். ஆனால் எதையோ பேசிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் விபரம் புரியாத வயதில் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்க , திடிரென்று சத்தம் போட்டு அடிக்க வருவார். ஆனால் அடிக்க மாட்டார். நடந்து சென்று விடுவார்.

எனது சிறுவயதில் வள்ளியம்மாள் ஆத்தாவிடம் , சின்னப்புள்ள அக்காவுக்கு என்னாச்சு என்று கேட்ட போது ஒரு கதை கூறினார் வள்ளியம்மாள் ஆத்தா. 

எங்கள் கண்ணாமூச்சி ஆட்டம் இரவு ஒன்பதைக் கடந்தும் நீடித்துக் கொண்டிருக்க யாரேனும் ஒருவர் ஆட்டத்தில் இருந்து இல்லம் செல்ல தொடங்கினால் கண்ணாமூச்சி ஆட்டம் நின்று விடும்.வூடு வந்ததும் அம்மா திட்டுவாங்க. காதில் வாங்கிக் கொள்ளாமல் விளையாட்டு பற்றி சிந்தித்து , அடுத்த நாள் கிரிக்கெட், கிணறு னு யோசிச்சு தூங்கப் போவோம். ஆனால் இரவில் எந்தத் தெருவிலும் எங்கேயும் உறங்காமல் சின்னப்புள்ள அக்கா எதையோ பேசி நடந்து கொண்டிருப்பார். 

சின்னப்புள்ள அக்கா பேசுவது யாருக்கும் புரியாது. சில நேரங்களிலும் பாடல் கூட பாடி கேட்டதுண்டு. சிறு வயதில் மிக அழகாக இருப்பார் என்று ஊர்ப் பெரியவங்க சொல்லிக் கேட்டதுண்டு. 

சின்னப்புள்ள அக்கா மனதளவில் பாதிப்பு அடைந்திருந்தாலும் ஒருநாளும் யாரையும் காயப்படுத்தி கேள்விப்பட்டதில்லை. 

ஈரோட்டில் இருந்து பழையபாளையம் வழியில் இரவு எட்டு மணிக்கு வேலை முடிந்து பலரும் வருவார்கள். ஊருக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் சின்னப்புள்ள அக்காவ யாராச்சும் பார்த்து , ஊருக்குள்ள போ என்று சொல்லிச் செல்வார்கள். மீண்டும் நடந்து ஊரின் தென்புறம் அரசமரம் அருகே வந்து நின்றிருப்பார். மீண்டும் யாராச்சும் ஊர்க்கவுண்டர்கள் சொல்ல , சின்னப்புள்ள அக்கா மாரியம்மன் கோயில் அருகே வந்து நின்றிருப்பார். 

மனநிலை மாறினாலும் ஒருநாளும் சின்னப்புள்ள அக்கா ஊரை விட்டு எங்கேயும் சென்றது இல்லை. ஊரின் மத்தியில் சின்னப்புள்ள அக்காவுக்கு ஒரு வீடு இருக்கும். ஆனால் வீட்டில் இல்லாமல் பல இடங்களிலும் நடந்து கொண்டே இருப்பார். 

ஒருமுறை ஊரில் சின்னப்புள்ள அக்காவிடம் வெளிப்புறத்தான் கைவரிசை காட்டி தவறாக நடக்க  முயல ,  சின்னப்புள்ள சத்தமிட்டுக் கத்து ஷாப்கார கவுண்டர் அந்த வெளிப்புறத்தானைப் பிடித்து அடி துவைத்து அழ வைத்து சின்னப்புள்ள அக்கா காலில் விழவைத்தார். நாங்கள் பால்ய வயதில் அந்த நிகழ்வுகளைக் கண்டு அந்த அக்கா மீது பரிதாபம் கொண்டே நடந்து கொண்டோம். 

ஊரில் எங்கள் பெரியவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட போலிசு மாதிரியே இருந்தமையால் தப்பித்தவறி கூட , அறிந்தும் அறியாமல் கூட நாங்கள் தவறே செய்து விட முடியாது. 

குடும்ப நிலை, ஊரின் கெளரவம் , ஊர்க் கவுண்டர்களின் மீது இருந்த மரியாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டே நாங்கள் வளர்ந்தோம். 

இப்படியாக நீண்ட நல்லியம்பாளையத்தில் பல மணிநேரங்களாக சின்னப்புள்ள அக்கா காணாமல் இருக்க பலரும் பல இடங்களில் தேட , அவர் நடக்காமல் , அவர் பேசாமல் , பாடாமல் தம் மூச்சை நிறுத்திக் கொண்டார். அந்த அக்கா எதையோ சொல்ல பல ஆண்டுகளாக முயன்றும் , பலருக்கும் புரியாமலேயே அவரின் இறுதி வாழ்வு நிறைவடைந்தது. 

இன்னமும் நினைவில் உள்ளது அவரின் குரல். ஆனால் என்ன சொன்னார் என்பது மட்டும் இன்னமும் புரியவில்லை. நல்லியம் பாளையம் கதையில் ஊரின் வடக்கு, கிழக்கு, மேற்கு , தெற்கு என அனைத்து வீதிகளிலும் , அரச மரம் , வேப்பமரம், ஆழமரம் என அனைத்து இடங்களிலும் அவர் நின்று கொண்டிருப்பார். என்ன சொல்லியிருப்பார்...அந்த மரங்களே சாட்சி….



    


Tuesday, 4 November 2025

பொ.சங்கரின் நல்லியம் பாளையம் கதை பேசுவோம் 17

நம்ம நல்லியம்பாளையத்துக்கு 
ஐப்பசி மாதம் வந்து சேர்ந்தாச்சுன்னா,  ஒரு விதமான மகிழ்ச்சி! 

காலை எழுந்தவுடனே வானம் முழுக்க கரிய மேகம் சூழ்ந்திருக்கும். கிழக்கில காற்று வீசும் – அது ஒரு மணம்! “அடடா, மழை வாசனை தானே இது!”ன்னு யாரோ ஒரு அப்பத்தா சொல்லி புன்னகை வருட விடுவாங்க. 

மழை வரப்போகுது என்ற உணர்ச்சிதான் ஊர்ல ஒரு திருவிழா மாதிரி இருக்கும்.  வாய்க்கால்ல நீர் ஓடும். நீர்த்தாரை வந்து சேரப் போறது போல நீலக் குன்றுகள் தூரத்தில மங்கலாய் தெரியும். நெல் வயலுக்குள்ள மண்ணு நனைந்து, பசுமையோட மிளிரும்.

பிள்ளைகள் எல்லாம் களத்தில ஓடி விளையாடும் “ஏய்! தண்ணி பொழியுது டா, நனைந்தா சளி பிடிச்சிரும்!”ன்னு அம்மாக்கள் கத்துவாங்க. ஆனா யாரு கேப்பா! நீரில் கால்கள விட்டு துள்ளுறது தான் அவர்களோட சந்தோஷம்.
மழை விழும் ஒலியும், பிள்ளைகளோட சிரிப்பும் சேர்ந்தா ஒரு இனிமையான இசை மாதிரி இருக்கும்.
மாடுகளும் மழைத் துளியில நிம்மதியா நிக்குது. மாடு தலையில விழும் துளியைக் கண்டு வால் ஆட்டுது. அதைக் கண்டு ஒரு தாத்தா சொல்லுவார் ,

“மாடு மகிழ்ந்தா மழை நல்லா பெய்யும் டா! இதுதான் நம்ம ஊர்ல பழமொழி!”
அந்த வார்த்தை கேட்டு நெஞ்சுக்குள்ளே ஒரு நம்பிக்கை எழும்.
மழை கொட்டிக் கொட்டிப் பெய்யும் போது, யார் வீட்டுக்குள்ளோ  அடுப்பில  வெந்தயக் குழம்பு வாசனை வரும்.
 
  திண்ணையில ஆத்தா ஒரு தாளம் போட்டுட்டு மழை ஒலி கேட்டு மகிழ்வாங்க.
“மழை நன்றா பெய்யணும் டா, அப்போ தான் வயல் பசுமையா இருக்கும்!”ன்னு அப்பத்தா பேசிச்  செல்வார்.
அந்த நேரத்துல நெல் நாற்று மழையில மிதந்த மாதிரி ஆடும். பசுமையான வயல் காணும் போதே விவசாயிகளின் மனசு நிறைவு ஆகிடும்.
இரவில மழை நின்னதும் வெளியே போனா , மண் வாசனை எப்படியோ ஒரு சுகம் தரும். 
நிலா மேகத்துக்குள்ள நுழைந்து ஒளி தரும் காட்சி. மரத்தில மழைத்துளி வழிந்துசெல்லும் சத்தம் காதுக்குச் சங்கீதம் மாதிரி இருக்கும்.
அடுத்த நாள் காலை, மண் மிதமிஞ்சிக் குளிர்ந்திருக்கும். பெண்கள் கோலமிட முடியாது. 

  சின்னப்பிள்ளைகள் மண்ணுல சின்ன மண் கோட்டைய கட்டுறது.
ஐப்பசி மழை நம்ம ஊர்க்கு வெறும் தண்ணி இல்லப்பா – அது நம்ம உயிர் தண்ணி!
அது வந்தா தான் வயல் பசுமையா இருக்கும், களங்கள் வளம் தரும், மனசு மகிழும்.
மழை வரணும், மண் குடிக்கணும், நம்ம ஊரு உயிரோட புன்னகைக்கணும் – அதுதான் எல்லாரோட ஆசை!
“மழை பெய்யட்டும் தாய்மண்ணே குடிக்கட்டும்,
நம்ம நல்லியம் பாளையம் நெல் தளிர் எழுந்து புன்னகைக்கட்டும்!”

Saturday, 25 October 2025

பொ.சங்கரின்-அகில இந்திய வானொலி உரை


அகில இந்திய வானொலி நிலைய நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள்.

     ‘எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்னும் தொல்காப்பிய தொடருக்கு நன்றி சொல்லி எமது இனிய உரையைத் தொடங்குகிறேன்.

               வேகமாக நகரும் இந்த உலகில் ஒரு பூவின் மலர்ச்சியை, ஒரு காட்டின் அழகை, மழையின் உணர்வை ஓர் எழுத்தாளன் நூல்கள் வழி நம்மிடையே கடத்திக் கொண்டு வருகிறான். ஒரு சமூகத்தின் பரிணாம  வளர்ச்சி, பொருளாதார தேவைகளுடன் நின்று விடாமல் கற்றல் நிலையிலும் மேம்பட்டால்தான் சமூகம் வளரும். ஆக ஒரு வளர்ந்த சமூகத்தை உருவாக்குவதில் வாசிப்பு இன்றியமையாத பணியை ஆற்றுகின்றது.   நெல்சன் மண்டேலா அவர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட போது, “எனக்கு ஒரு சலுகை மட்டும் கொடுங்கள். சிறைச்சாலையில் நான் வாசிக்க மட்டும் அனுமதிக்க வேண்டும்” என்றார். வாசிக்காத நாட்கள் சுவாசிக்காத நாள்களுக்குச் சமம் என்று புதுமொழி கூறுகிறது. 

       பண்பாட்டு மாற்றம்,  காலமாற்றம்,  தலைமுறை மாற்றம் என்று இவை மிக வேகமாக ஏற்படுகின்றன. சமூகத்தில் ஏற்படும் பண்பாட்டு மாற்றங்களையும் மாறிவரும் மனோபாவங்களையும் பாடப்புத்தகங்கள் காட்டுவதில்லை. பாடப் புத்தகங்கள் மாறுகையில் ஆசிரியர்களும் தம்மை மேம்படுத்திக்கொண்டால்தான் மாணவர்கள்  பயன்பெற முடியும். இது இயல்பாக நடந்து விடுவது இல்லை. ஆகவே பாடப்புத்தகக் கல்வியிலிருந்து உருவாகும் சமகாலம் பற்றிய விழிப்புணர்வு, போதாமைகளுடன்தான் இருக்க முடியும். 


சமகாலத்துடன் உயிரோட்டமான உறவை ஏற்படுத்திக்கொள்ள சீரிய இதழ்களையும் இலக்கியத்தையும் ஆய்வுகளையும் படிப்பது இன்றியமையாதது. அவ்வகையில் அகில இந்திய வானொலி நிலையம் வாசிப்பு இயக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றது. சாகித்திய அகாடமியின் வரலாற்றை வாசிப்பவர்களோடு உறவாடும் நிகழ்வாக, நிழலாடும் நினைவுகளாக  நம் அகில இந்திய வானொலி நடத்துகின்றது.  வாருங்கள் சாகித்திய அகாடமி குறித்தும் எழுத்துலகம் குறித்தும் அறிந்து வருவோம். உங்கள் கைகளில் ஓர் எழுதுகோலும் உங்கள் நாட்குறிப்பையும் ஆயத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 

           வாசிப்பையும், வாசிப்பவர்களையும், வாசிக்க வைத்தவர்களையும் ஒன்று சேர்க்க; எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்னும் முதுமொழியைப்  போற்றும் வகையில் நமது இந்திய அரசு எழுத்தையும் எழுத்தாளர்களையும் உரிய முறையில் உயர்வான முறையில் சிறப்பிக்க வேண்டி 1954 ஆண்டு மார்ச் 12 ஆம்  நாளில் சாகித்திய அகாடமி என்னும் நிறுவனத்தைத் தோற்றுவித்தது. 


அவ்வகையில் இந்தியாவில் பல மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு விருது அளித்து ஊக்கப்படுத்துவது சாகித்திய அகாடமியின் முதன்மைப் பணியாகும்.  கடந்த அறுபது ஆண்டுகளாக சாகித்திய அகாடமி சிறந்த படைப்புகளுக்கு விருதும் இந்திய அளவிலான வாசக வெளிச்சத்தையும் ஏற்படுத்தித் தருகிறது. இந்தியாவின் 24 மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை உள்ளிட்ட எழுத்தாக்கங்களுக்கு இந்தியாவின் பெருமைமிகு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றது. சிறந்த எழுத்தாளருக்கு 1 இலட்ச ரூபாயும், மதிப்புமிகு பட்டயமும் வழங்கப்பட்டு சிறப்புச் செய்யப்படுகிறது.

        சாகித்திய அகாடமி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டு, தேசிய அளவில் வாசிப்பு மேம்பாட்டையும் வழங்கி வருவது இந்நிறுவனத்தின் முதன்மைப் பணியாகவும் முக்கியப் பணியாகவும் இருக்கின்றது.  

      தரணி புகழ் தமிழ்மொழியும் சாகித்திய அகாடமியின் 24 மொழிகளில் முதன்மை மொழியாகத் திகழ்கின்றது. அவ்வகையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட சாகித்திய அகாடமி நிறுவனத்தால், தமிழ் மொழி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நூல் எது என்பதை அறியும் ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஆம். தமிழ்மொழியில் பெருமைமிகு சாகித்திய அகாடமியின் முதல் விருதைப் பெற்ற முதல் நூல், நம் மொழியின் பெயராலேயே அமைந்திருக்கும். தமிழ் என்று சொன்னாலே இன்பம் தருவிக்கும். அதுவே நூலின் பெயரும். ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய தமிழின்பம் என்னும் நூலே தமிழ் மொழிக்கு தமிழில்  1955இல் சாகித்திய அகாடமி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நூல்.

        அறியப்படாத இலக்கியங்களை அறிய வைத்ததும், அறியப்படாத ஆளுமைகளைக் கொண்டாட வைத்ததும் சாகித்திய அகாடமியின் முதன்மைச் சாதனைகள். அவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அகாடமி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நூல்கள் தமிழக அளவில் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் நூல்களாகவே இருந்து வருகின்றன.

     தமிழகத்தின் புகழ்பெற்ற ஆளுமைகளின் படைப்புகளும், வட்டார மொழியில் உருவெடுத்த படைப்புகளும் கவிதைகளும் நாவல்களும் தமிழ்மொழிக்கு மணிமகுடமாக இருப்பதை தரணிக்குச் எடுத்துச் சொல்லும் பணியை சாகித்திய அகாடமி செவ்வனே செய்து வருகின்றது.

     தமிழ் மொழியின் தவமாக, இளையோர் முதல் பெரியோர் வரை விரும்பி வாசிக்கப்படும் நூல் என்னவெனில் அது பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் நூலாசிரியரின் சுதந்திர இந்தியா பற்றிய படைப்பு அலையோசை. அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாகத் திகழும் அலையோசை நூல்தான் தமிழ் மொழியின் இரண்டாவது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்.

       இராமாயணம் நூலை வாசிக்க வேண்டுமெனில் எந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற வினா அனைவருக்கும் எழும். அந்த வினாவின் விடையாக பல ஆண்டுகளாக பலராலும் வாசிக்கப்படும் நூலாக ராஜாஜி அவர்களின் சக்ரவர்த்தி திருமகன் நூல் சாகித்திய அகாடமியின் மூன்றாவது விருது பெற்ற தமிழ் நூல்.

   இந்திய அளவில் இலக்கியத்திற்குச் சிறப்புத்தரும் வகையில் தொடங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருது போலவே, ஞானபீட விருதும் எழுத்தாளர்களைக் கொண்டாடும் நோக்கோடு தொடங்கப்பெற்றது. அவ்வகையில் தமிழில் ஞானபீட விருதும் சாகித்திய அகாடமி விருதும் பெற்ற இரு  எழுத்தாளர்கள்  திரு. அகிலன் மற்றும் திரு. ஜெயகாந்தன். அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் நூலுக்கு 1963ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும் 1975ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டது.  திரு. ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் நூலுக்கு 1972ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும் 2002ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

       சாகித்திய அகாடமி விருது தொடங்கப்பட்டு நாம் அறுபது வருடக் கொண்டாட்டத்தில் இருக்கின்றோம். இச்சமயம் தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பெண்மணி யார் என்பது பற்றியும், தமிழில் எத்தனை பெண்கள் சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளனர் என்பது பற்றியும் நாம் அறிவது அவசியம். 

1973ஆம் ஆண்டு வேருக்கு நீர் என்னும் நூலுக்காக எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. தமிழில் சாகித்திய விருதாளர்களில் முதல் பெண் இவர்தான். இதுவரை இராஜம் கிருஷ்னண், லட்சுமி திரிபுரசுந்தரி, திலகவதி, அம்பை, ஜெயஶ்ரீ ஆகிய ஐந்து பெண்கள் மட்டுமே தமிழில் சாகித்திய விருதுப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்த செய்தியாகும். 

 சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 2000ஆம் ஆண்டு அக்கினிச்சாட்சி எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காவும், ஒரு கிராமத்தை எழுத்து வழி அறிமுகம் செய்து எல்லோரையும் ஆத்துப்பொள்ளாச்சி என்னும் கிராமம் நோக்கி நகர வைத்த, ஒரு கிராமத்து நதி (2003) என்னும் கவிதை நூலுக்காகவும் இரண்டு முறை சாகித்திய விருது பெற்றார். 


சாகித்திய விருதாளர்களில் இரண்டு முறை விருது பெற்று மொழிக்கும் , எழுத்துக்கும் பெருமை சேர்த்த எழுத்தாளர்களையும் நாம் அறிய வேண்டும். கவிஞர் புவியரசு அவர்களுக்கு 2007ஆம் ஆண்டு புரட்சிக்காரன் என்னும் மொழிபெயர்ப்பு நூலுக்காகவும், கையொப்பம் எனும் கவிதை நூலுக்காகவும் (2009) இரண்டு முறை சாகித்திய  விருது பெற்றுள்ளார். தமிழில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த இந்த எழுத்தாளர்களின் சாதனைகள் பொன்னெழுத்துகளால் எழுதப்பட வேண்டும் , கொண்டாடப்பட வேண்டும். 

      சாகித்திய அகாடமியின் வரலாற்றில் நிர்வாகக் காரணங்களால் கடந்த அறுபது வருடங்களில் சில ஆண்டுகள் சாகித்திய விருது அளிக்கப்படவில்லை என்பது நாம் அறிய வேண்டும்.

          வா.செ.குழந்தைசாமி. இந்தப் பெயர் அறியாத பொறியியல் படிக்கும் மாணவர்கள் , ஐஐடி  படிக்கும் மாணவர்கள் இருக்க முடியாது. பொறியியல் மற்றும் நீர்வளத்துறையில் அவசியம் கற்க வேண்டிய பாடமாக குழந்தைசாமி மாதிரியம் என்னும் பாடத்தைக் கற்பர். நீர்வளத் துறையில் குழந்தைசாமி மாதிரியம் உலக அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக இருப்பதை அறிந்து நாம் பெருமைபடுவதைப்போல, வா.செ. குழந்தைசாமி அவர்கள் எழுதிய வாளும் வள்ளுவ என்னும் நூலுக்காக சாகித்திய அகாடமி விருது 1988ஆம் ஆண்டு வழங்கப்பட்டது குறித்தும் நாம் பெருமைப்படுவோம். 

         ஒருவரின் நாட்குறிப்பு வரலாறு ஆகுமா? எனில் ஆம் என்பது பதிலாக ஆனந்தரங்கன் நாட்குறிப்பு விடையாக இருந்து வருகின்றது. அந்த நூலே புதுச்சேரியின் வரலாற்றையும், பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறை பற்றியும் நமக்குப் பல செய்திகளைத் தருகின்றது. அது போல பிரபஞ்சன் அவர்கள் புதுச்சேரியை களமாகக் கொண்டு படைத்த வானம் வசப்படும் என்னும் நூலுக்காக தேசிய அங்கீகார விருதான சாகித்திய அகாடமி விருது 1995 ஆம் ஆண்டு  வழங்கப்பட்டது. 

            திரையிசைக் கவிஞர்களாக இருந்தவர்களும் நல்ல படைப்புகளை வழங்கி சாகித்திய விருது பெற்றுள்ளனர். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சேரமான் காதலி நூலுக்காக 1980ஆம் ஆண்டு சாகித்திய விருது வழங்கப்பட்டது. எழுத்துலகம் நோக்கி அமர வைத்து அற்புதமான காவியத்தைப் படைத்த கவிஞர் வைரமுத்து அவர்கள், கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார். 

        பெரும் வாசகர் பரப்பினையும், எழுதும் போதே வாசகர்களின் கவனிப்பையும் பெற்ற  நாஞ்சில் நாடனின் எழுத்தில் கருவான சூடிய பூ சூடற்க எனும் நூல் 2010ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது. பலரின் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இந்த நூல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

      வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்வது எழுத்தாளர்களின் முதன்மைப்பணி என்பதை நிறைவேற்றி பெரும் வாசகச் சொந்தங்களை வைத்திருக்கும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய சஞ்சாரம், நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வியலை வலியோடு சொல்லக்கூடியது. நாதஸ்வரக்கலையை திருவாவடுதுறை  ராஜரத்தினம் பிள்ளைக்குப்பிறகு பரவலான அறிமுகத்தை ஏற்படுத்திய நூலாக இவரின் சஞ்சாரம் திகழ்கின்றது. இந்த நூலுக்காக இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருது 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 

        நாடு கடத்தப்பட்ட ஒரு அரசனின் வாழ்வியலை, தமிழ்ச்சூழலின் வாழ்வியலை அழகு நடையில் கடத்திச்சென்று வாசிப்பு இன்பம் நல்கிய இந்திய ஆட்சிப் பணியாளர் திரு. இராஜேந்திரன் அவர்களின் காலாபாணி நூலுக்கு 2022ஆம் ஆண்டு சாகித்திய விருது வழங்கப்பட்டது. 

            கிராமிய மணம் மாறாற ஊராகத் திகழும் ஈரோடு மற்றும் அதனைச் சுற்றி உள்ள சிறுகுடி மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம் ஆகியவற்றை அழகியல் நடையில் ஆழமான நீரோட்டம் போல வழங்கிய நீர்வழிப்படூஉம் என்னும் புதினத்திற்காக 2023ஆம் ஆண்டு தேவிபாரதி அவர்களுக்கு சாகித்திய விருது வழங்கப்பட்டது. 

      உலகின் தலை சிறந்த மேதைகள், வெற்றியாளர்கள், நாம் வியந்து பார்க்கும் பல மனிதர்களுடன் நம்மால் நேரில் சென்று நட்பு கொள்ள இயலாது, ஆனால் அவர்களின் சிந்தனைகள், அனுபவங்கள் அவர்களின் வெற்றி தோல்வி என அனைத்து நேரங்களிலும் நாம் அவர்களுடன் பயணிக்க முடியும். அது புத்தகங்களின் வாயிலாக மட்டுமே மனதோடு மனமாக இருக்க இயலும். 

 பண்பாட்டுத்தளத்தில் பெரும் பகுதியைத் திரைப்படங்கள் கையகப்படுத்தியிருப்பது ஆரோக்கியமானதன்று. ஊடகங்கள் திரைப்படத் துறைக்குத் தரும் கவனத்தில் நூற்றிலொரு பங்குதான் புத்தகப் பண்பாட்டுக்குத் தருகின்றன. பண்பாட்டில் பெரும் கவனம் கொண்டிருக்கக்கூடிய வளர்ச்சியடைந்த பிரெஞ்சுச் சூழலின் புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், மொத்த பண்பாட்டுப் பொருளாதாரத்தில் புத்தகத் தொழிலின் பங்கு திரைப்படங்களின் பங்கைவிட மிக அதிகமாக இருந்தது. தமிழகத்தின் மொத்த புத்தகப் பொருளாதாரம் ஒரு நட்சத்திர நடிகர் ஒரு திரைப்படத்துக்குப் பெறும் ஊதியத்துக்கு நிகராகுமா என்பது சந்தேகம். திரை, புத்தகம், நுண்கலை மூன்றுக்கும் உரிய கவனமளிக்கும் பண்பாடே மேன்மையடைய முடியும்.

        நமது அகில இந்திய வானொலி நிலையம் வாசிப்பவர்களின் நலம் காக்கும் ஊடகமாக, வாசிப்பவரை வரவேற்கும் வாசலாக, எழுத்தாளர்களைக் கொண்டாடும் ஏணியாக, சமுதாய மாற்றத்தின் சாட்சியாக பல்லாண்டுகளாக பவனி வருகின்றது. அகில இந்திய வானொலி நிலையத்தின் பணி மேலும் சிறக்கவும், சாகித்திய அகாடமி நாளை மற்றுமொரு மாபெரும் வாசிப்பு நாளாகவும் முன்னெடுக்கவும் நாம் துணை நிற்போம். 

                 

Saturday, 18 October 2025

அறிய வேண்டிய வரலாறு - தஸ்தாவெஸ்கி


                            



உலகின் சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டு இன்று கொண்டாடப்படும் தஸ்தாவெஸ்கி என்னும் ஆளுமை உருவாக அன்னா என்ற கதாபாத்திரம் அடைந்த அவமானங்களே காரணம் என்றால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். 

         நாடு, மொழி, மதம் ஆகியவற்றைக் கடந்து பலராலும் வாசிக்கப்படும் கரம்சோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டணையும் அசடன் எனப் பல   புகழ் பெற்ற நூல்களை எழுதிய தஸ்தாவெஸ்கி வாழ்வுஅன்னாவுக்கு முன் - அன்னாவுக்குப் பின் எனக் கூறினால் பொருத்தமாக இருக்கும்.

       சில செயல்கள்  காரணமாக  மிகப்பெரிய கடனில் சிக்கி நீதிமன்ற வழக்கிற்கு ஆளாகிறார் தஸ்தாவெஸ்கி.  நீதிமன்றத்தில் கடும் தண்டனைக்கு ஆளாக நேர்ந்த போது நீதிமன்றம் ஒரு வித்தியாசமான தீர்ப்பை அளித்தது. அந்தத்  தீர்ப்பு என்னவெனில் மூன்று மாதத்திற்குள் ஒரு நாவலை எழுதி அதன் மூலம் கடனை அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட தஸ்தாவெஸ்கி , எனக்கு என் எழுத்துகளைத் தட்டச்சு செய்ய ஒரு உதவியாளர் வேண்டும் என்று மட்டும் கேட்டார்.

        அதன்படி அன்னா என்ற பெண்ணை தஸ்தாவெஸ்கிக்கு உதவியாளராக நீதிமன்றம் நியமித்தது. ஆரம்பத்தில் அந்தப் பணியை விருப்பமில்லாமல் செய்த  அன்னா , சில நாட்களில் தஸ்தாவெஸ்கி எழுத்துகளின் மீது பெரும் காதல் கொண்டவராக மாறினார். அவரின் மீது அன்பு செலுத்தி அவரை நேசிக்கலானார்.

             தஸ்தாவெஸ்கியின் கடன்களை அன்னா தன் உடமைகளை விற்று அடைத்தார். கடனில் சிக்கியிருந்த தஸ்தாவெஸ்கியின் இல்லத்திற்குக் கடனாளர்கள் வந்து கடனைக் கேட்கும் போதெல்லாம் அன்னாவே  எதிர் நின்று பதில் கூறினார் .

வீட்டின் இயலாமைச்  சூழல் தஸ்தாவெஸ்கிக்குத் தெரியாமல் அவரை நன்குப் பார்த்துக் கொண்டார். தஸ்தாவெஸ்கி எழுதும் போது அவருக்கு அருகில் எப்போதும் ஒரு கெட்டிலில் தேநீர் இருக்குமாறும் , அந்த அறையை கடன்காரர்கள் யாரும் நெருங்காமலும் பாரத்துக்கொண்டார்.  

வீட்டின் உள்ளேயே அமர்ந்து இரவு பகல் பாராமல் எழுதிக் கொண்டே இருந்த தஸ்தாவெஸ்கி, இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே எழுதி வந்தார். பலரின் அவமானச் சொற்களை எதிர்கொண்டு பதில் அளித்து அந்த அவமானங்கள் எதுவும் தஸ்தாவெஸ்கியின் எழுத்துப் பணியைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டார். 

தஸ்தாவெஸ்கி  எழுதியதை அன்னா உரிய முறையில் தட்டச்சு செய்து நூல் வடிவத்திற்கு வர பெரும் முயற்சிகள் பலவற்றை எடுத்தார். எழுபத்தி ஏழு நாட்களில் நூல் பணியை நிறைவு செய்த தஸ்தாவெஸ்கி வெளியே வந்து பார்த்த போது , கேட்ட போது அன்னா சந்தித்த அவமானங்கள் , கடன்கள் எல்லாவற்றையும் கேட்டு அந்த பெரும் எழுத்து மேதை கலங்கி நின்றது. அன்னா அடைந்த அவமானங்களின் ஊக்கம்தான் குற்றமும் தண்டனையும் என்ற நூல்.  குற்றமும் தண்டனையும்  வெளிவந்து பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டு அவர்களின் ஏழ்மையைப் போக்கியது.



 இரஷ்ய வரலாற்றில்  பல வருடங்கள் ஆனாலும் கொண்டாடப்படும் தஸ்தாவெஸ்கியின் எழுத்துக்குப் பின்னால் அவரது மனைவி   அன்னா  அடைந்த அவமானங்களே ஊக்கமாய் உறுதுணையாய் இருந்தது.

   அன்னா மட்டும் என் வாழ்வில் வராமல் போயிருந்தால் அவமான உலகில் நான்  சிறையிலோ  அல்லது  தற்கொலை செய்தோ இறந்திருப்பேன் என்று கூறிய தஸ்தாவெஸ்கியின் வாழ்க்கை அன்னா அடைந்த அவமானங்களின் பரிசு என்பதை அவரின் வரலாறு பதிவு செய்துள்ளது.

நீங்கள் உங்கள் வாழ்நாளில் கரமசோவ் சகோதரர்கள், சூதாடி, வெண்ணிற உறவுகள், உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள், அசடன், குற்றமும் தண்டனையும், தஸ்தயெவ்ஸ்கி கதைகள், அப்பாவியின் கனவு   நூல்களை அவசியம் வாசித்து விடுங்கள். குற்றமும் தண்டனையும் நூல் என்னை வாசிப்பு அனுபவத்தில் திளைக்கச் செய்தது.  

 


Friday, 10 October 2025

பிரெஞ்சுப் புரட்சி -The French Revolution- பொ.சங்கர்

     
    
   
     ஏன் விளைந்தது பிரெஞ்ச்ப் புரட்சி என்பதற்குக் கீழே உள்ள கவிதை சான்று . 
“ஒரு கழுதையின் முதுகில் ஒட்ஸ் தானிய
மூட்டை.
இன்னொரு கழுதையின் முதுகிலோ
உப்பு வரி ரசீது கட்டுகள்.”
ஆம். 1789 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுப் பொருளாதாரம் நிலைகுலைந்தது. தேசம் திவாலாகியது. சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள் அமைச்சர்கள். அரசன் செவி மடுத்துக் கேட்டுக் கொண்டிருக்க, மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் ராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?” நாடு தழுவிய பஞ்சத்தால் பரிதவித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது.
 மன்னனின் கேளிக்கைக்காகவும், மகாராணியின் ஆடம்பரத்திற்காகவும், இளவல்களின் மதுவிற்காகவும், மதகுருமார்களின் விருந்துக்காகவும் மக்கள் மேலும் சில துளிகள் ரத்தத்தைத் தியாகம் செய்யுமாறு கேட்டுக்கொள்ப்பட்டனர். . மக்களும் ஒப்புக் கொண்டனர் தியாகம் செய்வதற்கு. தங்கள் உதிரத்தை அல்ல, மன்னராட்சியை! ஆம் , இரத்தம் சிந்தி மன்னராட்சியைத் தியாகம் செய்ய முடிவெடுத்தனர். 
‘இது நல்லதல்ல என அரசாங்கம் அடையாளம் காட்டினால் அது போர்… மக்களே அடையாளம் காட்டினால் அது புரட்சி! அப்படி மக்களால் அடையாளம் காணப்பட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்டு மக்களால் வெற்றியாக்கப்பட்ட புரட்சி காலம் கடந்த வரலாறாக நீடிக்கின்றது. 
பதினாறாம் லூயி மன்னன் ஏகபோக வாழ்வில் செழித்திருக்க , மக்கள் வறுமையில் வாடியிருக்க அப்போது அமெரிக்கா இங்கிலாந்து மீது போர்த் தொடுக்க , எதிரியை பழிவாங்க அமெரிக்காவுக்கு உதவிகளை அள்ளி வழங்கியது பிரான்ஸ். அள்ளி வழங்கிய நிதியால் தள்ளாடும் நிலைக்குத் தடுமாறிப் போனதன் விளைவே பிரெஞ்ச்ப் புரட்சி. 
மன்னராட்சி குடும்ப உறவுகள் வேட்டையாட விவசாயிகளின் வயல்கள் அழிக்கப்பட்டன. காடு இழந்த விவசாயி கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். கதறி அழுது கடவுளிடம் சென்றாலும் மத குருமார்கள் இரத்தத்தை உறுஞ்சும் அரசனையே சக்ரவர்த்தி என்றழைக்க கடைசியில் கண் தெரியாத அரசையும் காது கேட்காத கடவுளையும் எதிர்த்து களம் கண்டனர் மக்கள். 
போர் அல்லாத போராட்டம் , வறுமையில் நீடித்த புரட்சி எனப் பல தடைகளைத் தாண்டி போராட , போரிட மக்கள் வீதிக்கு வந்தனர். 
மலை உச்சியில் இருந்து அரசர்கள், நிலப்பிரபுக்கள் , மத குருமார்கள் அமர்ந்து கொண்டு மக்களை நோக்கி மலையைப் பாருங்கள் எனக் கூறிய போது , மலையின் கீழ் இருந்து மலையையே ஆட்டம் காண வைக்க மக்கள் முடிவெடுத்தார்கள். 
                                   அடுத்த அத்தியாயத்தில் ........................ அடுத்து.....

Thursday, 9 October 2025

அந்தமான் தீவுகள் — சுதந்திரப் போராட்டத்தின் பலிபீடம்

 


இந்தியாவின் தென்கிழக்கில், வங்காள விரிகுடாவை ஒட்டி பரந்துள்ள அழகிய தீவுகளின் தொகுப்பே அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும்.
இயற்கையின் பசுமையும் கடலின் ஆழத்தையும்  சேர்ந்து அமைந்த இத்தீவுகள், இந்திய வரலாற்றில் அழியாத பெருமை பெற்றுள்ளன. ஏனெனில், இங்கு தான் இந்திய சுதந்திர வீரர்களின் தியாகமும் வேதனையும் பதியப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமை

1857 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமானது, அவர்களை தாய்நாட்டிலிருந்து கடலால் சூழப்பட்ட ஒரு தீவிற்கு அனுப்புவது. இதற்காகவே அந்தமான் தீவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அங்கு அனுப்பப்பட்ட கைதிகள் வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனிமையில் துன்பப்பட்டனர். இதனாலே அந்த இடம் “காலா பானி” என்று அழைக்கப்பட்டது — அதாவது “கருப்பு நீர் தண்டனை”.




🏛️ செல்லுலார் சிறை — தியாகத்தின் அடையாளம்

1896 முதல் 1906 வரை கட்டப்பட்ட செல்லுலார் சிறை இந்திய சுதந்திர வரலாற்றின் முக்கிய நினைவுச் சின்னமாகும்.
693 சிறைக் கூடங்கள் கொண்ட இந்த சிறையில் ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டனர். கைதிகள் இடையே எந்த தொடர்பும் இருக்கக்கூடாது என்பதே அதன் நோக்கம்.

சிறைச்சாலையின் உட்பகுதியில் கைதிகள் எண்ணெய் ஆலைகளிலும், தோட்டங்களிலும், கயிறு பின்னும் தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு உணவு போதிய அளவில் வழங்கப்படவில்லை; நோயாலும், துன்பத்தாலும், மனிதத்தன்மையற்ற தண்டனைகளாலும் பலர் உயிரிழந்தனர்.

 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஆசாத் ஹிந்த் அரசு

இரண்டாம் உலகப் போரின்போது (1942), ஜப்பான் அந்தமான் தீவுகளை கைப்பற்றியது.
அப்போது நெடாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜப்பானின் ஆதரவுடன் “ஆசாத் ஹிந்த் அரசு” எனப்படும் சுதந்திர அரசை அமைத்தார்.
அந்தமான் தீவுகள், இந்திய சுதந்திரத்தின் முதல் விடுதலை நிலமாக அறிவிக்கப்பட்டன. இதனால் இத்தீவுகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் சிறப்பிடத்தைப் பெற்றன.



 சுதந்திரத்தின் கோர  சின்னமாக மாறிய செல்லுலார் ஜெயில்



1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின், அந்தமான் தீவுகள் தேசிய நினைவிடமாக அறிவிக்கப்பட்டது.
இன்று செல்லுலார் சிறை தேசிய நினைவகம் என அழைக்கப்படும் இத்தலம், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களால் பார்வையிடப்படுகிறது.
அங்கு ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு அறையும் அந்த வீரர்களின் தியாகக் கதைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

அந்தமான் தீவுகள்  இயற்கையின் அழகையும், மனித தியாகத்தின் பெருமையையும் ஒருங்கே தாங்கிய நிலம்.
இங்கு சிந்திய ஒவ்வொரு இரத்தத் துளியும் நம் சுதந்திரத்தின் வேராக மாறியுள்ளது.
அந்தமான் தீவுகள் நமக்குச் சொல்லும் செய்தி என்னவெனில் 

“சுதந்திரம் என்பது வெறும் அரசியல் உரிமை அல்ல, அது தியாகத்தால் உருவான உயிர்ப்புள்ள உணர்வு!”